(34) இந்திராகாந்தி இன்ஸ்பிரேஷன்!

"மாநகர காவல்' கதை என்னவென்று டைரக்டர் தியாகராஜனை நாங்கள் கேட்கவே இல்லை. ஹீரோ ஒரு போலீஸ் அதிகாரி என்பது மட்டும்தான் தெரியும்'' என்றார் ஏவி.எம். சரவணன்.

சொல்லிவிட்டுத் தொடர்ந் தார்... "நான் பார்த்துக்கிறேன் என்று விஜயகாந்த் சொன்னார். விஜயகாந்த் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் நாங்கள் கதை கேட்கவில்லை. அவரிடம் கேட்டதற்கு, "லியாகத் பார்த்துக் கொள்வார்' என்று உங்களைச் சொல்லிவிட்டார்'' என்றார்.

சரவணன் சார், விஜய காந்த் மீது நம்பிக்கை வைத் தார். விஜயகாந்த் என் மீது நம்பிக்கை வைத்தார்.

Advertisment

"கதை சரியில்லை என்று சொல்கிறீர்கள், என்ன செய்யலாம்?'' என்று கேட்டார் சரவணன் சார்.

"வேறு கதை பண்ணவேண்டும்'' என்று சொன்னேன்.

டைரக்டர் தியாகராஜனை அழைத்து, நடந்ததைச் சொன்னார் சரவணன் சார். தியாகராஜன் மென்மையான மனிதர். அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரியாது, அதிர்ச்சியும் தெரியாது.

Advertisment

"ஷெட்யூல் முடிவு பண்ணியாச்சு. லொகேஷன் பார்க்க டெல்லி கிளம்பறதுக்கு ஏற்பாடு பண்ணி யாச்சு. இந்த நேரத்துல வேற கதை எப்படி சார் பண்றது?'' என்றார்.

"பிளாக் ரெய்ன்' படத் துல இருந்து நீங்க எடுத்துக் கிட்ட மையக்கருவ வச்சு நான் கதை ரெடி பண்ணவா?'' என்று கேட் டேன்.

என் மனதில் ஒரு கதையும், திரைக்கதையும் உருவாகியிருந்தது. அதனால் கேட்டேன். இருவருமே கொஞ்சம்கூட தயங்கவில்லை. ஓ.கே. சொன்னார்கள்.

ஏவி.எம். ஸ்டுடி யோவில் எனக்கு ஒரு அறை ஒதுக்கினார் கள். பிறகு பாம் குரோவ் ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத் தார்கள். நான் பண்ணிய கதையையும் திரைக்கதை யையும் ஏவி.எம்.சரவணன் சார், தியாகராஜன் இருவரும் கேட்டார் கள். உடனே ஓ.கே. சொன்னார்கள். நினைத்ததைவிட மின்னல் வேகத்தில் கதை ரெடியானதில் அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சி.

அதை ஒரு அரசியல் கதையாக உருவாக்கியிருந்தேன். படம் பார்த்த வர்களுக்குத் தெரியும். பார்க்காதவர் களுக்காக சுருக்கமாகச் சொல்கிறேன்.

aa

"நாட்டின் பிரதமர், இந்திரா காந்தியைப் போல ஒரு பெண். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு பெரிய தலைவருக்கு பிரதமராக வேண்டும் என்று ஆசை. அரசியல் ரீதியாக பிரதமர் ரூபாவதியை வெற்றிபெற முடியாது, அவர் உயிரோடு இருக்கும்வரை பிரதம ராகவும் முடியாது. பிரதமர் ரூபாவதியைக் கொன்றுவிட்டால் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தான் பிரதமராகிவிடலாம் என்று கணக்குப் போடுகிறார். (படிப்பவர்களுக்கு "மாநாடு' படம் நினைவுக்கு வரலாம்). அதனால் பிரதமர் ரூபாவதியை கொலை செய்ய ஒரு கொலையாளியை ஏற்பாடு செய்கிறார்

பிரதமர் ரூபாவதியை கொலை செய்யும் முயற்சியில் அந்தக் கொலையாளியின் திட்டங்களை முறியடித்து ஹீரோ, பிரதமர் ரூபாவதியைக் காப்பாற்றுகிறார். இந்தக் கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை, அதற்கேற்ற கேரக்டர்கள் உருவாக்கிச் சொன்னேன். இந்திராகாந்தி என்ற பெயருக்குப் பதில் ரூபாவதி. இரண்டாம் கட்ட தலைவருக்கு மேத்தாஜி என்று வைத்தேன். மிக மகிழ்ச்சியோடு வசனம் எழுதும் வேலையை ஆரம்பிக்கச் சொன்னார் சரவணன் சார்.

டைரக்டர் தியாகராஜன், லொகேஷன் பார்ப்பதற்காக டெல்லி போய்விட்டார். அரசியல் சென்டிமெண்ட் ஆக்ஷன் கலந்த ஸ்கிரிப்ட்டாக "மாநகர காவல்' படத்தை எழுதி முடித்தேன். எழுதிய வசனங்களை சரவணன் சார், டைரக்டர் தியாகராஜன் இருவரிடமும் படித்துக் காண்பித்தேன்.

படித்து முடித்ததும் சரவணன் சார், டைரக்டர் தியாகராஜனிடம் சொன்ன ஒரே வார்த்தை "தியாகு... லியாகத் அலிகான் எழுதியதை கொஞ்சம்கூட மாத்தாம அப்படியே எடுக்கணும்'' என்றார்.

என் பக்கம் திரும்பி, "உங்களைப் பாராட்டுறதுக்கு இதைவிட வேற ஏதாவது சொல்லணுமா சார்'' என்றார்.

கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னேன். "நான் நினைத்ததைவிட நல்லா வந்திருக்கு'' என்றார். இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த்துக்கு மிகவும் மகிழ்ச்சி.

"என் நம்பிக்கையை காப்பாத்திட்டீங்கண்ணே'' என்றார்.

"மாநகர காவல்' படப்பிடிப்பு தொடங்கியது. பல நாட்கள் டெல்லியில் நடந்தது. நானும் டெல்லி போய் கூடவே இருந்தேன். சென்னையில் நடந்த படப்பிடிப்பில் சில நாட்களைத் தவிர பெரும்பாலும் கூடவே இருந்தேன். படம் முடிந்தது. ரீ-ரெக்கார்டிங் பண்ணுவதற்கு முன் டபுள் பாஸிட்டிவ் பார்த்தவர்கள், "படம் ரொம்ப நல்லா வந்திருக்கு'ன்னு சொன்னார்கள். நான் பார்க்கவேயில்லை. பார்க்கவில்லை என்பதைவிட எனக்குக் காட்டவில்லை... நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

dd

படம் இசை சேர்ப்பு முடிந்து, முழு பணிகளும் நிறைவடைந்த பிறகு... எல்லோரும் பார்க்கும் போது நானும் பார்த்தேன். படம் அருமையாக வந்திருந் தது. ஆனால் நான் அதிர்ச்சியடைந்தேன். எதற்காக நான் அதிர்ச்சியாக வேண் டும். நான் உருவாக்கிக் கொடுத்த கதையும் திரைக்கதையும் கொஞ்சம்கூட மாறாமல் அப்படியே இருந்தது. எனது சிந்தனையில் தோன்றிய ஒவ்வொரு கேரக்டர்களும் திரையில் நான் நினைத்தபடியே வந்திருந்தது. ப்ரிவியூ தியேட்டரிலேயே நான் எழுதிய வசனங்களுக்கு கைத்தட்டல் கேட்டுக்கொண்டேயிருந்தது.

போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த், அவரது இளமையும் துள்ளலும், அதிரடி ஆக்ஷனும், அரசியல் வசனங்களும் நரம்புகளை முறுக்கேற்றியது. இந்திராகாந்தி கெட்டப்பில் பிரதமர் ரூபாவதியாக லட்சுமி மேடம் பிரமிக்க வைத்திருந்தார். எம்.பி.யாக தியாகு அசத்தலாக நடித்திருந்தார். தம்பி ஆனந்த் ராஜ், மொட்டைத் தலையோடு வில்லனாகக் கலக்கியிருந்தார். அவர் வரும் பல காட்சிகளில் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. ஏவி.எம்.சரவணன் சாரே ரசித்து மகிழ்ந்தார். அன்றைய அரசியலை அப்பொழுதே நான் எப்படி எழுதியிருந்தேன் என்பது இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்வதற்காக சில காட்சிகளை நினைவூட்டுகிறேன்.

படத்திலே நடிகர் தியாகு வண்ணை வரதன் எம்.பி.யாக வருவார். பிரதமர் வரும்போது அவரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பது குறித்து தன் உதவியாளரிடம் பேசும் ஒரு காட்சி...

உதவியாளர்: ஐயா... மேடத்தோட ஆளுங்க உங்களை மேடைக்கு மேடை கிழிக்கிறானுக.

வண்ணை வரதன் எம்.பி.: பாத்தியாய்யா... அடுத்த கட்சிக்காரனுக ரூமுக்குள்ளேயே சண்டை போட்டுக்கிறானுக. நம்ம கட்சிக்காரங்க மட்டும்தாய்யா நடுவீதியில நாறடிக்கிறானுக... கட்சி எங்க உருப்படப்போகுது?

உதவியாளர்: கோஷ்டிப் பூசலுக்குப் பேருபோன கட்சி நம்ம கட்சியாச்சே...

எம்.பி: அது இருக்கட்டும்யா... இப்ப நான் என்ன செய்யணும் அதைச் சொல்லு.

உதவியாளர்: பேப்பரைப் புடிங்க... படிங்க

எம்.பி: எழுதப் படிக்கத் தெரிந்தால் நான் எதுக்கு கண்ட கண்ட கழுதைங்களோட அரசியலுக்கு வர்ரேன்? நீயே படிச்சு சொல்லு...

உதவியாளர்: பிரதமர் ரூபாவதி சென்னை வருகை!

எம்.பி: அதுதான் எனக்கு டெல்லியிலேயே தெரியுமே!

உதவியாளர்: அப்புறம் என்ன... சட்டுப் புட்டுனு ஒரு சால்வைய போட்டு அம்மாகிட்ட ஐக்கியமாகிடவேண்டியதுதானே...

எம்.பி: நீ சால்வை போர்த்தச் சொல்றே, நான் ஜமுக்காளத்தையே போர்த்தி ஐக்கியமாயிடலாம்னு இருக்கேன்...

அங்கிருக்கும் ஒருவர்: உங்களுக்கு இருக்கிற கெட்ட பேரு ஊருக்கே தெரியும்...

எம்.பி: அதை மாற்றிக் காட்றேன்டா.

ஒருவர்: ஓட்டுப் பெட்டின்னா ஈஸியா மாத்திரலாம். உங்க கெட்ட பேரை எப்படி மாத்துவீங்க?

எம்.பி: போய்யா... மேடம் வரும்போது முன்னூறு, நானூறு குடிசைங்க எரியணும். அப்பாவி ஜனங்க ஆதரவு இல்லாம நடுரோட் டுல நிக்கணும். நான் ஓடோடிப்போய் அவங்க கண்ணீரைத் துடைக்கணும். என் சொந்தச் செலவில் அவங்களுக்கு புதுசா குடிசை போட் டுத் தரணும். அது மட்டுமில்ல... என் செலவுல யே இலவசமாக அவங்களுக்கு அரிசி, புடவை, வேஷ்டி.... மேடத்து கையால குடுக்க வைக்க ணும். அப்படிக் கொடுக்க வச்சா, ஒரே நேரத் துல ஜனங்களும் பாராட்டுவாங்க... மேடமும் பாராட்டுவாங்க. எப்படி என் யோசனை?

உதவியாளர்: கேக்குறதுக்கு நல்லாதாங்க இருக்கு. ஆனா மேடம், வர்ற நேரத்துல குடிசைங்க எரியணுமே?

எம்.பி: போய்யா, ஏழைங்க குடிசைங்க என்னிக்கு தானா எரிஞ்சது. நாமதாண்டா எரிய வைக்கணும்.

இதுதான் அந்தக் காட்சி.

இப்படி... அரசியலின் மறுபக்கத்தை வசனங்களால் அலசி ஆராய்ந்திருந்தேன். அதற்காகத்தான் அவ்வளவு பாராட்டு. ஆனா லும் நான் அதிர்ச்சியடைந்தது ஏன்...?

(வளரும்...)

படம் உதவி: ஞானம்