aa

(51) துட்டு இல்லாத ஆம்பளயும் பொட்டு இல்லாத பொம்பளயும்...!

"புலன் விசாரணை', "கேப்டன் பிரபாகரன்' படங்களுக்குப் பிறகு ஆர்.கே.செல்வமணியும் நானும் இணைந்து, மம்மூட்டி நடித்த "அரசியல்', "மக்களாட்சி', பிரசாந்த் நடித்த "புலன் விசாரணை 2' போன்ற படங்களில் போலி அரசியல் வாதிகளை, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை, மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் அரசியல் வாதிகளை தைரியமாக தட்டிக் கேட்டிருக்கிறோம். துணிச்ச லாகச் சுட்டிக்காட்டியிருக் கிறோம். ஒரு தூய்மையான அரசியல் உதயமாக என் பேனா... என் பேனா என்பதைவிட விஜயகாந்த் எனக்களித்த பேனா பெரும் பங்காற்றியிருக்கிறது. அந்தப் பேனாதான் ஆர்.கே.செல்வமணியையும் என்னையும் இணைத்து வைத்தது. செல்வமணியைப் பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கான இடம் வரும்போது சொல்கிறேன்.

என் இதயத்தில் என்றும் நிறைந்திருக்கும் ஒரு மாமனிதரைப் பற்றிச் சொல்லவேண்டும். அவரைப் பற்றிச் சொல்வதற்கு இது சரியான இடம் என்று நினைக்கிறேன். "நான் அவருக்கு வசனம் எழுதிக் கொடுத்தவன். அவர் எனக்கு உயிர் கொடுத்தவர்' என்று சொல்லியிருக்கிறேன். அவர்தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

Advertisment

"புலன் விசாரணை'யில் அவரது நட்பு கிடைத்தது. "கேப்டன் பிரபாகரன்' படத்தில் அது அன்பாக மாறியது. "தாய்மொழி' படத்தில் அது பாசமாகப் பெருகியது. "புலன் விசாரணை' படத்தில் அவர் வில்லன். "கேப்டன் பிரபாகரன்' படத்தில் விஜயகாந்த்தின் நண்பர். "தாய்மொழி' படத்தில் அவர்தான் ஹீரோ. மூன்று படங்களுக்குமே வசனம் எழுதியவன் நான்தான். "தாய்மொழி' படத்தில் அடிதடி, வெட்டுக் குத்து என வாழும் முரட்டு ரவுடியாக வருவார் சரத். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் ஜெமினிகணேசனிடம், சரத் பேசும் காட்சிக்கு, நான் எழுதிய வசனம்...

சரத்: அம்மாவுக்கு திதி பண்ணணும். அடி தடில வர்றா காசுல பண்ணக்கூடாது. உழைச்சு சம் பாதிக்கிற பணத்துல பண்ணு னாத்தான் புண்ணியம் கிடைக்கும்னு ஐயர் சொல்றாரு. உங்ககூட நானும் மீன் பிடிக்க கடலுக்கு வரவா?

ஜெமினி: சரி, வாங்க.

Advertisment

சரத்: வந்தா காசு கிடைக்குமா?

ஜெமினி: "தன்னை நம்பி வர்றவங்கள கடலம்மா ஏமாத்தமாட்டா'...

(என்று கூறும்போது தூரத் தில் குடிசை வீட்டிலிருந்து ஜெமினி கணேசனின் மகள் மோகினி எட்டிப் பார்ப்பார்.)

ஜெமினி: "மேரி, உள்ள போம்மா...' (என்று ஜெமினிகணேசன் சத்தமாகக் குரல் கொடுக்க...)

சரத்: ஏன் உள்ள போகச் சொல்றீங்க?

ஜெமினி: என் பொண்ணு விதவை. மொத மொதல்ல கடலுக்கு வர்ற நீங்க அது முகத்துல முழிச்சிட்டுப் போறது நல்லது இல்ல...

சரத்: (கோபமாக) "ஏன் விதவைன்னா என்ன? அவங்களோட உணர்ச்சிகளைத்தான் மதிக்கமாட் டீங்க. அவங்களையுமா மதிக்கமாட்டீங்க. இந்த நாட்டுல விதவைங்கள விட சுமங்கலிகள்தான் அதிகம். அதனால நாடு நல்லாயிருச்சா? நான் உங்க பொண்ணு முகத்துல முழிச்சிட்டுத் தான் கடலுக்கு வருவேன்'' (என்று கூறிவிட்டு, அவருடைய மகளைப் பார்த்துவிட்டுப் போய் நிறைய மீன்கள் பிடித்துக்கொண்டு வருவார்.)

அம்மாவின் திதி முடிந்ததும் புடவையை ஒரு சுமங்கலிப் பெண் ணுக்கு கொடுக்கவேண்டும் என்று ஐயர் சொல்வார். அந்தப் புடவை யை எடுத்துக்கொண்டு ஜெமினிகணேசனின் விதவை மகளுக்கு கொடுக்க வருவார். ஜெமினி மறுக்க, அவரது மகள் தயங்க...

சரத்: "கையில் துட்டு இல்லாத ஆம்பளைக்கும், நெத்தியில பொட்டு இல்லாத பொம்பளைக்கும் மதிப்பும், மரியாதையும் குறைவா இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா நெத்தியில பொட்டு வச்சிருக்கிற பொண்ணுங்களவிட நெஞ்சுல புருஷனை வச்சிருக்கிற பொண்ணுங் களைத்தான் நான் ரொம்ப உயர்வா நெனைப்பேன்' என்று சொல்வார்.

aa

அந்த வசனத்திற்கு தியேட்டரில் பலத்த கைதட்டல் கிடைத்தது. அந்தப் படத்திற்குப் பிறகு சரத் மனதிலே எனக்கொரு நல்ல இடமும் கிடைத்தது. அந்தப் படம் வெளியான பிறகு, என்னை எங்கு பார்த்தாலும் அந்த வசனத்தைப் படத்திலே பேசியது போலவே பேசிவிட்டுத்தான் என்னை நலம் விசாரிப் பார். "லியாகத் சார்' என்று அவர் என்னை உற்சாகமாக அழைப்பதே அழகாக இருக்கும்.

அவர் எப்படி என் உயிரைக் காப்பாற்றினார் என்று தெரிந்துகொள்ள நீங்கள் அவசரப்படுவது எனக்குப் புரிகிறது. நெஞ்சைவிட்டு மறையாத அந்த நெகிழ்ச்சியான செய்தியைச் சொல்வ தற்கு முன் சில மகிழ்ச்சியான செய்தி களைச் சொல்ல நினைக்கிறேன்.

தமிழ்நாட்டின் திரையரங்கு களில், ஹோட்டல்களில், இசை நிகழ்ச்சிகளில், பட்டிதொட்டி களில் கூட இந்திப் பாடல்கள் அதிகமாக ஒலித்துக்கொண் டிருந்த காலம். மகுடியின் ஓசைக்கு மயங்கி நிற்கும் பாம்பைப் போல, இந்திப் பாடல்களுக்கும் அதன் இசைக்கும் தமிழர்கள் மயங்கிக் கிடந்த காலம். அந்த மயக்கத்திலிருந்து தமிழர்களை மீட்டெ டுத்து, தமிழ்நாடெங்கும், தமிழர் வீடெங்கும் தமிழ் இசையை ஒலிக்கச் செய்தது ராக தேவன் இசைஞானி இளையராஜா அவர்கள். கலைஞர் அவர்களால் "இசைஞானி' என்று அழைக்கப்பட்டு, அந்தப் பட்டமே அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டது போல தமிழர்களின் இதயங்களிலும் ஒட்டிக்கொண்டவர். அண்ணன் இளையராஜாவை நான் அண்ணன் என்று அழைப்பதில் ஒரு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை அவர் கொடுத்தாரா, இல்லை நானே எடுத்துக்கொண்டேனா என்பதை நான் சொல்லும் நிகழ்வில் இருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

விஜயகாந்த், ராதிகா இணைந்து நடித்த படம் "பூந்தோட்ட காவல்காரன்'. அந்தப் படத்திற்கு நான்தான் திரைக்கதை -வசனம். அவரிடம் அந்தப் படத்தின் கதையைச் சொல்வதற்கு பிரசாத் ஸ்டுடியோ போனேன். மிகப்பெரிய திரையுலக ஜாம்பவான்கள் கூட, அதாவது இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் கூட அவரை தூர இருந்து தரிசிக்கும் "சாமி' போல வணங்கிக்கொண்டிருந்த காலம். நான் அந்த இசை தெய்வத்தைப் பார்க்க ஒரு சாதாரண பக்தன்போல பிரமிப்புடன்தான் போனேன்.

ஆர்மோனியப் பெட்டியின் முன் அமர்ந்திருந் தார். அவரது விரல்கள் அதில் விளையாடிக் கொண்டிருந்தன. வணக்கம் சொன்னேன். "விஜயகாந்த் கம்பெனியிலிருந்து வருவதாக'ச் சொன்னேன். சைகையால் அமரச் சொன்னார்.

"பூந்தோட்ட காவல்காரன்' கதை சொல்ல வந்தேண்ணே'' என் வாயிலிருந்து ஆரம்பத்திலேயே வந்த வார்த்தை... "அண்ணே'. அந்த வார்த்தையே என் மனதிற்குள் அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

"சரி... கதைய சொல்லு''

"அண்ணே நான் கம்பம்ணே..'' என்றேன்.

நிமிர்ந்து பார்த்தார். அவர் ஊர் பண்ணைப் புரம். கம்பத்திற்கு அருகில் இருக்கும் ஊர்.

"நீ கம்பமா?''

"ஆமாண்ணே...''

நெருக்கம் அதிகமானதுபோல் தெரிந்தது.

"சரி... கதையச் சொல்லு...'' என்றார்.

"அண்ணே... சின்ன வயசுல நம்ம ஊர்ப்பக்கம் பாவலர் அண்ணன் கச்சேரி எங்க நடந்தாலும் முதல் ஆளா போய் முன்னால உக்காந்திருவேன்ணே.''

பாவலர் என்றதும் அவரது கண்களிலே ஒரு மின்னல். அந்த மின்னலுக்குள் லேசாக ஈரம் தெரி வதுபோல... அதாவது அவரது கண்கள் கலங்கியது போல எனக்குத் தோன்றியது. காரணம் பாவலர் வரதராசன் அவர்கள் இளையராஜாவின் மூத்த அண்ணன். அவருடைய அண்ணன் பெயரிலே தான் இசைக்குழு இயங்கிவந்தது. அண்ணன்கள் பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் அவருக்கு நகமும் சதையுமாக இருந்தார்கள். பாவலர் வரதராசன் கச்சேரி என்றால் அன்று அந்த ஊரே அல்லோலகல்லோலப்பட்டுவிடும்.

"அப்பவே நீ எங்க ரசிகனா?''

"ஆமாண்ணே''

"சந்தோஷம்... சரி கதையச் சொல்லு''

aa

"அண்ணே, அப்போ ஒரு பாட்டுப் பாடு வீங்களே... "ஒத்த ரூபாயும் தாரேன்... ஒடப்பத்தட் டும் தாரேன், ஓட்டுப் போடற பொண்ணே... காளை மாட்டுல குத்து''. அது தேர்தல் பிரச்சாரப் பாடல். அண்ணன் வரதராசன் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். கட்சிக்காகவே பல பாடல்கள் பாடியவர். அந்தப் பாட்டை நீங்கள்லாம் பாடறப்ப, காங்கிரஸ் கட்சிக்காரங்க கலங்கிப்போவாங்கண்ணே... என்னா எழுச்சியா இருக்கும் தெரியுமா...'' என்றேன்.

அவர் முகத்தில் மகிழ்ச்சி. பழைய நினைவு கள் அவர் உள்ளுக்குள் ஓடியதுபோல் தெரிந்தது. சிறிய அமைதி. பிறகு ஒரு சிறிய புன்னகை.

"அப்பவே எங்கமேல பிரியமாடா உனக்கு''

"ஆமாண்ணே''

"பிரியமாடா'' என்றவுடனேயே... அதாவது என்னை "டா' போட்டு பிரியமாக அழைக்க ஆரம் பித்தபோதே எனக்குப் புரிந்துவிட்டது... அவர் என் னைத் தம்பி போல நினைக்க ஆரம்பித்துவிட்டார் என்பது. அதற்கு விதை போட்டது ஊர்ப்பாசம். இளையராஜாவின் ஊருக்கு அருகே இருந்த நான் அவருடைய உள்ளத்தின் அருகே போய்விட்டேன் என்று நினைத்து மகிழ்ந்தேன்.

"சரி கதையச் சொல்லு'' என்றார்.

(வளரும்...)