(115) சினிமாவின் வெற்றி மட்டுமே அரசியல் வெற்றி ஆகாது!
பொதுவாக திரைப்பட ஹீரோக்கள் அரசியலுக்கு வந்தால் யாரை அளவுகோலாக வைக்கிறார்கள்? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைத் தான் அளவுகோலாக வைக்கிறார்கள். அவருக்குப் பின்னால் அரசியல் கட்சி தொடங்கிய எந்த ஹீரோவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அவர்களில் ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். …அவரும் ஏணியில் ஏறி பாம்பில் சறுக் கியதுபோல சறுக்கிவிட்டார்.
ஏணியில் ஏறி பாம்பில் சறுக்கும் பரமபத ஆட்டத்தில் அதிர்ஷ்டம் மட்டும் தான் வேண்டும். புத்திசாலித்தனமான வியூகம் அமைத்து செயல்படுகின்ற விவேகமே தேவையில்லை. ஆனால் அரசியல் அப்படி அல்ல. வெறும் ரசிகர்கள் செல்வாக்கு மட்டும் இருந்தால் போதாது. அதை மக்கள் செல்வாக்காக மாற்றுவதற்கு மதிநுட்பம் வேண்டும்.
ஆந்திர அரசியலை எடுத்துக் கொண்டால் என்.டி.ராமராவ் அவர்கள் தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி வெற்றிபெற்று முதலமைச்சரானார். ஆனால் தமிழ் நாட்டில் கட்சி தொடங்கிய ஹீரோக் களில் விஜயகாந்த்துக்கு மட்டுமே சில சாதகமான சூழ்நிலைகள் இருந்தன. அவர் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் முதலமைச்ச ராகவே ஆகியிருக்கலாம்.
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தியாகணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்
என பெற்றால்தான் பிள்ளையா படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார்.
கட்சி ஆரம்பிக்கும் ஹீரோக்கள் இந்த விஷயத்தில் சறுக்கிவிடுகிறார்கள். தெரியாமல் தவறு செய்தவர்களை, தப்பு செய்தவர்களை கட்சியில் பெரிய பதவி கொடுத்து வளர்த்துவிடு றார் கள். எது சொன்னாலும் ஆமாம் போடு பவர்கள், வளர்கிறார்கள். எதிர் கருத்துக் களை சொல்பவர்கள் எதிரிகளாக ஆக் கப்படு கிறார்கள். இதையெல்லாம் தம்பி விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படித்தவர் களுக்குத்தான் அரசியல் அறிவு இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். பல்வேறு கட்சியில் பல ஆண்டுகள் இருந்தவர்கள், பல பதவிகளில் இருந்தவர்களிடம் தான் அரசியல் ஞானம் இருக்கும் என்று கருதிவிட வேண்டாம். படிப்பு என்பது ஒரு தகுதி அவ்வளவுதான். ஆனால் அது மட்டும் அரசியலுக்கு உண்டான தகுதி ஆகிவிடாது.
படிக்காத காமராசர்தான் "படிக்காத மேதை' என்று புகழப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபொழுது அதிகாரிகளுக்கே ஆலோசனை சொல்வாராம். அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட ஐயா யெஸ் என்று ஏற்றுக் கொண்டு சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
படிப்பு என்பது நாம் தேடிப் போய் கற்றுக்கொள்வது… அறிவு, ஞானம் என்பது இறைவனிடம் இருந்து நாம் பெற்றுக்கொள்வது.
அரசியல் தலைவர்களுக்கு பல சிறப்பம்சங்கள் தேவை. அதில் சில விஷயங்கள் அவசியம் தேவை. சகிப்புத் தன்மையுடன் கூடிய பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பக்குவம், எதிரிகளையும் நண்பனாக்கிக் கொள்ளும் சாதுர்யம்,… நமக்காக உழைத்து, நமது வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள் விலகிச் சென்றாலும், அவர்களை அழைத்து அரவணைத்துக் கொள்ளும் அன்புள்ளம் வேண்டும். இவை அத்தனையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நிறைய இருந்தது.
ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியவர்கள் கூட, நான்கு சீட்டுக்கும் ஐந்து சீட்டுக்கும் கூட்டணிக்கு அலை கின்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். லட்சியவாதிகளாக அரசியலுக்கு வந்து, வெற்றி களை இழந்த பிறகு வெறும் வியாபாரிகளாக மாறிப் போய்விடுகிறார்கள். தம்பி விஜய் அரசிய லில் சாதிப்பார் என்று பல தரப்பினர் பேசுவதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன், கேள்விப்படு கிறேன். எனக்குத் தெரிந்த பல இளைஞர்கள், விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகியிருக்கிறார்கள்.
இளைஞர்கள் மத்தியிலே ஒரு புதிய எழுச்சி யை ஏற்படுத்தியிருக்கிறார் விஜய். அரசியல் பக்குவத்திற்கும், உச்சத்திற்குப் போவதற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய இரண்டு சம்பவங்களை நினைவுபடுத்துகிறேன்.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியதும் அவரோடு இணைந்தவர் எஸ்.டி.சோமசுந்தரம். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்ததும் அவரது மந்திரி சபையிலே அமைச்சராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். மீது ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டால் அவரை விட்டுப் பிரிந்து போய் தனியாக "நமது கழகம்' என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால் படு தோல்வியை சந்தித்தார். நம்மை விட்டுப் போன எஸ்.டி.சோமசுந்தரம் தோல்வி யடைந்துவிட்டார், தொலைந் தார் எஸ்.டி.சோமசுந்தரம் என்று துள்ளிக் குதிக்கவில்லை. அதற்கு மாறாக வேதனைப்பட்டார். நமக்காக உழைத்த வரை ஒரு நல்லவரை இழந்துவிடக்கூடாது என்று நினைத்தார். மீண்டும் அவரை அழைத்து கட்சியில் இணைத்துக்கொண்டு, அமைச்சராகவும் ஆக்கினார். இதுதான் தலைமைக்குண்டான பக்குவம். பெற்ற பிள்ளை தவறு செய்தால் வெறுத்து ஒதுக்கிவிடாத தாய் போல இருக்க வேண்டும் தலைமை. அந்தத் தாயுள்ளம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் இருந்தது.
இன்னொரு சம்பவம்…
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சக்தி வாய்ந்த விவசாய சங்கத் தலைவராக இருந்தவர் நாராயணசாமி நாயுடு. சில மாவட்டங்களில் பலம் பொருந்தியவராகவும், ஆளும் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்தார். தனக்கு எதிராக அவர் செயல்பட்டால் வெற்றி பாதிக்கப்படுமோ என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். நாராயணசாமி நாயுடுவை ஊதித் தள்ளிவிடுவேன் என்று உதார் காட்டவில்லை. இத்தனைக்கும் எம்.ஜி.ஆரின் புகழுக்கும், செல் வாக்குக்கும் முன்னே மிக சாதாரணமானவர்தான் நாராயணசாமி நாயுடு. ஆனால் அரசியல் கணக்கு வேறு. ஒரு ஓட்டுகூட வெற்றி தோல்வியை முடிவு செய்திருக்கிறது. அதனால் நாராயணசாமிநாயுடு வை எதிர்க்க நினைக்கவில்லை எம்.ஜி.ஆர். அவரை நண்பராக்கி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக திருப்ப நினைத்தார். ஒருமுறை நாராயணசமி நாயுடு உடல்நலம் இல்லாமல் இருந்தபொழுது, அவரைப் பார்க்க வீட்டுக்கே போய்விட்டார் எம்.ஜி.ஆர்.
உடல்நலம் விசாரிக்க எம்.ஜி.ஆர். அவர்களே வீடு தேடி வந்துவிட்டாரே என்று நெகிழ்ந்து போனார் நாராயணசாமி நாயுடு. அந்தச் சந்திப்பின் மூலம் நான் எப்பொழுதும் விவசாயிகளின் தோழனாக இருப்பேன் என்பதையும் உணர்த்தினார் எம்.ஜி.ஆர்.
நாராயணசாமி நாயுடு அவர்களின் மனைவி எம்.ஜி.ஆரைப் பார்த்து மெய்மறந்து போனார். எவ்வளவு பெரிய தலைவர், எவ்வளவு எளிமையாக நம் வீட்டுக்கு வந்திருக்கிறாரே என்று பிரமித்துப் போனார். "வீடு தேடி வந்தவனுக்கு சாப்பாடு போட மாட்டீங்களா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டதும் அதிர்ந்துபோனார் நாயுடு அவர்களின் மனைவி. நீங்க சாப்பிடற அளவுக்கு ஸ்பெஷலா ஒண்ணும் சமைக்கலியே' என்றார் அவர் பதட்டத்தோடு.
"நீங்க அன்போட கொடுக்கிற எதுவுமே எனக்கு ஸ்பெஷல் சாப்பாடுதான்'' என்றார் எம்.ஜி.ஆர்.
நாராயணசாமி நாயுடுவுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு விடைபெற்றார். இதுதான் உண்மையான அன்பு கலந்த அரசியல். எதிர்ப்பவர்களையம் ஏற்றுக்கொள்ள வைக்க கீழே இறங்கிப் போகவும் தயங்கவில்லை எம்.ஜி.ஆர். அந்த சம்பவம் நாராயணசாமி நாயுடுவை எம்.ஜி. ஆருக்கு ஆதரவாக மாற்றியது. ஆனால் உண்மை யாக நேசிப்பவர்களைக் கூட இழந்து விட்டு, நினைத்த லட்சியத்தை அடைய முடியாமல் அரசியலில் அடி வாங்கியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அரசியலுக்கு வந்த மற்ற நடிகர்களை விட தம்பி விஜய் அவர்களுக்கு பல கூடுதல் சிறப்புகள் உண்டு. அவருடைய எளிமை, பெரியவர்களிடத்தில் அவருடைய பணிவு, சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் வந்த போதும் கூட அலட்டிக் கொள்ளாத அவரது அமைதி… இவையெல்லாம் ஒரு பக்குவப்பட்ட மனிதரால்தான் சாத்தியம். திரைப்படங்களின் வெற்றி தோல்வி மட்டும் ஒரு நடிகரின் புகழை நிர்ணயித்துவிட முடியாது. அதையும் தாண்டி சில விஷயங்கள் இருக்கிறது...!
(வளரும்...)