(93) "ஸீன் நல்லால்லே' -தாணு!
பார்த்திபன் சார் சொன்ன சீனில் நடிக்க நான் தயங்கியதை அவரிடம் சொன்னேன்.
அதற்கு அவர், "சார் இந்த சீனை நீங்க எழுதலே,… நீங்க டைரக்ட் பண்ணலே.… நான்தான் எழுதியிருக் கேன்,… நான்தான் டைரக்டர்'' என்றார். என்னால் உடனே ஓ.கே. சொல்ல முடியவில்லை.
"விஜயகாந்த் அவர்களே பலபேர்கிட்ட ஓப்பன்ல சொன்ன உண்மையத்தான இந்த சீன்ல சொல்லியிருக்கேன்'' என்றார் பார்த்திபன்.
முந்தைய காட்சியில் நடித்து விட்டேன், அதாவது கமிட் ஆகி விட்டேன். இப்பொழுது நடிக்க மாட் டேன் என்று சொல்ல முடியாது. சரி என்று அரைமனதுடன் தலை யாட்டினேன். ஒரு வேனுக்குள் அந்தக் காட்சியை எடுத்தார் பார்த்திபன் சார். அந்த வேனுக்குள் என்னைக் கடத்திய ரவுடிகள் அமர்ந்திருப்பார்கள். …
"ஏண்டா என்னைக் கடத்திட்டு வந்தீங்க'' -நான் கேட்பேன்.
"நீதான விஜயகாந்த் படங்களுக்கு வசனம் எழுதுன வன்'' என்று பார்த்திபன் சாரின் வலது கை கேட்டார்.
"ஆமா''…
"அவரை பேசப் பழக்குனவனே நீதானே. அதேமாதிரி எங்க அண்ணனையும் பேசப் பழக்கணும் நீ''… என்பார் வலது கை. முன் சீட்டில் அமர்ந்திருந்த பார்த் திபன் சார் திரும்பிப் பார்ப்பார். இதுதான் காட்சி.
அதாவது நான் படங்களுக்கு மட்டும் வசனம் எழுத வில்லை, தனிப்பட்ட பல விஷயங்களுக்காகவும் எழுதியிருக்கிறேன். அவர் மேடையில் நன்றாகப் பேசுவதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்திருக்கிறேன் என்பதை விஜயகாந்த்தே வெள்ளந்தியாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
அவ்வளவு பெருந்தன்மையான மனிதரை சினிமாவிலும் பார்க்க முடியாது. அரசியலிலும் பார்க்க முடியாது. என்னுடைய ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தில் பலமணி நேரம் அவருக்காக ஒதுக்கி, அந்த நேரத்தில் என் செயல்பாடுகள், ஈடுபாடுகள் அவருக்காக, மன்றத்திற்காக, ரசிகர்களுக்காக நான் எழுதிய எழுத்துக்களை நேசித்து என்னை உயர்த்தி வைத்து அழகு பார்க்க நினைத்த மனித தெய்வம் விஜயகாந்த்.
டி.சிவா. விஜயகாந்த்துடன் வந்து இணைந்த ஒரு கடும் உழைப்பாளி. அவரைப் பற்றி சொல்வதென்றால் எனது உடன்பிறவா சகோதரர். அவரும் ஒரு பார்ட்னராக இணைந்த பிறகு உரு வான படம் தான் தமிழன்னை சினி கிரியேஷன்ஸ் "பூந்தோட்டக் காவல் காரன்'…வெள்ளிவிழா படம். தயாரிப்பு என்பதில் டி.சிவா பெயர் முதலில் வரும்.
இப்ராகிம் ராவுத்தர் கதைக்கான ஐடியாவை என்னிடம் சொன்னார். அதில் "விஜயகாந்த் ஐந்து நாட்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விதமாக திரைக்கதை அமைத்து வசனம் எழுதுங்கள்' என்றார். அவர் சொன்னபடி திரைக்கதையை தயார் செய்தேன். ராஜாபாதர் தெருவில் இருக்கும் அலுவலகத்திற்கு அண்ணன் "கலைப்புலி' தாணு அவர்கள் வந்திருந்தார். அவரிடம் கதையைச் சொல்லச் சொன்னார் இப்ராகிம் ராவுத்தர். நான் சொன்னேன். தாணு அண்ணன் முகத்திலே மகிழ்ச்சி இல்லை.
"ஏண்ணே நல்லா இல்லியா?'' -ராவுத்தர்.
"நீங்க பண்ணது நல்லா இல்ல'' என்றார் தாணு அண்ணன்
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நான் எழுதிய திரைக்கதையை நல்லாயில்லேன்னு சொல்றாரே... அவரிடமே கேட்டேன். "ஏண்ணே… திரைக்கதை நான் நல்லா பண்ணலியா?''
"நான் அதைச் சொல்லலப்பா.… படத்துக்கு பெரிசா பிஸினஸ் பண்ணிட்டீங்க. இதுவரைக்கும் வந்த விஜயகாந்த் படங்கள்லயே அதிகமான பிஸினஸ் இது. வெறும் கெஸ்ட் ரோல், அஞ்சு நாள்தான் விஜயகாந்த் நடிப்பாருன்னா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பெட்டி எடுக்கமாட்டாங்க. பேசாம விஜயகாந்த் படம் முழுவதும் வர்ற மாதிரி மாத்துங்க'' என்றார்.
அவர் சொன்னதும் எங்களுக்கு நியாயமாகப் பட்டது. ஆனால் ஷூட்டிங் தேதியெல்லாம் முடிவாகிவிட்டது. இன்னும் நாலஞ்சு நாட்களில் கோபிசெட்டிப்பாளையம் கிளம்ப வேண்டும். அதற்குள் திரைக்கதையை மாற்றி வசனம் எழுத முடியுமா? இப்ராகிம் என்னைப் பார்த்தார்.
"அண்ணே படத்தோட பிளாஷ்பேக் காட்சிகள் முதல்ல ஆரம்பிக்கிறோம். மூணுநாள் நடக்கும், இல்ல நாலுநாள் ஆகும். அதுக்குள்ள நான் திரைக்கதைய மாத்தி எழுதிர்றேன்'' என்றேன்.
என் மீது அளவு கடந்த நம்பிக்கை...… அதை அசைக்க முடியாத நம்பிக்கை என்று கூடச் சொல்லலாம். இப்ராகிம் ராவுத்தர் சம்மதித்தார்.
அந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமானார் லிவிங்ஸ்டன். விஜயகாந்த்தை வைத்து படம் இயக்க, கதை சொல்ல வந்தவரை வில்லனாக நடிக்க வைத்தோம். படப்பிடிப்பு கோபிசெட்டிப்பாளை யத்தில் தொடங்கியது. கொஞ்ச நாட்களிலேயே லிவிங்ஸ்டனுடன் நான் நன்றாகப் பழகிவிட்டதால் என்னுடைய அறையிலேயே லிவிங்ஸ்டனும் தங்கிக்கொண்டார். அடிப்படையில் அவர் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர் என்பதால் எங்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி ஏற்பட்டது.
இரவெல்லாம் கண்விழித்து சீன் தயார் செய்வேன். அதற்கு வசனம் எழுதுவேன். பகலெல்லாம் ஷூட்டிங்கில் இருப்பேன். இரவு இரண்டு மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த லிவிங்ஸ் டனை எழுப்பி எழுதிய வசனத்தை படித்துக் காண்பிப்பேன். எழுதிய கைக்கு முத்தம் கொடுப்பார். "மச்சான் சூப்பர் மச்சான்''. முத்தம் கொடுத்து பாராட்டிவிட்டு, "சீன் எண்ட்ல எழுதியிருக்கியே… அதை மட்டும் மாத்தி எழுதுனா இன்னும் சூப்பராக இருக்கும்'' என்பார்.
"இதைவிட இன்னும் எப்படி நல்லா எழுத முடியும்… நீ சொல்லு பாப்போம்'' என்று லிவிங்ஸ்டனிடம் கோபப் படுவேன். லிவிங்ஸ்டனுக்கு கோபம் வராது.
"இந்தப் படத்துக்கு நீ தான் மச்சான் ரைட்டர், நான் இல்ல.… உன்னால முடியும் மச்சான், யோசனை பண்ணு'' என்று கூறிவிட்டு படுத்துவிடுவார்.
எனக்கும் கோபம் வராது... அதற்குப் பதிலாக ஒரு வேகம் வரும், யோசிப்பேன். மாற்றி எழுதுவேன். லிவிங்ஸ்டனை எழுப்பி படித்துக் காட்டுவேன். மீண்டும் என் கையைப் பிடித்து முத்தம் கொடுப்பார்.
"நான் சொல்லல... உன்னால முடியும் மச்சான், நீ எழுதுவே.… இப்பப்பாரு… சீன் எவ்வளவு சூப்பரா வந்திருக்கு''ன்னு என்று கூறிவிட்டுப் படுத்துவிடுவார். அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் சூப்பராக வருவதற்கு இன்னும் ஒருவர் முக்கிய காரணமாக இருந்தார்.
ராதிகா மேடம் அந்தப் படத்தின் கதாநாயகி. நான் என்ன சீன் பண்ணினாலும் கதையில் பல மாற்றங்களைச் செய்யும்போதும் அவருடன்தான் கலந்தாலோசிப்பேன். அவருக்கு கதை ஞானம் அதிகம். ஒன்றை விமர்சிப்பதிலும், அது சிறப்பாக வருவதற்கும் நிறைய விவாதிப்பார். அவருடைய ஆலோசனைகள் ரசிக்கும்படியாக இருக்கும். அவர் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாரோ அதை விட அவர்மீது நான் மரியாதை வைத்திருந்தேன். பிற்காலத்தில் அவ ருடைய ராடன் தயாரிப்பில் "செல்வி', "அரசி' என்ற நெடுந்தொடர் களுக்கு வசனம் எழுத வைத்தார். சிங்கப்பெருமாள் என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்க வைத்து எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தார்.
1988ம் ஆண்டு பிற்பகுதி... மாதம் நினைவில்லை. ராதிகா மேடம் என்னை அழைத்தார்கள். சந்திக்கப் போனேன். அவருடன் அவருடைய தாயார் கீதாம்மா இருந்தார். அவர்களுக்கு வேண்டிய தயாரிப்பாளர் பாபு என்பவரும் இருந்தார். ஹிந்தியில் நடிகர் ராகேஷ்ரோஷன் இயக்கி முடித்திருந்த ஒரு படம். ராகேஷ்ரோஷனும் அப்பொழுது ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த ரேகாவும் நடித்திருந்தார்கள். அந்தப் படத்தின் பெயர் "ஹுன் பரி மாங்' (ஃஐஞஞச இஐஆதஒ ஙஆஆசஏ).
"அந்தப் படத்தின் ரைட்ஸை தமிழில் வாங்கியிருக்கோம். ஹிந்தியில் இன்னும் ரிலீசாகவில்லை. தமிழில் தயாரிக்கப் போகிறோம், நீங்கள்தான் எழுத வேண்டும்'' என்றார்.
மும்பைக்கு அவர்களுடன் சென்று படத்தின் டபுள் பாசிடிவ் (ரீ-ரிகார்டிங் பண்ணாத பிரதி) பார்த்தோம். சென்னை வந்து எனக்கு தயாரிப்பாளர் பாபு சார் அட்வான்ஸ் கொடுத்தார். தயாரிப்பு பாபு என்றாலும் அது ராதிகா மேடத்தின் சொந்தப் படம் என்பதுபோல அக்கறை செலுத்தினார்.
என் மீது அவருக்கிருந்த பாசம்.. என் எழுத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை... அதனால் வந்த வாய்ப்பு அது.
அந்தப் படத்திற்கு எப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று நான் கற்பனை செய்து கொண்டிருந்த நேரம். படத்தில் ஒரு பாதியில் ராதிகா மேடம் அப்பாவி போல சாதாரண கெட்டப்பில் வருவார். இன்னொரு பாதியில் அசத்தலான ஸ்டைலான கேரக்டர். ஹிந்தியில் ரேகா நடிப்பை பார்த்துவிட்டு வந்ததால் எனக்கு ஆர்வம் அதிகமாக வந்தது.
அதேநேரம் எதிர்பாராத பிரச்சினை ஒன்றும் எனக்கு வந்தது. கலைஞர் அந்தப் படத்துக்கு வசனம் எழுதினார்...
(வளரும்...)