dd

(77) "இசை என்கிட்டயும் இருக்கு...'' -அஸிஸ்டெண்ட் கமிஷனரின் அடம்!

"ராணி மகாராணி' படத்தின் பூஜைக்கு நான்கு நாட்களுக்கு முன் என்னை அழைத்தார், என்னோடு சேர்ந்து படம் தயாரிக்க வந்த கமிஷனர் மாமா.

"மாப்ளே… நம்ம படத்துக்கு தேவா வேணாம்'' என்றார்.

Advertisment

"ஏன் மாமா… என்னாச்சு?'' என்றேன் அதிர்ச்சியுடன்.

அந்த அதிர்ச்சியைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்.

"நம்ம படத்துக்கு நானே மியூசிக் போடறேன்'' என்றார்.

Advertisment

"என்னது… நீங்க மியூசிக் போடப் போறீங்களா?''

"நான் சூப்பரா மியூசிக் போடுவேன் மாப்ளே.… நாம பணம் போட்டு எடுக்கற படத்துல போடாம வேற யார்கிட்ட போய் சான்ஸ் கேக்க முடியும்?'' என்றார்.

"மாமா… தேவா மியூசிக்குன்னு இன்விடேஷன்ல பெயர் போட்டு எல்லாருக்கும் கொடுத்தாச்சு. இனிமே எப்படி மாமா மாத்த முடியும்?'' என்றேன்.

"நான் நல்லா மியூசிக் போடுவேன்கிற நம்பிக்கையில்லையா உங்களுக்கு?'' என்றார் வருத்தமாக.

"மாமா… ஏற்கனவே நான் இளையராஜா அண்ணனை விட்டுவிட்டு, தேவா அண்ணனுக்கு மாறினதையே என்னால சமாளிக்க முடியல. உங்களுக்கு மியூஸிக் போடணும்கிற ஆசை இருந்திருந்தா என்கிட்ட சொல்லியிருக்கணும். நான் சம்மதிச்சிருப்பேன்... இல்லேன்னா வேண் டாம்னு சொல்லியிருப்பேன். இன்விடேஷன் அடிச்சு எல்லாருக்கும் கொடுக்கிறதுக்கு முன் னால சொல்லியிருந்தா இந்த ரெண்டுல ஒண்ணு சொல்லியிருப்பேன். எல்லாம் முடிஞ்ச பின்னால சொல்றீங்களே. நீங்க சொல்றபடி நான் நடந்துகிட்டா தேவா அண்ணன் எப்படி என்னை மதிப்பாரு. என்கூட பழகுன சினிமாக்காரங்க எப்படி மதிப்பாங்க. நீங்க ரொம்ப லேட்டா சொல்றீங்க மாமா'' என்றேன்.

பார்ட்னர்ஷிப் அக்ரிமெண்ட் இருந்த காரணத்தால் என்னுடைய உண்மையான கோபத்தை அவரிடம் காட்ட முடியவில்லை.

அவருடன் பழகிக் கொண்டிருந்த சில சினிமா நண்பர்கள் அவரைத் தூண்டி விட்டிருக்கிறார்கள், தேவாவைத் தூக்கிவிட்டு நீங்களே மியூசிக் போடுங்கள் என்று. அதனால் அவர் சமாதானம் ஆகாமல் பிடிவாதம் பிடித்தார். நான் உறுதியாக இருந்ததால் கொஞ்சம் இறங்கி வந்தார்.

"அப்போ ஒண்ணு பண்ணுங்க மாப்ள. பாட்டெல்லாம் என் டேஸ்ட்டுக்கு விட்ருங்க. தேவா கூட பாடல் கம்போஸிங்ல நான்தான் உக்காருவேன்'' என்றார்.

வேறு வழியில்லாமல் நானும் சம்மதித்தேன். தனியாகச் சென்று தேவா அண்ணனிடம் நடந்ததைச் சொல்லி, "அவர் விருப்பப்படியே பண்ணிக் கொடுங்கண்ணே'' என்றேன்.

என்னுடைய நிலைமையைப் புரிந்துகொண்டு அவரும் சம்மதித்தார்.

"ராணி மகாராணி' படத்தின் பூஜை மிகவும் சிறப்பாக நடந்தது. விஜயகாந்த், சத்யராஜ் "திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜ், ஏவி.எம்.சரவணன் சார், அண்ணன் "கலைப்புலி' தாணு, இப்ராகிம் ராவுத்தர், என் உடன்பிறவா சகோதரர்கள் ஆர்.கே.செல்வமணி, டி.சிவா சொல்லச் சொல்ல... பட்டியல் இன்னும் பெரிதாக இருக்கும். நான் தயாரிப்பாளராவதை வாழ்த்த இத்தனை பேர் வந்தார்களா என்று நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

"ராணி மகாராணி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டு எல்லோரிடமும் மொத்த மாக கால்ஷீட் வாங்கியிருந்தேன். படத்திற்கான பாடல் கம்போஸிங் நடந்தது... நான் போகவில்லை. போலீஸ் மாமாதான் போயிருந்தார். அவரது விருப்பப்படியே தேவா அண்ணனும் ட்யூன் போட்டார். பாடல்களையும் ரெக்கார்டிங் செய்து கொடுத்தார்.

"மாப்ள...… பாட்டைக் கேட்டீங்களா… எப்படி சூப்பரா வாங்கியிருக்கேன்'' என்று என்னிடம் சொன்னார் போலீஸ் மாமா.

என்னுடைய டேஸ்ட்டுக்கு வாங்கியிருந்தால் பாடல்கள் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று தோன்றியது எனக்கு. அதை அவரிடம் சொல்ல முடியாது, தேவா அண்ணனிடமும் சொல்ல முடியாது. ஒருவாரம் படப்பிடிப்பு நடந்திருக்கும் பொழுது திடீரென என்னை வரச் சொன்னார் போலீஸ் மாமா.

ff

நான் போய் அவரைப் பார்த்தேன்.

"மாப்ள,… தேவா போட்ட பாட்டை கேட்டுட்டு என் நண்பர்கள் நல்லா இல்லேன்னு சொல்றாங்க'' என்றார்.

"என்ன இப்படிச் சொல்றீங்க. உங்க டேஸ்ட்டுக்கு நீங்க வாங்குன பாட்டு. நேத்து வரைக்கும் சூப்பர்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க. இப்போ இப்படி மாத்திச் சொல்றீங்களே?'' என்றேன்.

"இல்ல மாப்ள...… இந்தப் பாட்டெல்லாம் வேணாம்! "மியூசிக் தேவா'ன்னே பேர் இருக்கட்டும். நான் ஏற்கனவே மியூசிக் போட்டு நாலு பாட்டு வச்சிருக்கேன். நீங்க அதை ஷூட் பண்ணுங்க'' என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதுகூட குறைவான சொல். பேரதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பெரிய போலீஸ்அதிகாரி என்பதைக் கூட மறந்து விட்டேன்.

"என்ன மாமா விளையாடறீங்களா. மொதல்ல தேவா வேண்டாம்னு சொன்னீங்க. இப்போ உங்க பாட்டை தேவா பேர்ல போடுங்கன்னு சொல்றீங்க. தேவா அண்ணனை ரொம்ப குறைவா எடை போட்டுட்டீங்களா? தமிழ் சினிமாவில அவர் ஒரு ஜீனியஸ். தன்னுடைய உழைப்பாலயும் திறமையாலயும், படிப்படியா முன்னுக்கு வந்து மக்கள் மனசுல இடம் புடிச்சவரு. பட்டி தொட்டியெல்லாம் அவரு பாட்டு பட்டை யக் கிளப்பிக்கிட்டிருக்கு. உங்களுக்கு ஜால்ரா போடற சில பேரை சுத்தி வச்சுக்கிட்டு ஆர்மோனியத்தை வாசிச்சிக்கிட்டு, நீங்க பாடறதையெல்லாம் அவங்க ஆஹா... ஓஹோன்னு சொல்லி உங்களை ஏத்திவிட்ருக்காங்க. உங்களை மியூசிக் போடச் சொல்லியிருக்காங்க. அதுக்காக உங்க பாட்டை தேவா பேர்ல போடுங்கன்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல மாமா. இது அவர்கூட எனக்கு முதல் படம். அவரு விருப்பப்படி போட்டிருந்தா கூட பாட்டெல்லாம் இன்னும் சூப்பரா வந்திருக்கும்'' என்று பேசிக்கொண்டே போக... அவருக்குள்ளே இருந்த போலீஸ்காரர் வெளியே வந்தார்.

"இதற்குமேல் பேச வேண்டாம்' என்பது போல கையை உயர்த்தினார்.

"மாப்ள.. மியூசிக் டைரக்டர் நானா இருந்தா இந்தப் படத்தை கன்டினியூ பண்ணுவேன். என்ன பண்றதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க'' என்று கூறியபடி உள்ளே போய்விட்டார்.

அவரை ஏத்தி விட்ட இரண்டு ஜால்ராக்கள் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு உள்ளே போனார்கள். சிரித்துவிட்டுப் போனார்கள் என்பதை விட என்னை அழ வைத்துவிட்டுப் போனார்கள் என்பதுதான் உண்மை.

"தேனிசைத் தென்றல் தேவா' அண்ணனுடைய மதிப்பை, மரியாதையை, திறமையை, இசை ஞானத்தை, அவர் அடைந்த புகழை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்க நான் விரும்பவில்லை.

நானும் அவருடைய மகனும் பார்ட்னர்களாக ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். இரண்டு பேரும்தான் பேங்க் செக்குகளிலும் கையெழுத்திட வேண்டும். ஜெமினி லேப்பில் பிலிம் ரோல் வாங்க வேண்டுமென்றாலோ, தயாரிப்பாளர்கள் என்ற முறையில் வேறு எந்த விஷயங்களுக்காகவோ இருவரும்தான் கையெழுத்திட வேண்டும். தேவா அண்ணனை நான் மாற்றுவதற்கு சம்மதிக்காததால் போலீஸ் மாமாவின் மகன் கையெழுத்து போட மறுத்துவிட்டார். அதனால் பேங்க் பரிவர்த்தனை பண்ண முடியவில்லை. ஜெமினி லேபில் பிலிம் ரோல் வாங்க முடியவில்லை. ராணி மகாராணி படத்தின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

படப்பிடிப்பு நின்றுபோனது...!

(வளரும்...)

படம் உதவி: ஞானம்