ss

(72) பூட்டு செய்யப்படும்போதே சாவியும் செய்யப்பட்டுவிடும்!

சூப்பர் ஹிட் படங்களின் கதாசிரியரான அண் ணன் பஞ்சு அருணா சலம் எழுதி, தயாரித்து, விஜயகாந்த் நடித்து, நான் இயக்கிய படம் தான் "எங்க முதலாளி'. பஞ்சண்ணன் என்ற யானை "எங்க முதலாளி'யால் சறுக்கியது.

இதில் விஜயகாந்த்துக்கும் எனக்கும் பங்கிருக்கிறது. இருவருமே அவரிடம் கதை கேட்கவில்லை. ஆரம்பத்திலேயே கதை கேட்டிருந்தால் கருத்துக்களைச் சொல்லியிருக்கலாம். பஞ்சண்ணனுடைய வெற்றிகள், சாதனைகள் மீது எங்களுக்கிருந்த நம்பிக்கை யால் நாங்கள் அதைப் பற்றி நினைக்கவில்லை. அதுவுமில்லாமல்... "முதல் ஷெட்யூல் பொள்ளாச்சியில் நடந்ததையும், அதை அப்படியே தூக்கி வைத்துவிடுங்கள், நான் வேறு கதை பண்ணிய பிறகு ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம்' என்று பஞ்சண்ணன் கூறியதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

Advertisment

அப்பொழுது அவர் சொன்ன கதையும், காட்சிகளும் அற்புதமாக இருந்தது. அதை ஏன் வேண்டாம் என்று சொன்னார் என்பது தெரிய வில்லை. நன்றாக இருப்பதை ஏன் மாற்ற வேண்டுமென்று சொல்கிறார் என்று கேட்கக்கூட தோன்றவில்லை.

"எங்க முதலாளி' படம் முடிந்து ரிலீசானது. எனது மகிழ்ச்சியும் என்னைவிட்டுப் போனது. விஜயகாந்த்தின் சுமாரான படம் கூட பி அண்ட் சி சென்டர்களில் வசூல் செய்துவிடும். அதேபோல "எங்க முதலாளி'யும் வசூல் செய்தது. ஆனால் பத்திரிகை விமர்சனங்கள் "எங்க முதலாளி'யை கொண் டாடவில்லை. "பழைய கதை, எம்.ஜி.ஆர். காலத்துக் கதை' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

"பழைய விஷயங்களைக்கூட புதுமையாகக் கொடுக்கக்கூடிய பஞ்சண்ணன், ஏன் ஒரு பழைய கதையை படமாக்க முடிவெடுத்தார்' என்று பலர் என்னிடம் கேட்டார்கள்.

Advertisment

கிரிக்கெட்டில் உலக சாதனை செய்த ஆட்டக்காரர்கள் கூட சில மேட்ச்களில் குறைந்த ரன் எடுத்து அவுட்டாகி விடுவதுண்டு. அப்படித்தான் ஆகிப்போனது "எங்க முதலாளி' படத்தின் ரிசல்ட்டும்.

"எங்க முதலாளி' பெரிய அளவில் பேசப்படாமல் போனதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அந்தப் படம் ரிலீசான அதேநாளில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அசத்தலான பாடல்களில் வெளிவந்த "கிழக்குச் சீமையிலே' படம் வெளியானது.

"கிழக்குச் சீமையிலே' படத்தைக் கொண்டாடிய ரசிகர்கள் "எங்க முதலாளி'யை மறந்து விட்டார்கள் என்று தோன்றியது. ஒருவாரம் கழித்து அண்ணன் பஞ்சு அருணாசலம், என்னை வரச் சொல்லியிருந்தார்... போனேன். அவர் என்னிடம் பேசியதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அவர் சிறந்த கதை, வசனகர்த்தா மட்டும் அல்ல. மிகச் சிறந்த மனிதர் என்று…

அப்படி அவர் என்ன சொன்னார்.?

அவரது வீட்டு வரவேற்பறையில் காத்திருந்தேன். "ஸாரி... தம்பி ஸாரி'' என்று சொல்லியபடியே வந்தார். சிறிதுநேரம் காக்க வைத்ததற்காகவா இவ்வளவு பெரிய ஸாரி என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் காக்க வைத்ததற்காக ஸாரி சொல்லவில்லை.

"தம்பி,… சினிமாவுல பெரிசா வந்துக்கிட்டிருந்தீங்க. உங்க வேகத்துக்கு நான் பிரேக் போட்ட மாதிரி பண்ணிட்டேன். "எங்க முதலாளி' படம் உங்களுக்கு ஒரு சறுக்கலா அமைஞ்சிருச்சு'' என்றார்.

எவ்வளவு பெரிய வெற்றியாளனுக்கும் சில நேரங்களில் வெற்றி கிடைக்காமல் போய்விடும். அப்படித்தான் ஆனது பஞ்சண்ணனுக்கும்.…அதற்காக என்னிடம் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கியவாறு ஸாரி சொன்னார்.

"அண்ணே… சினிமாவுல இதெல்லாம் நடக்கிறதுதானேண்ணே.… நான் அப்செட் ஆனது உண்மைதான், ஆனா எதுவானாலும் ஏத்துக்கத்தான் வேணும்ணே'' என்றேன்.

ss

"எத்தனையோ பேருக்கு எவ்வளவோ சூப்பர் ஹிட் ஸ்கிரிப்ட் கொடுத்திருக்கேன். உங்களுக்கு மிஸ்ஸாயிருச்சு தம்பி.… அதான் மனசுக்கு வேதனையா இருக்கு.… வேஷ்டி சட்டை போட்ட ஹீரோவா ரஜினிய வச்சு மீண்டும் ஒரு வில்லேஜ் படம் எடுக்க நினைச்சேன். கமலை வச்சும் மீண்டும் வில்லேஜ் படம் எடுக்கலாம்னு நினைச்சேன். ரெண்டுமே நடக்கல. அடுத்து பிரபுவை வச்சு பண்ணலாம்னு நினைச்சு, நல்ல கதையும் ரெடி பண்ணி திரைக்கதையும் எழுதிட்டேன். ஆனா அதுவும் நடக்காம போச்சு. இதுக்கு இடையில ரஜினிக்கு "எஜமான்', கமலுக்கு "தேவர் மகன்' விஜயகாந்த்துக்கு "சின்னக் கவுண்டர்' வந்திருச்சு.

மூணு படமுமே பெரிய ஹிட் ஆயிருச்சு. அந்தப் படங்களோட சாயல் வந்திறக் கூடாதுன்னு நான் பண்ணிவச்ச "எங்க முதலாளி' ஸ்கிரிப்ட்ட மாத்தி... மாத்தி பண்ணி நானே கொஞ்சம் குழம்பிப் போயிட் டேன். நியாயமா அந்தக் கதைய தூக்கி வெச்சிட்டு நான் வேற பண்ணியிருக்கணும். அதைப் பண்ணாம விட்டுட்டேன். அதனால உங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுப் போச்சு. பழைய கதைங்கிற விமர்சனத்தால படமும் நான் நெனச்ச மாதிரி வராம மாறிப் போச்சு'' என்றார்.

மிகப்பெரிய சாதனையாளர், சாதாரண மான என்னிடம் அப்படி வருத்தப்படத் தேவையில்லை. அவருடைய உயர்ந்த குண மும், நல்ல மனதும் அப்படி பேச வைத்தது.

"அண்ணே… எனக்காக நீங்க இவ்வளவு அக்கறையோட வருத்தப்பட்டதே பெரிய விஷயம்ணே.… இப்படி நடக்கணும்கிறது விதிண்ணே'' என்று கூறிவிட்டு வந்தேன்.

அது உண்மையி லேயே விதிதானா? ஒவ் வொரு மனிதன் வாழ்க்கை யிலும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இறைவனால விதிக்கப்பட்டுவிட்டதா? விதி என்று எழுதப்பட்டு விட்டதா?

நான் நேசிக்கும் பண்பாளர், மிகச்சிறந்த இயக்குநர், மறக்க முடியாத பொக்கிஷமாக "பாட்ஷா' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்காக இயக்கியவர் சுரேஷ்கிருஷ்ணா அவர்கள். விஜயகாந்த் நடித்த "கஜேந்திரா' படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதினேன். ஒருநாள் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் அவர் சொன்னார். "லியாகத் சார்… நாம ஒரு படம் பண்றோம். அதுக்காக ஒரு திரைக்கதை எழுதறோம். அந்தப் படம் பல ஊர்கள்ல, பல தியேட்டர்கள்ல ஓடும். ஒரு ஊர்ல ஒரு மாதிரி, இன்னொரு ஊர்ல வேற மாதிரியோ, மேட்னி ஷோவுக்கு ஒரு மாதிரி, நைட் ஷோவுக்கு வேற மாதிரியோ இருக்காது. ஒரே மாதிரிதான் எத்தனை நாளைக்கு ஓடுனாலும், எத்தனை மாசத்துக்கு ஓடுனாலும் ஒரு ஹீரோ அவன் இப்படிப்பட்டவன். அவனுக்கு என்ன பிரச்சினைகள், யாரால பிரச்சினைகள் அவன் ஜெயிச்சானா, தோத்தானா கடைசியில் முடிவு என்னாச்சுன்னு நாமே எழுதுன திரைக்கதைதான் படமா ஓடுது. அதே மாதிரிதான் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு திரைக்கதையை ஆண்டவன் ஏற்கனவே எழுதி வச்சிட்டான். அதுபடிதான் நம்ம வாழ்க்கை நடந்துக்கிட்டிருக்கு. அதைத்தான் நாம விதின்னு சொல்றோம்'' என்றார்.

இப்பொழுது யோசனை பண்ணிப் பார்த்தாலும் அதுதான் சத்தியமான வார்த்தை என்று தோன்றுகிறது. அப்படியென்றால் இறைவன் எழுதி வைத்ததை மாற்றவே முடியாதா?…

முடியும் என்ப தைத்தான் நம் முன் னோர்கள் "விதியை மதியால் வெல்ல முடியும்' என்று சொல்லி வைத்தார்கள்.

பிரச்சினை என்று வந்தால் அதற்கு தீர்வு என்று நிச்சயமாக ஒன்று இருக்கும். அதையும் நம் முன்னோர்கள் எளிமையான உதாரணம் மூலம் சொன்னார்கள். பூட்டு செய்யப்படும் பொழுதே அதற்கான சாவியும் செய்யப்பட்டுவிடும். "எங்க முதலாளி' படம் எனக்கு எழுதப்பட்ட விதி என்றால் அதை மதியால் மாற்ற நினைக்காதது என்னுடைய தவறுதான்.

ஏற்கனவே சொல்லிய சில விஷயங்களை நினைவுபடுத்துகிறேன். கலைஞர் போல வசனம் எழுதி புகழ்பெற வேண்டும் என்ற வேகத் தோடும், வெறியோடும் சென்னை வந்தேன். கோவைத் தம்பி அவர்களின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த "உழைத்து வாழ வேண்டும்' படத்திற்கு என்னுடைய கதை தேர்வு செய்யப்பட்டதும், கவிஞர் வைரமுத்து அவர்கள்தான் வசனம் எழுத வேண்டும் என்று படத்தின் இயக்குநர் அமீர்ஜான் அவர்கள் பிடிவாதமாகச் சொன்னார். அதை விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான்தான் வசனம் எழுதுவேன் என்ற எனது உறுதியைப் பார்த்து முடிவை மாற்றிக்கொண்டார்கள்.

அப்படிப்பட்டவர்கள் நான் எழுதாத "எங்க முதலாளி' படத்திற்கு எப்படி என்னை இயக்குநராக ஆக்கினார்கள்? அதை நானும் மறுக்காமல் ஏன் ஏற்றுக்கொண்டேன்? என் உறுதி எங்கே போனது? இதுதான் விதி என்பதா?

"எங்க முதலாளி' படத்தின் கதையையும் நான் கேட்கவில்லை. திருப்தி இல்லாத போதும் அதை தைரியமாக பஞ்சண்ணனிடம் சொல்லவில்லை.

நான் வசனம் எழுதாத கதையை இயக்க விரும்பவில்லை என்பதையும் சொல்லவில்லை.

இதுதான் விதியா?

மன உறுதி என்ற மதியைப் பயன்படுத்தி யிருந்தால் எல்லாவற்றையும் மாற்றியிருக்க முடியும்.

1990 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முகமூடிக் கொள்ளையர்கள் பற்றிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்