dd

(49) அதிர்ச்சி... ஆனாலும் மகிழ்ச்சி!

ரு கேப்டனுக்கு என்ன தேவை? ஒவ்வொருவர் பார்வையிலும் வேறு, வேறு கருத்துக்கள் தோன்றும். என் பார்வையில் தோன்றியதைச் சொல்கிறேன். அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்பு, ஆதிக்கம், அதிகாரம்... ஒரு திரைப்படத்தின் கேப்டனுக்கு அதாவது இயக்குநருக்கு இவை அனைத்தும் தேவை.

டீ, காபி, சாப்பாடு கொடுத்து உபசரிக்கும் ஒரு சாதாரண புரொடக்ஷன் பாயிடம்கூட அன்பு செலுத்தவேண்டும். ஒரு இயக்குனருக்கு எந்த நேரத்தில் என்ன வேண்டும் என்ற அக்கறையோடு கவனிக்கும் ஒரு புரொடக்ஷன் பாயின் பங்களிப்புகூட ஒரு படத்தின் வெற்றிக்குத் துணையாக இருக்கும். அதனால் அவர்களிடம் கூட அன்பு செலுத்துபவர் ஆர்.கே.செல்வமணி

Advertisment

ஒரு திரைப்படத்தின் வெற்றி... அது தனி நபரால் கிடைப்பது அல்ல. அது ஒரு கூட்டு முயற்சி. கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஃபைட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர், எடிட்டர், ஆர்ட் டைரக்டர், உதவி இயக்குனர்கள் மற்றும் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள், இவர்களோடு நடிகர், நடிகைகள் இத்தனை பேர் சேர்ந்து உழைத்து உருவாக்குவதுதான் ஒரு திரைப்படம். அத்தனை பேரையும் ஒன்றிணைத்து செயல்படும் மதிநுட்பம், சாமர்த்தியம், சாணக்கியத்தனம், இவை அனைத்தையும் ஒரு வார்த்தையில் செல்வதென்றால் என்னுடைய பார்வையில் அதற்குப் பெயர் அரவணைப்பு -அது ஆர்.கே.செல்வமணியிடம் இருந்தது.

குடும்பத்தை மறந்து, உறவுகளை மறந்து, தனது தனிப்பட்ட பொழுதுபோக்குகளைக்கூட மறந்து... உதாரணமாகச் சொல்வதென்றால் வில்லேந்திய அர்ஜுனனுக்கு கிளை மட்டுமே தெரிந்ததே அதேபோல, படத்தின் வெற்றியை மட்டுமே கருத்தில்கொண்டு உழைப்பதற்குப் பெயர்தான் அர்ப்பணிப்பு -அது அவரிடம் இருந்தது.

எந்த ஒரு டெக்னீசியனும், நடிகர் -நடிகைகளும் இயக்குனரை டாமினேட் செய்துவிடாமல் தான் நினைத்ததையே செய்து முடிக்கும் துணிவோடு அத்தனை பேரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குப் பெயர்தான் ஆதிக்கம். அது அவரிடம் இருந்தது.

Advertisment

தனது உண்மையாலும், நேர்மையாலும், ஒரு தயாரிப்பாளரைக் காப்பாற்றுவதற்காக தனக்குரிய உரிமைகளை கேட்டு வாங்காமல், தானாக எடுத்துக் கொள்வதற்கு பெயர்தான் அதிகாரம். அது அவரிடம் இருந்தது. இத்தனையும் அமையப்பெற்றதால்தான் விஜயகாந்த்தின் நூறாவது படமான "கேப்டன் பிரபாகரன்' படத்தை பிரமாண்ட வெற்றிப்படமாக செல்வமணியால் கொடுக்க முடிந்தது.

"கேப்டன் பிரபாகரன்' படம் ஷூட்டிங் முடிந்து, எடிட்டிங் பணிகளும் முடிந்தது. விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர், ஆர்.கே. செல்வமணியுடன் நானும் வேறு சில நண்பர்களும் படம் பார்த்தோம். படம் பார்த்து பைனல் செய்துவிட்டு விரைவில் ரீ-ரெகார்டிங் பணி களுக்காக அண்ணன் இசைஞானி இளையராஜா அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

படம் பார்த்து முடித்த எங்களுக்கு அதிர்ச்சி... ஆனால் அது இன்ப அதிர்ச்சி. அதிர்ச்சி என்னவென்றால் படத்தின் நீளம் 25,000 அடியாக இருந்தது. அதாவது இரண்டு படங்களுக்கு என்ன நீளம் இருக்க வேண்டுமோ... கிட்டத்தட்ட அந்த அளவுக்கு இருந்தது. இந்த காலகட்டத்தில் உருவான படம் என்றால் "பாகுபலி', "பொன்னியின் செல்வன்' படங்கள் போல "பார்ட் 1', "பார்ட் 2' என்று ரிலீஸ் செய்து, பெரிய அளவில் லாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் 1991-ல், அதாவது 32 ஆண்டுகளுக்கு முன்னால் என்பதால் அப்படி செய்ய முடியாது... யாரும் செய்ததில்லை.

நீளத்தைக் குறைத்து ஒரே படமாகத்தான் வெளியிட முடியும். இது எங்களுக்கு அதிர்ச்சி.

இன்ப அதிர்ச்சி என்னவென்றால்... அவ்வளவு நீளமாக இருந்தாலும் படம் அற்புதமாக வந்திருந்தது. எந்தக் காட்சியை வெட்டுவது, எதை குறைப்பது என்று உடனே முடிவு செய்ய முடியவில்லை.

dd

மறுநாள் ஆர்.கே.செல்வமணி, படத்தின் நீளத்தை குறைப்பதற்காக எடிட்டிங் போனார். இரண்டு நாட்கள் அவரால் எதையுமே குறைக்க முடியவில்லை. எந்தக் காட்சியையும் வெட்ட முடியவில்லை. வீரப்பனை (படத்தில் வீரபத்ரன்) பிடிப்பதற்காக விஜயகாந்த், காட்டுப் பகுதிகளில் தேடும் காட்சிகளை மட்டுமே ஒரு படமாக வெளியிட்டுவிடலாம். எந்தக் காட்சிகளும் சோடைபோன காட்சிகளாக இல்லை. விறுவிறுப்பு இல்லாத காட்சிகள் இல்லை. அதனால் எதை வெட்டுவது என்று அவரால் உடனே முடிவுக்கு வர முடியவில்லை. பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து, செதுக்கி செதுக்கி... எடுத்த காட்சிகளை வெட்டுவதற்கு செல்வமணிக்கு சற்று தயக்கம். அவர் படமாக்கிய காட்சிகள்தான்... எதைக் குறைப்பது என்று முடிவு செய்வதற்கு அவருக்கு முழுஉரிமை உண்டு. இருந்தாலும் அவர் யோசித்தார்.

கையிலே வைரக் கற்களோடு கண்ணாடிக் கற்களும் கலந்திருந்தால் கண்ணாடிக் கற்களை மட் டும் பிரித்தெடுத்து வீசி எரிந்துவிடலாம், எல் லாமே வைரக்கற்கள் என்றால் என்ன செய்வது?

அதனால் முடிவெடுக்கும் உரிமையை, அதாவது எடிட்டிங் அறைக்குப் போய், எடிட்டருடன் அமர்ந்து எதையெல்லாம் குறைக்கலாம் என்று ஆலோசனை செய்து எனக்குச் சொல்லுங்கள் என்று விஜயகாந்திடமும் என்னிடமும் கூறினார் ஆர்.கே.செல்வமணி.

விஜயகாந்த்தும் நானும் எடிட்டிங் போனோம். அதை வைத்தே சிலர் வதந்திகளைப் பரப்பினார்கள். படத்தில்தான் அரசியல் இருக்கிறது என்று பார்த்தால், இதிலும் சிலர் அரசியல் செய்யப் பார்த்தார்கள்.

"என்ன செல்வமணி... டைரக்டர்தான எடிட்டிங் போகணும்... அவங்க ரெண்டுபேரும் போறாங்க...'' -இப்படி சிலர்.

"நீங்க ஏன் எடிட்டிங் போகல, அது ரொம்ப தப்பாச்சே... நீங்க எப்படி அனுமதிச்சீங்க?'' -இப்படி சிலர்.

அத்தனைபேருக்கும் செல்வமணி சொன்ன பதில்... "நான்தான் அவர்களைப் போகச் சொன் னேன். ஒருவர் என்னை இயக்குனராக்கி அழகு பார்த் தவர், இன்னொருவர் என்னை இதயபூர்வமாக நேசிக்கும், நான் நினைத்ததை எழுத்து வடிவில் கொடுக்கும் வசனகர்த்தா, அவர்கள் இருவரும் போகட்டும் என்று நான் சொன்ன கருத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இப்ராகிம் ராவுத்தர்... என்னை ஆளாக்கியவர். அதனால் விமர்சனம் செய்பவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை'' என்று கூறியவர் ஆர்.கே .செல்வமணி.

அந்த தன்னம்பிக்கை, மற்றவர்களின் தவறான விமர் சனங்களை ஊதித்தள்ளும் உள்ள உறுதி, முகஸ்துதிகளுக்கும், ஜால்ராக்களுக்கும் மயங்காத தெளிவான சிந்தனை, எந்த வேலையை யாரிடம் கொடுத்தால் சிறப்பாக செய்வார்கள் என்று முடிவெடுக்கிற ஆற்றல்... இவை அத்தனையும் இருந்ததினால்தான் திரையில் ஆர்.கே.செல்வமணி என்கிற பெயர் இன்றுவரை உயர்ந்து நிற்கிறது, தினம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவராக... அவரது தன்னலமில்லாத, தன்னிகரில்லாத சேவைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விஜயகாந்த்தும் நானும் எந்தக் காட்சிகளை குறைக்கலாம் என்று ஆலோசனை சொன்னோமோ, அதுதான் செல்வ மணியின் மனதிலும் இருந்திருக்கிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஒருசிலர் புதிதாக ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்கள்.

படத்தில் வில்லன் (வீரபத்ரன்) மன்சூர்அலிகானுடன் விஜயகாந்த் மோதும் சூப்பரான சண்டைக் காட்சி அமர்க்களமாக அமைந்திருக்கிறது. அதற்குப் பிறகு வரும் கோர்ட் சீன் தேவையா? அதுவும் நீளமான கோர்ட் சீனாக இருக்கிறதே? என்று சொல்ல... எனக்கு சற்றுப் பதட்டமானது. காரணம், அது என் ஏரியா. ஏவி.எம். ஸ்டுடியோ புல்தரையில் அமர்ந்தவாறு சுடச்சுட வசனம் எழுதிக் கொடுத்து படமாக்கப் பட்ட காட்சி. நாம் நினைத்த மொத்த கருத்துகளையும் கோர்ட் சீனில் சொல்ல வேண்டும் என்று நினைத்து ஆர்.கே.செல்வமணி நேசித்து எழுதி வாங்கிய வசனங்கள். விஜயகாந்தின் கம்பீரக் குரலில் உணர்ச்சிபூர்வமான அவரது நடிப்போடு அமைந்திருந்த கோர்ட் சீன் அது. யாருக்காகவும், எதற்காகவும் அந்த கோர்ட் சீனை வெட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது என்று முடிவெடுத்த பிறகுதான், என் மனம் நிம்மதியானது. கோர்ட் சீன் இல்லையென்றால் எனக்கு அப்படியொரு பெயரும் புகழும் கிடைத்திருக்காது.

அப்படி என்ன பெயர் கிடைத்தது?

"கேப்டன் பிரபாகரன்' ரிலீஸாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. விஜயகாந்த்துக்கு 100-ஆவது படம் மாபெரும் எழுச்சியைக் கொடுத்தது. ஆர்கே செல்வமணிக்கு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தவர் என்ற புகழைக் கொடுத்தது. தமிழ் சினிமாவிற்கு மன்சூரலிகான் என்ற வித்தியாசமான வில்லனைக் கொடுத்தது. எனக்கு என்ன கொடுத்தது?

(வளரும்...)

படம் உதவி: ஞானம்