(108) புதுக்கட்சி வரக்கூடாது!
விஜயகாந்த்தின் மதுரை மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து மக்கள் மலைத்துப்போனார்கள். கழகங்கள் கலக்கமடைந்தன. சில கட்சிகளின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்தது. இப்படித்தான் பல திசைகளில் இருந்தும் விமர்சனங்கள் வந்தன. ஊடக நண்பர்கள் இப்படித்தான் பேச ஆரம்பித்தனர். எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும் விஜயகாந்த்தான்.
நாடே வியந்து பேசியபோதும், நான் வியப்படையவில்லை. காரணம், இது நான் எதிர்பார்த்த விஷயம்தான். சென்னையிலும் சரி, வெளியூர்களிலும் சரி... பல மன்றங்களின் திறப்புவிழா வுக்கு நான் போயிருக்கிறேன். மன்றத்தினர் நடத்தும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்குப் போயிருக்கிறேன். அந்த நிகழ்ச்சி களையே பிர மாண்டமாக நடத்தியவர்கள் மன்றத்து தம்பிகள்.
விஜய காந்த்தின் நண் பனாகப் போன என்னையே கொண்டாடி யவர்கள், விஜயகாந்த்தே அழைக்கும்போது, "கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் மது ரைக்கு வா' என்று உத்தரவிடும்போது மதுரையே குலுங்கிப் போனதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் மற்றவர்கள் மிரண்டுபோனார்கள். அவரை விட்டு நான் விலகி வந்துவிட்டால் கூட, மதுரையில் நடந்த மாயா ஜாலத்தைப் பார்த்து என் கண்கள் மகிழ்ச்சியில் கலங் கியது. இதற்காகத்தானே பல ஆண்டுகள் உழைத்தோம். இதற்காகத்தானே எழுதினோம். இதற்காகத்தானே அர்ப்பணித்துக்கொண்டோம் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று கனவு கண்டோம்.... அந்தக் கனவு கண் முன்னே நிஜமானது போல ஒரு ஆனந்தம்.
"தேசிய திராவிட முற்போக்கு கழகம்' என்று கட்சியின் பெயரை அவர் படித்ததும் எழுந்த ஆரவாரம் என் காதுகளில் சில நாட்கள் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அடுத்து வந்த நாட்களில் அவரைப் பற்றியே பத்திரிகைகள் எழுதின. அவரைப் பற்றிய செய்திகள் வந்தாலே, அட்டைப் படத்தில் அவர் படம் வந்தாலே பத்திரிகைகள் பரபரப்பாக விற்பனை ஆயின.
ஒரு கடைக்கார நண்பர் என்னிடம் சொன்னார். "விஜயகாந்த் மேட்டர் வந்தாலே பிச்சுக்கிட்டு போயிருது சார். எல்லா கட்சிக்காரங்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க சார்.''
கட்சி தொடங்கிய பிறகு விஜயகாந்த் சென்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளம். அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகளுக்கெல்லாம் வானளாவிய வரவேற்பு. அவருடைய ரசிகர்கள், தொண்டர்களாக மாறினர். பல ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்கு தினம், தினம் தீபாவளி மாதிரி ஆகிப்போனது.
படத்திலே அவர் பேசியதற்கு கை தட்டியவர்கள், மேடையில் முழங்கியதைப் பார்த்து மெய்மறந்துபோனார்கள்.
"ஒருமுறை ஆட்சியைக் கொடுத்துப் பாருங்கள், தமிழ்நாட்டையே சொர்க்கமாக மாற்றிக் காட்டுகிறேன்' என்று சொன்னதை மக்களும் வரவேற்றார்கள்.
விஜயகாந்த் நல்ல மனிதர்
விஜயகாந்த் துணிச்சலானவர்
விஜயகாந்த் தவறுகள் நடக்கவிட மாட்டார்
விஜயகாந்த் புது மாதிரியான அரசியல் செய்வார்
விஜயகாந்த் சொன்னதைச் செய்வார்...
என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தார்கள்.
அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு மாற்று அரசியல் வரவேண்டும் என்று நினைத்தவர்கள் விஜயகாந்த்தை மன திற்குள்ளேயே கொண்டாடினார்கள்.
விஜயகாந்த்தும் "நான் ஆட்சிக்கு வந்தால்... எனக்கு நீங்கள் ஒரு வாய்ப்பளித்தால்...'' என்று பல புதுப் புது திட்டங்களையெல்லாம் அறிவித்தார்.
2006 மே மாதம் தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானது. தே.மு.தி.க. பரப்பானது. இவ்வளவு நடந்தும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அவரது வருகைக்காக கவலைப்படாத மாதிரியே காட்டிக்கொண்டார்கள். இதை நான் சொல்லவில்லை... எனது ஊடக நண்பர்கள் சொன்னார்கள்.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அ.இ.அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆரை புறக்கணிக்கிறார்கள். போஸ்டர்களிலும் விளம்பரங்களிலும் எம்.ஜி.ஆர். படங்களைப் போடுவதில்லை என்ற வருத்தம் எம்.ஜி.ஆர். ரசிகர்களை, எம்.ஜி.ஆர். தொண்டர்களை, எம்.ஜி.ஆர். பக்தர்களை கோபமடையச் செய்தது. அவர்களில் பலர் விஜயகாந்த் கட்சியில் இணைய ஆரம்பித்தார்கள். தொண்டர்கள் மட்டுமல்ல... பண்ருட்டி ராமச் சந்திரன் மாதிரி அனுபவமும், அறிவும் மிக்க மூத்த அரசியல்வாதிகள் கூட தே.மு.தி.க.வில் இணைந்துகொண்டார்கள்.
தேர்தல் விளம்பர போஸ்டர்களிலும், பேனர்களிலும் இடது பக்கம் எம்.ஜி.ஆர். -ஜானகி அம்மாள் படம். வலது பக்கம் விஜயகாந்த் -பிரேமலதா அண்ணியார் படம் என்று காட்சியளித்தது. எம்.ஜி.ஆர். தொண் டர்கள் அதைப் பார்த்து மகிழ்ந்துபோனார்கள்.
2006 தேர்தல் முடிவுகள் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை... அதிர்ச்சியடைய வைத்தது. காரணத்தை சொல்வதற்கு முன்பு நான் எழுதி விஜயகாந்த் நடித்த "ஏழை ஜாதி' படத்திலே ஒரு காட்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று கூறி, ஆளுங்கட்சியை எதிர்த்து விஜயகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார். அதில் மனோரமாவும் கலந்துகொண்டிருப்பார். ஆளும்கட்சிக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை தூண்டிவிட வேண்டும் என்று நினைத்து எதிர்க்கட்சித் தலைவர் அங்கே வந்து விஜயகாந்த்தை சந்திப்பார்.
மனோரமா: எதிர்க்கட்சி மாலையோட வருது.
விஜயகாந்த்: வரட்டும்.
(எதிர்க்கட்சித் தலைவர், வணக்கம் என்று சொல்லிவிட்டு விஜயகாந்த்துக்கு மாலை போடப் போவார்.)
விஜயகாந்த்: நில்லுங்க... எனக்கு இப்போ எதுக்கு மாலை?
எ.தலைவர்: என்னங்க இப்படிக் கேக்குறீங்க? இந்த நாட்டுல பெண்களுக்கு பாதுகாப்பில்ல.... அவங்க மானத் தோட வாழ முடியல... அதக் கண்டிச்சு அறப்போராட்டம் நடத்தற உங்களுக்கு என்னோட ஆதரவும், என் கட்சியோட ஆதரவும் எப்பவும் இருக்கும்... அதுக்குத்தாங்க இந்த மாலை.
மனோரமா: பொண்ணுங்க மேல எம்மாங் கரிசனம்... என்னா அக்கறை... ஏய்யா தலைவரே... உங்க ஆட்சியில பொண்ணுங்களுக்கு கோவில் கட்டி பூஜை பண்ணுனீங்களாக்கும். சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போனதுக்கு புள்ளையார் சுழி போட்டதே நீங்கதானய்யா... எதிர்க்கட்சின்னா, ஆளும்கட்சி செய்யற நல்லதை ஆதரிக்கணும். தப்பை தட்டிக் கேக்கணும். ஆனா நீங்க நல்லதை ஆதரிக்கிறதே இல்லை. எங்கேயாவது போராட்டம் நடந்தா தூண்டிவிட்டு வேடிக்கை பாப்பீங்க. இப்படியெல்லாம் மக்களை ஏமாத்தி இனிமே ஓட்டு வாங்க முடியாது... போயிட்டு வாங்க -என்றதும் அங்கிருந்து அவமரியாதையோடு போகும் எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சரை போய்ப் பார்ப்பார்.
எ.தலைவர்: வணக்கம்ங்க...
முதலமைச்சர்: என்னங்க, என்னைப் பாக்கறதுக்கு கட்சி ஆபீசுக்கே வந்துட்டீங்க?
எ.தலைவர்: இங்க பாருங்க... நீங்க ஜெயிச்சு முத லமைச்சரா இருக்கீங்க. அறுநூறு கோடி சம்பாதிச்சீங்க. அதுக்கப்புறம் நான் ஜெயிச்சு முதலமைச்சரா இருந்தேன். எழுநூறு கோடி ரூபா சம்பாதிச்சன். இப்ப மறுபடியும் நீங்க ஜெயிச்சு முதலமைச்சரா இருக்கீங்க. எவ்வளவு வேணும்னாலும் சம்பாதிங்க, ஆனா நான் என்ன சொல்றேன்னா... ஆட்சியில நீங்க இருக்கணும்... இல்ல நான் இருக்கணும்... புதுசா ஒரு கட்சி வந்திரக்கூடாது.
முதலமைச்சர்: என்ன சொல்றீங்க?
எ.தலைவர்: நாட்டுக்கு நல்லது பண்றேன்னு சொல் லிட்டு எவன் வந்தாலும் சரி... அவனை நாம நசுக்கணும்...
(வளரும்...)