dd

"லியாகத் சார், நீங்கள் சொன்ன கதை, ரஜினி சாருக்கு பொருத்தமா இருக்கும். நாளைக்கே அக்ரிமெண்ட் போட்டுரலாம், காலையில வந்துருங்க'' என ஏவி.எம். சரவணன் சார் சொன்னார். அருகிலிருந்த ஏவி.எம். பாலசுப்பிரமணியன், டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோருடன் சரவணன் சாரும் எனக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள். இதை ராவுத்தரிடமும் விஜயகாந்திடமும் தெரிவித்தேன். "காலையில ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு போறதுக்கு முன்னாடி இங்கே வந்துட்டுப் போங்க'' என ராவுத்தர் சொன்னார். அதன்படி ராஜாபாதர் தெரு விஜயகாந்த் ஆபீசுக்குப் போனேன். விஜயகாந்த் ஷூட்டிங் போயிருந்தார். ராவுத்தர் மட்டும் இருந்தார்.

"அண்ணே… அந்தக் கதையை…நம்ம பேனர்ல விஜிய வச்சு நீங்களே டைரக்ட் பண்ணுங்க'' என்று ராவுத்தர் சொன்னார்.

"என்னண்ணே சொல்றீங்க?''

Advertisment

"நம்ம விஜிக்காக பண்ண கதைதானே? நாமளே பண்ணுவோம். ஏவி.எம்.ல சொல்லிட்டு வாங்க'' என்றார்.

"சரி' என்று தலையாட்டிவிட்டு ஏவி.எம். ஸ்டுடியோ போனேன்.

சரவணன் சார் அறைக்கு என்னை அழைத்துப் போனார்கள்.

Advertisment

"அக்ரிமெண்ட் டைப் பண்ணச் சொல்லிட்டேன் லியாகத் சார்'' என்றார்.

"சார் தப்பா நெனைக்காதீங்க. அந்தக் கதைய நான் டைரக்ட் பண்ணணும். அக்ரிமெண்ட் டைப் பண்ண வேணாம் சார்'' என்றேன்.

அந்தச் சாதனையாளரின் முகம் சட்டென மாறிப் போனது. வேறு யாராக இருந்தாலும் என் மீது கோபப்பட்டிருப்பார்கள். மோசமான வார்த்தைகளால் திட்டியிருப்பார்கள். ஆனால் ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன், அவர் ஒரு ஜென்டில்மேன்.… இண்டர்காமை எடுத்தார். "அக்ரிமெண்ட் டைப் பண்ணவேண்டாம்'' என்று சொன்னார்.

"என்னை மன்னிச்சிருங்க சார்'' என்று கையெடுத்துக் கும்பிட்டேன்.

"நல்லா வருவீங்க'' என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

"ரஜினி சாருக்கு எழுதப் போறோம்' என்று மகிழ்ச்சியோடு நான் கட்டி வைத்திருந்த கற்பனைக் கோட்டை சரிந்து விழுந்தது.

ஏவி.எம். சரவணன் சாரிடம் சொன்னதை இப்ராகிம் ராவுத்தரிடம் போய்ச் சொன்னேன்.

a

என்னை ஏவி.எம்.குமரன் சாரிடம் அனுப்பி வைக்கும்பொழுது இராம.நாராயணன் சார் வெளியூருக்கு கிளம்பிக்கொண்டிருந்தார். அதனால் நடந்த விஷயத்தை அவரிடம் நான் சொல்ல முடியவில்லை. செல்போன் இல்லாத காலம் அது. இரண்டு நாட்கள் கழித்து சென்னை திரும்பிய இராம.நாராயணன் சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

ஏவி.எம். குமரன் சார் மூலம் அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. என்னைவிட மூத்தவர், என் மீது பாசம் கொண்டவர் என்ற முறையில் அவரிடமிருந்து கோபமான வார்த்தைகள் வந்தது.

"அறிவிருக்கா உங்களுக்கு.… ரஜினி படம், அதுவும் ஏவி.எம். படம். அதை வேணாம்னு விட்டுட்டுப் போயிருக்கீங்களே. முட்டாப்பய கூட இப்படி ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண மாட்டான்''

மிகவும் மென்மையான மனிதரிடமிருந்து இப்படி ஒரு கோபமும், கனமான வார்த்தைகளும் வரும் என்று நான் நினைக்கவேயில்லை. தேடி வந்த ஸ்ரீதேவியை நான் எட்டி உதைத்துவிட்டேன் என்ற கோபம் அவருக்கு.

"ஏவி.எம்.ல ஒருத்தரை புடிச்சுப் போச்சுன்னா அவங்கள பெரிய ஆளா வளர்த்து விட்ருவாங்க. உங்களையும் அவங்களுக்கு நிச்சயம் புடிச்சுப் போயிருக்கும்... விட்டுட்டீங்களே''… கோபத்தில் பேசி னாலும் அவரது கண்கள் லேசாக கலங்கியிருந்தது. இதைப் பார்த்து என் கண்களும் கலங்கிப்போனது.

"யாருக்காக, யார் சொல்லி அந்த வாய்ப்பை நான் மறுத்துவிட்டு வந்தேன்' என்பதைச் சொன்னேன்.

"சினிமாவுல அன்பு, பாசம், நன்றி, விசுவாசம் எல்லாம் இருக்க வேண்டியதுதான். ஆனா அது நம்முடைய வளர்ச்சிய பாதிக்காத மாதிரி இருக்கணும். இங்க ஜெயிக்கிறவனுக்குத்தான் மரியாதை'' என்றார்.

கால் பந்தாட்டத்தில் கோல் போஸ்ட் வரைக்கும் பந்தைக் கொண்டு போய் கோல் போட வாய்ப்பிருந்தும், பந்தை வளைக்குள் தள்ளாமல் மைதானத்திற்கு வெளியே எட்டி உதைத்து விட்டதுபோல அமைந்து விட்டது என்னுடைய செயல் என்பதை அவருடைய பேச்சிலிருந்து புரிந்துகொண்டேன்.

ஏவி.எம்.ல சொன்ன கதையை "நீங்களே டைரக்ட் பண்ணுங்கள்' என்று சொன்னதால் கதையைக் கொடுக்காமல் வந்தேன். ஆனால் அவர்கள் சொன்னபடி செய்ய வில்லை. விஜயகாந்த்துக்காக, இப்ராகிம் ராவுத்தர் சொன்ன தால் ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி பட வாய்ப்பை இழந்தது உண்மையிலேயே சோகமான விஷ யம். ஆனால் நான் அதை சுகமாக நினைத்தேன். நட்புக்கான என்னுடைய அர்ப்பணிப்பு என்று நினைத்துக்கொண்டேன்.

சில வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் என்னுடைய எழுத்து பேசப்பட்டது. நானும் சற்று வளர்ச்சியடைந்தேன். நான் இயக்கும் படம் ஒன்றிற்காக, நடனக் காட்சிகள் பற்றி ஆலோசனை செய்ய சுந்தரம் மாஸ்டர் அவர்களைப் பார்க்க ஏவி.எம். ஸ்டுடியோ போயிருந்தேன். பிரபுதேவாவின் அப்பாதான் சுந்தரம் மாஸ்டர். நான் அங்கு போனபிறகுதான் தெரிந்தது அது ரஜினி சார் படத்தின் ஷூட்டிங் என்பது.

a

அது லாங் ஷாட். கேமராவுக்கு ரொம்ப தூரம் தள்ளி ரஜினி சார் டான்ஸ் மூவ்மெண்ட் செய்துகொண்டிருந்தார். கேமராவுக்கு அருகில் நின்றிருந்த சுந்தரம் மாஸ்டரைப் போய்ப் பார்த்து பேசிக் கொண்டிருந்தேன். தூரத்தில் இருந்த ரஜினி சார் திரும்பிப் பார்த்தார். நின்றிருந்த இடத்தில் இருந்தபடியே அவரைப் பார்த்து கும்பிட்டு வணக்கம் சொன்னேன்.

என்னை இருக்கும்படி அங்கிருந்து சைகை செய்தார். அப்பொழுது நான் அவருடன் பழகியதில்லை. ஷாட் முடிந்த தும் கேமரா அருகே நின்றிருந்த என்னை நோக்கி வந்தார். அவ ரிடம் கைகுலுக்க என் கையை நீட்டினேன். அவரும் என் கையை இறுகப் பிடித்தார். உண்மையிலேயே சொல்கிறேன். என் உடம்புக்குள் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சேரில் அமரச் சொன்னார். நலம் விசாரித்தார். சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் சொன்னது "உங்களைப் பத்தி ராதிகா என்கிட்ட ரொம்ப நல்லா சொல்லியிருக்காங்க. நல்லா வருவீங்க. சந்திப்போம். ஆல் தி பெஸ்ட்'' என்று கூறிவிட்டு நடனக் காட்சியில் ஆடுவதற்கு ரிகர்சல் பார்க்கப் போய்விட்டார்.

இது நடந்து சில மாதங்கள் ஆகியிருக்கும். ஒரு தயாரிப் பாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் பெயரை இப்பொழுது நான் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் இருக் கிறது. அதை பிறகு சொல்கிறேன். திட்டமிட்டு படமெடுப்பவர் அவர். பக்கா ஜென்டில்மேன். பழகுவதற்கு மிகவும் இனிமை யானவர். அவர் தயாரித்த ஒரு படத்திற்கு நான் வசனம் எழுதியிருப்பதால் என்னிடம் மிகவும் அன்பாகப் பழகுவார். அழைப்பு வந்ததும் போய்ப் பார்த்தேன்.

"அடுத்து ஒரு பெரிய படம் பண்ணப்போறேன்'' என்றார்.

"வாழ்த்துக்கள் சார்'' என்றேன்.

"ரஜினி சார் ஹீரோ'' என்றார்.

"சூப்பர் சார்'' என்றேன்.

"இசை இளையராஜா''

"சூப்பர் சார்''

"கேமரா அசோக்குமார்''

"சூப்பர் சார்''

"கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் யார் தெரியுமா?'' என்றார்.

"சொன்னாத்தானே சார் தெரியும்'' என்றேன்.

(வளரும்...)