(53) தலைவியை மாற்றினோம்!
"தாய்மொழி' படத்தில் ஒரு பஞ்சாயத்து சீன். வில்லன் மன்சூர் வரும்போது, பஞ்சாயத் தார்கள் எழுந்து நிற்பார்கள். இந்தக் காட்சிக்கு... சட்டசபைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வந்தபொழுது மரபை மீறி, சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னதை வசனமாக எழுதியிருந்தேன்.
படம் முடிந்து சென்சாருக்குப் போனபோது "அந்த வசனம் இருக்கக்கூடாது' என்று ஒரு பெண் உறுப்பினர் கூறினார்.
"ஏன்?'' என்று கேட்டேன்.
"நீங்க சபாநாயகரை அசிங்கப்படுத்துற மாதிரி எழுதியிருக்கீங்க. அந்த பதவிக்கு என்ன மரியாதை தெரியுமா உங்களுக்கு?''“ என்று கோபமாகக் கேட்டார்.
"சபாநாயகர் பதவிக்கு என்ன மரியாதைன்னு எனக்குத் தெரியும் மேடம். ஆனா சபாநாயகரா இருக்குற சேடப்பட்டி முத்தையா அவர்களுக்குத் தெரியலியே?… முதலமைச்சர் ஜெயலலிதா வரும் போது எழுந்து நின்றாரா இல்லையா?''“ என்று கேட்டேன்.
"நோ...… நோ...… நீங்க மதிக்கல''…என்றார்.
"சேடப்பட்டி முத்தையாதான் சபாநாயகர் பதவிய மதிக்கல''“என்றேன் நான்.
"சார் ஒரு டயலாக்தான சார்,… அதை எடுத்திடலாமே'' என்று மற்ற உறுப்பினர்கள் அந்தப் பெண் உறுப்பினருக்கு சப்போர்ட் செய்தார்கள்.
"சார்… மரபை மீறினது சபா நாயகர் சேடப்பட்டி முத்தையா, சட்டமன்றத்துல அது நடந்ததா இல்லியா? நடக்காத ஒன்னை நான் எழுதலியே''“என்றேன்.
கொஞ்சம்கூட கோபம் குறையாமல் அந்தப் பெண் உறுப்பினர் சொன்னார்...
"இந்த டயலாக்க விட்டா, ஜெயா கோவிச்சுக்குவா''…அவர் ஜெயா என்று சொன்னது, ஜெயலலிதாவை. அவர்களின் கோபத்திற்கு காரணம் எனக்குப் புரிந்தது. "நீங்க ஜெயலலிதா மேடத்தோட ஆதரவாளரா?… இல்ல அவங்களுக்கு வேண்டியவங் களா மேடம்?''…என்றேன்.
"அதையெல்லாம் நீங்க கேக்கக்கூடாது. அந்த டயலாக் இருக்கக்கூடாது.''…“
"சென்சாருக்கும் ஜெயலலிதா அவர்களுக்கும் என்ன மேடம் சம்பந்தம் இருக்கு… உங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இருக்கு. அதனாலதான் இந்த டயலாக்கை வேண்டாம்கிறீங்க அப்படித் தானே?''“ என்று கேட்டேன்.
"அப்படியே வச்சுக்குங்க''“என்று கூறிவிட்டு சென்சார் அதிகாரியிடமும், மற்ற உறுப்பினர்களிட மும், "சார் இந்த டயலாக்க விடக்கூடாது சார்''“என்று கூறினார்.
நான் உடனே சொன்னேன். "ஓ.கே. மேடம். நீங்க சொன்னது மாதிரியே அந்த வசனத்தை கட் பண்ணிருங்க. ஆனா நீங்க சொன்னீங்களே அந்த வசனம் இருந்தா ஜெயா கோவிச்சுக்குவாங்கன்னு அதை எனக்கு லெட்டரா எழுதிக் கொடுத்திடுங்க. வெறும் ஜெயான்னு போடக்கூடாது. முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்னு போடணும்''னு“ சொன்னேன்.
அதிர்ச்சியாகிப் பார்த்தார் அந்தப் பெண் உறுப்பினர்.
"அதெப்படி நான் எழுதிக் கொடுக்கமுடியும்?''“
"அப்படின்னா நான் எதுக்கு அந்த வசனத்தை கட் பண்ணமுடியும்''“
இந்தப் பதிலை அந்தப் பெண் உறுப்பினர் எதிர்பார்க்கவில்லை.
"சார்… இந்தப் படத்துக்கு ஆறு கட்ஸ் கொடுத் திருக்கோம். அத வேணும்னா நீங்க வச்சுக் குங்க. இந்த வசனத்தை மட்டும் எடுத்திடுங்க''“என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
ஒரு வசனத்தை நீக்குவதால் அவர்கள் நீக்குவதாகச் சொன்ன கதைக்குத் தேவையான முக்கியமான விஷயங்கள் திரும்பக் கிடைக்கின்றன. அதனால் நானும் சம்மதித்தேன்.
இப்படி நான் எழுதிய பல படங்களில் சென்சாரில் நடந்த காரசாரமான சம்பவங்கள் இருக்கின்றன.
அதையெல்லாம் பிறகு சொல்கிறேன்.
அரசியல் வசனங்கள் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய நான், முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானது அரசியல் அதிகமில்லாத கதை.… இப்ராகிம் ராவுத்தர் சொன்ன ஒரு கதைக் கருவுக்கு நான் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினேன். அந்தப் படம் “"பாட்டுக்கு ஒரு தலைவன்'. விஜயகாந்த் இன்னோசன்டாக நடித்து காமெடியில் கலக்கியிருப்பார்.
நிஜ வாழ்க்கையி லேயே அவர் நகைச்சுவை உணர்வுமிக்கவர். எந்த ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு நகைச்சுவை நடிப்பும் சிறப்பாக வருகிறதோ அவர் பெரிதாகக் கொண்டாடப் படுவார்… அந்தச் சிறப்பு விஜயகாந்த்துக்கு இருந்தது.
இந்தியில் அமிதாப்பச்சன், தமிழில் ரஜினி சார், தளபதி விஜய் போன்றவர்களை சொல்லலாம். நான் இப்படிச் சொல்வதால் மற்ற ஹீரோக்களுக்கு நகைச்சுவை நடிப்பு வராது என்று சொல்வதாக நினைத்துவிட வேண்டாம். ஆக்ஷன் ஹீரோ என்ற வகையில் ஒரு உதாரணத்திற்காகச் சொன்னேன்.
"பாட்டுக்கு ஒரு தலைவன்'“கதையைச் சொல்வதற்காக அண்ணன் இளையராஜா அவர்களிடம் போனேன்.
"முதன் முதலா டைரக்ட் பண்ணப்போறேன். உங்களோட ஆசிர்வாதம் வாங்கறதுக்காக வந்தேன்'' என்றேன். அவரும் வாழ்த்தினார்.
"உன்னை இயக்குநரா அறிமுகம் செய்யப்போற விஜயகாந்த்துக்கும், இப்ராகிம் ராவுத்தருக்கும் நான் நன்றி சொன்னேன்னு சொல்லிரு''“என்றார்.
என்னை அவர் ஒரு தம்பியாக நினைத்ததால், அண்ணனாக நன்றி சொல்லச் சொன்னார் என்பது எனக்குப் புரிந்தது.
"எப்ப கதை சொல்லப் போற?''…“
"உங்களுக்கு ஓ.கே.ன்னா இப்பவே சொல்றண்ணே.''“
சொல்லச் சொன்னார்... சொன்னேன்..
பல இடங்களில் மனம்விட்டுச் சிரித்தார். நகைச்சுவையை மிகவும் ரசிப்பவர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
"நல்லா இருக்குடா...…ஆனா விஜயகாந்த்துக்கு லவ் ஸ்டோரி சரியா வருமா?''“என்றார்.
"இப்ராகிம் ராவுத் தரோட ஆசைண்ணே'' என்றேன்.
"நல்ல ஹீரோயினா போடணும்''“என்றார்.
"ரேவதிகிட்ட டைம் கேட்டிருக் கேண்ணே''“என்றேன்.
பாரதிராஜாவின் “"மண்வாசனை'“ மூலம் அறிமுகமாகி மக்கள் மனம் கவர்ந்த கதா நாயகியாக இருந்தார் ரேவதி மேடம். அவரிடம் கதை சொல்லப் போனேன். நான் போன நேரம் கடுமையான காய்ச்சலில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும் என்னை திருப்பி அனுப்பவில்லை. அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டுத்தான் போனேன். அதனால் அதை மதித்து அந்தச் சூழ்நிலையிலும் கதையை, அவரது கேரக்டரை ரசித்துக் கேட்டார். உடனே ஓ.கே. சொன்னார். ஷூட்டிங் தேதிகளையும் அப்பொழுதே சொல்லிவிட்டார்.
அந்த நேரத்தில் திடீரென ஒரு திருப்பம் ஏற்பட்டது. விஜயகாந்த் நடிப்பில் "அம்மன் கோயில் கிழக்காலே', "நினைவே ஒரு சங்கீதம்'‘போன்ற வெற்றிப் படங்களை தயாரித்தவர் பீட்டர் செல்வ குமார். ரஜினி சார் நடித்த “"மூன்று முகம்'’ போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். அவருக்கு ராபர்ட் ராஜசேகர் டைரக்ஷனில் மேலும் ஒரு படம் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் விஜயகாந்த். சில காரணங்களால் அந்தப் படம் டிராப் ஆனது. அந்தப் படத்திற்கு கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகள் வீணாகிவிடக்கூடாது என்று நினைத்தார் இப்ராகிம் ராவுத்தர்.
உடனே என்னை அழைத்தார். ‘"பாட்டுக்கு ஒரு தலைவன்‘ படத்தை உடனே ஆரம்பித்து விடலாம்' என்றார்.
"மற்ற நடிகர் நடிகைகளிடம் வாங்கிய தேதிகளை மாற்றி முன்னதாகவே வாங்கவேண்டுமே'' என்றேன். “
"அதற்கான வேலைகளைப் பாருங்கள்''“ என்றார்.
நான் முதலில் ரேவதி மேடம் அவர்களைத் தான் போய் பார்த்தேன்.
"நான் கொடுத்த தேதின்னா ஓ.கே. அதுக்கு முன்னாடின்னா என்னால முடியாது. அது மணிரத்னம் சாரோட படத்திற்கு குடுத் திருக்க கால்ஷீட்.. அந்தத் தேதிகளை நான் மாத்தவே முடியாது''“என்று கூறி விட்டார். ரேவதி மேடம் இல்லையென்றதுமே பத்து மார்க் குறைந்து போன மாணவன் போல ஆகி விட்டேன் நான். இப்ராகிம் ராவுத்தரிடம் வந்து சொன்னேன்.
"ஷோபனாவை கேக்கலாம்'' என்றார். திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அவர்கள் எழுதி, இயக்கி நடித்திருந்த "இது நம்ம ஆளு'“படத்தில் ஷோபனாதான் கதாநாயகி.
"அண்ணே… ஷோபனா அந்தப் படத்துல அமர்க்களப்படுத்தியிருப்பாங்க. ஆனா நம்ம கதைக்கு ரேவதி மாதிரி செட்டாகாதுண்ணே'' என்றேன்.
"வேற வழி இல்லண்ணே,… விஜி கால்ஷீட்டை வேஸ்ட் பண்ண முடியாது.… ஷோபனாவையே கேக்கலாம்''“என்றார் உறுதியாக.
ஷோபனா அவர்களிடமும் பேசி தேதி வாங்கியபிறகு, திரைக்கதையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தேன். கொஞ்சம் அழகு குறைவது எனக்கே தெரிந்தது.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்