37 கேப்டன்-புரட்சித் தமிழன்-சுப்ரீம் ஸ்டார்!
டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களைப் பற்றிச் சொன்னேன்.
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பாட் டாளி மக்கள் கட்சியின் சார்பாக முன் மாதிரி பட்ஜெட் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியவர். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளில் தயங்காமல் குரல் கொடுத்தவர். கொடுத் துக் கொண்டிருப்பவர். அவருக் குப் பின் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் அந்தக் கட்சியினரால் சின்ன ஐயா என்று அன்போடு அழைக்கப்படும் அன்புமணி ராமதாஸ் அவர்களும் அவர் வழியிலே அயராது பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
நான் பல்வேறு கட்சி களின் தலைவர்கள், இரண் டாம் கட்டத் தலைவர்களை சந்தித்திருக்கிறேன். பேசியிருக் கிறேன். பழகியிருக்கிறேன். ஆனால் டாக்டர் ஐயாவையும், அன்புமணி ராமதாஸையும் சந்தித்த தில்லை. பாட்டாளி மக்கள் கட்சிக்கு பல பிளஸ் பாயிண்ட்கள் இருக்கிறது. தலைமையின் கட்டளையை நிறை வேற்ற இளைஞர் பட்டாளம் இருக் கிறது. என்னுடைய பார்வையில் ஒரு மைனஸ் பாயிண்ட் இருக்கிறது. நான் அதைச் சொல்வதால் தயவு செய்து டாக்டர் ஐயா கோவித்துக் கொள்ளக்கூடாது. தான் சார்ந்த வன்னிய சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், முன் னேற்றத்திற்காகவும்தான் இயக்கம் தொடங்கினார். போராடி உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தார். காலப் போக்கிலே ஒட்டுமொத்த தமிழ் மக்க ளுக்கான இயக்கமாக பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கினார். எல்லா மதங் களைச் சேர்ந்தவர்களும், எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அந்தக் கட்சியில் இருக் கிறார்கள். எல்லாருக்குமான இயக்கமாக மாற்றி பல ஆண்டுகளாகிவிட்டது.
சமீபத்தில் கூட "தமிழைத் தேடி' என்ற பெயரில் ஒரு சுற்றுப் பயணம் மேற் கொண்டார். இருந்தாலும் அவரை எதிர்ப் பவர்களால், பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்க்கும் மற்ற கட்சிக்காரர்களால் அது ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கான கட்சி என்று பேசப்பட்டுக் கொண்டே இருப்ப தால், விமர்சனம் செய்யப்பட்டுக்கொண்டி ருப்பதால் அந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் உடைத்துதான் கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியதிருக்கிறது.
எங்கள் சினிமாவில் நன்றாக நடிக்கக்கூடிய ஒரு நடிகர் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து விட்டால், தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிப்பதற்காகவே கூப்பிடுவார் கள். ஒரு நடிகை தங்கை வேடத்தில் நடித்துவிட்டால் கதாநாயகிக்கு உரிய தகுதி இருந்தால்கூட தங்கை வேடத் திலே நடிப்பதற்கான அழைப்புகள்தான் அதிகமாக வரும். "இதுதான்… இதற் காகத்தான்' என்று முத்திரை விழுந்து விட்டால் அதை மாற்றுவதற்காக போராட வேண்டியிருக்கும்.
அப்படி ஒரு போராட்டத்தை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார் டாக்டர் ஐயா.
இதை நான் சொல்வதற்குக் காரணம் பல மாறுபட்ட விமர்சனங்களை எதிர் கொண்டு, கட்சி நடத்த வேண்டிய சூழ்நிலை அவருக்கு. ஆனால் விஜயகாந்த்துக்கு, அப்படிப்பட்ட சூழ்நிலை எதுவுமே இல்லை. அவர் கட்சி தொடங்கிய பொழுது அவருக்கு எந்த மைனஸ் பாயிண்ட்டும் இல்லை. நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கியதோடு, நல்ல மனிதர் என்ற பெயரை வாங்கி யிருக்கிறார். ஜாதி, மத வேறுபாடு இல்லாதவர். எல்லா மதங்களையும் நேசிப்பவர், சமமாக மதிப் பவர். எளிமையான மனிதர்... இனிமையான மனிதர்
கடும் உழைப்பாளி,…தமிழ் உணர்வுகொண்ட வர். தமிழ் மொழியை, தமிழ் இனத்தை நேசிப்பவர். பணத்திற்காக வேற்றுமொழிப் படங்களில் நடிக்காதவர். எம்.ஜி.ஆரை நேசிப்பவர். கலைஞரின் அன்பைப் பெற்றவர். அநீதியை எதிர்ப்பவர், யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்க தயங்காதவர். ஏழை-எளியோருக்கு உதவி செய்பவர். பலருடைய கல்விக்கு உதவியவர். இரண்டு திராவிட கட்சிகளுக் கும் மாற்றாக வந்த துணிச்சல்காரர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அவருக்கு இருந்த பிளஸ் பாயிண்ட்டுகளை இவ்வளவும் உள்ளவராக அவர் ஆனதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் அவருக்கு அமைந்த நண்பர்கள். நன்றாகக் கவனிக்க வேண்டும்...…கிடைத்த நண்பர்கள் என்று சொல்லவில்லை, அமைந்த நண்பர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
திரையுலகில் ஒரு நேரத்தில் புரட்சித்தமிழன் சத்யராஜுக்கும், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்துக் கும் சம்பளமும், ரசிகர் பலமும் ஒரே அளவில் இருந்தன.
ஒரு நேரத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத் குமாருக்கும், விஜயகாந்த்துக்கும் சம்பளமும், ரசிகர் பலமும் ஒரே அளவில் இருந்தன.
சத்யராஜ் சார் படங்களும், சரத்குமார் சார் படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றதே அதற்குக் காரணம்.
ஆனால் இந்த இருவரைவிட விஜயகாந்த்தின் வளர்ச்சி, வெற்றி, பெருமை, புகழ், ரசிகர் மன்றங் களின் அசுரபலம் ஒரு புதிய பரிணாமத்தில் சென் றது. நமக்கான நடிகர் என்று நினைத்திருந்த ரசிகர் கள் "இவர் நமக்கான தலைவர்' என்று நினைக்க ஆரம்பித்தனர். மக்களுக்கான தலைவர் என்ற ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க உழைக்க ஆரம்பித் தனர். இவர் கட்சி தொடங்கினால்... தமிழ்நாட்டின் எதிர்காலம் இவர்தான்,… இவராகத்தான் இருப்பார், இவராகத்தான் இருக்க வேண் டும் என்று பல திசைகளில் இருந்தும் நம்பிக்கை குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இதற்கெல்லாம் அடித்தளமாக இருந்தது அவருக்கு அமைந்த நண்பர்கள். அவருடைய வளர்ச்சியைப் பற்றியே… அவருடைய வெற்றியைப் பற்றியே… எந்த நேரமும் சிந்தித்துக் கொண்டிருந்த நண்பர்கள் விஜயகாந்த்துக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட நண்பர்கள்.
இதுதான் அவர் தே.மு.தி.க. என்ற அரசியல் கட்சி தொடங்கு வதற்குக் காரணம்.
அந்த நண்பர்களில் மிக மிக முக்கியமான நண்பர்கள், தற்பெருமை என்று நினைத்துக் கொண்டாலும் கவலையில்லை. இப்ராகிம் ராவுத்தரும், லியாகத் அலிகானும். இதை சிலர் மறக்க நினைத்தாலும், மறுக்க நினைத்தாலும், மாற்ற முயற்சித்தாலும் உண்மை அதுதான். சத்தியம் அதுதான். நெருப்பை பஞ்சு மூட்டைகளை வைத்து மூட முடியாது. எங்களுடைய அர்ப்பணிப்பை, அந்த தியாக வரலாற்றை இறைவனைத் தவிர வேறு யாராலும் மறைக்க முடியாது.
"விஜயகாந்த்தை மக்களுக்காக உழைப்பதற் காகவே இறைவன் படைத்தான்' என்று பல மேடைகளில் நான் முழங்கியிருக்கிறேன். பல பிளஸ் பாயிண்ட்கள் விஜயகாந்த்துக்கு இருந்தும் அவரது அரசியல் பயணமும், பலமும் வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீடுகளிலும் பேசப்பட்டவர் விஜயகாந்த்.
அவருக்காக முதன்முதலில் சாலிகிராமம் கண்ணபிரான் காலனியில் வாங்கப்பட்ட வீட்டில் அவரது நண்பர்களான இப்ராகிம் ராவுத்தரும், நானும்தான் தங்கினோம். விஜயகாந்த்தின் உழைப்பில் வாங்கிய வீடு.… திருமணமாகி விஜயகாந்த் குடி போவதற்கு முன்… அந்த வீட்டில் அதிகமாக இருந்தவர்கள் என்று கணக்கெடுத்தால் இப்ராகிம் ராவுத்தரும், லியாகத் அலிகானுமாகத் தான் இருக்கும். பகலெல்லாம் ராஜாபாதர் தெருவில் உள்ள அறையில் இருப்போம். இரவு சாலிகிராமம் கண்ணபிரான் காலனி வீட்டுக்கு வந்து விடுவோம். அங்குதான் தூங்குவோம்.
அந்த வீட்டைப் பராமரிக்க, பார்த்துக் கொள்ள ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும் இருந்தார்கள். அவர்களின் வேலைகள், வரவு- செலவு கணக்குகள் எல்லாவற்றையுமே கவனித் தவன் நான்தான். "நான்தான்' என்ற வார்த்தைக்கு உரிமை கொடுத்தவர் இப்ராகிம் ராவுத்தர். அந்த வீட்டில் இரவு நேரங்களில் நாங்கள் தூங்கிய நேரத்தைவிட விஜயகாந்த்தின் வளர்ச்சியைப் பற்றி பேசியதும், சிந் தித்ததும்தான் அதிகம்.… நாங்கள் தூங்க நினைத் தாலும் பெரிய பெரிய கொசுக்கள் எங்களைத் தூங்க விடாது.
அவருக்காகவும், ரசிகர் மன்றங்களின் வளர்ச்சிக்காகவும் நான் தீவிரமாக இருந்தபொழுதுதான் நான் இணை இயக்குநராகப் பணியாற்றிய விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த ராமன் ஸ்ரீ ராமன் படம் வெளியானது.
நடிகை வடிவுக்கரசி அவர்களின் சொந்தத் தயாரிப்பான "அன்னை என் தெய்வம்' படத்திற்கு விஜயகாந்த் கால்ஷீட் கொடுத்திருந்தார். கதை நடிகர் சிவச்சந்திரன். வசனம் வேறு ஒரு எழுத்தாளர். டைரக்ஷன் பில்லா கிருஷ்ணமூர்த்தி. சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நடித்த "பில்லா' படத்தை இயக்கியவர்.
ஒருநாள் படப்பிடிப்பில் ஒரு காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தபொழுது, அந்தக் காட்சிக்கு எழுதப்பட்டிருந்த வசனம் கதாசிரியர் சிவச்சந்திரனுக்கும், இயக்குநர் பில்லா கிருஷ்ணமூர்த்திக்கும் திருப்தி அளிக்கவில்லை.
என்ன செய்வதென்று விஜயகாந்த்துடன் ஆலோசனை செய்திருக்கிறார்கள். "வசனகர்த்தாவை மாற்றிவிடலாம்' என்று முடிவு செய்திருக்கிறார்கள். அப்பொழுது விஜயகாந்த்துக்கு உடனே நினைவுக்கு வந்தது நான்தான்.
எனக்கு அழைப்பு வந்தது. நான் உடனே ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குப் போனேன். எந்தக் காட்சியின் வசனம் திருப்தியாக இல்லை என்று நினைத்தார்களோ… அந்தக் காட்சியின் சூழ்நிலை, மொத்தக் கதையின் சுருக்கம் இவற்றையெல்லாம் கேட்டுவிட்டு வசனம் எழுதிக் கொடுத்தேன்.
இயக்குநர் பில்லா கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் மகிழ்ச்சி. கதாசிரியர், நடிகர் சிவச்சந்திரன் முகத்தில் மகிழ்ச்சி. அதைப் பார்த்த விஜயகாந்த்துக்கு அதை விட மகிழ்ச்சி. "சூப்பர்'' என்றார்கள்.
நான் வசனகர்த்தா ஆன கதை இதுதான்.
(வளரும்...)