aa

(107) தலைவனுக்குரிய தன்மைகள்!

ம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு எந்தத் தவறும் நடந்துவிடாமல் தடுப்பதற்காகவும், அவர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதற்காகவும், பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டிய இடத்தில் உண்மையைப் பேசவேண் டும், அவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும், அதுதான் விசுவாசத்தின் அடையாளம். நான் விஜயகாந்த்தை விட்டுப் பிரியும்வரை அப்படித்தான் நடந்துவந்தேன். விசுவாசத்தின் அடையாளமாகவே இருந்தேன்.

உண்மைகள் என்றாவது ஒருநாள் ஊருக்கும், உலகத்திற்கும் தெரிந்துதான் ஆகவேண்டும். அது அப்படியே தூங்கிவிடக்கூடாது. இதை எனக்காக மட்டும் சொல்லவில்லை. இந்த நாட்டில் எத்தனையோ பேர் மனதில், எத்தனையோ உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கும். யாரையாவது பாதிக்கும் என்ற உண்மைகளை மட்டும் மறந்துவிடுங்கள். பலருக்கும் பயன்படலாம் என்ற உண்மைகளை வெளியே சொல்லுங்கள்.

Advertisment

அரசியலும் சினிமாவும் கிட்டத்தட்ட ஒரே ஜாதி. இரண்டு துறைகளிலுமே புகழும் அதிகமாக இருக்கும், பொறாமையும் அதிகமாக இருக்கும். தனக்குப் போட்டியாக வந்து விடுவாங்களோ என்று நினைப்பவர்களை பொய்களைக் கூறி போட்டுக் கொடுப்பது, காலை வாரிவிடுவது எல்லாமே நடந்துகொண்டேயிருக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். உண்மை எது, பொய் எது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே உண்மை!

புரட்சித் தலைவர் காலத்தில் திருப்பூர் மணிமாறன் எம்.எல்.ஏ.வாக இருந்தார். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவ ராகவும் இருந்தார். திருப்பூர் மாவட்ட கட்சிக்காரர்கள் எ.ம்.ஜி.ஆரை சந்தித்து மணிமாறன் எம்.எல்.ஏ.வைப் பற்றி புகார் கொடுக்கிறார்கள்.

Advertisment

புகாரை விசாரித்த எம்.ஜி.ஆர்., திருப்பூர் மணிமாறனை அழைத்து, "என்ன நெனச்சுக்கிட்டிருக்கீங்க. கட்சிக்காக உழைக்கிறவங்கள மதிக்க மாட்டீங்களா? அவங்க இல்லாம நான் இல்ல. உங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுத்திருக்கேன். அதை உணர்ந்து நடந்துக்குங்க'' என்று அவர்கள்முன் கோபத்தோடு பேசுகிறார். பல விஷயங்களைச் சொல்லி எச்சரிக்கிறார்.

"சாரிண்ணே...…இனிமே அப்படி நடந்துக்கமாட்டேன்'' என்று வருந்துகிறார் திருப்பூர் மணிமாறன்.

புகார் கொடுத்தவர்களுக்கு மகிழ்ச்சி. நம் கண் முன்னாலயே திருப்பூர் மணிமாறனை பின்னி எடுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். என்று மகிழ்ச்சியோடு நிற்கிறார்கள். அவர்களை அங்கேயே இருக்கச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

சிறிதுநேரம் கழித்து எம்.ஜி. ஆர். கிளம்புகிறார். போய் காரில் ஏறியதும், "மணிமாறன்'' என்று அழைக்கிறார். "அண்ணே'' என்று அருகில் போய் நிற்கிறார் திருப்பூர் மணிமாறன். "காரில் ஏறுங்க'' என்ற தும் அவர் காரில் ஏறுகிறார். கார் கிளம்புகிறது. புகார் கொடுத்தவர்கள் பார்த்துக்கொண்டே நிற்கிறார்கள்.

"எனக்கு தொண்டர்கள் முக்கி யம்' என்பதை திருப்பூர் மணிமாற னுக்குப் புரிய வைத்த எம்.ஜி.ஆர்., "எனக்கு திருப்பூர் மணிமாறனும் முக்கியம்' என்பதை தொண்டர் களுக்கும் புரிய வைத்தார்.

aa

யாருக்காகவும் யாரையும் இழக்கவில்லை. இதுதான் தலைமை. இயக்கத்தை நடத்துவதில் இருக்கும் சாமர்த்தியம், சாணக்கியத்தனம்.

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது எத்தனை அமைச்சர் களைப் பற்றிய புகார்கள் வந்திருக் கும். மாவட்டச் செயலாளர்களைப் பற்றி எவ்வளவு புகார்கள் வந்திருக்கும். புகார் வந்தவுடனே மந்திரி பதவியிலிருந்து தூக்கியிருக்கிறாரா? மாவட்டச் செயலாளர்களை உடனே மாற்றியிருக்கிறாரா? அதன் உண்மைத் தன்மையை விசாரித்து கண்டிக்க வேண்டியவற்றை கண்டித்திருக்கிறார். கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை அவ்வளவு எளி தாகக் கைவிட்டு விடவில்லை. அதுதான் தலைமை.

ஜெயலலிதா அவர்கள் தவறு செய்தவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆனால் விசாரிக்காமல் எடுத்ததில்லை. ஓ.பி.எஸ். அவர்களின் வீட்டில் அம்மா சொல்லி விசாரணை நடந்திருக்கிறது. பல தடவை நான் பார்த்திருக்கிறேன். ஒருநாள் இரவு ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களை அம்மா சொல்லி ஓ.பி.எஸ். விசாரிக்கிறார். இரவு எட்டு மணிக்கு ஆரம்பமான விசாரணை நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் சென்றது. விசாரணையின் முடிவை ஓ.பி.எஸ். போய்ச் சொன்ன பிறகு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தவர் ஜெயலலிதா.

அண்ணன் டி.ஜெயக்குமார் அவர்கள் சபாநாயகராக இருந்தபொழுது அவருக்கு ஒரு பிறந்தநாள் வந்தது. கட்சிக்காரர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாழ்த்துச் சொன்னார்கள். நானும் போயிருந்தேன். நீண்டநேரம் அங்குதான் இருந்தேன். அப்பொழுது அவரது வீட்டிற்கு வெளியே அண்ணன் டி.ஜெயக்குமாரின் வளர்ச்சியைப் பிடிக்காத ஒரு சிலர் பட்டாசு கள் வெடித்து "வருங்கால முதலமைச்சர் அண்ணன் டி.ஜெயக்குமார் வாழ்க!' என்று கோஷம் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். டி.ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள்தான் கோஷம் போட்டார்கள் என்று ஜெயலலிதாவையும் நம்ப வைத்தனர். அவரும் கோபப்பட்டு சபாநாயகர் பதவியிலிருந்து டி.ஜெயக்குமாரை நீக்கினார்.

மறுநாள் அண்ணன் டி.ஜெயக்குமாரை நான் சந்தித்தேன்.

அவர் என்னிடம் "அம்மாவை சந்தித்து என் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட சூழ்ச்சி என்பதை எடுத்துச் சொன்னேன். உண்மை என்னவென்று நான் விசாரிக்கிறேன் என்று அம்மா சொன்னார்'' என்று கூறினார்.

சொன்னபடியே ஜெயலலிதா விசாரித்து, டி.ஜெயக்குமார் அவர்கள் மேல் தவறு இல்லை என்று தெரிந்ததும், அப்பொழுது அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் டி.ஜெயக்குமார் அவர்களின் மகன் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு தென்சென்னை தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார். இப்படித்தான் இருக்க வேண்டும் தலைமை.

தவறான தகவல்களை நம்பிவிட்டாலும் கூட அதற்குப் பிறகு தீரவிசாரித்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து செயல்பட வேண்டும். தலைமை எடுத்த தவறான முடிவுகளால் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன எத்தனையோ விசுவாசத் தொண்டர்களின் எதிர்காலம் இருண்டு போனதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எத்தனை குடும்பங்கள் நாதியற்றுப் போய் நடுத்தெருவுக்கு வந்திருக் கின்றன என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கொள்கைப் பிடிப்போடு அரசியலுக்கு வருபவர்களை விட, கொள்ளை லாபம் பார்க்கும் நோக்கத்தில் வருபவர்கள் தான் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறார்கள். திறமையற்றவர் களின் முன்னால், திறமைசாலிகள் கைகட்டி நிற்கும் அவலநிலை தான் அரசியலில் இருக்கிறது. வாழ்க!… வாழ்க! என்று கோஷம் மட்டுமே போட்டுக்கொண்டிருந்தவர்களின் வாழ்க்கை வாடிப் போயிருக்கிறது. வாழ்த்தைப் பெற்றுக்கொண்டு கையசைத்த வாறு காரில் போகிறவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கிறது. நிலத்தை உழுது, விதை போட்டு, உரம் போட்டு, களை எடுத்து, நீர் பாய்ச்சி பயிர் வளரக் காரணமானவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் அரிவாள் எடுத்து வந்து அறுவடை செய்பவர்கள் வேறு ஆட்களாக இருப்பார்கள்.

நான் சொன்னவை எல்லாம் நொந்து நூலாகிப் போய் நிற்கும் தொண்டர்களின் குரல். இவை எல்லாவற்றையும் பார்த்து வேதனைப்படும் மக்களின் கருத்து. முன்பு அரசியல் அவலங்களை வெளிப்படையாக நடுநிலையோடு என் படங்களில் வசனமாக எழுதினேன். அதை இப்பொழுது இந்தத் தொடரில் எழுதுகிறேன்.

இதைப் படிக்கும்பொழுது கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனம் உங்களுக்கு நினைவுக்கு வந்தாலும் வரும்.

"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...'

இந்த வசனத்தை படத்தில் வந்தால் ரசிக்கலாம். ஆனால் வாழ்க்கையில் ரசிக்க முடியாது. காயம் பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்.

அந்த வலியையும் மறந்துவிட்டு நான் மகிழ்ச்சியடையும் நாள் வந்தது.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு வந்த நாள். 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் தீயாகப் பற்றிக்கொண்டது. தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. அந்த அறிவிப்பு சில அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது.

2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி மதுரை மாநகரம் இன்னொரு சித்திரைத் திருவிழாவைச் சந்தித்தது.

(வளரும்...)