(33) கதை... உருவான கதை!
என்.ஆர்.சிவபதி அப் போது கல்வி அமைச்சர்.
வட சென்னையைச் சேர்ந்த கட்சி நிர்வாகி, எனக்கு மிகவும் வேண்டி யவர்... என்னைப் பார்க்க வந்தார். அவரு டன் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் கைக்குழந்தையுடன் வந்தார். கூட அவருடைய கணவரும் வந்திருந்தார்.
கட்சிக்கார நண்பர் என்னிடம் சொன்னார். "இவங்க டீச்சரா இருக்காங்க. டிரான்ஸ்பர் கேட்டு வந் திருக்காங்க. அமைச்சர்கிட்ட கேட்டு வாங்கிக் குடுங்க பிரதர்'' என்றார்.
"அண்ணே… அப்படியெல்லாம் போய்க் கேட்டு எனக்கு பழக்கம் இல்ல.… நான் அதை விரும்பறதும் இல்ல.… சினிமாவுலயே நான் யார்கிட்டயும் வாய்ப்புக் கேட்டுப் போய் நின்னதில்ல.… என்னை சிங்கம் மாதிரி விஜயகாந்த் வச்சிருந்தாரு'' என்றேன்.
"எப்படியாவது வாங்கித் தர்றேன்னு கூட்டிட்டு வந்துட்டேன்'' பிரதர் என்றார்.
"ஏண்ணே... நீங்களே கட்சி நிர்வாகிதான… நீங்க போய் கேக்கலாம்ல?''
"இல்ல பிரதர்… நீங்க கேட்டா நிச்சயம் பண்ணிக் குடுப்பார்...'' நான் பதில் சொல்வதற்கு முன் கைக்குழந்தையோடு நின்றிருந்த அந்த ஆசிரியை கண்கலங்கியவாறு பேசினார்.
"சார்… நான் வேலை பார்க்கற ஸ்கூலுக்கு எங்க ஊர்ல இருந்து ரெண்டு பஸ் மாறி மாறிப் போகணும். ஸ்கூல் முடிஞ்சதும் ரெண்டு பஸ் மாறி ஊருக்கு வரணும். அதனால காலையில வீட்டுல இருந்து சீக்கிரம் கிளம்பணும்… சாயங்காலம் இருட்டுனதுக்கு அப்புறம்தான் வீட்டுக்கு வரமுடியும். கைக்குழந்தையை விட்டுட்டு என்னால போயிட்டு வர முடியல சார்.… எப்படியாவது எங்க ஊர் பக்கத்துல இருக்கிற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் குடுங்க சார்'' என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
அவர் கணவரும் "ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.… தாய் இல்லாம கைக்குழந்தைய எப்படி சார் பாத்துக் கிறது.… அட்ஜஸ்ட் பண்ணி பாத்துக்கலாம்னா அதுக் கும் ஆள் இல்ல சார், ப்ளீஸ் சார்''…என்றார்.
எனக்கும் கண் கலங்கியது. நான் ஒரு சினிமாக்காரன். என் கண் முன்னால் நடந்தது சினிமாவில் வரும் சென்ட் டிமெண்ட் காட்சிபோல இருந் தது. என் கண்முன்னே நின்றி ருந்த ஆசிரியை என் சகோதரி போலத் தெரிந்தார்… நான் இதை விரிவாகச் சொல்வதற்கு அது தான் காரணம்.
"சரிம்மா… நான் ட்ரை பண் றேன்'' என்றேன். அமைச்சர் வீட் டுக்கு நான் மட்டும் போனேன். கையிலே அந்த சகோதரி கொடுத்த டீடெய்ல்ஸ். அமைச் சரின் அறைக்கு வெளியே "தயவு செய்து டிரான்ஸ்பர் கேட்டு யாரும் வரவேண்டாம்!' என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அமைச்சரின் உதவியாளரிடம் எனது விசிட்டிங் கார்டை கொடுத்தனுப்பினேன். உடனே அழைப்பு வந்தது. உள்ளே போனேன்.
அமைச்சரின் ஊர்க் காரர்கள் ஐந்தாறு பேர் நின்றி ருந்தார்கள். அவர்களிடம் அமைச்சர் சொல்லிக்கொண்டி ருந்தார். "வெளியே நோட்டீஸ் பாத்தீங்கள்ல,…எல்லாம் முடிஞ்சு போச்சு...… நீங்க எவ்வளவு கெஞ்சு னாலும் பிரயோஜனம் இல்ல, உள்ள போய் சாப்பிட்டுட்டு ஊருக்குப் போங்க' என்றார். வாடிய முகத்தோடு அவர்கள் கிளம்பினார்கள்.
என் பக்கம் திரும்பினார். "வாங்கண்ணே...… என்ன போன் கூட இல்லாம திடீர்னு வந்திருக்கீங்க.''
"ஒரு டிரான்ஸ்பர் கேட்டு வந்தேன்.''
"அவங்ககிட்ட சொன் னதைக் கேட்டீங்கல்ல.''
"கேட்டேன். நான் சொல்றதையும் நீங்க கொஞ்சம் கேளுங்க'' என்று என்னை நம்பி வந்த அந்த ஆசிரியை கதையைச் சொன்னேன்.
"அவங்க என்னை நம்பி வந்தாங்க. நான் உங்கள நம்பி வந்திருக் கேன். அவங்ககிட்ட நான் பணம் வாங்கிட்டு வரல.. ஒரு சகோதரியா நெனைச்சு வந்தேன்'' என்றேன்.
சிறிது கூட யோசிக்கவில்லை. "நானும் உங்களை சகோதரரா நெனச்சு இதை பண்ணிக் குடுக்கிறேன்'' என்றார். இதுதான் மனிதாபிமானம்.
அந்த ஒரு அமைச்சரைத் தவிர வேறு எந்த அமைச் சரிடமும் ஒரு சின்ன டிரான்ஸ்பர் கூட வாங்கிய தில்லை. பத்து வருட ஆட்சியிலே நான் பெற்ற ஒரே சலுகை... அதுவும் ஒரு சகோதரிக்காக.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் எனது அரசியல் பயணம் தூய்மையானது. இந்தத் தொடரில் நான் எழுதி வருபவை எழுதப் போவது எல்லாம் உண்மை யானவை என்பதை உறுதிப்படுத்து வதற்காகத்தான்.
ஓ.பி.எஸ். அவர்களின் தர்மயுத்தம் தொடங்கியது முதல் அது முடியும்வரை என்ன நடந்தது என்பதை நான் இந்தத் தொடரில் எழுத வேண்டும்.
அதற்கு முன்... "மாநாடு' படம் போலவே ஒரு கசப்பான அனுபவம் இன்னொரு படத் திலும் உண்டானது என சொல்லியிருந்தேன் அல்லவா? அதைச் சொல்கிறேன்...
புகழ்பெற்ற ஏவி.எம். நிறுவனம் தயாரித்து, விஜயகாந்த்தின் நடிப்பில் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான வெற்றிப்படம் "மாநகர காவல்'. கதை -திரைக்கதை -வசனம் -டைரக்ஷன் எம்.தியாக ராஜன். வசனம் எழுதுவதற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அப்பொழுது கதை என்னவென்று எனக்குத் தெரியாது, நானும் கேட்கவில்லை. வேறு படங்களில் நான் பிசியாக இருந்தேன். பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கு வதற்கு சில வாரங்களுக்கு முன் ஏவி.எம்.சரவணன் சாரை சந்திக்குமாறு எனக்கு அழைப்பு வந்தது. நான் உடனே அவரை போய் பார்த்தேன். "டைரக்டரும் கேமராமேனும் படப்பிடிப்புக்கான லொகேஷன் பார்க்க டெல்லி செல்லப் போகிறார்கள் அதற்குள் நீங்கள் டைரக்டரிடம் கதையைக் கேட்டு விடுங்கள். அது குறித்து விவாதித்துவிட்டு நீங்கள் வசனம் எழுத ஆரம்பியுங்கள்'' என்றார். டைரக்டர் எம்.தியாகராஜனுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அவரிடம் "மாநகர காவல்' படத்தின் கதையைக் கேட்டேன். சொல்லி முடித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கேட்டார் தியாகராஜன்.
"நாளை பேசலாம்'' என்று கூறிவிட்டு நான் சரவணன் சாரைக் கூட சந்திக்காமல் வந்துவிட்டேன்.
"பிளாக் ரெயின்' என்ற ஆங்கில படத்தின் மையக் கருவை எடுத்துக் கொண்டு கதை தயார் செய்திருந்தார். அந்த மையக் கருவின் சுருக்கம்:
"வேறு ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரு குற்றவாளியை ஹீரோ பிடிக்கிறார். அந்த நாட்டு சட்டப்படி குற்றவாளியை அங்கு வைத்திருக்கக்கூடாது. அந்தக் குற்றவாளியை அவன் நாட்டில் ஒப்படைக்க வேண்டும். அந்த நாட்டு விமான நிலையத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வருகிறார்கள். அவர் களிடம் குற்றவாளியை ஹீரோ ஒப்படைக்கிறார். காவல்துறை வாகனத்தில் குற்றவாளியை ஏற்றிக்கொண்டு போலீஸ் போன சில நிமிடங்களில், இன்னொரு போலீஸ் வாகனம் வருகிறது. அதிலிருந்து காவல்துறை அதிகாரிகள் இறங்கி ஹீரோவிடம் வருகிறார்கள். "குற்றவாளி எங்கே?' என்று கேட்கிறார்கள். "போலீசிடம் இப்போதுதான் ஒப்படைத்தேன்' என்று ஹீரோ கூற, "நாங்கள்தான் உண்மையான போலீஸ். நீ திட்டமிட்டு குற்றவாளியை அவருக்கு வேண்டியவர்களிடம் ஒப்படைத்திருக்கிறாய்' என்று கூறி ஹீரோவை கைது செய்கிறார்கள். இதுதான் அந்த மையக் கரு
மறுநாள் ஏவி.எம்.சரவணன் சாரை போய் பார்த் தேன். "கதை கேட்டீங்களே எப்படி இருக்கு''ன்னு கேட்டார்.
"பிடிக்கல என்று சொல்வதைவிட, நல்லா இல்ல... வில் லன், கடத்தல் கும்பல் தலைவன், போதை மருந்து கடத்தும் அந்த கும்பலை எப்படி ஹீரோ புடிக்கிறார் என்பது எந்தக் காலத்து கதை சார்? ஒரு பழைய கதையை பண்ணி யிருக்காங்க. இண்ட்ரஸ்டிங்கா இல்லாத திரைக்கதை. இதை எப்படி நீங்க ஓ.கே. பண்ணுனீங்க?'' என்று கேட்டேன்.
என்னுடைய கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதற்கு அவர் சொன்ன பதில், நான் எதிர்பாராதது.
அவர் சொன்னார்... "லியாகத் சார், ஏவி.எம். நிறுவனத் துல எங்கப்பா காலத்துல இருந்து இப்பவரைக்கும், நாங்க கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். அந்தக் கதைக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணச் சொல்லுவோம். அதை யார் டைரக்ட் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று முடிவு பண்ணுவோம். மூன்று இயக்குநர்களை லிஸ்ட்டில் வைத்துக் கொள்வோம். கதை பிடிக்கவில்லை என்று சொல்லும் இயக்குநரை லிஸ்டில் இருந்து நீக்கிவிடுவோம். நாங்கள் ஓகே செய்த கதை எந்த இயக்குநருக்குப் பிடிக்கிறதோ அவரைத் தான் டைரக்டராக முடிவு செய்வோம்'' என்றார்.
"நல்ல கதையை முடிவு செய்கிற நீங்கள் எப்படி சார் ஒரு சரியில்லாத கதையை ஓ.கே. செய்தீர்கள்?'' என்று கேட்டேன்.
(வளரும்...)