aa

(64) விரும்பவில்லை விஜயகாந்த்! ரசிக்கவில்லை ராவுத்தர்!

"கட்டளை' படத்தின் தயாரிப்பாளர் கோபியும் (பானு ப்ரியாவின் சகோதரர்), பொறுப்பு தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசனும் "ஏ.ஆர்.ரஹ்மான்தான் நம்ம படத்துக்கு இசை'' என எவ்வளவோ வற்புறுத்தியும் "இளையராஜாதான் வேண்டும்'' என நான் சொன்னேன்.

இறுதியில் படத்தின் ஹீரோ சத்யராஜ் என்ன சொல்கிறாரோ, அதன்படி முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித் தோம்.

Advertisment

சத்யராஜை பார்த்து விஷயத்தைச் சொன்னேன். ஷாக்காகிப் போனார் சத்யராஜ்.

அவர் ஒருமுறை என்னிடம் சொன்னார். "இளைய தலை முறையில், எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் கலைமணி, மணிவண்ணன், லியாகத் அலிகான். மற்றவர்கள் எழுதிய வசனங்களை பேசி நடித்து விட்டேன். உங்கள் வசனங்களைப் பேசி நடிக்க வேண்டும்'' -இப்ப டிச் சொன்னவர், என்னுடைய எழுத்தில், இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்தார். என் வளர்ச்சியில், என்னுடைய வெற்றி யில் மிகவும் அக்கறை காட்டினார். அந்த அக்கறையை நான் அலட்சியப்படுத்திவிட்டேன் என்பதை பின்வரும் காலங்களில் நினைத்து நினைத்து வேதனைப்படு வேன் என்று நான் நினைக் கவே இல்லை. அப்பொழு தெல்லாம் எனக்கு என் எதிர்காலத்தை விட விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும்தான் முக்கியமாகத் தெரிந்தார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விஜயகாந்த்தான் எனக்கு முக்கியமாகத் தெரிந்தார்.

நான் வெளிப்படையாகச் சொல்லாமலேயே சத்யராஜ் புரிந்துகொண்டார். "லியாகத் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சூப்பரா வந்துக்கிட்டிருக்காரு. நம்ம படத்துக்கு அவரும் ஒரு தூண் மாதிரி இருப்பாரு. வேண்டாம்னு சொல்லிராதீங்க'' என்று கெஞ்சினார். அவருடைய படம் என்பதற்காக கெஞ்சவில்லை. அப்படி கெஞ்ச வேண்டிய அவசியமும் அவருக்கில்லை. அவர் எனக்காகக் கெஞ்சினார். நான் சினிமாவில் இன்னும் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காகக் கெஞ்சினார். சத்யராஜ் வெறும் நடிகர் மட்டுமல்ல, அவருக்குள் ஒரு சிந்தனாவாதி, ஒரு கற்பனாவாதி, முற்போக்கு எண்ணங்கள் கொண்ட சீர்திருத்தவாதி, எவருக்காகவும் தன்னுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ளாத முற்போக்குவாதி, இதையும் தாண்டி ஒரு கதாசிரியர், ஒரு வசனகர்த்தா, ஒரு இயக்குநர் இத்தனையும் ஒரு சேர அமையப்பெற்ற ஒப்பற்ற மனிதர்.

Advertisment

இராம.நாராயணன் சார் எனக்கு சொன்னதை இவர் வேறு மாதிரியாகச் சொன்னார்.

"லியாகத் சார்,… சினிமாவுல புதுசா புயல் மாதிரி வர்ற வெற்றியாளர்களை நம்மகூட இணைச்சுக்கணும். அது நமக்கு அசுர பலம் கொடுக்கும். விநியோகஸ்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பைக் கொடுக்கும். இளையராஜா இமாலய சாதனையாளர். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனா இப்போ ஏ.ஆர்.ரகுமான் காம்பினேஷன் என்பது உங்களுக்கு ஜாக்பாட் மாதிரி.… கொஞ்சம் யோசனை பண்ணி சொல்லுங்க'' என்றார்.

"இல்ல சார்,… நல்லா யோசனை பண்ணிட்டுத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்'' என்றேன்.

22

"நீங்க யாருக்காக இந்த முடிவை எடுத்தீங்கன்னு எனக்குப் புரியுது. உங்களோட விசுவாசத்தை நெனச்சா எனக்குப் பெருமையா இருக்கு.… அதனால நீங்க இளையராஜா சார் தான் வேணும்னு எடுத்த முடிவை நான் ஏத்துக்கறேன், ஆனா சந்தோஷமா ஏத்துக்கல. கொஞ்சம் வருத்தத்தோடதான் ஏத்துக்கிறேன். அந்த வருத்தம்கூட உங்களுக்காகத்தான்'' என்றார்.

சத்யராஜின் முடிவை தயாரிப்பாளர் கோபியிடமும், ஜாக்பாட் சீனிவாசனிடமும் சொன்னேன்.

"உனக்கெல்லாம் பட்டாத் தான் தெரியும்' என்று ஒற்றை வரியில் என் மீது கோபப் பட்டார் ஜாக்பாட் சீனிவாசன். மறுநாள் அவர் என்னிடம் ஏ.ஆர்.ரஹ்மானிடம் அட்வான் சாக கொடுத்த செக்கை திருப்பி வாங்கிவிட்டதாகச் சொன்னார். அவர்களாகவே முடிவெடுத்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி அட்வான்ஸ் கொடுத்தார்கள். இப்பொழுது அவர்களே போய் திருப்பி வாங்கிவிட்ட தாகச் சொன்னார்கள். நான் "கட்டளை' பட விஷயமாக ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கவே இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றும் வாய்ப்பையும் அவருடன் பயணிக்கும் வாய்ப் பையும் விஜயகாந்த்தின் வார்த்தைக்காக இழந்தேன். ஏனென்றால் என் வாழ்க்கையில் எனக்கு அவர்தான் முக்கியம் என்பது என் இதயத்தில் எழுதப்பட்டுவிட்டது.

முதலில் கே.பி.பிலிம்ஸ் பாலு தயாரிப்பாளராக இருந் தார். அவர் மாறி கோபி தயாரிப்பாளராக ஆனார். "மந்திரிகுமாரி' என்ற படத்தின் டைட்டில் கட்டளையாக மாறியது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பது இசைஞானி இளையராஜா என்று மாறியது.

இந்த சங்கடங்களை யெல்லாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு "கட்டளை' படத்தின் முதற்கட்டப் படப் பிடிப்பை தொடங்கும் வேலை களை ஆரம்பித்தேன். பாடல் பதிவிற்காக இளையராஜா அண்ணனைப் போய்ப் பார்த்தேன். அவர் எப்பொ ழுதுமே பேசுவதுபோல என்னிடம் பேசவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி முடிவெடுத்துவிட்டு, அவரிடம் திரும்பி வந்ததை யார் மூலமாகவோ கேள்விப்பட்டிருக்கிறார் என்று நினைத்தேன்.

"முதல்ல சீன், சண்டைக் காட்சி எதையாவது எடு,… அப்புறம் உனக்கு சாங் பண்ணித் தர்றேன்' என்று கூறிவிட்டார். என்னுடன் ஜாக்பாட் சீனிவாசனும் வந்திருந்தார். அவர் தயாரித்த படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர். அதனால் அவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்கெனவே இருந்தது.

"தம்பி என் சினிமா அனுபவத்தில் சொல்றேன். இளையராஜாவுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு. உனக்கு கொஞ்சம் பிரச்சினையாத்தான் இருக்கும். பாத்து நடந்துக்கோ'' -இது ஜாக்பாட் சீனிவாசன் என்னிடம் சொன்ன வார்த்தை.

dd

"தம்பி என் சினிமா அனுபவத்துல சொல்றேன்' என்று அவர் எனக்குச் சொன்ன விஷயங்கள் என் சினிமா வாழ்க்கையில் அப்படியே நடந்தது. அவர் சொன்ன அறிவுரைகள் எனக்கு மட்டுமல்ல. இன்றைய சினிமாவின் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் பொருந்தும். திரைக்கதை சரி செய்யப்படாமலேயே "கட்டளை' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. சில காட்சிகளும் ஒரு போலீஸ் ஸ்டேஷன் சண்டைக் காட்சியும் படமாக்கப்பட்டது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து, ரசித்து நடித்தார் சத்யராஜ் சார். ஆனந்த்ராஜ் இந்தப் படத்தில் வில்லனாக இல்லை. நல்ல இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்தார். என் மீதும் என் வசனங்களின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட அன்புத்தம்பி அவர்.

பத்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்து எடுத்த காட்சிகளை எடிட் செய்தேன். சண்டைக் காட்சியை சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் எடிட் செய்து காட்டினார். எடுக்கப்பட்ட காட்சிகளும், சண்டைக் காட்சியும் எனக்கு மிகவும் திருப்தியாகத்தான் தெரிந்தது. அதனால் சத்யராஜ் சார் பூரித்துப் போனார்.

"லியாகத் சார் சூப்பரா இருக்கு'' என்றார்.

அவர் "சூப்பர்' என்று வாழ்த்தியது சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சியையும் பார்த்து பிரமித்துப் போனதால்தான்.

"சீன்களும் அருமையா வந்திருக்கு. சண்டைக் காட்சியும் பிரமாதமா வந்திருக்கு'' என்றார்.

எனக்கும், என் உதவியாளர்களுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிரிவியூ தியேட்டரில்தான் படம் பார்த்தோம். "எடுத்தவரைக்கும் ரொம்ப நல்லா இருக்கு' என்று ஏ.வி.எம்.சரவணன் சாரிடம் யார் சொன்னது என்று தெரியவில்லை. மறுநாள் என்னை அழைத்து "உங்க படத்தை நான் பார்க்க வேண்டும், எனக்கு காட்ட முடியுமா?' என்று கேட்டார்.

அவருக்கு எடுத்த காட்சிகளைப் போட்டுக் காட்டினோம். பார்த்துவிட்டு பெரிதாகப் பாராட்டிவிட்டுப் போனார்.

அவருடைய பாராட்டுக்குப் பிறகு சத்யராஜ் என்னிடம் சொன்னார். "லியாகத் சார் சீக்கிரம் திரைக்கதையை ரெடி பண்ணுங்க அசத்திடுவோம்'' என்றார்.

"என் முதல் வேலையே அதுதான் சார்'' என்றேன்.

கவியரசு கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை அந்தப் பாடல் வரிகள் போல "கட்டளை' படத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கும் என்று நான் நினைக்கவேயில்லை.

"கட்டளை' படம் எடுத்தவரைக்கும் சிறப்பாக வந்திருக்கிறது என்பதையும், சூப்பர் சுப்பராயன் அமைத்த சண்டைக் காட்சி அசத்தலாக வந்திருக்கிறது என்பதையும் ஏ.வி.எம்.சரவணன் சார் பார்த்து ரசித்தார் என்பதையும் கேள்விப்பட்ட விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் இந்தப் பாராட்டுதல் களை ரசிக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்.

அதற்குக் காரணம்...?

(வளரும்...)

படம் உதவி: ஞானம்