aa

(47) ராவுத்தர் மனசை மாற்றிய மீனாட்சி அம்மன்!

""அடிமைப் பெண் படத்தில் "ஆயிரம் நிலவே வா' பாடலை பாடுவதற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை, எம்.ஜி.ஆர். தேர்வு செய்துவிட்டார். பாடல் பதிவு நடைபெறவிருந்த சமயம், எஸ்.பி.பி.க்கு உடல்நிலை சரியில்லாததால் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மேனேஜரிடம் "எனக்கு உடல்நிலை சரியில்லை, சரியாவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும். அதனால் வேறு ஒருவரை வைத்து பாட ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்' எனச் சொல்லியிருக் கிறார்.

இரண்டு மாதங்களுக்குப் பின் எஸ்.பி.பி.யை சந்தித்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மேனேஜர் சொன்னாராம்... "எஸ்.பி.பாலசுப்பிர மணியம் நம்பிக்கை யோடு பாடவந்த இளைஞர். எம்.ஜி. ஆருக்காகப் பாடப் போகிறோம் என்று மகிழ்ச்சியில் இருந்திருப் பார். அவர் குடும்பத்தினர், நண்பர்கள் எல்லாம் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சந்தோஷத்தில் பலபேரிடம் சொல்லியிருப்பார்கள். அந்த மகிழ்ச்சியை நான் கெடுக்க விரும்பவில்லை. அவருடைய நம்பிக்கையை நான் சிதைக்க விரும்பவில்லை. அதனால் எப்பொழுது எஸ்.பி.பால சுப்பிரமணியம் காய்ச்சல் குணமாகி, குரல் சரியாகி பாட முடிகிறதோ, அப்பொழுது நீங்கள் ரிகார்டிங் வைத்துக்கொள்ளலாம். படப் பிடிப்பு தள்ளிப் போவதால் எத்தனை லட்சம் நஷ்டமானாலும் பரவாயில்லை... ஷூட்டிங் ஏற்பாடுகளை கேன்சல் செய்துவிடுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொன்னார்' என்றார்.

Advertisment

எம்.ஜி.ஆரின் மனிதநேயத்தை நினைத்து, தன்னை நம்பியவர்களை வேதனைப்படுத்திவிடக் கூடாது, ஏமாற்றிவிடக் கூடாது என்ற எம்.ஜி.ஆரின் உயர்ந்த எண்ணத்தை நினைத்து கலங்கிப்போனாராம் எஸ்.பி.பி. -இது நான் கேள்விப்பட்ட சம்பவம்.

எம்.ஜி.ஆர்.போல விஜயகாந்த்தையும் ஆக்கவேண்டும் என்று நினைக்கின்ற நாம் அவரைப் போல இருக்கவேண்டாமா?

ஆர்.கே.செல்வமணி முதன்முதலாக இயக்குநராகப்போகிறார். அதுவும் "விஜயகாந்த் படத்தை இயக்கப்போகிறோம்' என்று எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்திருப்பார். அவரது அம்மா, அப்பா, உறவினர்கள், நண் பர்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். அவர்களது மகிழ்ச்சியை, நம்பிக்கையை நாம் கெடுக்கலாமா?''

Advertisment

aa

-இப்படி நானும் டி.சிவாவும், இப்ராகிம் ராவுத்தரிடம் சொன்னோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் தெரியும் திசையில் திரும்பி கையெடுத்துக் கும்பிட்டார். அவருடைய மனதை மாற்றியது நாங்களல்ல, மீனாட்சி அம்மன்தான் என்று எனக்குத் தோன்றியது. இறைவன் மிகப்பெரியவன்... அதுதான் உண்மை! ஆண் தெய்வமாக இருந்தாலும் சரி, பெண் தெய்வமாக இருந்தாலும் சரி.

"நல்லது செய்பவர்களை தெய்வம் சோதிக்கும், ஆனால் கைவிடாது' -இது ரஜினி சார் சொன்னது.

"கெட்டது செய்பவர்களை தெய்வம் நிச்ச யம் தண்டிக்கும்' -இது ரஜினி சார் சொல்லாதது.

"புலன் விசாரணை' படத்திற்கு ஆர்.கே. செல்வமணிதான் டைரக்டர் என்பது மதுரை யில் உறுதியானது. அந்தப் படத்தின் கதை விவாதத்தின்போது எனக்கும் செல்வமணிக்கும் நட்பும் உறுதியானது.

மதுரையில் நடந்த சம்பவத்தை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஆர்.கே.செல்வமணியிடம் சொல்ல வில்லை. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்புதான் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்ட ஒரு சூழ்நிலையில் இதைச் சொன் னேன். ஆனால் இந்த விஷயம் செல்வமணிக்கு முன்பே தெரிந்திருக்கிறது.

இயக்குநராக அறிமுகமாகும்போதே சோதனைகளைச் சந்தித்தபடியேதான் பயணத்தை தொடங்கினார். அந்தப் பயணத்தில், அதாவது "புலன் விசாரணை' படத்தில் அவர் சந்தித்த பிரச்சினைகள் நிறைய.

கடவுள் வரம் கொடுத்தது போல சில இயக்குநர்களுக்குத்தான் முதல் படத்தில் பிரச்சினைகள் வராது. பெரும்பாலானவர் களுக்கு முதல் படத்தை எடுத்து முடித்து, அதை வெற்றிப்படமாக்குவதற்குள் அவர்கள் படும்பாடு இருக்கிறதே...? அதை அனுபவித்தவர் களுக்குத்தான் அந்த வலி தெரியும். சிலருக்கு அது சுகப்பிரசவத்தில் முடியும், சிலருக்கு சிசேரியனாக அமையும்.

"புலன் விசாரணை' படத்தில் செல்வ மணிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நான் சொல்வது நாகரிகமல்ல. காரணம், தயாரித்தவர்கள் விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும். (விளம்பரத்தில் நண்பர்கள் பெயர் வரும்) அவர்களில் நானும் ஒருவன் என்பதால், அதைச் சொல்லாமல் எங்களுக்குள் ஏற்பட்ட பிணைப்பை மட்டும்தான் சொல்லப்போகிறேன்.

கெமிஸ்ட்ரி என்பது காதலர்களுக்கு மட்டும் ஏற்படாது. நண்பர்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே கூட ஏற்படும். எனக்கும் செல்வமணிக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி உருவானது. அவரை நான் நண்பர் என்று சொல்வதா? சகோதரர் என்று செல்வதா? என்று எனக்கே தெரியவில்லை. அவரை எப்படி நினைக்கிறேனோ அப்படித் தெரிவார். எனக்கு மட்டுமல்ல... அவருடன் பழகியவர்கள் எல்லோருக்கும் அவர் அப்படித்தான் தெரிவார்.

aa

யார் என்ன சொன்னாலும் சரி, அது நிர்வாக ரீதியானதாக இருந் தாலும், படத்தின் கதை சம்பந்தப்பட்ட காட்சிகளாக இருந்தாலும் சரி, எது சிறந்தது... எதை மக்கள் ரசிப்பார்கள் என்பதை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் ஒரு நல்ல இயக்குநரிடம் இருக்க வேண்டும். அந்த ஆற்றல் செல்வமணியிடம் அதிகமாக இருக்கிறது என்பதை நான் ஆரம்ப காலங்களிலேயே புரிந்துகொண்டேன்.

நானும் செல்வமணியும் நெருக்கமான தற்கு திராவிட உணர்வு ஒரு காரணம் என்று சொல்லியிருந்தேன். இன்னொரு முக்கியமான காரணம் நகைச்சுவை உணர்வு. நான் இயல்பாகவே நகைச்சுவை உணர்வுள்ளவன். அது செல்வமணியிடம் கொட்டிக் கிடந்தது. நாங்கள் இருவரும் இணைந்த படங்களில் காட்சி சீரியஸாக இருக்கும், ஆனால் ரசிகர்கள் கைதட்டி, சிரித்து ரசித்துக் கொண்டிருப்பார்கள். பல காட்சிகள் அப்படி அமைந்திருக்கும்.

"புலன் விசாரணை' படத்தில் பல காட்சிகள் அப்படியிருக்கும். எந்தவித ஈகோவும் இல்லாமல், என்னிடம் என்ன வாங்கவேண்டுமோ அதை வாங்கத் தெரிந்தவர். என்னிடம் மட்டுமல்ல, எல்லோரிடமும் அப்படி இருந்ததினால்தான் "புலன் விசாரணை' படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக அவர் கொடுத்தார்.

ஒரு இயக்குநரின் பலமே, படத்தில் பங்குபெற்ற கலைஞர்களிடம் எதை எப்படி வாங்குவது, திரையில் அதை எப்படிக் கொடுப்பது என்பதில்தான் இருக்கிறது. அதில் கைதேர்ந்தவர் ஆர்.கே.செல்வமணி.

"புலன் விசாரணை' படத்தின் இன்னொரு மிகப்பெரிய சிறப்பு... சரத்குமார் வில்லனாக வந்து பின்னியெடுத்திருப்பார். அவரது நடிப்பும் க்ளைமேக்ஸில் அவரும் விஜயகாந்த்தும் போடும் சண்டைக் காட்சியும் படத்திற்கு மகுடம் சூட்டியதுபோல் இருந்தது.

அந்தப் படத்தின் மூலம்தான் சரத்குமாரின் அன்பும் நட்பும் எனக்குக் கிடைத்தது. அதுதான் இன்று என்னை உயிரோடு வைத்திருக்கிறது. அவர் இல்லாவிட்டால் என் வாழ்க்கைப் பயணம் எப்பொழுதோ முடிந்தாலும் முடிந்துபோயிருக் கும். அவர் நடிப்பால் மட்டும் சுப்ரீம் ஸ்டார் ஆகவில்லை... பிறருக்கு உதவுகின்ற குணத்தாலும் சுப்ரீம் ஸ்டார் ஆனவர். நான் அவருக்கு வசனம் எழுதிக் கொடுத்தவன்தான். அவர் எனக்கு உயிர் கொடுத்தவர். அவருடைய அன்பை, எனக்கு கைகொடுத்த கருணையை சில வரிகளில் சொல்லிவிட முடியாது.

ஆர்.கே.செல்வமணியுடனான எனது பயணத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு, அந்த நிகழ்வுகளைச் சொல்கிறேன்.

"புலன் விசாரணை' பெரிய வெற்றிப் படமானது. செல்வமணி ஒரே படத்தில் புகழின் உச்சிக்குப் போனார். எனது வசனங்களும் பெரி தாகப் பேசப்பட்டது. பல தயாரிப்பாளர்களின் பார்வை செல்வமணியின் பக்கம் திரும்பியது.

நான் சொல்லப்போகும் விஷயத்தை சொல்லவும் கூடாது... சொல்லாமல் கடந்துவிட வும் முடியாது. சில கசப்பான அனுபவங்களால் செல்வமணி, "ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு போகவே கூடாது' என்று நினைத்திருந்தார். இப்ராகிம் ராவுத்தரும் அந்த மனநிலையில்தான் இருந்தார். நாம் ஒன்றாக இருந்தாலும் அதைக் கெடுப்பதற்கும், தடுப்பதற்கும் சிலர் இருப்பார்கள், சில சூழ்நிலைகளும் உருவாகிவிடும். ஏற்பட்ட கசப்புணர்வை "புலன் விசாரணை' படத்தின் வெற்றி இனிப்பாக மாற்றியது.

ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் பெரிய சம்பளம் பேசி, பெரிய தொகையை அட்வான் ஸாகவும் வாங்கியிருந்தார் செல்வமணி. அந்த நேரத்தில் இப்ராகிம் ராவுத்தர், விஜயகாந்த் இருவரிடமிருந்தும் செல்வமணிக்கு அழைப்பு.

செல்வமணி என்ன முடிவெடுத்தார்?

(வளரும்...)

படம் உதவி: ஞானம்