(67) பாசத்துடன் கோபம்!
"அண்ணே விஜயகாந்த் உங்க மேல கோபப்பட்டு ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு சென்னை வந் துட்டாரு. உங்களுக்குப் பதிலா வேற வசனகர்த்தாவை "சக்கரைத்தேவன்' படத்துக்கு போடலாமான்னு கேட்டுட்டு வரச் சொன்னாங்க'' என்றான் விஜயகாந்த்தின் உதவியாளர் சுப்பையா.
"சுப்பையா… ஒரு நல்ல செய்தியோட வந்திருக்கே.… படம் ஆரம்பிக்கும் போதே இயக்குநரிடம் வேறு ஒரு வசனகர்த்தாவை ஏற்பாடு பண்ணச் சொன்னேன். அவர் அதைப் பண்ணல. அதனால எந்தப் பிரச்சினையும் இல்ல. நான்தான் பாதிக்கப்பட்டேன். என்னோட கட்டளை படம்தான் பாதிக்கப்பட்டிருச்சு. இதையெல்லாம் நான் யார்கிட்ட போய் சொல்லி அழுவது. இப்பவும் நான் சக்கரைதேவன் படத்துக்கு பாதி எழுதிக் கொடுத்திட்டேன். மீதி வசனத்தை அவங்க யாரை வச்சு எழுதுனாலும் எனக்கு மகிழ்ச்சி. ஆனா இந்தப் பிரச்சினைக்கு எந்த வகையிலும் நான் காரணம் இல்லை. இதை வார்த்தை மாறாம அப்படியே போய் அவர்களிடம் சொல்லு'' என்று அனுப்பி வைத்தேன்.
போகும்போது ஒன்றை சொல்லிவிட்டுப் போனான். "எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிய சொர்ணம் அவங்களை பேசலாமா என்ற யோசனையில் விஜயகாந்த்தும், ராவுத்தரும் இருப்பதாக'ச் சொன்னான். "சபாஷ்… சிவப்பு எம்.ஜி.ஆருக்கு எழுதியவர் கருப்பு எம்.ஜி.ஆருக்கு எழுதப் போகிறார்...… வாழ்த்துகள்'' என்றேன்.
அங்கிருந்து போன சுப்பையா சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். "அண்ணே… என்ன பண்ணுவீங்களோ தெரியாது... நீங்கதான் எழுதணுமாம், சொல்லி அனுப்பினாங்க'' என்றான்.
நான் உடனே அங்கிருந்து கிளம்பி விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரையும் போய்ப் பார்த்தேன்.
"உங்களுக்காக எவ்வளவோ இழந்திருக்கேன், இப்பவும் இழந்துகிட்டிருக்கேன். அப்படி இருக்கிற என்மேல கோபப்பட்டு ஷூட்டிங்கை விட்டுட்டு வரலாமா?'' என்று கேட்டேன்.
அந்த இடத்தில் விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர், நான் மூவர் மட்டுமே இருந்தோம். மூவர் கண்களுமே கலங்கியிருந்தது. எனக்குத் தெரியும். அவர்களுக்கு என்மீது கோபம் இல்லை. அவர்களை விட்டுப் பிரிந்து சத்யராஜ் படம் இயக்கப் போய்விட்டேன் என்ற பாசக் கோபம்.
அப்படியெல்லாம் நான் பிரிந்துவிடக்கூடாது என்று நினைத்த விஜயகாந்த்திடம் இருந்து என்னை இப்போது சிலர் பிரித்துவிட்டார்கள். விதி வலியது. அதனால் அவர்கள் வாழ்ந்தார்களா வீழ்ந்தார்களா? என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
"கட்டளை' படத்திற்கு வருவோம். அந்தப் படத்திற்கு இடையூறாக "எங்க முதலாளி' படம் வந்ததை சொன்னேன். மீண்டும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கியது. பஞ்சு அருணாசலம் அண்ணன் அங்கு வந்து தங்கியிருந்து எழுதிக் கொடுத்தார். பல வெள்ளிவிழா படங்களுக்கு எழுதியவர். அதனால் அவர் எழுதிக் கொடுத்ததை நான் அப்படியே எடுத்தேன்.
விஜயகாந்த் ஏதாவது கருத்துகள் சொல்வார். ஆனால் பஞ்சண்ணனிடம் பேசுவதற்கு தயங்கியபடியே இருப்பார். எங்கள் இருவருக்குமே ஏதோ ஒன்று குறைவது போலவே இருந்தது.
"கட்டளை', "சக்கரைதேவன்', "எங்க முதலாளி' ஒரே நேரத்தில் மூன்று படங்களிலும் சிக்கிக்கொண்டு தவித்தேன். இந்தச் சிக்கலை நான் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். நானே ஏற்படுத்திக்கொண்ட சிக்கல். எளிதில் அவிழ்க்க முடியாத சிக்கல். நடுக்கடலில் சுனாமியில் சிக்கிக்கொண்ட கப்பல் போல... இல்லை படகு போல ஆகிப்போனேன்.
"கட்டளை' படம் 1993ஆம் ஆண்டு மே மாதம். அதே சமயத்தில் "சக்கரைதேவன்' பட மும் ரிலீசானது. எங்க முதலாளி படம் அதே 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரிலீசானது. கிட்டத்தட்ட குறுகிய இடைவெளியில் மூன்று படங்கள் இதை வைத்தே ரசிகர்களும் வாசகர்களும் என்னுடைய சூழ்நிலை யைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
"கட்டளை' பட சூட்டிங் முடிந்து ரீ- ரிகார்டிங் பணி களை அண் ணன் இளைய ராஜா தொடங்கினார்.
அந்தப் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்திருந்தோம். அதை மறுத்துவிட்டு இளையராஜா அண்ணன் வேண்டும் என்று மாற்றினேன். ஆனால் இளையராஜா அண்ணன் அதை மறக்கவில்லை போலத் தெரிந்தது. "கட்டளை' படத்தில் அவரது கோபம் வெளிப்பட்டது. எனக்குத் தெரிந்தது. இதற்கு மேல் நான் எதாவது சொன்னால் மிகப் பெரிய இசை மேதை அண்ணன் இளையராஜா அவர்களைப் பற்றி நான் விமர்சனம் செய்வது போல ஆகிவிடும். அவரது அன்பை இழக்க நான் விரும்பவில்லை.
"கட்டளை' படத்தில் பல காட்சிகள் ரசிகர்களின் கர கோஷத்தினாலும், கைத்தட்டல் களினாலும் திரையரங்குகள் அதிர்ந்தன. படத்தில் சத்யராஜுக்கு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற ஆசை. ஆனால் அது நிறைவேறவில்லை. ஒருநாள், நாடகத்திற்காகப் போட்ட போலீஸ் டிரஸ்ஸோடு ஒரு போலீஸ் அதிகாரியின் ஜீப்பை தெரியாமல் எடுத்துக்கொண்டு ஒரு விபச்சார விடுதிக்குப் போவார். அவரை உண்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று நினைத்து நடக்கும் சம்பவங்கள்.
1993ஆம் ஆண்டு நான் எழுதிய வசனங்கள்.
விபச்சார விடுதி வாட்ச்மேன் போலீஸ் ஜீப்பைப் பார்த்துவிட்டு உள்ளே ஓடிப் போய் அந்த விடுதியை நடத்தும் பெண் தாதாவிடம் கூறுவான்.
வாட்ச்மேன்: அக்கா...… அக்கா…
பெண் தாதா: எலே ஏண்டா இந்த ஓட்டம் ஓடி வர்றே,… யாராவது மந்திரி வர்ராங்களா?
வாட்ச்மேன்: இல்ல இன்ஸ்பெக்டர் வர்றாரு…
பெண் தாதா: இன்ஸ்பெக்டர் வர்றதுக்கா இப்படி ஓடி வர்றே?…
வாட்ச்மேன்: பழைய இன்ஸ்பெக்டர் இல்லக்கா இவரு புதுசா இருக்காரு.
(இன்ஸ்பெக்டர் உடையில் சத்யராஜ் வருவது)
சத்யராஜ்: இந்த வீட்டை நான் செக்கப் பண்ணணும்.
பெண் தாதா: செக்கப்பா… நீ என்ன செக்கப் பண்றது. நானே வரச் சொல்றேன். அம்மாடி கண்ணுங்களா, காவல்துறையில இருந்து ஆள் வந்திருக்கு. கொஞ்சம் வெளியில வாங்கடி ராசாத்திகளா.
ஒவ்வொரு ரூமில் இருந்தும் விதவிதமான பெண்கள் வந்து ஸ்டைலாக நிற்கிறார்கள். அந்தப் பெண்ணைக் காட்டி....
பெண் தாதா: இன்ஸ்பெக்டர் தம்பி. இது ஆந்திரா, இது கேரளா,… இது கர்நாடகா,… இது உத்தரபிரதேசம், இது மத்தியப் பிரதேசம், இது அரியானா,… இது ஒரிசா என்று பல ஸ்டேட்களின் பெயரைச் சொல்லிவிட்டு "என்ன பார்க்கிற...… லாட்டரி டிக்கெட் விக்கிறவன்கிட்ட கூட இவ்வளவு ஸ்டேட் கிடையாது. என்கிட்ட அத்தனை ஸ்டேட்டும் இருக்கு.'
சத்யராஜ்: பொணணுங்களை வச்சு விபச் சாரம் பண்ற நீ போலீஸ் இன்ஸ்பெக்டர்கிட்டயே இவ்வளவு துணிச்சலா பேசறியா?
பெண் தாதா: எனக்கென்ன பயம்? யாருக்கும் தெரியாமலா இதை நடத்தறேன். இன்விடேஷன் அடிச்சு முக்கியமானவங்களுக்கு கொடுத்துட்டுதான் இதை ஓபன் பண்ணேன். ரிப்பன் கட் பண்ணி ஓப்பன் பண்ணி வச்சது யாரு தெரியுமா? உங்க டிபார்ட்மெண்ட்ல உள்ள ஒரு பெரிய ஆபீசர்தான். அதுக்காக தொழில் தர்மத்தை நான் மறக்க மாட்டேன். உனக்கு மாசா மாசம் எவ்வளவு மாமூல் வேணுமோ அதைச் சொல்லு… இந்தப் பொண்ணுங்கள்ல உனக்கு எந்தப் பொண்ணு வேணுமோ அதைச் சொல்லு.
சத்யராஜ் பதில் சொல்லாமல் பார்க்க...
பெண் தாதா: பொறுமையா பேசறாளே பொம்பளதானேன்னு நெனைக்காதே. நான் சொல்றதைக் கேட்டா நீ நிரந்தரமா இந்த ஊர்லயே இன்ஸ்பெக்டரா இருக்கலாம். என்னைப் பத்தி உனக்குத் தெரியாது. நான் ஏழு கொலை பண்ணுனவ என்று அவள் மிரட்ட...
சத்யராஜ் அங்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்சும் இடத்துக்கு போவார். போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்குவார். அங்கிருந்த அடியாட்கள் உருட்டுக்கட்டை, கத்தி, அரிவாளை எடுத்துக்கொண்டு சத்யராஜை சுற்றி நிற்பார்கள்.
அதைப் பார்த்து பதறிப்போன கள்ளச்சாராய வியாபாரி வேகமாக வருவார்.
சாராய வியாபாரி: டேய்… டேய்.. என்னடா இது ஆ, ஊன்னா அரிவாளை எடுக்கறீங்க. அவரு யார்ரா? நம்ம ஃபிரண்டுடா போலீஸ் டிபார்ட்மெண்ட். எதுக்குடா நாம பாதுகாப்பா சாராயம் காய்ச்சறதுக்குத்தான்டா தம்பி புதுசா வந்திருக்கீங்களா?
சத்யராஜ்: ஆமா
சாராய வியாபாரி: புதுசா வர்ற மருமகளும், புதுசா வர்ற இன்ஸ்பெக்டரும் வேகமாத்தான் இருப்பாங்க. ஆனா நாங்க மாமியார் மாதிரி எங்கள மீறி ஒண்ணும் பண்ண முடியாது.
சத்யராஜ்: மருமகன் கையாலாகதவனா இருந்தா மாமியார் கை ஓங்கத்தான் செய்யும். இன்ஸ்பெக்டர் இளிச்சவாயனா இருந்தா உங்கள மாதிரி ஆளுங்க வீதிக்கு வீதி காய்ச்சுவீங்க. விட்டா வீட்டுக்கு வீடு கூட காய்ச்சுவீங்க.
சாராய வியாபாரி: இங்க பாருங்க தம்பி நல்லபடியா நாங்க கொடுக்கிறத மாசா மாசம் வாங்கிக்குங்க. ஏட்டு வந்து வாங்குனா ஒரு ரேட்டு. நீங்க வந்து வாங்குனா ஒரு ரேட்டு, நாங்களா வந்து கொடுத்தா ஒரு ரேட்டு. எங்க பசங்களுக்கு ரெண்டே ரெண்டுதான் தெரியும். சாராயம் காய்ச்சுவானுக. கொலை பண்ணுவானுக.
சத்யராஜ்: மிரட்டி பாக்கறீங்களா?
சாராய வியாபாரி: ஐயய்யோ சத்தியமா சொல்றேன். மூணு இன்ஸ்பெக்டர். ரெண்டு ஏட்டு, பத்து கான்ஸ்டபிளை இதே எடத்துலதான் வெட்டி புதைச்சுருக்கேன்...
என்று மிரட்ட, அவனிடமும் சத்யராஜ் லஞ்சம் வாங்கிக் கொண்டு, மேலும் சில இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்ற சொல்லி லஞ்சம் வாங்கிக் கொண்டு ஐ.ஜி.யிடம் போய் மொத்தப் பணத்தையும் ஐ.ஜி.யின் டேபிள் மேல் கட்டுக் கட்டாகக் கொட்டுவார்.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்