aa

(42) கதை இருந்தா சொல்லமாட்டேனா?

"சிட்டிசன்' படத்திற்கு நான் வசனம் எழுதிக் கொடுத்திருக்க... விளம்பரத்தில் பாலகுமாரன் பெயர் வந்தது.

எனக்கு போன் செய்து சமாதானப்படுத்தி னார் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி.

Advertisment

"விஜயகாந்த்துக்காக விட்டுக் குடுத்தீங்க. இந்த நண்பனுக்காக விட்டுக் குடுக்கமாட்டீங் களா?'' என்று கேட்டார்.

என்னால் உடனே பதில் சொல்ல முடிய வில்லை.. "மாநகர காவல்' படத்தில் நடந்த விஷயம் அவருக்குத் தெரியும். அதை மனதில் வைத்து அப்படிச் சொன்னார்.

தம்பி சசிகுமார் நடித்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய "சுந்தர பாண்டியன்' படத்தில் ஒரு அருமையான வசனம் வரும்.

Advertisment

"குத்துனவன் நண்பனா இருந்தா செத்தாக் கூட சொல்லக்கூடாது'. எஸ்.ஆர்பிரபாகரன்தான் இந்த வசனத்தை எழுதியிருப்பார். நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்பதற்கு இந்த வசனம் ஒரு உச்சம் என்றே சொல்லுவேன்.

நண்பனை, நட்பை நேசிக்கும் உணர்வு எனக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்தது... அதனால் சக்ரவர்த்தியிடம் கோபப்படவில்லை.

"என்ன... நான் கேட்டதுக்கு பதிலே இல்லை...'' என்றார்.

"பதில் சொல்ல முடி யாத கேள்வி கேட்டுட்டீங் களே'' என்றேன்.

"வாங்க... நேர்ல பேச லாம்'' என்றார்.

ஆனால் நான் போக வில்லை. அதற்குக் காரணம் விஜயகாந்த்.

"அண்ணே... ரோஜா கம்பைன்ஸ் படத்தை சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணணும்... அதுல கொஞ்சம் கவனம் செலுத்துங்க...'' என்றார்.

அவர் வாயிலிருந்து வருவதை நான் வார்த்தை களாக நினைப்பதில்லை. வேதமாக நினைப்பவன். எனவே "சிட்டிசன்' படப்பிரச்சினையை அத்தோடு விட்டுவிட்டேன்.

ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பாளர் கே.காஜாமைதீன் மிகவும் மென்மையான மனிதர், நல்ல தயாரிப்பாளர். தனிப்பட்ட முறையிலும் பழகுவதற்கு இனிமையானவர். அந்தப் படத்திற்கு பூஜையும் போட்டாகிவிட்டது. நான் வசனம் எழுதவேண்டும். கதை, திரைக்கதை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கதாசிரியர் சின்னி கிருஷ்ணா. அவர் கதை எழுதி, சிரஞ்சீவி நடித்த படம் பெரிய வெற்றிபெற்றிருக்கிறது.

நானும் சின்னிகிருஷ்ணாவும் கேரளா சென்று டைரக்டர் ஷாஜிகைலாஷ் அவர்களு டன் கதை விவாதத்தை முடிக்கவேண்டும். அதற்குப் பிறகு வசனம் எழுதவேண்டும்.

ஷாஜிகைலாஷ், மம்முட்டி நடித்த "வல்லியேட்டன்' படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு கேரளா, குருவாயூரில் நடந்துகொண் டிருந்தது. சின்னிகிருஷ்ணா, ஆந்திராவிலிருந்து குருவாயூர் வருவதாகச் சொல்லிவிட்டார். நானும் படத்தின் அஸோசியேட் டைரக்டர் துரைசாகிப் இருவரும் சென்னையிலிருந்து கிளம்பவேண்டும்.

சின்னிகிருஷ்ணா வருவற்குமுன் ஷாஜி கைலாஷ் என்னிடம் ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். "சின்னிகிருஷ்ணாவின் கதை பிடிக்கவில்லை' என்றார்.

"சார், நீங்க கதை கேட்டு ஓ.கே. சொல்லி, படத்திற்கு பூஜையும் போட்டாச்சு... இப்ப புடிக்கலேன்னு சொல்றீங்களே'' என்றேன்.

"இப்ப யோசனைபண்ணிப் பாக்கறப்போ கதை நல்லா இருக்கிற மாதிரி தெரியல... விஜயகாந்த் காம்பினேஷன், அதுக்குத் தகுந்த மாதிரி நான் படம் குடுக்கணும்ல'' என்றார்.

aa

"இதை எப்படி சார் சின்னிகிருஷ்ணாகிட்ட சொல்றது'' என்றேன்.

"நீங்கதான் சமாளிக்கணும்...'' என்றார்.

மறுநாள் சின்னிகிருஷ்ணா வந்தார். இரண்டு நாட்கள் கழித்து, நாங்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து சந்தேகத்துடன் கேட்டார்.

"என்ன சார்... கதையப் பத்தியே பேசமாட்டேங்கறீங்க'' என்று கேட்டார்.

நான் ஒருவழியாக அவருடைய கதை டைரக்டருக்கு பிடிக்கவில்லை என்பதைக் கூறி சமாளித்தேன்.

சின்னிகிருஷ்ணா கோபத்துடனும், ஏமாற்றத் துடனும் ஆந்திரா புறப்பட்டுப் போய்விட்டார்.

அவரை நான் சமாளித்து அனுப்பியதில் ஷாஜிகைலாஷ் நிம்மதியானார்.

"அவரை அனுப்பியாச்சு. ரோஜா கம்பைன்ஸ் ஷூட்டிங் ஆரம்பிக்கணும்... கதை வேணுமே சார்'' என்றேன் நான்.

"மம்மூட்டி படத்தை முடிச்சிட்டு சென் னைக்கு வர்றேன், நீங்க இன்னிக்கே கிளம்புங்க... வேற கதை கேப்போம். கேரளாவுல இருந்து ரைட்டர்ஸ அனுப்பி வைக்கிறேன், நீங்க கேளுங்க'' என்றார்.

சென்னை வந்து விஜயகாந்த்திடம் நடந் ததைச் சொன்னேன். அப்செட்டானார். கால்ஷீட் வீணாகிவிடுமே என்ற கவலை அவருக்கு.

டைரக்டர் ஷாஜிகைலாஷ் கேரளாவிலிருந்து சில கதாசிரியர்களை வரவைத்தார். அவர்கள் சொன்ன கதை விஜயகாந்த்துக்கு அவ்ளவு திருப்தி யாக இல்லை. பொதுவாக விஜயகாந்த் கதை கேட் பதற்கு முன் பிரேமலதா அண்ணியாரும், சுதீஷும் கேட்பார்கள். அவர்களுக்குப் பிடித்திருந்தால்தான் விஜயகாந்த் கேட்பார். நாட்கள் போய்க் கொண்டி ருந்தன, கதை அமையவில்லை. விஜயகாந்த்துக்கு டென்சன் ஏறிக்கொண்டிருந்தது.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த படம் சிவாஜி கார்டனில் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தது. அங்கு போய் ஷாஜிகைலாஷை சந்தித்தேன்.

"சார்... என் மனசுல ஒன்று தோணுது... தப்பா நெனைக்கலேன்னா கேக்கறேன்'' என்றேன்.

"கேளுங்க'' என்றார்.

aa

"உங்க மனசுல விஜயகாந்த்துக்காக ஒரு கதை வச்சிருக்கீங்கன்னு நெனைச்சி, சின்னி கிருஷ்ணாவோட கதைய வேண்டாம்னு சொல்லிட்டோம். இப்ப நம்ம கதைய சொன்னா... இதுக்காகத்தான் வேண்டாம்னு சொன்னீங்கள்னு உங்கள தப்பா நெனச்சிருவாங்கன்னு யோசிக் கிறாங்களா'' என்றேன்.

மௌனமாக இருந்தார்.

"அப்படி இருந்தா தப்பு இல்ல சார். சின்னிகிருஷ்ணா கதையவிட அது உங்களுக்கு பெட்டரா தோணியிருக்கும். நீங்க தான் டைரக்டர். எது நல்லா வரும்னு முடிவெடுக்கிற உரிமை உங்களுக்கு இருக்கு. நடந்ததை விட்ருங்க... உங்ககிட்ட கதை இருக்கா சொல்லுங்க'' என்றேன்.

"கதை இருக்கு'' என்றார்.

"சொல்லுங்க சார்'' என்றேன்.

படத்தோட ஓப்பனிங் என்று நான்கு சீன்கள் சொன்னார்... மிரண்டு போய்விட்டேன்.

அவ்வளவு அற்புதமாக இருந்தது... அவரே டைரக்டர் என்பதால் அவர் சொன்ன விதமே அழகாக இருந்தது.

அதற்குள் "ஷாட் ரெடி' என்றார்கள்.

"லியாகத் சார்... லைட் போடுறதுக்கு முன்னால சீனை முடிக்கணும்... மத்தத ரூம்ல பேசலாம்'' என்றார்.

மிகவும் மகிழ்ச்சியாக, மனநிறைவோடு சிவாஜி கார்டனில் இருந்து திரும்பினேன்.

விஜயகாந்த்திடம் வந்து சொன்னேன். நான் பிரமாதம் என்று சொன்னதால் அவருக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.

"சொல்லுங்கண்ணே கேக்கலாம்'' என்றார்.

"இல்லண்ணே... ஷாஜிகைலாஷ் சார் சொன்னாத்தான் நல்லா இருக்கும். ஷுட்டிங் முடிஞ்சு ரூமுக்கு வந்திருவாரு... அவர்கிட்டயே கேளுங்க'' என்றேன்.

கதை டிஸ்கஷனுக்காக அசோக் நகரில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் வைத்திருந்தார் ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பாளர் காஜாமைதீன் சார்.

அங்கே விஜயகாந்த், காஜாமைதீன், நான், படம் சம்பந்தமான வேறு சில முக்கியமானவர்களும் இருந்தோம். படப்பிடிப்பு முடிந்து ஷாஜிகைலாஷ் அங்கே வந்தார்.

கதையைச் சொன்னார். என்னிடம் சொன்ன அந்த நான்கு சீன்களை மட்டுமே சொன்னார்.

விஜயகாந்த் முகத்தில் மகிழ்ச்சி.

தொடர்ந்து மிச்சக் கதையை ஷாஜிகைலாஷ் சொல்லவில்லை. காரணம்... கேட்ட எல்லோருமே அந்த நான்கு சீன்களிலேயே திருப்தியாகிவிட்டார்கள்.

"மிச்சக் கதையை லியாகத் சார்கிட்ட சொல்லிர்றேன். அவரு வசனம் எழுத ஆரம்பிக்கட்டும்'' என்றார்.

மறுநாள் காலை கமலா தியேட்டர் பக்கத்தில் அவர் தங்கியிருந்த ஆதித்யா ஹோட்டலுக்குப் போனேன். என்னுடன் படத்தின் அஸோசியேட் டைரக்டர் வந்தார். அவர் கையிலே பேப்பர், பேடு எல்லாம் தயாராக வைத்திருந்தார். ஷாஜிகைலாஷ் சொல்லச் சொல்ல கதையின் ஒன் லைன் எழுதுவதற்காக.

"சார் கதைய சொல்லுங்க சார்... எழுதிக்கலாம்'' என்றேன்.

"முதல்ல காபி சாப்பிடுங்க'' என்றார்.

காபி வரவைத்துக் கொடுத்தார்.

குடித்த பிறகு அந்த அதிர்ச்சியைக் கொடுத்தார்.

"லியாகத் சார்... நான் சொன்ன நாலு சீனைத் தவிர என்கிட்ட கதை இல்ல...''

(வளரும்...)