(111) நெருக்கடியும் கூட்டணியும்!
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி, இயக்கி நடிகர் திலகம் சிவாஜி -பத்மினி, ஜெய்சங்கர் -வாணிஸ்ரீ நடித்த படம் "குலமா குணமா'. 1971ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் ஒரு காட்சி.
சிவாஜியும், ஜெய்சங்கரும் அண்ணன் -தம்பி. தம்பி ஜெய்சங்கர் சொத்துக்களை பிரிக்கச் சொல்லி கேட்க, அதிர்ச்சியடைந்துவிடுவார் சிவாஜி.
பாசமாக வளர்த்த தம்பி பாகப்பிரிவினை செய்ய வேண்டும் என்று சொன்னதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சொத்துக்களை சரிசமமாக பிரிக்க முடிவு செய்துவிடுகிறார்.
மனைவி பத்மினியிடம் பாத்திரங்கள், சொத்துப் பத்திரங்கள், தங்க நகைகள் எல்லாவற்றையும் மொத்தமாக எடுத்து ஒரு இடத்தில் வைக்கச் சொல்வார். அவரும் எடுத்து வைப்பார்.
சிவாஜி: என்னம்மா எடுத்து வச்சுட்டியா.
பத்மினி: எடுத்து வச்சுட்டேங்க.
சிவாஜி: எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா?
பத்மினி: டம்ளர் முதற்கொண்டு எடுத்து வச்சுட்டேங்க.
சிவாஜி: நகை நட்டெல்லாம்…?
பத்மினி: எடுத்து வச்சுட்டேன்.
சிவாஜி: தாலி தங்கத்தால செஞ்சதுதானே? அதையும் கழட்டி வச்சுட்டு மஞ்சள் கயித்த கட்டிக்க...…
பத்மினி தங்கச் செயினோடு இருந்த தாலியையும் கழட்டி வைப்பார்.
ஊர் பெரியவர்கள் வருவார்கள். அனைவரும் உட்கார ஜெய்சங்கர் மனைவி வாணிஸ்ரீயுடன் வருகிறார். அவர்களுடன் வில்லன் நம்பியாரும் வருவார். நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு...
ஜெய்சங்கர்: "அண்ணே… எனக்கு இந்த சொத்தெல்லாம் வேணாம். எங்க அண்ணன்தான் வேணும். எனக்கு மிகப்பெரிய சொத்தே நீங்கதாண்ணே' என்று கட்டிப்பிடித்து கண்கலங்க... சிவாஜி, பத்மினி, வாணிஸ்ரீ எல்லோரும் கண்கலங்க, ஊர்க்காரர்கள் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருக்க,...
அந்த க்ளைமாக்ஸ் காட்சியை தியேட்டரில் பார்த்தவர்களும், கண்கலங்கினார்கள். அழுதார்கள். கல் மனதையும் கரைத்துவிடும் அந்த சென்டிமென்ட் காட்சி.
சட்டத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால், ஆவேசத்தால், கோபத்தால் சாதிக்க முடியாததையும், சென்ட்டிமெண்ட்டான ஒரு யுக்தியால் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமான காட்சி இது.
இதேபோல் அரசியலில் ஒரு சென்டிமென்ட் நிகழ்வு. மிகப்பெரிய சரிவை, மிகப்பெரிய தோல்வியை, மிகப்பெரிய சதியை சென்டிமென்ட் யுக்தியால் வெற்றியாக மாற்றிய வரலாற்று நிகழ்வு.
1975ஆம் ஆண்டு மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். அந்த ஆண்டு ஜுன் மாதம் எமர்ஜென்சியை அமல்படுத்தினார். எமர்ஜென்சியைப் பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. அது ஒருவகையான சர்வாதிகார ஆட்சி. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட பின் இந்தியாவில் பலர் இன்னலுக்கு ஆளாயினர். பல கட்சிகள் துயருக்கு ஆளாகியது. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் தி.மு.க.வினரும் சிறைக் கொடுமைகளை அனுபவித்தனர். இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் கூட அன்று சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். அது ஒரு பெரிய வரலாறு.
எமர்ஜென்ஸி சட்டத்தால் 1977ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். இரண்டு ஆண்டுகள் அவர் பிரதமராக இருந்தார். திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் 1979ஆம் ஆண்டு சரண்சிங் பிரதமரானார். அவராலும் கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை... ஆட்சி கவிழ்ந்தது.
1980ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் எமர்ஜென்சியால் பல வேதனைகளையும் சோதனைகளையும் சந்தித்த கலைஞர் அவர்கள் அதையெல்லாம் மறந்துவிட்டு இந்திராகாந்தியுடன் கூட்டணி சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் இணைந்த கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
"நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக'! -என்று கலைஞர் மேடைகளில் முழங்கினார்.
அப்பொழுது தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்துகொண்டிருந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். தேர்தல் முடிவுகள் வந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் பெரிய வெற்றி பெற்றது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கோபிசெட்டிபாளையம், சிவகாசி இந்த இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற அத்தனை தொகுதிகளிலும், தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றி பெற்றது. முதன்முதலாக எம்.ஜி.ஆர். மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தார். இந்த நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் எம்.ஜி.ஆரை தோற்கடித்துவிடலாம் என்று கலைஞர் கணக்குப் போட்டார்.
இந்திராகாந்தியுடன் பேசி எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்தார்கள். தமிழ்நாடு சட்டமன்றம் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்வதற்கு முன்பாகவே கலைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அதிர்ச்சியடைந்தார்.
1980ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. பாராளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வந்ததால் பாராளுமன்றத் தேர்தலில் வீசிய தி.மு.க. -காங்கிரஸ் அலையே தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது. தனது பிரச்சாரத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆவேசப்படவில்லை, ஆத்திரப்படவில்லை, கோபப்படவில்லை, கொந்தளிக்கவில்லை. தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ததற்காக மக்கள் மீதும் கோபப்படவில்லை. வெற்றி பெற்ற அணியைக் குறை சொல்லவில்லை. சென்டிமென்ட் பிரச்சாரத்தின் மூலம் மக்களை சந்தித்தார்.
"இந்திராகாந்தி பிரதமராக வரவேண்டும் என்பதற்காக ஓட்டுப் போட்டீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது ஆட்சியில் நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக எனது ஆட்சியைக் கலைத்தார்கள்? உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன். நியாயம் கேட்டு வந்திருக்கிறேன்' என்று மக்களைப் பார்த்துக் கேட்டார். வேறு பல விஷயங்களைப் பேசி மக்களைக் குழப்பவில்லை. மக்களை திசை திருப்பவில்லை. மக்களை சிந்திக்க வைத்தார். எந்தத் தவறும் செய்யாத எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப் போடாமல் விட்டதற்காக மக்களை வருந்த வைத்தார். ஆட்சி முடிய சில வருடங்கள் இருக்கும்போதே கலைத்தவர்கள் மேல் கோபம் வரவைத்தார். மனதைத் தொடுகிற மாதிரி பேசிய அவரது சென்டிமென்ட் பேச்சு மக்களை உருக வைத்தது, உணர வைத்தது.
மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனார்.
எந்த அஸ்திரத்தை எடுத்தாலும், பிரசாரங்கள் செய்தாலும் சென்டிமென்ட் யுக்தியால் மக்கள் மனதை மாற்றமுடியும், மக்களைத் தன் பக்கம் இழுக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
திருமண மண்டபம் இடிக்கப்பட்ட விஷயத்தில் விஜயகாந்த் சென்டிமென்ட் யுக்தியைப் பின்பற்றியிருக்க வேண்டும். "மக்களின் வசதிக்காக என் மண்டபத்தை தாராளமாக இடித்துக்கொள்ளுங்கள். என் மக்களுக்காக என்னை உயர வைத்தவர்களுக்காக நான் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கிறேன். மண்டபத்தின் முன்பக்கத்தை மட்டுமல்ல… முழு மண்டபத்தையும் தாராளமாக இடித்துக் கொள்ளுங்கள்' என்று பேசி அதையே மக்கள் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.
சென்டிமெண்ட் யுக்தியை கையில் எடுத்திருந்தால் மக்கள், தி.மு.க. மீது கோபம் அடைந்திருப்பார்கள். தி.மு.க. செய்தது அநியாயம். விஜயகாந்த் எவ்வளவு பெருந்தன்மையான மனசு படைத்தவர். அவர் மண்டபத்தைப் போய் இடித்திருக்கிறார்களே என்று மக்களிடம் ஒரு சிம்பதி தோன்றியிருக்கும். ஆனால் விஜயகாந்த்தின் கோபப் பேச் சுகள் மக்கள் மனதில் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.
(வளரும்...)