dd

(60) "டிக்' அடித்த ரஜினி! "செக்' வைத்த விஜயகாந்த்!

"ரஜினி படத்தை இயக்க வேண்டாம் என்றும், அதை விஜயகாந்த்தை வைத்து இயக்கலாம்' என்றும் ராவுத்தர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன்.

ஒருநாள் தற்செயலாக ஏவி.எம்.மில் ரஜினியை சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெற்ற சில மாதங்களில் ஒரு தயாரிப்பாளரிடமிருந்து எனக்கு அழைப்பு. திட்டமிட்டு படமெடுக்கும் அவர் பக்கா ஜென்டில்மேன். அவரின் படத்திற்கு நான் வசனம் எழுதியிருப்பதால் என்னிடம் மிகவும் அன்பாகப் பழகுவார்.

Advertisment

அழைப்பு வந்ததும் போய்ப் பார்த்தேன்.

"அடுத்து ஒரு பெரிய படம் பண்ணப்போறேன். ரஜினி சார் ஹீரோ, இளையராஜா இசை, கேமரா அசோக்குமார்'' என்று சொன்னவர்... கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் யார் தெரியுமா?'' என்றார்.

"சொன்னாத்தானே சார் தெரியும்'' என்றேன்.

Advertisment

"லியாகத் அலிகான்'' என்றார்.

ரஜினி சார் படத்துக்கு நான் டைரக்டரா என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

"எப்படி சார் என்னை செலக்ட் பண்ணீங்க?'' என்றேன்.

அவர் சொன்னார். "ஆறு டைரக்டர்கள் பெயரை எழுதி ரஜினி சாரிடம் காட்டினேன். அதில் உங்கள் பெயரும் ஒன்று. "ஆறு பேர்ல நீங்க யாரைச் சொல்றீங்களோ அவரை டைரக்டரா நாங்க போட்டுக்கிறோம்' என்று சொன்னேன். ஆறு பேர்ல மூன்று பெயரை அவர் டிக் பண்ணி, "இந்த மூணு பேர்ல ஒருத்தரை ஓ.கே. பண்ணுங்க' என்றார் ரஜினி சார். அந்த மூணு பேர்ல உங்க பெயரும் இருந்தது. எனக்கு உங்களை புடிச்சதுனால இப்ப கூப்பிட்டுப் பேசிக்கிட்டிருக்கேன்'' என்றார்.

எனக்கு மகிழ்ச்சி. ரஜினி சாருடன் அதிகம் பழகா விட்டாலும் கூட அவர் மனதில் நான் இருந்திருக்கிறேன். என் எழுத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.

"என்னை செலக்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்'' என்றேன்.

"எப்போ கதை சொல்றீங்க'' என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, "சின்ன மாப்ளே' என்ற பெயரில் ஒரு படம் ஆரம்பிக்கப் போறார். பிரபு சார் ஹீரோ. சந்தானபாரதி டைரக்ஷன். கலைமணி சார் கதை. சில சூழ் நிலைகளால் அவர் வசனம் எழுத முடியாமல் போனதால் என்னை எழுதச் சொல்லியிருந்தார். அந்த விஷயங்களைச் சொல்லி "சின்ன மாப்ளே கதை டிஸ்கஷனுக்காக மதுரைக்கு போறேன் சார். ஒரு வாரம் கழிச்சு வந்ததும் உங்களை மீட் பண்ணி கதை சொல்றேன் சார்'' என்றேன்.

அவரும் "சரி' என்று அனுப்பி வைத்தார்.

மதுரைக்குப் போவதற்கு முன் வழக்கம்போல விஜயகாந்த்தை யும், இப்ராகிம் ராவுத்தரையும் சந்தித்தேன். ரஜினி சார் படம் இயக்குவதற்கு வாய்ப்பு வந்ததைச் சொன்னேன்.

மதுரைக்குப் போய் தமிழ் நாடு ஹோட்டலில் "சின்ன மாப்ளே' கதை டிஸ்கஷனில் இருந்தேன். நான்கு நாட்கள் கழித்து இப்ராகிம் ராவுத்தரிடம் இருந்து போன் வந் தது. "உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க' என்றார். அவர்கள் சொல்வது தான் எனக்கு வேதவாக்காயிற்றே. அன்றிரவே கிளம்பி மறுநாள் காலை சென்னை வந்தேன். காலை பத்து மணிக்கு இப்ராகிம் ராவுத்தரைப் போய் பார்த்தேன்.

ss

"அண்ணன் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் தயாரிக்கிற படம் "எங்க முதலாளி' நம்ம விஜிதான் ஹீரோ'' என்றார்.

"அதுதான் எனக்குத் தெரியுமே'' என்றேன்.

"இன்னிக்கு மதியம் பிரசாத் ஸ்டுடியோவுல பூஜை'' என்றார்.

"காலையிலதான் பூஜை இருக்கும்... ஏன் மத்தியானம் வச்சிருக்காங்க?'' என்றேன்.

"அது தெரியல. மத்தியானத்துக்கு மேல நல்ல நேரம்னு பஞ்சண்ணன் சொன்னாரு'' என்றார்.

"அந்தப் பூஜையில கலந்துக்கிறதுக்காகவா என்னை மதுரையில இருந்து உடனே வரச் சொன்னீங்க'' என்றேன்.

"படத்துக்கு நீங்கதான டைரக்டர்'' என்றார். கேட்டதும் ஷாக் ஆகிப் போனேன்.

"எங்க முதலாளி' படத்திற்கு "தாய்மொழி' படத்தை டைரக்ட் பண்ணியிருந்த இள வரசனை சிபாரிசு பண்ணியிருந்தார் இப்ராகிம் ராவுத்தர்.

பஞ்சண்ணன், கே.ஆர். அவர்களைச் சொல்லியிருந்தார். இருவரில் யார் என்பது முடிவாகாமல் இருந் தது.

திடீரென "எங்க முதலாளி'க்குள் நான் எப்படி வந்தேன்.

பட்டென்று நினைவுக்கு வந்தது... ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததை அவரிடம் சொல்லியிருந்தேன். அதற்கு அன்பாலும், பாசத்தாலும் தடை போட்டுவிட்டார் இப்ராகிம் ராவுத்தர். விஜயகாந்த்தின் சம்மதம் இல்லாமல் அவர் சொல்லியிருக்கமாட்டார். என்னை விடுவதற்கு அவர்களுக்கு மனமில்லை. நான் அவர்களுக்குத்தான் சொந்தம் என்று விஜயகாந்த் தும், இப்ராகிம் ராவுத்தரும் உரிமையுடன் நினைத்துவிட்டார்கள். ஒரு வார்த்தை பேசாமல் அவர்கள் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். "சின்ன மாப்ளே' படமும் போச்சு. ரஜினி சார் படத்துக்கு எழுதி, இயக்கும் வாய்ப்பும் போச்சு. எங்க முதலாளிக்காக "இரண்டாவது முறையாக ரஜினி சாருடன் இணையும் வாய்ப்பை நானே கெடுத்துக்கொண்டேனா?' என்ற குழப்பம் ஏற்பட்டது.

என்னுடன் நெருங்கிப் பழகிய ஒரு நண்பர் சொன்னார். "விசுவாசத்தால் உன் எதிர்காலத்தை நீயே கெடுத்துக் கொள்கிறாய்.'

ரஜினி சார் விஷயம் கேள்விப்பட்டு, இரா.நாராயணன் சார் என்னை அழைத்துக் கேட்பதற்கு முன், நான் அவரிடம் போய் சொல்லிவிடலாம் என்று நினைத்துப் போனேன். தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னேன்.

"பைத்தியமா நீங்க'' என்றார். "நான் விஜயகாந்த் பைத்தியம் சார்' என்றது எனது மைண்ட் வாய்ஸ்.

dd

"சினிமாவுல ஒரு நல்ல வாய்ப்பு வந்தா உடனே ஓடிப்போய் விஜய காந்த், இப்ராகிம் ராவுத்தர்கிட்ட சொல்ற பழக்கத்தை விடுங்க லியா கத் சார். முதல்ல நல்லா யோசிங்க. எது நல்லதுன்னு முடிவு பண்ணுங்க. வேற நடிகர் நடிக்கிற படம் எழுதுறதுக்கோ டைரக்ட் பண்றதுக்கோ வாய்ப்பு வந்தா அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸ் வாங்கிட்டு உறுதியானதுக்கு அப்புறமா அவங்ககிட்ட போய்ச் சொல்லுங்க'' என்றார்.

என்னுடைய வளர்ச்சிக்கான ஆலோசனை அது. நியாயமான ஆலோசனையாகவும் எனக்குத் தெரிந்தது. படத்தை உறுதி செய்து விட்டுப் போனால் அவர்களும் மறுக்கமாட்டார்கள். என்னாலும் பின்வாங்க முடியாது என்று நினைத்தேன். அப்பொழுது என்னைத் தேடி ஒரு புதுப்பட வாய்ப்பு வந்தது. அண்ணன் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் படங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜராகப் பணிபுரிந்து வந்தவர் செல்வம்.

அவருக்கு நெருக்கமான டான்ஸ் மாஸ்டர், எடிட்டர், ஃபைட் மாஸ்டர், மேக்கப்மேன், காஸ்ட்யூமர் என பதினான்கு டெக்னீஷியன்கள் கூட்டாகச் சேர்ந்து பாண்டியராஜன் கதாநாயகனாக நடிக்கும் படமொன்றை தயாரிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க வேண்டும் என்றும் என்னிடம் கேட்டார். நான் சம்மதம் சொன்னேன். இந்த விஷயத்தை விஜயகாந்த்திடமும், இப்ராகிம் ராவுத்தரிடமும் சொல்ல வில்லை.

செல்வம், கதையை தயார் செய்ய, எனக்கு அறை ஒதுக்கிக் கொடுத்தார். அதற்கான வசதிகளை செய்து கொடுத்தார். சினிமா சம்பந்தமான சில நண்பர்களுடன் கதை விவாதம் செய்துகொண்டிருந்தேன். இடையிடையே விஜயகாந்த் அலுவலகம் போய் வருவேன்.

"என்னண்ணே… திடீர் திடீர்னு காணாம போயிர்றீங்க. எங்க போனீங்க..?'' என்று ஒருநாள் கேட்டார் இப்ராகிம் ராவுத்தர்.

"வீட்டு வேலை' என்று சொல்லி சமாளித்தேன். கதை முழு வடிவம் பெற்று திரைக்கதையையும் எழுதிவிட்டேன். பாண்டியராஜன் அவர்களிடமும் கதை சொல்லவேண்டும். மற்ற நடிகர், நடிகைகளிடமும் கேரக்டர்களைச் சொல்லி முடிவு செய்யவேண்டும்.

இந்த நேரத்தில் விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரும் அழைத்தார்கள். நம்ம கம்பெனிக்கு புதிதாக ஒரு கதை தயார் செய்ய வேண்டும் என்று கூறி ஒரு கதைக் கருவையும் சொன்னார் இப்ராகிம் ராவுத்தர். அருகில் விஜயகாந்த்தும் இருந்தார்.

"அண்ணே பவர்ஃபுல்லா இருக்கணும்ணே'' என்றார் அவர்.

அவர்கள் சொன்னவுடன் என் மனஉறுதி எங்கே போனது என்றே தெரியவில்லை.

இராம.நாராயணன் சார் சொன்ன அறிவுரைகள் எல்லாம் காற்றில் பறந்து போனது.

"பண்ணிரலாம்ணே'' என்று விஜயகாந்த்திடம் கூறினேன். அண்ணன் "கலைப்புலி' எஸ்.தாணுவின் அலுவலகத்தில் செல்வம் இருந்தார். அவரைப் போய் பார்த்து "விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரும் எனக்கு வேறு ஒரு வேலை கொடுத்துவிட்டார்கள். அவர்கள் சொல்வதை என்னால் மறுக்க முடியாது. எனக்கு அவர்கள்தான் முக்கியம் என்று சொல்லி பாண்டியராஜன் படத்துக்கு நீங்கள் வேறு ஒரு டைரக்டரைப் போட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறி அவரிடம் மன்னிப்பும் கேட்டேன். இந்த விஷயமும் இராம.நாராயணன் சாருக்கு தெரிந்துபோனது.

"உங்களையெல்லாம் திருத்தவே முடியாது' என்று ஒற்றை வரியில் திட்டி முடித்துக் கொண்டார்.

(வளரும்...)