ss

(45) ஆர்.கே.செல்வமணி ஒரு தீவிரவாதி?

னந்த விகடன் பத்திரிகையில் தொடராக வந்த "தில்லானா மோகனாம்பாள்' கதையை படமாக்கப் போகிறேன்' என்று கூறி டைரக்டர் -தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜன் அந்தக் கதையின் ஆசிரியர் கொத்தமங்கலம் சுப்புவுக்கு ஒரு நல்ல தொகையைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அதை வாங்க மறுத்திருக்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.

காரணம் தெரியாமல் ஏ.பி.நாகராஜன் அவரைப் பார்க்க... "என்னுடைய கதைக்காக நீங்கள் எஸ்.எஸ்.வாசனிடம் கொடுத்த பணத்தை எனக்கு அனுப்பி வைத்துவிட்டார். எனக்கு அந்தப் பணமே போதும்'' என்று கூறிவிட்டார். எவ்வளவு நேர்மையான மனிதர்கள்!

Advertisment

நல்லவர்களை, நேர்மை யானவர்களை, எழுத் தாளர்களை ஊக்கு விப்பவர்களை எப்பொழுதும் மதிப்பவன் நான்.

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். எழுத்தாளர்களை ஏற்றிவிடுங்கள். ஏமாற்றிவிடாதீர்கள்.

நான் ஏமாற்றப்பட்டதால் இந்த வேதனையை வெளிப்படுத்தவில்லை. பல எழுத்தாளர்கள் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன்.

Advertisment

"பராசக்தி' படத்தில் கலைஞர் எழுதி, நடிகர் திலகம் சிவாஜி பேசிய கோர்ட் சீன் வசனம்தான் என் நினைவுக்கு வருகிறது.

"உனக்கேன் அக்கறை என்று கேட்டீர்கள். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தப் படுத்துகிறதே மீன்... அதைப் போல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது''.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இரண்டாவது முறையாக தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய அணியில் நான் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன்.

நாங்கள் பொறுப்பேற்று சில மாதங்களில் பல கதை புகார்கள் வந்திருக்கின்றன. படம் திரைக்கு வந்து அதைப் பார்த்த பிறகுதான் தனது கதை வேறு ஒருவரால் திருடப்பட்டிருக்கிறது என்று அந்தக் கதையை பதிவு செய்தவர்கள் புகார் கொடுக்கிறார்கள். அந்தக் கதை யார் மூலமாகப் போனது என்பதற்கு சிலருடைய புகாரில் ஆதாரங்களும் இருக்கின்றது. அவர்களுக்கு நியாயம் பெற்றுத் தரவேண்டிய பொறுப்பும், ஒருவருடைய கற்பனையைத் திருடி அவர் பெயரில் படமெடுத்து புகழையும், பணத்தையும் திருடிக் கொண்டு போவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்திற்கு இருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் தயாரிப்பாளர்களை குறை சொல்லவே முடியாது. ஒரு இயக்குநர் கதை சொல்லும்போது அது அவருடைய சொந்தக் கற்பனையில் உருவான கதை என்று நம்பித்தான் படத்தை ஆரம்பிக்கிறார்கள். அதற்குண்டான சம்பளத்தையும் அந்த இயக்குநருக்கு கொடுத்துவிடு கிறார்கள்.

அந்த ஒருசில இயக்குநர்கள்தான் ஒரே நேரத்தில் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றி, உண்மையான கற்பனை செய்த கதாசிரியர்களையும் ஏமாற்றி எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல், அடுத்து யாருடைய கற்பனையைத் திருடுவது என்று தங்கள் திரைப்பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

"திருட்டு' என்ற வார்த்தை கடுமையானது என்று நினைப் பவர்களுக்கு என்னுடைய பணிவான விளக்கம். ஒருவருடைய அனுமதி யில்லாமல், அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வதற்கு என்ன பெயர் சொல்வது?

ss

பாதிக்கப்படும் பல எழுத் தாளர்கள் கண்ணீருடன் எழுத்தாளர் கள் சங்கத்தில் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர் களின் கண்ணீரை எப்படித் துடைப்பது?

இது என்னுடைய வேண்டுகோள் அல்ல... எங்களுடைய வேண்டுகோள், எழுத்தாளர்கள் சங்கத்தின் வேண்டுகோள். கற்பனைத் திருடர்களை ஊக்குவிக்காதீர்கள். உண்மையான கற்பனை யாளர்களை கௌரவப்படுத்துங்கள்.

மற்ற மொழிப் படங்களின் ஹீரோக்கள் போல, தயாரிப்பாளர்கள் போல, தமிழ்த் திரையுலகிலும் ஒரு மாற்றத்தை உருவாக்க உதவி செய்யுங்கள். எழுத்தாளர்கள் ஜாதி மேலும் அழிந்துவிடாமல் காப்பாற்றுங்கள்.

ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்கிறேன். ஒருவனுடைய கற்பனையை தனது கற்பனை என்று சொல்பவர்கள், அந்த உண்மை வெளிவந்த பிறகும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் ஈகோ. படத்தின் வெற்றிக்கு தான்தான் காரணம் என்று எல்லோரும் சொல்ல வேண்டும். எழுத்தாளர்கள் காரணம் என்று சொல்லிவிடக்கூடாது என்ற ஈகோதான் காரணம். தன் மீது நம்பிக்கையில்லாமல், பிறருடைய உதவியால் புகழடைந்தவர்களுக்கு அந்த ஈகோ இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட ஈகோ இல்லாத ஒருவரைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

முதன்முதலாக படம் இயக்க ராவுத்தர் பிலிம்ஸுக்கு வந்தபொழுது ஒல்லியான உடம்போடும், பலமான நம்பிக்கை கொண்ட இதயத்தோடும் வந்தவர்.

"என் திறமை என்னை வெற்றிபெற வைக்கும்' என்ற லட்சிய வெறியோடு வந்தவர்...

எந்தவித ஈகோவும் இல்லாமல் என்னை உயர்த்திப் பிடித்தவர்.

பல பெருமைகளுக்கு சொந்தக்காரர், என் உடன்பிறவா சகோதரர் ஆர்.கே.செல்வமணி அவர்கள்.

ஆர்.கே. செல்வமணி -பிரமாண்ட படங் களுக்கு பாதை போட்டவர். அந்தப் பாதையில் வெற்றிநடை போட்டவர். பல பிரமாண்ட இயக்கு நர்களுக்கு முன்னோடியாக இருந்தவர். வெறும் பிரமாண்டங்கள் மட்டும் ஒரு இயக்குநருக்கு வெற்றியைக் கொடுத்துவிடாது. அதில் அழுத்தமான கதைக் கரு இருக்கவேண்டும். தெளிவான திரைக்கதை இருக்கவேண்டும். துணிச்சலான எண்ணங்களை வெளிப்படுத்த சிறப்பான வசனங்கள் இருக்க வேண்டும். கருவில் சுமந்த கதைக்களம் திரையில் முழுமையாக வருவதற்கு மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கவேண்டும். நடிகர், நடிகைகள் தேர்வில் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுக்குள்ளே இருக்கும் திறமையைத் தாண்டிய நடிப்பை வெளிக்கொண்டு வருகின்ற ஆற்றல் இருக்க வேண்டும். வளைந்து கொடுக்கவேண்டிய விஷயங்களுக்கு மட்டும் வளைந்து கொடுக்க வேண்டும். நிமிர்ந்து நிற்கவேண்டிய விஷயங்களுக்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து நிமிர்ந்து நிற்கவேண்டும்.

நான் சொன்ன அத்தனையும் ஒருங்கிணைந்த உழைப்பாளர், ஜெயிக்க வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சாதனையாளர் ஆர்.கே.செல்வமணி.

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கொடுத்து, அவர்களுக்கு அடையாளமும் கொடுத்தவர்கள் விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் என்பது வரலாற்று உண்மை.

ஆபாவாணன், அரவிந்த்ராஜ் ஆகியோரின் "ஊமை விழிகள்' படத்தின் பிரமாண்ட வெற்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்களின் தலையிலே சூட்டப்பட்ட தங்கக் கிரீடம்.

கிரீடம் சூட்டிய விஜயகாந்த்துக்கு மகுடம் சூட்டியவர்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்கள்.

"ஊமை விழிகள்' படத்திற்குப் பிறகு விஜயகாந்த்துக்கும், திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு பாசப்பிணைப்பு உண்டானது. அந்தப் பாசத்தில் வந்து கலந்தவர்தான் ஆர்.கே.செல்வமணி. விஜயகாந்த் என்ற மாமனிதரின் கலைக்குடும்பத்தில் புதிய வரவாக வந்தவர்... பிரிக்க முடியாத உறவாக மாறிப்போனவர்.

"புலன் விசாரணை' படத்தில் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன் அவரைப் பற்றித் தெரிந்தவை இரண்டுதான். அவர் திரைப்படக் கல்லூரி மாணவர். நம் நெஞ்சங்களில் இன்னும் நிறைந்திருக்கும் இயக்குநர் மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இப்படித்தான் பலருக்கும் அவரைத் தெரியும். "புலன் விசாரணை' கதை விவாதத்தில் நானும் அவரும் இணைந்து பயணித்தபோதுதான் அவருடைய பல பரிமாணங்கள் எனக்குத் தெரிந்தது.

அவர் ஒரு தீவிரவாதி -எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவதில் படுதீவிரமாக இருப்பவர்.

(வளரும்...)