(62) கோபத்தில் சிவந்த சத்யராஜ்!
கே.பி. பிலிம்ஸ் பாலுவுக்கு "தினத்தந்தி'யின் அன்றைய சினிமா நிருபர் அதிவீரபாண்டியன் போன் செய்தார்.
"தம்பி பாலு,…நீங்க சொன்ன "மந்திரிகுமாரி' பட செய்தியை சினிமா நியூஸ்ல போடச் சொல்லிட்டேன். செவ்வாய்க்கிழமை பேப்பர்ல வரும்'' என்று சொல்ல... பாலு அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார்.
"அண்ணே... நல்லா இருக்கான்னு உங்ககிட்ட கேக்கறதுக்காகத்தாண்ணே சொன்னேன். முறைப்படி எல்லா பத்திரிகைகாரங்களையும் கூப்பிட்டு நாங்க பிரஸ்மீட் வச்சு சொல்ல ணும்ணே.…இப்ப நியூஸ் போட வேண்டாம்ணே'' என்றார்.
"தம்பி, சினிமா பக்கம் மொதல்லயே பிரிண்ட் ஆயிரும். உங்க நியூஸ் தினத்தந்தியோட எல்லா எடிஷன்லயும் பிரிண்ட் ஆயிருச்சு. இனி அதை நிறுத்த முடியாது'' என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
பாலுவின் முகம் ஒரு மாதிரி யாகிவிட்டது. காரணம் ரோஜா ஹீரோயின் என்பதை சத்யராஜிடம் சொல்லி சம்மதம் வாங்கவில்லை.
"லியாகத் சார். இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க் கிழமை பேப்பர்ல வர்ற நியூஸை சத்யராஜ் பார்த்தா ரொம்ப கோபமாயிருவாரு. இப்ப என்ன பண்றதுன்னே புரியல'' என்று தவிக்க ஆரம்பித்தவர்.. திடீரென ஒரு யோசனை வந்ததுபோல, "லியாகத் சார் நாளைக்கு திங்கட்கிழமை காலைல டிரெயின்ல கோயம்புத்தூர் போங்க. அங்க இருந்து பொள்ளாச்சி போய் சத்யராஜ் சாரை பாருங்க. ரோஜா ஹீரோயினா இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுச்சு சார். அதை பாலு சார்கிட்ட சொன்னேன். பாலு சார் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கிறதுக்காக "தினத்தந்தி' அதிவீரபாண்டியன்கிட்ட சொன்னாரு. அவரு எங்களுக்கே தெரியாம, எங்ககிட்ட சொல் லாம தந்தி பேப்பர்ல நியூஸ் போட்டுட்டாரு. நாளை செவ்வாய்க் கிழமை பேப்பர்ல வருது சார் என்று சொல்லுங்க. பேப்பர்ல பார்த்து தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னால நீங்க எப்படியாவது பேசி அவரை சமாதானப்படுத்தி சம்மதம் வாங்கிருங்க''ன்னு மூச்சு விடாமல் பேசி முடித்தார் கே.பி.பிலிம்ஸ் பாலு.
அதாவது பழியை நான் ஏற்றுக்கொண்டு சமாதானப்புறாவாக மாறவேண்டும். நானும் சம்மதித்தேன்.
திங்கட்கிழமை காலை கோவை எக்ஸ்பிரஸில் புறப்பட்டு மதியம் கோயம் புத்தூர் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்து பொள்ளாச்சிக்குப் போனேன். நான் அங்கு போகும்போது மணி நான்கு. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் "திருமதி.பழனிசாமி' படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் சத்யராஜ். அருகில் போய் வணக்கம் சொன்னேன். திரும்பிப் பார்த்தவர் திகைத்துப்போனார்.
"லியாகத் சார்... என்ன திடீர்னு இங்க''
"உங்களை பார்க்கத்தான் சார்...''
"வாங்க உக்காருங்க... என்னன்னு சொல்லுங்க''
"இங்க வேணாம் சார். ஆறு மணிக்கு சூட்டிங் முடிஞ்சிரும்ல. ரூம்ல போய் பேசலாம் சார்''
"அவ்வளவு முக்கியமான விஷயமா''
"அதை நான் சொன்ன பிறகுதானே தெரியும்''
ஷூட்டிங் முடிந்து சத்யராஜ் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வந்தோம்.
"சொல்லுங்க சார்.… அவசரமா என்னைப் பார்க்க வர்ற அளவுக்கு என்ன நடந்துச்சு?''
"பானுப்பிரியாவுக்குப் பதில் ரோஜாவை பேசிமுடித்தது பற்றியும், தற்செயலாக சொன்ன விஷயத்தை தினத்தந்தி அதிவீர பாண்டியன் பேப்பரில் செய்தி யாக போட்டுவிட்டதையும், நாளை காலை பேப்பரில் அது வரப்போவதற்கு நான்தான் காரணம் என்றும், அதற்கு ஸாரி கேட்க வந்திருப்பதாக'வும் சொன்னேன்.
சத்யராஜின் சிவந்த முகம் இன்னும் அதிகமாகச் சிவந்தது.
"பானுப்பிரியாகிட்ட கதை சொல்லி, அவங்களும் ஓ.கே. சொன்ன பிறகு, இப்ப என்ன காரணம் சொல்லி அவங்கள மாத்துவீங்க?'' என்றார் கோபமாக.
அமைதியாக இருந்தேன்.
"நீங்கதான் ரைட்டர், நீங்க தான் டைரக்டர். பானுப்பிரியாவை ஓ.கே. பண்ணதும் நீங்கதான்'' என்றார்.
நான் தொடர்ந்து அமைதியாகவே இருந்தேன்.
"இல்ல லியாகத் சார், கதாநாயகியை மாத்துன விஷயத்தை நீங்க பண்ணல. ராமநாதனும், பாலுவும்தான் பண்ணி யிருக்காங்க. நீங்க என்கிட்ட பொய் சொல்றீங்க'' என்றார்.
என்ன சொல்வதென்று தெரியாமல் அவரைப் பார்த்தேன்.
"உண்மையச் சொல் லுங்க... பாலுதான் பண் ணாரா?''
இனிமேல் மறைக்க முடியாது என்பதால் "ஆம்' என்பதுபோல தலையாட்டினேன்.
"இந்தப் படத் தை கே.பி.பிலிம்ஸ் பாலுவுக்கு பண்ண வேண்டாம். வேற கம்பெனிக்கு பண் ணுவோம்'' என் றார்.
அறையில் சிறிது நேரம் அமைதி.
"சரி, நீங்க கிளம்புங்க. நாளை காலையில புரொடியூஸர் வந்து உங்களைப் பார்த்துப் பேசுவாரு'' என்றார்.
"ஓ.கே.' சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
"யார் அந்த புரட்டியூஸர்?' என்று கேட்கக் கூடத் தோன்றவில்லை. நான் இருந்த மனநிலை அப்படி…
கே.பி. பிலிம்ஸ் பாலுவுக்கு படம் பண்ணச் சொன்னவரும் அவர்தான். பாலு செய்த தவறால் கோபப்பட்டு பாலு வேண்டாம் என்று சொன்னவரும் அவர்தான்.
இரண்டிலுமே அவர் பக்கம் நியாயம் இருந்தது.
மறுநாள் காலை சென்னை வந்ததும் கே.பி. பிலிம்ஸ் அலுவலகம் போய் பாலுவைப் பார்த்து நடந்ததை சொன் னேன். அவர் அதிர்ச்சியடையவில்லை. காரணம் அவர் ஏற்கனவே அதிர்ச்சியில் தான் இருந்தார். சத்யராஜ் அவரிடம் போன்ல பேசி காய்ச்சி எடுத்துவிட்டார் என்று நினைத்தேன்.
"மந்திரிகுமாரி' என்று படத்துக்கு டைட்டில் வைத்திருந்தோம். எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்து கலைஞர் எழுதி முன்பே வந்த படம்தான் "மந்திரிகுமாரி'. அந்த டைட்டிலும் போய்விடுமோ என்ற சிந்தனையோடு ராஜாபாதர் தெருவுக்கு வந்தேன். விஜய காந்த், இப்ராகிம் ராவுத்தர் இரண்டுபேருமே அறையில் இருந்தார்கள். இன்று காலையில் தினத்தந்தியில் வந்த செய்தியை படித்திருப்பார்கள்... என்ன சொல்லப் போகிறார்களோ என்ற சிந்தனையோடு அவர்களைச் சந்தித்தேன்.
"என்னண்ணே நேத்து ஆளையே காணோம்'' -விஜயகாந்த்.
"எதாவது தலைவலியாண்ணே'' -இப்ராகிம் ராவுத்தர்.
"பல தலைவலிகளை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள்' என்பதை சூசமாக கேட்கிறாரோ என்று நினைத்தபடியே...
"அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே'' என்றேன்.
"சத்யராஜ் படம் பண்றீங்களாண்ணே.'
"எங்ககிட்ட சொல்லவே இல்லை.''
"காலையில பேப்பரைப் பார்த்துதான் தெரிஞ்சிகிட்டோம்.''
"எப்பண்ணே ஷூட்டிங்.''
இப்படி இருவரும் மாறி, மாறி கேட்டார்கள்.
"இல்லண்ணே… உங்ககிட்ட சொல்ல லாம்னுதான் நெனச்சிருந்தேன். அதுக்குள்ள பாலு அவசரப்பட்டு நியூஸ் கொடுத்திட்டாரு'' என்றேன்.
நான் சொன்னது பொய்தான். முதலில் சொல்லியிருந்தால் வேண்டாம் என தடுத்து விடுவார்கள் என்று நான் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. இராம.நாராயணன் சார் சொல்லிக் கொடுத்த பாடம்.
அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன்.
சத்யராஜ் சார் படம் பண்ணுவதை அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லையோ என்று என் மனம் நினைத்தது. ஆரம்ப காலங்களில் ஒருநாள் ராஜாபாதர் தெரு, ரோகிணி லாட்ஜ் ரூம் படிக்கட்டில் அமர்ந்து இருவரும் பேசியது என் நினைவுக்கு வந்தது.
"அண்ணே… இன்னிக்கு நான் நடிக்கிற படத்துக்கு எழுதறீங்க -எனக்கு திருமணமாகி ஒரு மகன் பிறந்து ஒருவேளை அவனும் நடிக னாகணும்னு ஆசைப்பட்டு, நடிக்க வந்துட்டா அவனுக்கும் நீங்கதாண்ணே எழுதணும்'' என்றார் விஜயகாந்த். அவரை விட்டு எப்பொழுதுமே நான் பிரிந்து விடக்கூடாது என்று நினைத்தார். சிலர் பிரித்து விட்டார்கள். அவர்களை ஆண் டவன் பார்த்துக்கொள்வான்.
(வளரும்...)