(109) வியூகம் இல்லை... வெற்றியும் இல்லை!
"ஏழை ஜாதி' படத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் "நாம மட்டும்தான் அதிகாரத்துல இருக்கணும்' என எண்ணம் கொண்டிருக்கும் காட்சியை விவரித்திருந்தேன். "நம்மளத் தவிர வேற எவனையும் வளரவிடக்கூடாது. இதுக்கு நீங்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி, வெளியதான் எதிர்க்கிற மாதிரி குரல் கொடுப்பேன். உள்ளுக்குள்ள ஒத்தாசையா இருப்பேன்' -என்று ஆளுங்கட்சி முதலமைச்சரிடம் டீல் பேசுவார் எதிர்க்கட்சித்தலைவர்.
இது நான் 1993ஆம் ஆண்டு எழுதிய காட்சி. அந்தக் காலகட்டத்திலேயே விஜயகாந்த் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருந்தார்.
அப்பொழுதிருந்தே அவர் கட்சி தொடங்க வேண்டும். முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப் போடுதான் நான் எழுதினேன், செயல்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் காட்சிக்கு தியேட்டர் களில் பெரிய வரவேற்பு. பலத்த கைதட்டல் கிடைத் தது. எந்த நோக்கத்தில் அப்படி ஒரு காட்சியை நான் எழுதினேன் என்றால், விஜயகாந்த் அரசியலுக்கு வரப்போவதையோ, அவர் வளர்ச்சி அடைவதை யோ, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளுமே விரும்பமாட்டார்கள். அதைத்தடுக்க நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் எழுதினேன்.
நான் எந்த நோக்கத்தோடு அந்தக் காட்சியை எழுதினேன் என்பதை மன்றத்து தம்பிகளும், மக்களும் புரிந்துகொண்டார்கள். அதனால்தான் தியேட்டர்களில் பெரிய ஆரவாரம். ஒருபுறம் எனக்கு எவ்வளவு பாராட்டுகள் கிடைத்ததோ இன்னொருபுறம் வசைகளும் கிடைத்தன.
நான் அப்பொழுது எந்தக் கட்சியையும் சாராத நடுநிலையாளனாக இருந்தேன். அதனால் எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த தலைவர்களுடனும் இரண்டாம் கட்டத் தலைவர்களுடனும், முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும் பழகிக் கொண்டிருந்தேன்.
என்னுடைய படங்களை, நான் எழுதிய வச னங்களை பார்த்துவிட்டு விமர்சனமும் செய்வார் கள். ஏழைஜாதி படத்தில் ஆளும் கட்சி முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் பேசும் காட்சியை பார்த்து விட்டு
"உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இப்படியெல்லாம் எழுதிக்கிட்டிருக்கே' என்று அன்போடு கோபப்பட்டார்கள். "எழுதி வச்சுக்க... விஜயகாந்த்தால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது... பாக்கிறியா?' என்று சிலர் என்னிடம் சவால்விட்டார்கள்.
"நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார்' என்று நானும் அவர்களிடம் எதிர் சவால் விட்டேன்.
ஆனால் 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான் விடுத்த சவாலில் தோற்றுப்போனேன். விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார். வேறு எந்தத் தொகுதிகளிலும் யாருமே வெற்றி பெறவில்லை.
விஜயகாந்த் வெற்றியை மிகப்பெரிய வெற்றி யாக தே.மு.தி.க. தொண்டர்கள் நினைத்தார்கள், கொண்டாடினார்கள். சில பத்திரிகைகளும் ஊடகங் களும் கூட கணிசமான ஓட்டுக்களை வாங்கியதற் காக தே.மு.தி.க.வைப் பாராட்டின. எந்தக் கட்சி யையும் சாராத எனது நண்பர்கள் "என்ன சார்… விஜயகாந்த் ஆட்சியைப் புடிச்சிடு வார்னு உறுதியா சொன்னீங்க. ரிசல்ட் வேற மாதிரி ஆயிருச்சு' என்று வருத்தப்பட்டார்கள். சிறிய கட்சிகளைச் சேர்ந்த என் நண்பர்கள் "நீங்க நம்புன மாதிரி நடக்கலியே?' என்று நக்கல் தொனியில் பேசினார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க.வில் உள்ள நண்பர்கள் "எங்ககிட்டயே சவால்விட்டீங்க. விஜயகாந்த் சி.எம். ஆயிருவாருன்னு... ஆயிட்டாரா?' என்று கோபப் பட்டார்கள்.
அவர்கள் கோபத்தில் தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. மட்டும்தான் ஆளமுடியும். புதிதாக யாரும் வரமுடியாது. ஏன், கனவு கூட காணமுடியாது என்பது தெரிந்தது.
தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற முடியாவிட்டாலும் கூட்டணிக் கட்சி ஆதர வுடன் ஆட்சி அமைத்தது. கலைஞர் முதலமைச்சர் ஆனார். விஜயகாந்த் மட்டும் எம்.எல்.ஏ. ஆனார்.
நான் நினைத்தது நடக்காமல் போய்விட்டது. விஜயகாந்த் மீது நான் நம்பிக்கை வைத்தது போல மக்கள் நம்பிக்கை வைக்காமல் போனதை என்னால் நம்பவே முடியவில்லை. கட்சி தொடங்குவதற்கு முன், மன்றங்களாக இயங்கியபோது நான் கண்ட எழுச்சி எங்கே போனது? நான் சும்மா இருந்தாலும் என் வெளியுலக நண்பர்களும், திரையுலக நண்பர்களும் என்னிடம் துக்கம் விசாரித்தது போல போனில் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.
2006 தேர்தல் நேரத்தில் நான் விஜயகாந்த் துடன் இல்லை என்பது கூட பலருக்கு தெரிந் திருக்கவில்லை. எங்கே தவறு நடந்தது. எங்கே சறுக்கியது என்பதை அவர் கூடவே இருந்திருந் தால் சரியாகக் கணித்திருக்க முடியும்.
இருந்தாலும் சிலவற்றை என்னால் கூற முடியும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல. பலர் என்னிடம் பகிர்ந்துகொண்டு, அதை வைத்து என் மனதிற்குள் தோன்றிய கருத்து.
நி தமிழகத்தில் இதுவரை யாரும் கண்டிராத புது அரசியலைக் கொடுப்பேன் என்று முழங்கினார் விஜயகாந்த். ஆனால் காலம் காலமாக தி.மு.க., அ.தி.மு.க. என்ன மாதிரி அரசியல் செய்ததோ அப்படித்தான் அமைந்தன தே.மு.தி.க.வின் செயல்பாடுகளும். நடுநிலை வாக்காளர்களை அதுவே நம்பிக்கை இழக்கச் செய்தது.
நி இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய கட்சி உதயமாகியிருக்கிறது என்று உற்சாகமடைந் தவர்கள் எல்லாம் இப்படி ஒரு வழக்கமான அர சியல் கட்சிதான் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
நி பாராளுமன்றத்தேர்தல் என்றால் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கிறதோ அதைத்தான் அதிகமாக விமர்சித்துப் பேச வேண்டும். ஏற்கனவே ஆட்சி யில் இருந்து எதிர்கட்சியாக இருப்பவர்களை அதிகமாகக் குறிவைத்துப் பேசக்கூடாது. சட்டமன்றத் தேர்தல் என்றால் தமிழ்நாட்டில் அப்பொழுது எது ஆளும் கட்சியோ அதைத்தான் அதிகமாக விமர்சித்துப் பேசவேண்டும். அந்தக் கட்சியின் குறைகளைத்தான் மக்களுக்கு அதிகமாக சுட்டிக்காட்ட வேண்டும். திட்டிப் பேசுவதாக இருநதால்கூட அவர்களைத்தான் அதிகமாக திட்டிப் பேசவேண்டும். அந்த வகையில் விஜயகாந்த்துக்கு அவர் கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும், ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. இரண்டு கட்சிகளையுமே எதிர்த்துப் பேசினார் கள். சொல்லப் போனால் அ.தி.மு.க.வை விட தி.மு.க.வை அதிகமாக விமர்சித்தார்கள். அதிகமாக திட்டினார்கள்.
நி கலைஞரிடம் பழகியதுபோல் எம்.ஜி.ஆருடனோ, அ.தி.மு.க தலைவர்களுடனோ விஜயகாந்த் பழகியதில்லை. இது அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரியும். தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் விஜயகாந்த், தி.மு.க.வை எதிர்க்கும் வியூகத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா போட்டியிட் டார். தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக ஒரு டாக்டர் போட்டியிட்டார். தொகுதிக் குள் நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர் அவர். தேர்தல் பிரச்சா ரத்தில் பேரறிஞர் அண்ணா அந்த டாக்டரை தவறாக விமர்சனம் செய்து பேசவில்லை. மாறாக வேறு ஒரு வியூகம் வகுத்தார். அந்த டாக்டரைப் பற்றி மிக நன்றாகப் புகழ்ந்து பேசினார்.
"டாக்டர் ரொம்ப நல்ல மனுஷன். இந்த தொகுதி மக்களோட அன்பைப் பெற்றவர். உங்களுக்கெல்லாம் நல்ல முறையிலே மருத்துவம் பார்த்துக் கொண்டிருப்பவர். ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகக் கூட மருத்துவம் பார்க்கிறார். இவரை மாதிரி, ஒரு நல்ல மனிதருக்கு ஓட்டுப்போட்டு சட்டமன்ற உறுப்பினராக்கி சென்னைக்கு அனுப்புனா... ஒரு நல்ல மனுஷரை நீங்க இழந்திருவீங்க.
ஏழை பாழைகளுக்கு உதவுற ஒருத்தரு உங்களுக்கு கிடைக்காம முழு நேர அரசியல்வாதியா மாறிடுவாரு. அவரு அரசியலை கவனிக்கப் போயிட்டா உங்களை யாரு கவனிக்கிறது? அதனால அவருக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைக்காம அந்த நல்ல மனுஷன உங்க கூடவே வச்சுக்குங்க. அவரை உங்களை விட்டுப் பிரிச்சிடாதீங்க' என்று பேசி மக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அது அந்தத் தொகுதி முழுவதும் எதிரொலித்தது. அண்ணாவின் சாமர்த்தியமான பேச்சு அவருக்கு கைகொடுத்தது. திரும்பத் திரும்ப அதைப் பேசி மக்கள் மனதில் அந்தக் கருத்தைப் பதிய வைத்தார்.
உதயசூரியன் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போட்டால் உங்களுக்காக நான் உழைக்கிறேன் என்று வாக்கு கேட்டார். தேர்தலில் வெற்றியும் பெற்றார். இது அந்த நேரத்தில் அண்ணா வகுத்த வியூகம். அதைப் போன்ற ஒரு வியூகத்தை விஜயகாந்த் அவர்கள் 2006 சட்டமன்றத் தேர்தலில் வகுத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
(வளரும்...)