(28) சந்தர்ப்பவாதமாகவும் தெரியுது சங்கடமாவும் தெரியுது!
என் வீட்டின் முன்னால் ஒரு கார் வந்து நின்றது. மன்சூரலிகான் இறங்கி உள்ளே வந்தான். என்னிடம் சொல்லாமல் வந்தது எனக்கு வியப்பாக இருந்தது
"என்ன மன்சூர் திடீர்னு?''
"ஐயா, லுங்கிய கழட்டி வீசிட்டு பேன்ட் மாட்டுங்க... போகலாம்..''
"எங்க?''
"நான் உங்கள தப்பான எடத்துக்கா கூட்டிட்டுப் போகப்போறேன்... கிளம்புங்க''
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. பக்கத்துல ஒரு கெஸ்ட்ஹவுஸ்ல போய் கார் நின்றது.
"வாங்கய்யா...''
போனேன். அருமையான சூட் ரூம்.
"உங்களுக்கு ரூம் போட்டுட்டேன், கதை ரெடி பண்ணுங்க. உங்களுக்காகவே ஒரு படம் தயாரிக்கப்போறேன். நீங்கதான் கதை -திரைக்கதை -வசனம்- டைரக்ஷன் எல்லாம்'' என்றான்.
"மன்சூர் நேத்து நான் ஃபீலிங்ல சொன்னேன். அதுக்காக இப்படி அதிரடியா முடிவெடுத்துட்ட.... வேணாம் மன்சூர்.''
"அதெல்லாம் முடியாது, நான் முடிவு பண்ணிட்டேன்... அடுத்த வாரமே ஷுட்டிங் போயிரலாம்.''
"அடுத்த வாரமா... ஒரு வாரத்துக்குள்ள எப்படி கதை பண்ணி, திரைக்கதை அமைச்சு, வசனம் எழுத முடியும்?''
"உங்களால் முடியும். நீங்க பண்ணியிருக்கீங்க. நாளைக்கு உங்கள் அஸிஸ்டெண்ட்களை வரச்சொல்லிருங்க'' என்று எனக்கு உத்தரவு போட்டான். என்னால் மறுக்க முடியலை.
மறுநாள் என் உதவியாளர் வந்தார், மன்சூரலிகானும் வந்தான்.
"ஐயா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்...''
"சொல்லு மன்சூர்...''
"கேப்டனை விட்டு (விஜயகாந்த்) நீங்க பிரிஞ்சு வந்திருக்கக்கூடாது?''
"மன்சூர் ஒரு வார்த்தையில் இதுக்கு பதில் சொல்ல முடியாது. விளக்கமா சொன்னாலும் என்னோட வலிய கேக்கிறவங்களால முழுசா உணர முடியாது.''
"நான் அதுக்குச் சொல்லல ஐயா... அவரு கூட நீங்க இருந்திருந்தா அவருக்கு அடுத்த இடத்துல நீங்க இருந் திருப்பீங்கள்ல''
"இருக்கவிடமாட்டாங்கன்னு தெரிஞ்சுதான மன்சூர் விலகி வந்துட்டேன்.''
"உங்களுக்கு இழப்போ இல்லியோ... நீங்க அவர்கூட இல்லாதது, அவருக்கு இழப்புங்கய்யா''
-இது மன்சூரலிகான் சொன்னது.
"அதெப்படி எனக்கு இழப்பு இல்லேன்னு சொல்றே. அவருக்காக நான் இழந்ததையெல்லாம் சொன்னா ஒரு பட்டியல் போட வேண்டியிருக்குமே மன்சூர்.''
"சில விஷயங்கள் எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயங்கள நீங்க சொன்னாத்தான ஐயா தெரியும்.''
"ஒரே ஒரு விஷயத்த மட்டும் சொல்றேன். அது எவ்வளவு பெரிய இழப்புன்னு நீயே சொல்லு...''
"சொல்லுங்கய்யா...''
"கலைஞர் என்மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்தார். என் வசனத்துக்காக எவ்வளவு பாராட்டியிருக்காரு. தளபதி கூட பழகியிருக்கேன். அதையெல்லாம் இவருக்காகத்தானே இழந்தேன்.''
"தெரியும்யா...''
"விஜயகாந்த்தை அரசியலுக்கு கொண்டு வரணும், அவரு முதலமைச்சரா ஆகணும்னு நெனைச்சே கதை பண்ணேன்.... எழுதுனேன். அந்தப் படங்களப் பார்த்துட்டு கலைஞர் என்மேல வருத்தப்பட்டாருன்னு சிலபேரு சொன்னாங்க'' என்று சொல்லி, அந்த சம்பவத்தை மன்சூரிடம் விளக்கினேன்.
"மங்கை' அரிராஜன்... இன்று தயாரிப்பாளர், இயக்குநர். "ஏழை ஜாதி' படத்தில் எனக்கு உதவி இயக்குநர். கலைஞர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். அரிராஜன் எழுதிய கதைக்கு கலைஞரே வசனம் எழுதியிருக்கிறார்.
ஒருநாள் அரிராஜனிடம் கலைஞர் சொன்னாராம்...
"என்னப்பா, லியாகத் அலிகான் நம்ம பையன்... நம்மளையே அட்டாக் பண்ணி எழுதுறாரே'' -இதை மங்கை அரிராஜனே என்னிடம் சொன்னார்.
இன்னொரு நிகழ்வு.
என் வீடு இப்போது வடபழனியில் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தேனாம்பேட்டையில் இருந்தேன். பாபு என்ற வழக்கறிஞர் தளபதியின் நண்பர். எனக்கு நல்ல பழக்கம். அவர் புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் வைத்திருந்தார்.
அழைப்பிதழில் மு.க.ஸ்டாலின் பெயரும், நான் அப்போது திரையுலகில் பரபரப்பாக இருந்ததால் என் பெயரையும் போட்டிருந்தார்.
கிரகப்பிரவேசத்திற்கு முதல்நாள் ஒரு நண்பர் என்னைச் சந்தித்தார். அவர் தி.மு.க.காரர். "நேத்து தளபதி உங்களைப் பத்தி பேசிக்கிட்டிருந்தாராம். உங்க படங்கள்ல நீங்க எழுதுன வசனங்களைப் பத்திச் சொல்லி உங்கமேல கோபப்பட்டாராம்'' என்றார். அவருக்கு வேறு யாரோ சொல்லியிருக்கிறார்கள்.
நான் தளபதியின் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன். ஒருவேளை அந்த நண்பர் சொன்னது உண்மையாக இருந்து நாளை கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் வைத்து என்னிடம் கேட்டுவிட்டால்... யோசித்தேன்! ஒரு நல்ல நிகழ்ச்சியிலே அது நடக்கவேண்டாம் என்று நான் போகாமல் தவிர்த்துவிட்டேன்.
கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ எத்தனையோ விமர்சனங்களை, எத்தனையோ படங்களில் பார்த்தவர் கலைஞர். எத்தனையோ வசன கர்த்தாக்கள் பேசியதைக் கேட்டவர் கலைஞர். அவற்றையெல்லாம் தூசு மாதிரி தட்டிவிட்டுப் போனவர் கலைஞர். என்மீது என்ன கோபம் என்றால் நான் அவருடைய உடன்பிறப்பு என்று நினைத்தார். ஆனால் அந்த அன்பையெல்லாம் பெரிதாக நினைக்காமல் அவர்கள் கோபப்பட்டாலும், வருத்தப்பட்டாலும் பரவாயில்லை, விஜயகாந்த்தான் முக்கியம் என்று நினைத்தேன். அவருக்காக எழுதினேன், இயக்கினேன். எனக்கு பக்கபலமாக இப்ராகிம் ராவுத்தர் இருந்தார். எங்கள் இருவரின் திட்டம், செயல் எல்லாமே விஜயகாந்த் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான். இதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
விஜயகாந்த்துக்காக, கலைஞர் அவர்களை... தளபதி அவர்களை... உறுப்பினராக இல்லா விட்டாலும் தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை இழந்துவிட்டேன். இப்பொழுது விஜயகாந்த்தையும் பிரிந்து வந்து விட்டேன். விஜயகாந்த்தை மட்டுமல்ல... ஆயிரக்கணக்கான ரசிகர்மன்ற நிர்வாகி களை, என்மீது பாசம் வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பிரிந்துவிட்டேன்.
"இனிமேல் எனக்கு ஒரு நல்லது, கெட்டது என்றால் கலைஞரிடமும் போக முடியாது, தளபதியிடமும் போகமுடியாது, விஜயகாந்த்திடமும் போகமுடியாது' என்று தான் எனக்கு வேத னையாக இருக்கிறது''
என்று மன்சூரலிகானிடம் விவரித்தேன்.
"கலைஞரைப் போய் பார்க்கவேண்டி யதுதானேய்யா'' என்றான் மன்சூர்.
"இல்ல மன்சூர்... விஜயகாந்த்தை விட்டு விலகிட்டதுனால கலைஞரைப் போய் பாக்கறது எனக்கு சந்தர்ப்பவாதமா தெரியுது, சங்கட மாவும் தெரியுது. பேசாம அ.தி.மு.க.வுக்குப் போயிரலாம்னுகூட தோணுது. எனக்கும் நாலுபேரு வேணும்ல மன்சூர்'' என்றேன்.
"ஏண்ணே... உங்க ப்ளட்டே தி.முக. ப்ளட். நீங்க அ.தி.மு.க.வுக்கா...? நம்ப முடியலண்ணே'' என்றான் மன்சூர்.
"இல்ல மன்சூர், நான் சின்ன வயசுல இருந்து எம்.ஜி.ஆரையும் ரசிச்சவன். அவரும் தி.மு.க.வுல இருந்தவருதான். அவரு எப்படி யெல்லாம் வாரி வாரிக் கொடுத்த வள்ளல்னு நான் சின்னப்புள்ளையா இருக்கிற காலத்துல இருந்தே கேள்விப்பட்டிருக்கேன். நான் திரையுலகிற்கு வந்த பின்னால இன்னும் நிறைய கேள்விப்பட்டேன்.
எம்.ஜி.ஆர். படத்துக்கு எழுதுன ஒரு எழுத்தாளர் என்கிட்ட சொன்னார். "நான் எம்.ஜி.ஆர். நடிச்ச மூணு படத்துக்கு வசனம் எழுதியிருக்கேன். அப்போ எனக்கு முப்பதாயிரம் சம்பளம். படம் முடிஞ்சதும் எம்.ஜி.ஆர். கூப்பிடுவாரு... "என்னண்ணே... தயாரிப்பாளர் சம்பளம் முழுசா செட்டில் பண்ணிட்டாரா?'ன்னு கேட்பாரு. "பண்ணிட்டாரு'ன்னு நான் சொல்லுவேன். எம்.ஜி.ஆர். அவர் பணத்துல இருந்து இன்னொரு முப்பதாயிரம் எனக்கு குடுப்பாரு'' என்றார்.
சொல்லிவிட்டு என்னிடம் கேட்டார். "எம்.ஜி.ஆருக்கு நான் மூணு படத்துக்கு எழுதுனதுக்கே அள்ளிக் குடுத்தாரு. நீங்க விஜயகாந்த் துக்கு நிறைய எழுதியிருக் கீங்க. 100 நாளு, வெள்ளி விழான்னு ஓடியிருக்கு. விஜயகாந்த் உங்களுக்கு, சென்னையில வீடெல்லாம் வாங்கிக் குடுத்திருப் பாரே?''ன்னு கேட்டார்.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்