(69) "அதுதாண்டா சிவாஜி' என்றார் சிவாஜி!
"எங்க முதலாளி' படம் என் திரையுலக பயணத்தில் பல கசப்பான அனுபவங்களுக்கு தொடக்கமாக இருந்தது. அந்தக் கசப்புக்கு முன் சில இனிப்பான நிகழ்வுகளைச் சொல்லிவிடுகிறேன்.
நடிப்பின் இமயம்,… நடிப்பின் சிகரம், நடிப்புலக சக்கரவர்த்தி, நடிப்பின் இலக்கணம், நடிப்பின் பல்கலைக்கழகம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு நான் வசனம் எழுதியதும், அவருடன் பழகிய நாட்களும் என்னால் மறக்க முடியாதவை. ஆக்ஷன் கிங் அர்ஜுன், சௌந்தர்யா நடித்த ஒரு தெலுங்குப் படம்… நன்றாக வந்திருக்கிறது என்று அர்ஜுனே சொன்னதால் அதை தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கினார் அண்ணன் கலைப்புலி தாணு.
இது நடந்தது 1998ஆம் ஆண்டு.… அந்தப் படத்திற்கு வசனம் எழுத அண்ணன் தாணு என்னிடம் பேசினார். அப்பொழுது அந்த தெலுங் குப் படம் ரிலீசாகியிருக்கவில்லை. ஹைதராபாத் சென்று டபுள் பாசிடிவ் பார்த்துவிட்டு வருமாறு என்னை அனுப்பினார். என்னுடன் வாத்தியார் ராமன் என்ற நடிகரையும் அனுப்பி வைத்தார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நாடகங்கள், படங்களில் நடித்த மிகச்சிறந்த நடிகர் அவர். நல்ல கதை ஞானம் உள்ளவர். இருவரும் ஹைதராபாத் சென்று படத்தைப் பார்த்தோம். படம் பார்த்து முடித்ததும் நான் அவரிடம் கேட்டேன்.
"சார் படம் எப்படி இருக்கு?''
அதற்கு அவர் பதில் சொல்லாமல் என்னிடம் கேட்டார்... "உங்களுக்கு புடிச்சிருக்கா?''
இருவருக்குமே படம் அவ்வளவாகத் திருப்தி யளிக்கவில்லை. "எனக்குப் புடிக்கல சார். இதை எப்படி சார் தாணு அண்ணன்கிட்ட சொல்றது?'' என்றேன்.
"நல்லா இல்லேன்னு சொல்ல வேணாம்'' என்றார் ராமன் சார்.
"அதெப்படி சார் சொல்லாம இருக்க முடியும்?'' என்றேன்.
"சினிமாவுல ஒரு விஷயம் தெரிஞ்சுக்குங்க. ஒரு படத்தை ரைட்ஸ் வாங்கறதுக்கு முன்னாலயோ, ஒரு கதைய ஓ.கே. பண்றதுக்கு முன்னாலயோ ஆயிரம் அபிப்ராயம் சொல்லலாம். அவங்களுக்கு பணம் கொடுத்து வாங்கியாச்சேன்னு குழப்பம் வந்திரலாம். அதனால நல்லா இல்லேன்னு சொல்ல வேணாம். தெலுங்கை விட நல்லா பண்ணலாம்னு சொல்லலாம்'' என்றார்.
கே.பாலசந்தருடன் பழகிய அனுபவம். அவர் சொன்னபடியே தாணுவிடம் "படம் பிடிச்சிருக் குண்ணே, தமிழ்ல இதைவிட நல்லா பண்ணலாம்'' என்று சொன்னேன். அப்பொழுது அவர் ஒரு செய்தியைச் சொன்னார்.
"அந்தத் தெலுங்குப் படத்தை பாதி தமிழ்ல டப்பிங் செய்து கொள்ளலாம். பாதிப் படத்தை தமிழில் ஷூட் பண்ணலாம்'' என்றார். எனக்குப் புரியவில்லை. "எந்தப் பாதியை தமிழில் ஷூட் பண்ணப் போறோம்ணே'' என்று கேட்டேன்.
"தெலுங்கில் அர்ஜுனுக்கு அப்பாவாக கோட்டா சீனிவாசராவ் நடித்திருப்பார். மிகச் சிறந்த நடிகர். தமிழில் விக்ரம் நடித்த "சாமி', விஜய் நடித்த "திருப்பாச்சி' போன்ற படங்களில் வில்லனாக நடித் தவர். தெலுங்கிலே நல்ல அப்பாவாக நடித்திருப் பார். தமிழில் அவர் நடித்த கேரக்டருக்கு சிவாஜி சாரை பேசியிருக்கேன். அந்தப் போர்ஷனை மட்டும் நாம ஷூட் பண்ணிக்கலாம்'' என்றார்.
அதைக் கேட்டதுமே, "சிவாஜி அவர்களுக்கு எழுதப் போகிறோம்' என்ற ஆனந்தத்தில் படத்தைப் பற்றிய குறைகளே எனக்கு மறந்து போய்விட்டது. எவ்வளவு பெரிய வாய்ப்பு.
எழுத்துலக ஜாம்பவான்கள், வசன மேதை கள், கலைஞர், ஏ.பி.நாகராஜன், ஏ.எல்.நாராயணன், ஆரூர்தாஸ், மகேந்திரன், ஸ்ரீதர், பாலமுருகன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாக்யராஜ் போன்றவர்கள் எழுதிய சிவாஜி அவர்களுக்கு, நானும் எழுதப் போகிறேன் என்ற மகிழ்ச்சி.
அந்தத் தெலுங்குப் படத்தின் பெயர் "சுப வார்த்தா' அதை இயக்கியிருந்தவர் ராமச்சந்திர ராவ். தெலுங்கு, கன்னட மொழிகளில் பல படங்களை இயக்கியவர்.
"தமிழ்ல சிவாஜி அவர்கள் நடிக்கிற போர்ஷனை டைரக்ட் பண்றது யாருன்னு முடிவு பண்ணிட்டீங்களாண்ணே'' என்றேன். "தெலுங்கு படத்தை டைரக்ட் பண்ண ராமச்சந்திர ராவையே பேசிட்டேன்'' என்றார்.
ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு அவர் வந்தார்.
(ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங் களின் தாய்வீடாக சென்னைதான் இருந்தது. படப்பிடிப்பு ஸ்டுடியோக்கள், ரிகார்டிங் தியேட்டர் கள், டப்பிங் தியேட்டர்கள் எல்லாமே சென்னை யில்தான். தெலுங்குப் பட உலகின் பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் பெரும்பாலும் சென்னையில்தான் இருந்தார்கள். அந்த வகையில் ராமச்சந்திர ராவும் சென்னையில் வாழ்ந்தவர்தான்.)
தமிழில் "மன்னவரு சின்னவரு' என்று பெயர் வைக்கப்பட்டது. சிவாஜி அவர்களிடம் எங்களை அழைத்துச் சென்றார் அண்ணன் தாணு.
இயக்குநரை விசாரித்துவிட்டு என்னைப் பார்த்தார். அந்தக் கண்களைத் தானே பல படங்களில் நான் பார்த்தேன். அந்தக் கண்கள் மூலம் அவர் கொட்டிய அற்புத நடிப்பை எத்தனை படங்களில் பார்த்திருக்கிறேன். அவர் நடந்தால், திரும்பினால், அழுதால், சிரித்தால் திரையரங்குகள் கைத்தட்டலால் அதிர்வதை பார்த்தவன். திரையில் பார்த்து பிரமித்துப் போன கலையுலகின் பொக்கிஷத்தை நேரில், மிக அருகில், அவர் பக் கத்தில் அமர்ந்து பார்க்கிறேன். பிரமிப்புடன் பார்க்கிறேன்.
"தம்பி விஜயகாந்த்தோட பெரிய படங்களுக்கெல்லாம் வசனம் எழுதியிருக்காரு. டைரக்ட் பண்ணியிருக் காரு'' என்று என்னை அறிமுகப்படுத்தி சில படங்களின் பெயரையும் சொன்னார் அண்ணன் தாணு.
"அவனா நீ' என்பது போல என்னைப் பார்த்தார் சிவாஜி.
"லியாகத் அலிகான்'' -சிம்மக் குரலில் அவர் என் பெயரைச் சொன்னார்.
"எந்த ஊரு?''
"கம்பம்ணே'' என்றேன். சற்று பெருமிதத் தோடு.… காரணம் எங்கள் ஊர் கம்பத்திற்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கமால் முஸ்தபா என்ற நெருங்கிய நண்பர் சிவாஜி அவர் களுக்கு இருந்தார். அதுவும் எங்கள் கம்பத்தில் இருந்தார். நான் பள்ளிச் சிறுவ னாக இருந்தபோது சிவாஜி அவர்கள் கம்பத்திற்கு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்தார். கூட்டம் அலைமோதியது. அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். கூட்டம் முடிந்ததும் சாப்பிடுவதற்காக அவரது நண்பர் கமால் முஸ்தபா வீட்டிற்கு வந்தார் சிவாஜி. அந்த வீடு எனக்கும் பழகிய வீடு என்பதால் அங்கும் நான் இருந்தேன். அதையெல்லாம் அவரிடம் ஞாபகப்படுத்தினேன்.
"நீ கம்பமா?… கமால் முஸ்தபா உனக்கு வேண்டியவரா...… நெருங்கிட்டியே'' என்றார்.
அப்படிச் சொன்னதும், உரிமையோடு நானும் அவர் அருகில் நெருங்கி அமர்ந்தேன்.
இந்தச் சம்பவம் நடந்தபோது கமால் முஸ்தபா அவர்கள் உயிரோடு இல்லை. ஆனால் சிவாஜி அவர்களுக்கு அவர் பரிசாகக் கொடுத்த யானைத் தந்தங்களால் ஆன நினைவுப் பரிசு சிவாஜி இல் லத்தை எப்பொழுதுமே அலங்கரித்துக் கொண்டி ருக்கிறது. அதைக் காட்டி என்னுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் நடிகர் திலகம்.
"மன்னவரு சின்னவரு' படப்பிடிப்பு பெங்க ளுரில் தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பு. முதல் காட்சி. தெலுங்குப் படத்தில் இருந்த வசனமும் சற்று அதிகம். அதைவிட இன்னும் அதிகமாக வேண்டும் என்று இயக்குநர் கேட்டதால் நானும் நிறைய எழுதித் தள்ளிவிட்டேன்.
பெங்களுருவில் உள்ள ஒரு பங்களாவில் காலை ஏழு மணி கால்ஷீட். லைட்டிங் நடந்து கொண்டிருந்தது. நான் எழுதிய வசனத்தை திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தேன். எத்தனையோ படங்களுக்கு எழுதியிருந்தாலும் நடிகர் திலகத்திற்கு எழுதிய வசன மாயிற்றே. இன்னும் மெருகேற்ற லாமா என்ற கற்பனையில் இருந்தேன். சரியாக ஆறே முக்கால் மணிக்கு மேக்கப்போடு வந்துவிட்டார் சிவாஜி.
ஹாலில் இருந்த டைரக்ட ரும், கேமராமேனும் வணக் கம் சொல்லி வரவேற்றிருக் கிறார்கள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு "எங்கே கம்பத்துக்காரன்?'' என்று கேட்டிருக்கிறார். டைரக்டர் என்னிடம் வந்து "சிவாஜி சார் உங்களைக் கேட்டார். போங்க டயலாக்க படிங்க'' என்று சொன்னார். நடிகர் திலகத்திற்கு ஒரு அறை ஒதுக்கியிருந்தார்கள். அந்த அறைக்குப் போனேன்.
"வணக்கம்ணே''
"வாடா பாய்'' என்றார்.
எனக்கொரு பழக்கம் இருக்கிறது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மிகவும் ஈஸியாக நகைச்சுவையாகப் பேசிப் பழகிவிடுவேன். சிவாஜி ஒரு இமயம் என்றாலும் அவரிடமும் அப்படியே பேசினேன்.
"என்னண்ணே… கோழி கூவுறதுக்குள்ளே மேக்கப்போட வந்துட்டீங்க'' என்றேன்.
"அதுதான்டா சிவாஜி'' என்றார்.
யார் வந்தாலும் வராவிட்டாலும் அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு ஷூட்டிங் வருவார் என்பது எனக்குத் தெரியும். ஒரு ஜாலியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக அப்படிக் கேட்டேன்.
"வசனத்தை படிக்கவாண்ணே'' என்றேன்.
"நீ படிச்சு கிழிச்சது போதும். நானே கிழிக்கிறேன் கொடு'' என்றார் சிவாஜி.
(வளரும்...)