aa

(44) இப்படியும் சிலர்... அப்படியும் சிலர்...!

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கமலா தியேட்டரில் இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. என் அருகே "சிட்டிசன்' பட இயக்குநர் தம்பி சரவண சுப்பையா அமர்ந்திருந்தார். எங்கள் பக்கத்தில் இருந்த இயக்குநர்களிடம் சொன்னார். "அண்ணன் சிட்டிசன் படத்துல எப்படி வசனம் எழுதிக் குடுத்தாரு தெரியுமா?'' என்று சொல்லி சில காட்சிகளின் வசனங்களையும் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.

அதாவது 22 ஆண்டுகளுக்குப் பிறகும் மறந்து விடாமல் என்னைப் பாராட்டியது அவரது உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் தமிழ்த்திரையுலகில் ஒரு சிலருக்கு இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

Advertisment

இன்னொருவனின் கற்பனையை அவர்களின் கற்பனை என்று கூச்சமில்லாமல் சொல்கிறார்கள். நல்ல மனம் கொண்ட இயக்குநர் கள் பலர் இருக்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு உரிய கௌரவத்தை யும், காசையும் வாங்கிக் கொடுக்கிறார்கள். வெளிப்படையாகப் பாராட்டவும் செய்கிறார்கள். அந்த நல்ல எண்ணம் ஏன் எல்லோ ரிடமும் இல்லாமல் போனது என்பதுதான் எழுத்தாளர்களின் கேள்வி. இயக்குநர்கள் வெற்றிபெற்றால் பல லட்சங்களில், கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களின் திறமைக்கு கிடைத்த பரிசு. திறமை என்பதில் முதலிடத்தில் இருப்பது அவர் உருவாக்கிய ஸ்கிரிப்ட். கதை, திரைக்கதை, வசனம் இந்த மூன்றும்தான் வெற்றிக்கு அஸ்திவாரம்.

அதை உருவாக்கியவரை சிலர் இருட்டடிப்பு செய்து விடுகிறார் கள். தன்னுடைய கற்பனை என்று கால ரைத் தூக்கி விட்டுக் கொண்டு அவர்களது கஜானாவை நிரப்பிக் கொள்கிறார் கள். அதனால்தான் தமிழ்த் திரைப்பட உலகில் எழுத்தாளர் என்ற ஜாதியே இல்லாமல் போய்விட்டது. இது என்னுடைய ஆதங்கம் மட்டுமல்ல... பல திறமையுள்ள எழுத்தாளர்களின் ஆதங்கம்.

ஹிந்தி, தெலுங்கு, மலை யாளம், கன்னடத் திரைப்பட உலகில் கதாசிரியர்கள் மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் திறமைக்கேற்ற பெரிய ஊதியம் கிடைக்கிறது. இங்கு மட்டும் கதாசிரியர்களின் கற்பனை யையே வேறு சிலர் கபளீகரம் செய்துகொண்டு போய்விடுகிறார் கள். அதற்குக் காரணமான சில இயக்குநர்கள் மீதுதான் இந்தக் குற்றச்சாட்டு.

Advertisment

aa

சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ஒரு விழாவில் பேசும்போது, "ஒரு படத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம் எழுத்தாளர்கள். அவர்கள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும்'' என்று கூறியதை இங்கு சொல்லியாக வேண்டும்.

ரஜினி சார் சொல்லியது உண்மைதான். ஆனால் அது நடக்கிறதா என்றால் இல்லை. ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் இயக்குநரை தேடிப்போய், பல தயாரிப்பாளர்கள் பெரிய தொகையை சம்பளமாகப் பேசி, அட்வான்ஸ் தொகையையும் அள்ளிக் கொடுக் கிறார்கள். நம் தமிழ் ஹீரோக்களும் அந்த இயக்குந ருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அடுத்த படமும் வெற்றிப் படமாகக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் கொடுக்கிறார்கள்.

மகிழ்ச்சிதான்... ஆனால் அந்தப் படத்தின் கதாசிரியரைத் தேடி தயாரிப்பாளர்கள் போய் அட்வான்ஸ் கொடுக்கிறார்களா? அவர்கள் அடுத்து எழுதும் கதையும் வெற்றிப்படமாக அமையும் என ஏன் நம்புவதில்லை?... தமிழ்த்திரையுலகில் மட்டும்தான் இந்த நிலைமை... அதனால்தான் இங்கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற அடையாளத்தோடு எல்லாருமே இயக்குநர்களாக ஆக விரும்புகிறார்கள். அதிலே சிலர், யார் சொன்ன கதையையோ அல்லது திரைக்கதையையோ அவர்கள் பெயர் போட்டுக்கொள்கிறார்கள்.

என் இனிய சகோதரர், இயக்குநர், எழுத் தாளர் விஜயபாலாஜி காரைக்குடியில் படப்பிடிப் பில் இருந்தார். அங்கிருந்து சில தகவல்களைச் சொன்னார் ஜி.கே. என்ற எழுத்தாளர் மிகவும் நகைச்சுவையாக எழுதக்கூடியவர். அவர் எனக்கும் பழக்கமானவர்தான். அவர் ஒருமுறை சொன்னா ராம்.

"குழந்தை பெத்துக்க தெம்பில்லா தவன்தான் அடுத்தவன் குழந்தைக்கு தன்னோட இனிசியலைப் போட்டுக்குவானாம்.'

எவ்வளவு வேதனையான உண்மை. சவுக்கடி கொடுப்பது போன்ற உண்மை. அடுத்தவர் கற்பனை யை தனது கற்பனை என்று போட்டுக்கொள் பவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். 1998-ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான படம் "தர்மா'. ஒரு இந்திப்படத்தின் கதை உரிமையை வாங்கி தமிழில் தயாரிக்கப்பட்டது. இந்தியில் அதன் கதையை எழுதியவர் ராபின் ஹென்றி என்ற எழுத்தாளர்.

aa

தமிழ் படத்தின் டைட்டில், விளம்பரங்களில் அவர் பெயரைப் போடவில்லை. ராபின் ஹென்றி கோர்ட்டில் வழக்குப்போட்டு வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு "தர்மா' படத்தில் அவர் பெயர் போடப்பட்டது. எழுத்தாளருக்கு மரியாதை கொடுங்கள் என்று நீதிமன்றம் சொல்கிறது. இங்குள்ள சிலருக்கு அந்த உணர்வு வர மறுக்கிறது.

ஹென்றி சொன்னாராம் "குழந்தை பிறக்கும் போது கைகள், கால்கள், கண்கள், காது, மூக்கு எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தெரியும். ஆனால் அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பது அதன் பிறப்பு உறுப்பை பார்த்தால்தான் தெரியும். கதை என்பது பிறப்பு உறுப்பு மாதிரி' -இது ராபின் ஹென்றி சொன்னது. இந்த வார்த்தையை இங்கு நான் சொன்னது தவறாக இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

விஜய பாலாஜி இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்.

விஜயகாந்த் நடிக்க "நரசிம்மா' படத்தை எழுதி இயக்கியவர் சகோதரர் திருப்பதிசாமி மிகத் திறமையான இளைஞர். அவர் 2000-ல், அதாவது 23 ஆண்டு களுக்கு முன்பு தெலுங்கில் நாகார்ஜுனாவை ஹீரோவாக வைத்து "ஆஸாத்' என்ற படத்தை எழுதி, இயக்கினார். படம் பெரிய வெற்றிபெற்றது.

ss

"ஆஸாத்' வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி இளைய தளபதி விஜய் நடிப்பில் தம்பி ராஜா அவர்களின் இயக்கத்தில் "வேலாயுதம்' என்ற பெயரில் 2011ஆம் ஆண்டு படம் வெளியானது. அப்பொழுது தம்பி திருப்பதிசாமி உயிரோடு இல்லை. இளம் வயதிலேயே மறைந்துவிட்டார்.

"ஆஸாத்' படம் வெளிவந்து பத்து ஆண்டு களுக்குப் பிறகு தமிழ் உரிமையை விற்ற தெலுங்குப் பட தயாரிப்பாளர் அஸ்வின்தத் அவர்கள், அந்தக் கதையை எழுதிய திருப்பதிசாமியை மறந்துவிடா மல், விஜயகாந்த் அவர்கள் நடித்த "தவசி' போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய உதயசங்கர் மூலம் திருப்பதிசாமியின் குடும்பத்தினரை சந்தித்து தமிழ் உரிமையில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை அவர்களிடம் கொடுத்தார்.

மறைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும்கூட தேடிவந்து பணம் கொடுத்த தயாரிப்பாளர் அஸ்வின்தத்தின் மனிதாபிமானத்தைக் கேட்ட பொழுது மனம் சிலிர்த்தது. திருப்பதிசாமி என்ற எழுத்தாளருக்கு அவர் கொடுத்த மரியாதை அது.

அனுமனின் பலம் அவனுக்குத் தெரியவில்லை. ஸ்ரீராமருடனேயே, அவருடைய காலடியிலேயே ஒரு பக்த னாகவே இருந்துவிட்டதால் தன் பலத்தையும் அவன் கையில் வைத்திருந்த கதாயுதத்தின் பலத்தையும் அறிந்திருக்க வில்லை. ஒரு கதாசிரியனுக்கு அவனுடைய கதை, அவன் உருவாக்கிய திரைக்கதை, எழுதிய வசனம் என்பது அனுமன் கையில் வைத்திருக்கும் கதாயுதம் போன்றது. ஸ்ரீராமனுக்கு அனுமன் எப்படியோ, அப்படித்தான் ஒரு படத்திற்கு கதாசிரியரும். அதற்காகத்தான் இந்த உதாரணத்தைச் சொன்னேன். அடுத்தவர்களின் கற்பனைகளை எடுத்தாள்பவர்களையெல்லாம் கதாசிரியர் என்று சொன்னால் உண்மையான கதாசிரியர்களை என்னவென்று சொல்வது?

dd

தமிழ்த் திரையுலகம் ஒரு காலத்தில் எப்படியெல்லாம் கதாசிரியர்கள் மேல் மதிப்பு வைத்திருந்தார்கள். எழுத்தாளர்களை எப்படி யெல்லாம் நேசித்தார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை நினைவூட்டினார் சகோதரர் விஜயபாலாஜி. கொத்தமங்கலம் சுப்பு எழுதி ஆனந்த விகடனில் நீண்ட தொடராக வெளி வந்தது "தில்லானா மோகனாம்பாள்'.

நடிகர் திலகம் சிவாஜியை வைத்து திரைப்படமாகத் தயாரிக்க ஜெமினி எஸ்.எஸ்.வாசனைப் போய் சந்தித்துப் பேசி, அவர் சம்மதித்து ஒரு நல்ல தொகை கொடுத்து உரிமையை வாங்கினார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். கதை உரிமை எஸ்.எஸ்.வாச னிடம் இருந்தது.

ஏ.பி.நாகராஜன் அவர்களே ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதால் கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவையும் கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரைப் போய் சந்தித்து, "உங்களது "தில்லானா மோகனாம்பாள்' கதையை படமாக்கப் போகி றேன்' என்று கூறி அவருக்கும் ஒரு நல்ல தொகையைக் கொடுத்திருக்கிறார்.

அதை வாங்க மறுத்திருக்கிறார் கொத்த மங்கலம் சுப்பு. காரணம் தெரியாமல் ஏ.பி.நாக ராஜன் அவரைப் பார்க்க... "என்னுடைய கதைக் காக நீங்கள் எஸ்.எஸ்.வாசன் அவர்களிடம் கொடுத்த பணத்தை அவர் வைத்துக் கொள்ளா மல், எனக்கு அனுப்பி வைத்துவிட்டார். எனக்கு அந்தப் பணமே போதும்'' என்று கூறிவிட்டார். எவ்வளவு நேர்மையான மனிதர்கள்?

இப்படிப்பட்டவர்களெல்லாம் இருந்த தமிழ்த் திரையுலகில் ஒரு சிலரின் நடவடிக்கைகள் எழுத்தாளர்களை வேதனையில் ஆழ்த்தி யிருக்கிறது. அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவங்களை எழுதுவதற்குக் காரணம்.

(வளரும்...)