ரஜினி என்ற சரித்திர சாதனையாளருக்கு எழுதுகின்ற வாய்ப்பும், அவரை இயக்குகிற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நட்புக்காக, அன்புக்காக, விசுவாசத்திற்காக விட்டுக் கொடுத்துவிட்டேன்.
அன்று அப்படி நினைத்தேன். ஆனால் சில வருடங்களக்குப் பிறகு "நல்ல வாய்ப்பை இழந்து விட்டேனே' என்று எண்ணி எண்ணி எனக்குள்ளேயே வேதனைப்பட்டிருக்கிறேன். அவருடன் சேர்ந்து பணியாற்றியிருந்தால் என் பாதையும், பயணமும் மாறியிருக்குமோ என்று சில நேரங்களில் நினைப்பதுண்டு.
அந்த வலி மிகுந்த கதையைத்தான் இப்பொழுது சொல்லப்போகிறேன்.
தமிழ்த் திரையுலகம் மறக்க முடியாத ஒருவர் மறைந்த இராம.நாராயணன் அவர்கள், எழுத்தாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக பன்முகம் கொண்ட சாதனையாளர். சிறிய பட்ஜெட்டில் படமெடுத்து பெரிய வெற்றி களைப் பெற்றவர். நூறு படங்களுக்கு மேல் எழுதி இயக்கியவர். அன்பானவர், அமைதியானவர், மென்மையானவர், மேன்மையானவர், எளிமையானவர், என் மீது அளவில்லா அன்புகொண்டவர். அவருடைய சில படங்களின் கதை விவாதத்திற்கு என்னை அழைப்பார். அவருடைய அன்புக்காக நானும் போய் கலந்துகொள்வேன்.
1986ஆம் ஆண்டு அவர் இயக்கத் தில் விஜயகாந்த் நடித்து வெளிவந்த படம் "கரிமேடு கருவாயன்' பெரிய வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் என்னை அழைத்து "விஜயகாந்த்துக்கு ஏற்றவாறு கதை வைத்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
அவரிடம் ஒரு கதை சொன்னேன்.
அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
என்னை அழைத்துக் கொண்டு தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருந்த விஜயகாந்த் அலுவலகத்திற்கு வந்தார். என்னிடம் எந்த விவரமும் கூறாமல் அழைத்து வந்தார்.
விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரையும் பார்த்து "என்னோட தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் லியாகத் அலிகானை டைரக்டராக்கப் போறேன். உங்க கால்ஷீட் வேண்டும்'' என்று கேட்டார்.
அப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது. நான் சொன்ன கதை பிடித்துப் போனதால் மட்டுமல்ல, என் மீது அவர்கொண்ட அன் பின் காரணமாகவும் அப்படி ஒரு திடீர் முடிவை எடுத்திருந்தார் என்று நினைத்தேன்.
"இல்ல சார். லியாகத் அலி கானை எங்க கம்பெனியிலதான் நாங்க டைரக்டராக்குவோம்'' என்று சொன்னார்கள். விஜய காந்த்தும், ராவுத்தரும்.
"நீங்க ஆக்குனா என்ன. நான் ஆக்குனா என்ன?'' என்று கேட்டார் ராம.நாராயணன்.
"எங்களுக்காக அண்ணன் எவ்வளவோ செஞ்சிருக்காரு. நாங்கதான் டைரக்டராக்கு வோம்'' என்று உறுதியாகச் சொன்னார்கள்.
மகிழ்ச்சியோடு வந்து வருத்தத்தோடு திரும்பிப் போனார் இராம.நாராயணன்.
ஒரு மாதம் கழித்து என்னை வரச்சொன்னார். போய்ப் பார்த்தேன்.
"லியாகத் சார், உங்க கதையை மோகனை வச்சு எடுக்கலாமா?'' என்று கேட்டார். சில ரசிகர்களுக்கு அவரை மைக் மோகன் என்று சொன்னால்தான் தெரியும். பல நூறு நாள் படங்கள், வெள்ளி விழா படங்களில் நடித்து பெரிய நடிகராக இருந்தார்.
"சார், நான் சொன்னது ஆக்ஷன் கதை. மோகன் சாருக்கு பொருத்தமா இருக்காது'' என்றேன்.
"மோகனுக்கு ஏத்த மாதிரி கதையில கொஞ்சம் மாற்றம் பண்ணமுடியாதா?'' என்று கேட்டார்.
"மாத்துனா நல்லா இருக்காது சார்'' என்றேன்.
அத்தோடு விட்டுவிட் டார். மீண்டும் ஒரு மாதம் கழித்து என்னை அழைத்தார்.
"நீங்க சொன்ன கதையை ஏ.வி.எம். குமரன் சார்கிட்ட போய் சொல்லுங்க'' என்றார்.
குமரன் சார் ஏ.வி.எம். சரவணன் சாரின் மூத்த சகோதரர். அவரும் தனியாக படங்கள் தயாரித்துக் கொண் டிருந்தார். அவருடைய கம்பெ னியில் இராம.நாராயணன் சாரும் டைரக்ட் பண்ணி யிருக்கிறார். எனக்கும் ஏ.வி.எம். குமரன் சார் அறிமுகமான வராக இருந்தார்.
"குமரன் சார்கிட்ட பேசிட்டீங்களா?'' என்றேன்.
"பேசிட்டேன்.. இப்பவே போங்க. ஆபீஸில் தான் இருக்காரு'' என்றார் இராம. நாராயணன். ஏவி.எம். ஸ்டுடி யோவுக்குள்ளேயே குமரன் சாரின் அலுவலகம் இருந்தது. அங்கு போனேன். என்னை வரவேற்று அமரச் சொன்னார்.
"இராம.நாராயணன் சொன்னாரு... கதையை சொல்லுங்க'' என்றார்.
பெரிய பேனர், பெரிய தயாரிப்பாளர்... அவ ருக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்ற தயக்கத் தோடும், பயத்தோடும் கதை சொல்ல ஆரம்பித் தேன். முழுக்கதையையும் தயார் செய்து வைத்தி ருந்ததால், ஒன்றரை மணி நேரம் சொன்னேன். சொல்லி முடித்ததும் என்னையே பார்த்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று நான் அவரையே பார்த்தேன். அவர் என்னிடம் எதுவும் சொல்லாமல் போனை எடுத்து ஏதோ ஒரு நம்பர் போட்டார். மறுமுனையில் "ஹலோ' என்ற குரல் கேட்டது. "சரவணன்,… லியாகத் அலிகான் என்கிட்ட ஒரு கதை சொன்னாரு. சூப்பரா இருக்கு. ரஜினி சாருக்கு பிரமாதமா இருக்கும்'' என்றார் குமரன் சார். அவர் பேசியது அவரது தம்பி ஏ.வி.எம்.சரவணன் சாரிடம்.
"இப்பவே அனுப்பி வைக்கவா...… ஓ.கே. அனுப்பி வைக்கிறேன்'' என்று சொல்லி போனை வைத்துவிட்டு, "நீங்க சொன்ன கதை ரஜினி சாருக் குத்தான் சரியா இருக்கும். என்கிட்ட ரஜினியோட கால்ஷீட் இல்ல. தம்பி சரவணன்கிட்ட இருக்கு. ரஜினிக்கு இன்னும் கதை அமையல, தேடிக்கிட்டு இருக்காங்க. நீங்க இப்பவே போய் தம்பியப் பாருங்க'' என்றார். அடுத்த ஐந்தாவது நிமிடம் ஏ.வி.எம்.சரவணன் சாரைப் போய்ப் பார்த்தேன். அவருடைய தம்பி பாலசுப்ரமணியம் சாரும், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரும் அவருடன் இருந்தார்கள். முதன்முதலில் அந்த மூன்று ஜாம்பவான்களுடன் மிக அருகில் அமர்ந்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
"சொல்லுங்க லியாகத் சார்'' என்றார் சரவணன் சார். வயதில் இளையவர்களாக இருந்தால்கூட அவர்களையும் மரியாதையுடன் நடத்தும் மாண்புமிக்கவர் அவர்.
கதையைச் சொன்னேன். சொல்லி முடித்ததும் மூவர் முகத்திலும் மகிழ்ச்சி.
"ரொம்ப நல்லா இருக்கு. நாளைக்கு காலையில் அக்ரிமெண்ட் போட்டுரலாம்'' என்றார்.
மூவருமே கைகுலுக்கி வாழ்த்து தெரிவித் தார்கள். அந்த நேரத்தில் என் மகிழ்ச்சியை அள விட என்னிடம் எந்த கருவியும் இல்லை. ஏ.வி.எம்.மில் இருந்து வெளியே வந்து முதலில் நான் போன இடம் ராஜாபாதர் தெரு விஜயகாந்த் அலுவலகம். விஜயகாந்த்தும், ராவுத்தரும் இருந் தார்கள். விஷயத்தைச் சொன்னேன். என் வாழ்க் கையில் எது நடந்தாலும் முதலில் அவர்களிடம் சொல்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.
"நாளை காலை ஏவி.எம். போவதற்கு முன் இங்கே வந்துவிட்டுப் போங்கள்'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.
அங்கிருந்து வீட்டிற்குப் போனேன். நான் விஷயத்தை சொன்னதும் எனது அம்மா, அண்ணன், எனது மனைவி, அண்ணி, தம்பி எல்லோர் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி. இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. தூக்கம் வரவில்லை.
மறுநாள் காலை இப்ராகிம் ராவுத்தர் சொன்னதுபோல ஏவி.எம். போவதற்கு முன் ராஜாபாதர் தெரு விஜயகாந்த் அலுவலகம் போனேன். விஜயகாந்த் ஷுட்டிங் போய்விட்டார். இப்ராகிம் ராவுத்தர் மட்டும்தான் இருந்தார். "வாழ்த்தி அனுப்புவார்' என்று நினைத்தேன்.
அவர் வேறு ஒன்றைச் சொன்னார்.
"அண்ணே… அந்தக் கதைய ஏ.வி.எம்.முக்கு கொடுக்காதீங்க. வேண்டாம்னு சொல்லிட்டு வந்திருங்க.… நம்ம பேனர்ல நீங்களே டைரக்ட் பண்ணுங்க'' என்று சொன்னார்.
"என்னண்ணே சொல்றீங்க?''
"நம்ம விஜிக்காக பண்ண கதைதானே?''
"ஆமாண்ணே''
"நாமளே பண்ணுவோம். சொல்லிட்டு வாங்க'' என்றார். "சரி' என்று தலையாட்டிவிட்டு ஏவி.எம். ஸ்டுடியோ போனேன்.
(வளரும்...)