aa

(65) சத்யராஜின் கட்டளைக்கு செக் வைத்த ராவுத்தரின் கட்டளை!

"கட்டளை' படத்திற்காக எடுக் கப்பட்ட ஒரு சண்டைக்காட்சி, மற்றும் சில காட்சி களை போட்டுப் பார்த்தபோது எனக்கு மட்டுமல்ல... படத்தின் ஹீரோ சத்யராஜுக்கும் மிக திருப்தியாக இருந்தது. ஏவி.எம்.சரவணன் கேள்விப்பட்டு அந்த ஸீன்களைப் போட்டுக் காட்டச் சொல்லி பாராட்டினார். ஆனால், விஜயகாந்த்தும் ராவுத்தரும் இந்தப் பாராட்டுகளை ரசிக்கவில்லை.

சத்யராஜ் நடிக்கும் படத்தை நான் இயக்க ஒப்புக் கொண்டதால் என் மீது விஜயகாந்த்துக்கும் ராவுத்தருக்கும் ஏற்பட்ட வருத்தம் மட்டும் இதற்குக் காரணமல்ல.

Advertisment

சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டர் ஆனதுக்கும், அவருடைய அசுர வளர்ச்சிக்கும் விஜயகாந்த்தான் காரணம். அவருக்கு அமைந்தது போலவே சத்யராஜுக்கும் சண்டைக் காட்சி அமைத்திருக்கிறார் என்பது அவர்களது எண்ணம். திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்று நினைத்துவிட்டார்கள்.

ஏற்கெனவே வேறு சில காரணங்களால் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் மேல் கொஞ்சமாக இருந்த கோபத்தை "கட்டளை' பட சண்டைக் காட்சி இன்னும் அதிக மாக்கியது. அந்தக் கோபத்தின் வீச்சு, என் மீதும் கொஞ்சம் திரும்புவதை நானும் உணர்ந்தேன்.

அந்தக் கோபத்தை இப்ராகிம் ராவுத்தர் என்னிடம் நேரடியாகக் காட்டவில்லை. வேறு விதமாகக் காட்டி னார்.

Advertisment

"கட்டளை' படத்தின் திரைக் கதையை ஆரம்பித்தேன். புதுப் புது சீன்களை உருவாக்கி, அதிரடியாக வசனங்கள் எழுத வேண்டும் என்ற வேகத்தோடு ஆரம்பித்த அதேநாளில் இப்ராகிம் ராவுத்தர் என்னை அழைத்தார். " "சக்கரைத் தேவன்' பட டிஸ்கஷன் வேலைய ஆரம்பிக்கணும். எந்த ஓட்டல்ல ரூம் போடலாம்னு சொல்லுங்கண்ணே'' என்றார்.

சத்யராஜ் படம் சம்பந்தமாக என் மீது வருத்தத்தில் இருக்கும் அவரிடம் எப்படி நான் சொல்வது "கட்டளை' திரைப்பட டிஸ்கஷனை முடிக்க வேண்டும் என்று.

சரி என்று தலையாட்டி விட்டு வந்தேன்.

"சக்கரைத் தேவன்' விஜயகாந்த் நடிப்பில் உருவாகப்போகும் படம். படத்தின் இயக்குநராக ஜெ.பன்னீர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆபாவாணன் குழுவைச் சேர்ந்த அமைதியான தம்பி. அவருக்கு "சக்கரைத் தேவன்' முதல் படம்.v அவரிடம் சொன்னேன். "பன்னீர்… இது உங்களுக்கு முதல் படம். ஒரு படத்தோட வெற்றிக்கு கதை, திரைக்கதை எப்படி முக்கியமோ, வசனமும் மிகவும் முக்கியமானது. என்னால் "கட்டளை' படத்தின் திரைக்கதை அமைக்கும் வேலையையே இன்னும் தொடங்க முடியவில்லை. தொடங்கலாம் என்று நினைக்கும் நேரத்தில் "சக்கரைத் தேவன்' திரைக்கதை அமைக்கும் வேலையைத் தொடங்குங்கள், வசனம் எழுதிக் கொடுங்கள் என்று இப்ராகிம் ராவுத்தர் கூறுகிறார். என்னால் மறுக்க முடியவில்லை.

ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங் களின் வேலையை வெறும் வசனகர்த்தாவாக இருந்தால் கூட சமாளித்து செய்துவிடலாம். ஆனால் "கட்டளை' படத்திற்கு நான் இயக்குநர். அது மிகப்பெரிய பொறுப்பு. அது உங்களுக்கும் தெரியும். அதனால் வேறு ஒரு ரைட்டர் உங்கள் கூடவே இருந்தால் உங்களுக்கு நல்லது. அதை இப்ராகிம் ராவுத்தரிடம் நீங்கள் பேசுவது போல் பேசி, எனக்குப் பதிலாக வேறு ஒருவரை திரைக்கதை, வசனம் எழுத ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கேளுங்கள்'' என்றேன்.

"சரி' என்று என்னிடம் சொன்னார் ஜெ.பன்னீர். அதுதான் அவருக்கு பலம் சேர்க் கும் என்பதை அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இப்ராகிம் ராவுத்தரிடம் கேட்கும் தைரியம் அவருக்கு வரவில்லை. அவருக்கு முதல் படம் என்பதால் துணிச்சல் இருந்தால்கூட பணிந்து போகவேண்டிய சூழ்நிலை. அதுவும் இல்லாமல் இப்ராகிம் ராவுத்தர் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார் என்பதும் அவருக்குத் தெரியும். அவரிடம் ஜெ.பன்னீர் இதுகுறித்து பேசாமலேயே இருந்துவிட்டார். "சக்கரைத் தேவன்' பணிகளும் என் தலையில் ஏற்றப்பட் டது. கட்டளை பட வேலைகளைக் கவனிக்க முடியவில்லை.

கட்டளை பட டிஸ்கஷனுக்காக எனக்கு உட்லண்ட்ஸ் ஓட்டலில் அதன் தயாரிப்பாளர் கோபி ரூம் போட்டிருந்தார்.

"சக்கரைத் தேவன்' படத்திற்காக எனக்கு பாம்குரோவ் ஓட்டலில் ரூம் போட்டிருந்தார் இப்ராகிம் ராவுத்தர்.

ஜெ.பன்னீரை உரிமையுடன் கோபித்தேன். "என்ன பன்னீர்… உங்க நல்லதுக்காகத்தானே சொன்னேன். வேற ரைட்டர் கேளுங்கன்னு. இப்ப நான் "கட்டளை' படத்தைக் கவனிக்கிறதா "சக்கரைத் தேவன்' படத்தைப் பாக்கறதா?''

பன்னீர் பதில் பேசவில்லை. மௌனமாக இருந்தார்.

"கட்டளை' படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தேதியை சத்யராஜின் மேனேஜர் ராமநாதன் சார் என்னிடம் சொன்னார்.

"இன்னும் இரண்டு வாரம் இருக்கு.… அதுக்குள்ள "கட்டளை' படத்தோட திரைக் கதைய முடிச்சிருங்க. வசனத்தைக் கூட நீங்க அப்பப்ப எழுதிக்கலாம்'' என்றார்.

aa

"சார்…ஷெட்யூல் தேதிய கொஞ்சம் தள்ளிக் கொடுக்க முடியுமா?'' என்று கேட்டேன்.

"இல்ல லியாகத் சார். பி.வாசு சார் டைரக் ஷனில் "உடன்பிறப்பு' படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன். அவரு ரொம்ப கரெக்ட்டா பிளான் பண்ணி படம் எடுக் கிறவரு. உங்களுக்கு நான் தேதிய மாத்துனா, அவரு படத்துக்கு குழப்பமாயிரும். அதனால உங்களுக்கு சொன்ன தேதியிலதான் நீங்க ஷூட்டிங் போயிக்கணும்'' என்று கறாராக சொல்லிவிட்டார். இரண்டுமே சத்யராஜ் சார் நடிக்கும் படங்கள். நிர்வாக ரீதியாக அவர் எடுத்த முடிவில் எந்தத் தவறும் இல்லை. ஏற்கெனவே "சக்கரைத் தேவன்' என்ற குண்டை என்மீது இப்ராகிம் ராவுத்தர் போட்டிருந்தார்.

இது சத்யராஜ் மேனேஜர் ராமநாதன் சார் போட்ட இரண்டாவது குண்டு.

"கட்டளை' படத்தின் திரைக்கதையை முடிக்காத நிலையில் நிலைகுலைந்து போனேன்.

இந்த நிலைமையில நான் எதிர்பார்க்காத மூன்றாவது குண்டை இப்ராகிம் ராவுத்தர் போடுவார் என்று நினைக்கவே இல்லை.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்

______________

அப்பாவுக்குத் தெரியாமல் நெல்மூட்டையை...!

dd

விஜயகாந்த் தன் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடிவருகிறார். இது முழுக்க முழுக்க பொருந்தும். அதற்கு விஜயகாந்த் நடிக்க வருவதற்கு முன்பே நடந்த ஒரு சம்பவத்தை இங்கே உதாரணமாகச் சொல் கிறேன்...

விஜயகாந்த் மதுரையில் அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான ரைஸ்மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுடன் பழகியபோதே அவர்களின் வேத னைகள், குடும்பப் பிரச்சினைகளை யெல்லாம் உணர்ந்தவர். தானாகவே அவர்களிடம் விசாரித்து அவர்களுக்கு உதவியவர். கையிலிருந்த பணத்தை அப்படியே கொடுத்துவிடுவாராம்.

ஒரு சம்பவத்தை விஜயகாந்த் ஒருமுறை என்னிடம் சொன்னார்.

ரைஸ்மில்லில் வேலை பார்த்த ஒருவருக்கு பணத் தேவை. அவரது வீட்டில் ஒரு விசேஷம் விஜயகாந்த் தின் அப்பாவிடம், "கொஞ்சம் பணம் தேவை. சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கழிச்சுக்கங்க' என்று கேட்டிருக்கிறார்.

"ஏற்கெனவே நீ வாங்குன கட னையே இன்னும் கழிக்கல. புதுசா வேற கேக்கற?'' என்று கூறி மறுத்து விட்டார் விஜயகாந்த்தின் அப்பா.

விஷயம் விஜயகாந்த்துக்கு தெரியவருகிறது. (அப்பொழுது அவர் பெயர் விஜயராஜ்) உடனே கொடுப் பதற்கு அவர் கையிலும் பணம் இல்லை. அந்தத் தொழிலாளியை அழைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகளில் சில மூட்டைகளை தூக்கிக் கொடுத்து, "வெளியே வித்து பணமாக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். அவர் தயங்கி... "அப்பாவுக் குத் தெரிஞ்சா...?''ன்னு கேட்க...

"அதெல்லாம் தெரியாம நான் பாத்துக்கிறேன். நீங்க பணத்தோட வருவீங்கன்னு உங்க வீட்ல எதிர்பார்த் துக்கிட்டிருப்பாங்கள்ல... போய் பணம் இல்லேன்னு சொல்லப்போறீங்களா?, விசேஷம் நடக்கணும்ல, யார்கிட்ட போய் கடன் வாங்குவீங்க… எடுத்துட் டுப் போங்கண்ணே'' என்று கூறி, அவரே வண்டியை வரவைத்து மூட்டை களை ஏற்றி அனுப்பி வைத்தாராம்.

விஜயகாந்த்தின் அப்பா அவ்வப்பொழுது நெல் மூட்டைகள், அரிசி மூட்டைகளை எண்ணி செக் பண்ணுவாராம். அப்படி எண்ணிப் பார்க்கும் பொழுதெல்லாம் விஜய காந்த் சமாளித்த விதத்தை படத்தில் காமெடி சீனாகவே வைக்கலாம்.

இந்த சம்பவத்தை நான் ஏராள மான ரசிகர்மன்ற மேடைகளில் பேசி யிருக்கிறேன். விஜயகாந்த்தின் உத வும் குணத்தை தமிழக மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறேன்.

வசதி இல்லாதவர்களின் வலியை உணர்ந்ததினால்தான் "பிறந்தநாள் விழா கொண்டாடி வெளியூர்களில் இருந்து ரசிகர் களை வரவைக்க வேணாம்' என்று சொன்னார் விஜயகாந்த்.

"வசதி இல்லாதவங்க மொதல்ல நம்மள தேடி வரணும். அவங்களோட ஆதரவோட மன்றத்தை வளர்க்கணும். நாம வளர்ந்ததுக்கு அப்புறம் வசதி இல்லாதவங்கள நாம தேடிப் போய் உதவணும்… மக்களுக்காகப் பாடுபட நெனைக்கற எல்லா தலைவர்களோட வாழ்க்கையும் அப்படித்தாண்ணே இருந்திருக்கு'' என்றேன் நான்.

"நீங்க எல்லாத்தையும் வசனம் மாதிரியே பேசுவீங்க. உங்கள வசனகர்த்தாவாக்குனது தப்பா போச்சு'' என்றார் நகைச்சுவையாக.

அவருடைய நகைச்சுவை உணர்வு, நெருங்கிப் பழகிய நண்பர்களுக்குத்தான் தெரியும்.

அவரை சம்மதிக்க வைப்பதற் காக பல விஷயங்கள் பேசினோம்.

கடைசியில் சம்மதித்தார் ஒரு கண்டிஷனோடு.

"என் பிறந்தநாளை ஏழை களுக்கு உதவுகிற நாளாகக் கொண்டாடுவதாக இருந்தால் சம்ம திக்கிறேன்'' என்றார்; நாங்களும் சம்மதித்தோம்.