aa

(56) அப்போ எழுதுனது... இப்பவும் பொருந்துது!

"ஏழை ஜாதி' படத்தில் நான் சில விஷயங்களில் வளைந்து கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், விஜயகாந்த் ரசிகர் களாலும், சமூக அக்கறை கொண்ட நல்லவர்களாலும் தூய்மையான அரசியல் வேண்டும், அசிங்கமான, அராஜக அரசியல்வாதிகளை துணிவோடு எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் களாலும் "ஏழை ஜாதி' படம் கொண் டாடப்பட்டது. பெரிய, பெரிய அரசியல் தலைவர்களிடம் கூட அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஈரோட்டில் ஒரு தியேட்டரில் சிலர் புகுந்து "ஏழை ஜாதி' படத்தின் படச் சுருள்களை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அவ்வளவு அராஜகம் நடந்தது. "எழுதுவதற்கு கை இருக்காது' என்று சிலர் என்னை மிரட்டினார்கள்.

இந்த மிரட்டல் "ஏழை ஜாதி' படத்தின் முன்பும் எனக்கு வந்திருக்கிறது. இருந்தாலும் இந்தப் படத்தில் சற்று அதிகமான மிரட்டல் வந்தது. அதிகமான பாராட்டும் வந்தது. விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பு எங்கு பேசினாலும் "என்னுடைய கொள்கை தெரிய வேண்டும் என்றால் "ஏழை ஜாதி' படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று சொல்ல ஆரம்பித்தார். மேடைகளில் பேசும்பொழுது "ஏழை ஜாதி' படத்தில் கடைசியாக நான் எழுதிய சில வரி விமர்சனங்களைச் சொல்லி பேச்சை முடிப்பார்.

Advertisment

ஒற்றுமையில இந்தியனா இருக்கணும்

உணர்வுல தமிழனா இருக்கணும்

மொத்தத்துல மனுஷனா இருக்கணும்

Advertisment

இதுதான் அந்த வசனம்.

இன்றளவும் பேசப்படும் படமாக இருந்தாலும் பானுப்பிரியா, கஸ்தூரி இரண்டு கதாநாயகிகளுக்காக நான் எழுதிய கதையைப் படமாக்கியிருந்தால் படம் இன்னும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கும்.

அந்தப் படத்தில் மறைந்த என்னு டைய நண்பர் ஜான் அமிர்தராஜ் நடித் திருப்பார். "மக்களின் குறைகளை ஏன் தீர்த்து வைக்கவில்லை?' என்று கேட்க, ஒரு பெண் எம்.பி. (ஜெயப்பிரதா) அமைச்சரைப் பார்க்கப் போயிருப்பார். அவரை அமைச்சர் கேவலமாகப் பேசி, தவறாக நடக்க முயற்சி செய்வார்.

அந்தக் காட்சி:

அமைச்சர்: என்னம்மா பிரச்சினை?

பெண் எம்.பி.: தண்ணீர் வசதி இல்ல, ரோடு வசதி, கரண்ட் வசதி இல்லேன்னு என்னை என் தொகுதி மக்கள் கேள்வி மேல கேள்வி கேக்கறாங்க

அமைச்சர்: நீ ஏம்மா தொகுதி பக்கம் போறே. போனதுனாலதான கேக்கறாங்க.

பெண் எம்.பி.: இப்படியே மக்களை மதிக்காம இருந்தா வீடு தேடி வந்து உங்க சட்டைய புடிச்சுக் கேக்கற காலம் வரும் சார்.

அமைச்சர்: அப்படி ஒரு நிலைமை வந்தா நான் சட்டையே போடமாட்டேன். அது சரி, உன் தொகுதி ஜனங்களுக்கு நல்லது பண்ணா உனக்கு பேரு கிடைக்கும். அடுத்த தேர்தல்ல நிறைய ஓட்டு கிடைக்கும். எனக்கென்ன கிடைக்கும்? நான் உன் தொகுதி மக்களை சந்தோஷப் படுத்தறேன். நீ என்னை சந்தோஷப்படுத்து... சரியா!

பெண் எம்.பி.: யார்கிட்ட பேசுற... நான் ஜனங்களுக்காக பாடுபடறவ.

அமைச்சர்: நீ ஜனங்களுக்காக பாடுபடு! இப்ப படு...

என்று பேசி அமைச்சர் பெண் எம்.பி.யின் புடவையைப் பிடிக்க, பெண் எம்.பி. அமைச்சரை செருப்பால் அடிக்கப் போக... அது பிரச்சினையாகி, அதற்காக போராட்டம் நடத்தி உண்ணாவிரதம் இருக்கிறார் ஹீரோ விஜயகாந்த்.

ஹீரோவை அடக்கிவைக்க நினைத்து அமைச்சர் வரச் சொல்லியிருப்பார்‘ ஹீரோ விஜயகாந்த் அமைச்சர் ஜான் அமிர்தராஜை வந்து சந்திப்பார்.

aa

அமைச்சர்: நான் உன்னை ஏன் வரச் சொன்னேன் தெரியுமா? புத்தி சொல்லி அனுப்புறதுக்காக.

விஜயகாந்த்: நான் ஏன் வந்திருக்கேன் தெரியுமா? உன்னை எச்சரிச்சுட்டுப் போறதுக்காக.

அமைச்சர்: எதுக்கு தேவையில்லாத இந்த ஆர்ப்பாட்டமெல்லாம். ஜனங்ககிட்ட நல்ல பேரு வாங்கறதுக்கா? ஆமான்னு சொல்லு... நாளைக்கே உன்னை இளைஞர் அணி தலைவராக்குகிறேன். புரியல... நீ எங்கள்ல ஒருத்தனா இருக்கணும்னு ஆசைப்படறேன்.

விஜயகாந்த்: நான் ஏழைகள்ல ஒருத்தனா இருக்கணும்னு ஆசைப்படறேன்.

அமைச்சர்: கெட்டுப் போறதுன்னு முடிவு பண்ணிட்டே?

விஜயகாந்த்: இல்ல... அவங்க கெட்டுப் போகாம தடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

அமைச்சர்: தம்பி புதுசா கட்சி ஆரம்பிச்சு ஆட்சிய புடிக்கணும்னு முடிவு பண்ணிட்டாரு. முடியாது தம்பி... முடியவே முடியாது. இனிமே இந்த நாட்டை எவனாலும் தூக்கி நிறுத்த முடியாது. கஜானா காலிடா... காலி பண்ணிட்டுப் போயிட்டானுக.

விஜயகாந்த்: எங்களுக்கு ஆட்சி வேணாம். ஆட்சியில் இருக்கிறவங்களுக்கு ஒழுக்கம் வேணும். நாணயம் வேணும். நேர்மை வேணும்.

அமைச்சர்: அது தப்பு. ஐயர் ஹோட்டலுக்குப் போய் ஆட்டுக்கறி கேக்கறதும் தப்பு. அரசியல்வாதிங்க வீட்டுக்கு வந்து நேர்மைய பத்தி பேசுறதும் தப்பு. இங்க பாரு தம்பி. இத்தனை வருஷ அரசியல் வாழ்க்கையில லஞ்சம் வாங்காம நான் எதையும் பண்றதில்ல. ஆம்ப ளைங்கன்னா பணம் கேக்கலாம். பொம்பளைங்கன்னா என்னத்த கேக்கறது. இருக்கிறதத்தான கேக்க முடியும். அதுவும் யார்கிட்ட கேட்டேன். என் கட்சி எம்.பி.கிட்ட கேட்டேன். அது எங்க கட்சி உள் விவகாரம். அதுல நீ ஏன் தலையிடற?

விஜயகாந்த்: இது உங்க கட்சிப் பிரச்சினை இல்ல. ஏழைங்களோட பிரச்சினை. அவுங்களோட நியாயமான கோரிக்கைகளை நிறைவேத்துறதுக் காக லஞ்சம் கேட்டீங்களே. அதனால வந்த பிரச்சினை.

அமைச்சர்: சும்மாவா கேட்டேன். பத்து லட்சம் ரூபாய் செலவழிச்சு எம்.எல்.ஏ. ஆனேன். அதை எப்படிய்யா சம்பாதிக்கிறது. பிளாட்பாரத்துல நூறு ரூபா முதல் போட்டு மிட்டாய் கடை வச்சிருக்கிறவன் தினம் வீட்டுக்கு அம்பது ரூபா லாபம் கொண்டு போறான். இருநூறு ரூபா முதல் போட்டு இட்லி கடை வைக்கிறவன் தினம் வீட்டுக்கு இருநூறு ரூபா கொண்டு போறான். பத்து லட்ச ரூபாய் முதல் போட்டு நான் எம்.எல்.ஏ. ஆயிருக்கேன். நான் தினம் வீட்டுக்கு எவ்வளவுய்யா கொண்டு போகணும். சொல்லுய்யா?

விஜயகாந்த்: ஒரு எம்.எல்.ஏ. தொகுதிக்கு பத்து லட்ச ரூபாய் செலவழிச்சது சட்டப்படி தப்பு. உங்கள பதவிய விட்டே நீக்கலாம். ஏன் உங்கள அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல கூட தள்ளலாம்.

அமைச்சர்: அப்படி பாத்தேன்னா சட்டசபைக் கூட்டத்தையே ஜெயில்லதான் நடத்த வேண்டியிருக்கும்.

விஜயகாந்த்: அப்போ ஜெயிலுக்கு போக வேண்டியவங்க எல்லாம் பதவியில இருக்கீங்க. அப்படியா மந்திரி சார்?

அமைச்சர்: ஜெயிலுக்கு போக வேண்டி யவங்க நாங்க இல்ல. ஓட்டுப் போட்டாங்களே ஜனங்க. அவங்கதான். என்ன பாக்குற? வெளி நாட்டுல தேர்தல்ல நிக்கறவங்க டி.வி.யில பேசி ஓட்டுக் கேக்கறாங்க. ஜனங்களும் ஓட்டுப் போடறாங்க. ஆனா நம்ம ஜனங்களுக்கு பெரிசு பெரிசா போஸ்டர் ஒட்டணும். சுவரெல்லாம் கொட்டை எழுத்துல எழுதணும். கலர் கலரா லைட் போடணும். கட் அவுட் வைக்கணும். குடிசை குடிசையா குனிஞ்சு நிமிரணும். கும்பிடு போடணும். வீட்டுக்கு வீடு குடம் கொடுக்கணும். புடவை கொடுக்கணும். பணம் கொடுக்கணும். அப்புறம்தாண்டா ஓட்டே போடுறாங்க. இந்த கேடு கெட்ட ஜனங்களை எங்க வைக்கிறது? சொல்லு.

விஜயகாந்த்: செய்யற தப்பை எல்லாம் நீ செஞ்சிட்டு ஜனங்களை தப்பா பேசுறியா? பதவி யில இருக்கிறதுனால எதையும் செய்யலாம்ங்கிற திமிர்ல பேசறே. ஒன்ன மட்டும் மறந்துறாத. பதவி போயிருச்சுன்னா தண்டனையிலிருந்து நீ தப்பிக்கவே முடியாது.

அமைச்சர்: கவலையே படமாட்டேன். அப்போ எது ஆளும்கட்சியோ அதுல ஐக்கிய மாயிருவேன். இந்திரன்னு பாராட்டுன தலைவனை இளிச்சவாயன்னு திட்டுவேன். இளிச்சவாயன்னு திட்டுன தலைவனை இந்திரன்னு பாராட்டுவேன். அதையும் இந்த மட ஜனங்க ஏத்துக்கிட்டு கைதட்டத்தான் செய்வாங்க. -இப்படிப் போகும் அந்த காட்சி.

முப்பது வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய வசனம் இது.

"ஏழை ஜாதி' படத்தில் பல காட்சிகள் இன்றைய அரசியலுக்கு எழுதியது போலவே இருக்கும்.

aa

"ஏழை ஜாதி' படம் மட்டுமல்ல, நான் எழுதிய பல படங்கள் இன்று பல தொலைக்காட்சி சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பப்படுகின்றன. அதைப் பார்த்துவிட்டு பல சகோதரர்கள், சகோதரிகள் எனக்கு போன் செய்து பேசுகிறார்கள். இன்றைய இளைஞர்களும் பேசுகிறார்கள்.

"அண்ணே... எப்படிண்ணே நீங்க எப்பவோ எழுதுனது இப்போ உள்ள அரசியலுக்கு எழுதினது மாதிரியே இருக்கு' என்று பாராட்டுகிறார்கள்.

அப்படி என்னை பாராட்டிக்கொண்டிருக்கிற சகோதர, சகோதரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நான் நேசிக்கும் நக்கீரன் மூலமாக என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"ஏழை ஜாதி' படத்தில் கதாநாயகி மாறியதும் கதை மாறியதாகச் சொன்னேன். வேறு சில விஷயங்களும் நடந்தன.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்