ss

(103) யார் யாரோ வந்தாங்க... எம்.ஜி.ஆரும் விஜயகாந்த்தும் நின்னாங்க!

"நீ முதல்ல எம்.ஜி.ஆரா ஆகிக்காட்டு... அப்புறமா வைரமுத்துவ வாலியா ஆக்கலாம்'' என ரஜினியிடம் சொன்னாராம் வாலி.

அப்படி ஒரு சம்பவத்தை என் அன்பிற்குரிய எழுத்தாளரும் இயக்குநருமான விஜயபாலாஜி என்னிடம் சொன்னார்.

Advertisment

ஒரு பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கவிப்பேரரசு வைரமுத்துவைப் பாராட்டி பேசும்போது "எம்.ஜி.ஆருக்கு எப்படி வாலியோ, அதைப்போல இந்த ரஜினிகாந்த்துக்கு வைரமுத்து' என்று பேசினாராம்.

இதை கவிஞர் வாலி அவர்களும் கேள்விப்பட்டிருக்கிறார். அதை மனதிலேயே வைத்திருக்கிறார்.

ரஜினிகாந்த், தனது மகள் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக வாலியை நேரில் போய் சந்தித்தபொழுது ரஜினி, "எம்.ஜி.ஆருக்கு வாலி மாதிரி... எனக்கு வைரமுத்துன்னு நீங்க பேசுனதா சொன்னாங்க. அது எப்படி சரியா இருக்கும்?'' என்று கேட்டிருக்கிறார்.

Advertisment

அதோடு அவர் நிறுத்திவிடவில்லை. "நான் எம்.ஜி.ஆருக்காக எழுதுன ஒரு நாலு பாடல்களை சொல்றேன். அதை கேட்டுட்டு சொல்லு.

"நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார். உயிர் உள்ளவரை ஒரு துன்பம் இல்லை... அவர் கண்ணீர் கடலில் விழ மாட்டார்.' இந்தப் பாடல் "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்/உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்/அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும். இந்தப் பாடல் "தெய்வத்தாய்' படத்தில்.

"தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று/ அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று/ என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை/இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை. இந்தப் பாடல் "நேற்று இன்று நாளை' படத்தில்.

நான் செத்துப் பொழைச்சவன்டா/எமனை பார்த்து சிரிப்பவன்டா/ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சு/ சங்கு போல சுடச்சுட வெளுத்து வளரும் ஜாதியடா/வந்தால் தெரியும் சேதியடா. இந்தப் பாடல் "எங்கள் தங்கம்' படத்தில்'' என்று சொல்லிவிட்டு...

வாலி ரஜினியிடம் கேட்டாராம்.

"எம்.ஜி.ஆருக்காகவே எம்.ஜி.ஆருக்கு மட்டும் பொருந்தற மாதிரி எழுதியிருக்கேன். இந்த மாதிரி உங்களுக்காகவே உங்களுக்கு மட்டும் பொருந்தற மாதிரி வைரமுத்து எழுதியிருக்காரா?'' என்று கேட் டாராம் வாலி. ரஜினிகாந்தால் பதில் சொல்ல முடியவில்லையாம். ரஜினியிடம் கடைசியாக வாலி சொன்னாராம்.

"நீ மொதல்ல எம்.ஜி.ஆரா ஆகிக் காட்டு. அப்புறமா வைரமுத்துவை வாலியா ஆக்கலாம்'' என்று கூற ரஜினி திகைத்துப் போய்விட்டாராம்.

இந்த நிகழ்வைக் கேள்விப்பட்டதும், எனக்கும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது.

விஜயகாந்த்துக்கு எத்தனையோ பேர் வசனம் எழுதியிருக்கலாம். சிறப்பாகவும் எழுதியிருக்கலாம். ஆனால் அவர்கள் யாருமே லியாகத் அலிகான் ஆகிவிட முடியாது. இதைச் சொல்வதற்கு எனக்கு தகுதியும் இருக்கிறது. உரிமையும் இருக்கிறது. என்னுடைய திறமையைக் காட்டுவதற்காக நான் எழுதினேன் என்பதைவிட, விஜயகாந்த்துக்கு மகுடம் சூட்டுவதற்காகவே எழுதினேன் என்பதுதான் உண்மை. மகுடம் சூட்டப்படுவதற்கு அவர் தகுதியானவர் என்பது மிகப்பெரிய உண்மை. இருந்தும், தமிழக மக்கள் அவருக்கு முதலமைச்சராக மட்டும் சூட்டவில்லை. என்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து அதற் கான காரணங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். என் கருத்திலிருந்து மாறுபடுபவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

s

முதலில் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கியவர்களைப் பற்றி அலசுவோம்.

திரைப்படத்துறையில் மக்கள் திலகமாக இருந்து புரட்சித் தலைவ ராக மாறிய எம்.ஜி.ஆர். அவர்கள். அவரது பயணம் தி.மு.க.வில் பல ஆண்டுகள் வெற்றிகரமாக அமைந்தது. அவரால் தி.மு.க.வும் வளர்ந்தது. தி.மு.க. வால் அவரும் வளர்ந்தார் என்று சொல்லுமளவுக்கு அவரது பயணம் இருந்தது. தி.மு.க.வைத் தொடங்கியவர் பேரறிஞர் அண்ணா. கிராமங்களில் கருப்பு சிவப்புக் கொடியைப் பார்த்து தி.மு.க. கொடி என்று சொல்பவர்களும் இருந்தார்கள். எம்.ஜி.ஆர். கட்சிக்கொடி என்று சொல்பவர்களும் இருந்தார்கள். அதனால்தான் எம்.ஜி.ஆர். அவர்களை பேரறிஞர் அண்ணா தனது இதயக்கனி என்று பாராட்டி மகிழ்ந்தார். தேர்தல் நிதியாக எவ்வளவு பணம் வேண்டும் என்று அண்ணா அவர்களிடம் எம்.ஜி.ஆர். கேட்டபோது "நிதி வேண்டாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு போய் உன் முகத்தைக் காட்டு...… அதுபோதும் நாம் வெற்றிபெற' என்று அண்ணாவே சொல்லுமளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

1967லிம் வருடம் ஜனவரி மாதம் எம்.ஜி.ஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதும், அந்த ஆபத்திலிருந்து எம்.ஜி.ஆர். மீண்டதும் ஒரு வரலாறு. இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களில் தமிழ்நாட்டில் சட்ட மன்றத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர். குண்டடிபட்டு கழுத்தில் கட்டோடு இருக்கும் படங்களை போஸ்டர்களாக போட்டு தி.மு.க. பிரச்சாரம் செய்தது. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு எம்.ஜி.ஆரும் ஒரு காரணமாக இருந்தார். பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார். இரண்டு ஆண்டுகளுக்குள் அண்ணா உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைந்தார். அவருக்குப் பிறகு கலைஞர் முதலமைச்சரானார். அவர் முதலமைச்சராவதற்கும் எம்.ஜி.ஆர். முக்கிய காரணமாக இருந்தார். தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகவும் இருந்தார் எம்.ஜி.ஆர். சில ஆண்டுகளில் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் தொடங்கிய கட்சிதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். கட்சி தொடங்கி சில ஆண்டுகளிலேயே அமோக வெற்றிபெற்று முதலமைச்ச ராக ஆனார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜி, "திரைக்கதை மன்னன்' என்றும் எம்.ஜி.ஆர். அவர்களின் "கலையுலக வாரிசு' என்றும் புகழப்பட்ட கே.பாக்யராஜ், சகலகலாவல்லவர் என்று பாராட்டப்பெற்ற டி.ராஜேந்தர், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், உலக நாயகன் கமலஹாசன் போன்றவர்கள்.

ssss

இவர்களில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெற்றிபெற்றது விஜயகாந்த்தான். அவர் தொடங்கிய தே.மு.தி.க.தான். அவர் முதலமைச்சர் ஆகாவிட்டாலும், தே.மு.தி.க. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி தொடங்கிய சிவாஜியால் வெற்றிபெற முடியவில்லை. அந்தக் கட்சியே காணாமல் போய்விட்டது.

எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய படங்களைவிட சிவாஜி நடித்து 100 நாட்கள் ஓடிய படங்கள் அதிகம். எம்.ஜி.ஆர். நடித்து வெள்ளிவிழா ஓடிய படங்கள் அதிகம். படங்களின் வெற்றி என்று பார்த்தால் எம்.ஜி.ஆரை விட சிவாஜிதான் சாதனையாளர், வெற்றியாளர். எம்.ஜி.ஆர். படங்களை விட சிவாஜி படங்களுக்குதான் பெண் ரசிகைகள் நிறைய வருவார்கள். அப்படி இருந்தும் சிவாஜி தொடங்கிய கட்சி வெற்றிபெறவில்லை. சிவாஜி முதலமைச்சராகவில்லை.

கே.பாக்யராஜின் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. 100 நாட்கள், வெள்ளி விழா என்று சாதனை படைத்தன. கே.பாக்யராஜின் படங்களுக்கு பெண்கள் படையெடுத்தார்கள். அப்படி இருந்தும் அவரால் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. டி.ராஜேந்தர் மிகப்பெரிய சாதனையாளர் அவரது படங்களும் 100 நாட்கள், வெள்ளி விழா என மிகப்பெரிய வெற்றிப் படங் களாக அமைந்தன. அவரது படங்களும் பெண்களைப் போற்றும் படங்களாக இருந்தன. டி.ராஜேந்தர் அவர்களுக்கும் ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தார்கள். எல்லாம் இருந்தும் அவராலும் அரசியலில் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் படங் களும் வெள்ளிவிழா கொண்டாடியது. "நாட்டாமை', "சூர்யவம்சம்' போன்ற படங்களை பெண்கள் கொண்டாடினார் கள். அவருக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவாகியது. அவர் சார்ந்த நாடார் சமுதாயத்தினரின் ஆதரவும் இருந்தது. இருந்தும் அவர் தொடங்கிய கட்சியால் வெற்றிகளைப் பெற முடியவில்லை. அதற்குப் பிறகு கமலஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் மக்களின் அமோக ஆதரவைப் பெறவில்லை. அவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.

பல நூறு படங்கள், பல வெள்ளி விழாப் படங்கள், நடிகர் திலகம் சிவாஜி யைப் போல கமலஹாசனின் நடிப்புக்காக கொண்டாடப்பட்ட படங்கள் ஏராளம். அப்படியிருந்தும் அரசியலில் அவர் ஜொலிக்கவில்லை. என்ன காரணம்?

எம்.ஜி.ஆரை விட அதிக வெற்றிப் படங்கள் கொடுத்தும் நடிப்பில் சிறந்தவர்களாக இருந்தும் எம்.ஜி.ஆர். போல அரசியலில் வெற்றி பெறவில்லை. முதலமைச்சர் ஆக முடியவில்லை.

பொது வாழ்க்கையில் அவர்கள் காட்டும் அக்கறை, பொதுமக்களுக்கு அவர்கள் ஆற்றும் பணிகள், செய்யும் உதவிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஏழை -எளியவர்களுக்காக துணிச்சலாக குரல் கொடுப்பது போன்ற ஜனநாயகக் கடமைகள் இவையெல்லாம் இருக்கும் போதுதான் அவர்களுக்கு அரசியலிலும் வெற்றி கிடைக்கும்.

அது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருந்தது. அவருக்குப் பிறகு புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு இருந்தது.

அதற்குக் காரணம்...?

(வளரும்...)