ll

(9) முத்தமிழ் அறிஞரின் முத்துக்கள்!

லைஞர் எழுதிய "பராசக்தி', "மனோகரா' படங்களின் வசனங்களைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம், மூலை முடுக்கெல்லாம் இசைத்தட்டுகளாய் ஒலித்தன.

பரீட்சை எழுதப்போகும் மாணவ னைப் போல புதிதாக நடிக்க வாய்ப்புக் கேட்டுப் போகிறவர்களுக்கு "பராசக்தி', "மனோகரா' படத்தின் வசனங்கள் பாடப் புத்தகங்கள் போல ஆயின.

Advertisment

"எதாவது சீன் நடிச்சுக் காட்டு பாக்கலாம்?' என்று தயாரிப்பாளரோ, டைரக்டரோ சொன்னால், வாய்ப்பு கேட்டுப்போன அன்றைய இளைஞர்கள் பேசி நடித்துக் காட்டியது அந்தப் படங்களில் கலைஞர் எழுதிய வசனங்களைத்தான்.

அப்படிப் பேசிக்காட்டி வாய்ப்பு கிடைத்து பெரிய, பெரிய நடிகர்களான பிறகுகூட பலர் மனம் திறந்து சொல்லியிருக்கிறார்கள்.

சின்னச் சின்ன வசனங்களில் கூட கலைஞரது சில்மிஷம் தெரியும். யாரை விமர்சிப்பது, யாரை நக்கல், நையாண்டி செய்வது என்பதும் அவருக்குத் தெரியும்.

Advertisment

"பராசக்தி' படத்தில் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கும் ஹீரோ சிவாஜியை, கான்ஸ் டபிள் எழுப்புவார்.

"டேய்... நீ பிக்பாக்கெட்டா...?' என்று கேட்க...

"இல்லை... எம்ப்டி பாக்கெட்' என்று சிவாஜி சொல்வார்.

"ஏண்டா முழிக்கிறே...''

"தூங்குறவனை எழுப்பினா முழிக்காம என்ன பண்ணுவான்?''

-இப்படியெல்லாம் ரசிக்க வைப்பார்.

"சிங்கத் திருநாடே... நீ சிலந்திக்காடாக மாறியது எப்போது...?

நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாட்களாக?

வீரப்பெண்ணின் ஏடுகளை எழுதி எழுதி

ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே...

நீ வீதிகளிலே விபச்சாரிகளைத் திரியவிட்டு

உன் விழிகளை மூடிக்கொண்டது ஏன்?

வானத்தை முட்டும் மாளிகைகள்!

மானத்தை இழந்த மனிதர்கள்...

உயர்ந்த கோபுரங்கள்! தாழ்ந்த உள்ளங்கள்...''

-இப்படி கலைஞர் எழுதி, சிவாஜி பேசும்போது இப்பொழுது கேட்டாலும் உடம்பு சிலிர்க்கிறதா இல்லையா?

அந்தக் காலத்து இளைஞர்கள் இந்த வசனங்களைக் கேட்டு எப்படி சிலிர்த்துப் போயிருப்பார்கள்?

"மனோகரா' படத்தில் சிவாஜியை சங்கிலியால் கட்டி தர்பார் மண்டபத்துக்கு இழுத்துவரும் காட்சி, எத்தனை இதயங்களை சுண்டியிழுத்தது.

இந்த வசனங்களையெல்லாம் பேசிப் பேசி மகிழ்ந்த ரசிகர்கள் எத்தனை பேர். இப்பொழுது கேட்டாலும், ஏன் எப்பொழுது கேட்டாலும் தமிழ் கொஞ்சி விளையாடும்!

ll

அரசனுக்கும் மனோகரனுக்கும் (சிவாஜிக்கும்) நடந்த அனல் தெறிக்கும் வசனங்கள், தெரியாத இளைஞர்கள்... இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது தமிழுக்குப் பெருமை என்று நினைக்கிறேன்.

அரசன்: மனோகரா! உன்னை ஏன் அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக்கொள்ளுங்கள் தயவு செய்து. அழைத்து வரவில்லை, கட்டி இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள்.

அரசன்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ...

மனோகரன்: கட்டளையா இது? கரைகாண முடியாத ஆசை. பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து... கண்ணே, முத்தே, தமிழ் பண்ணே என்றெல்லாம் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே வீரனே... என் வழி நிறைந்தவனே என்று யாரை சீராட்டி பாராட்டினீர்களோ... அவனை, அந்த மனோக ரனை சங்கிலியால் பிணைத்து சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டுமென்ற உங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே..? -என்று சிவாஜி பேசும்போது, அதைக் கேட்டவர்களின் நரம்புகள் முறுக்கேறியதா இல்லையா?

அரசன், அதாவது மனோகரனின் தந்தை, தன் மனைவியை விட்டுவிட்டு வேறு ஒரு மோசக்காரியிடம் மயங்கிக் கிடப்பார். அவளிடம் மனோகரனை மன்னிப்புக் கேட்குமாறு சொல்வார். மனோகரனின் தாயை (அதாவது... தன் மனைவியை) வேசி என்று சொல்லியிருப்பார்.

அரசன்: வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்தசேனையிடம் நீ மன்னிப்புக் கேட்கவேண்டும்.

மனோகரன்: "கோட்டைக் கொத்தளங்களை நினைத்துக் கிடந்த நெஞ்சம் இந்தக் குட்டிச்சுவரின் நிழலில் அல்லவா குளிர்ச்சி காணுகிறது. புருஷோத்தமரே... புரட்டுக்காரியின் உருட்டும் விழியிலே உலகத்தைக் காண்பவரே... மான மொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையிலே மாசாக வந்தவரே... மந்திக்கும் மயிலுக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே... குளிர்நிலவை கொள்ளிக்கட்டை என்று கூறிய குருடரே...

என் தாய் அன்பின் பிறப்பிடம், அறநெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம்... அவர் களை அவதூறு கூறிய உங்களது அங்கங்களை பிளந்தெறிவேன். துணி விருந்தால்... தோளிலே வலுவிருந்தால் எடுத்துக்கொள்ளும் உமது வாளை, தடுத்துக்கொள்ளும் உன் சாவை...''

என்று சிவாஜி, கலைஞரின் வசனத்தைப் பேசும்போது தமிழ்நாட்டு ரசிகர்கள் சிலிர்த்துப்போனார்கள் என்பது வரலாறு.

"பூம்புகார்' திரைப்படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி கையில் சிலம்புடன் அனல் தெறிக்கப் பேசும்போது திரையிலே தீப்பற்றிக் கொள்ளுமோ என்ற ஆக்ரோஷமும், ஆவேசமும் தோன்றியதா... இல்லையா...?

கலைஞர் எழுதிய எந்த வசனத்தை குறிப்பிட்டுச் சொல்வது.

கண்முன்னே கோடி முத்துக்கள் கொட்டிக் கிடக்கும்போது எந்த முத்தை அடையாளம் காட்டுவது?

ll

இதைப் படிக்கின்ற சிலருக்கு இது பழைய விஷயங்களாகத் தெரியலாம். இது பழைய விஷயமல்ல... தமிழ்த் திரைப்படங்களில் இப்படியெல்லாம் கூட வசனம் எழுத முடியுமா என்று வியக்க வைத்த விஷயம்!

எத்தனை வரலாறுகள், கலைஞரின் பேனா மூலம் வசனங்களாக கிடைத்திருக்கின்றன. எத்தனை இலக்கியங்கள் எளிமையாகவும், வலிமையாகவும் கலைஞரின் வசனங்கள் மூலம் தமிழர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது.

கலைஞர் என்ற வசனகர்த்தா -ஒரு கருவூலம்.

கலைஞர் என்ற வசனகர்த்தா -ஒரு கற்பக விருட்சம்.

சாதனை படைத்த எத்தனையோ வசன கர்த்தாக்களின் வசனங்களை நடிகர்-நடிகைகள் பேசியதைக் கேட்டு கைதட்டினார்கள் ரசிகர்கள். ஆனால் வசனம் கலைஞர் என்ற டைட்டிலைப் பார்க்கும்போதே கைதட்டினார்கள் ரசிகர்கள். அதுதான் கலைஞருக்கு கிடைத்த தனிச் சிறப்பு.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடந்த திருப்புமுனைக்கும், வளர்ச்சிக்கும் பல நேரங்களில் நட்பே காரணமாக இருந்திருக்கிறது. எனக்கும் அது பொருந்தும்.

நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்பு, மதுரையில் எனக்கு வேண்டிய ஒரு ஜூஸ் கடையில் அவரைச் சந்தித்தேன். பெயர் புகழேந்தி. அரசாங்க வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். சிவபக்தர், முருக பக்தர் என்று சொல்வது போல தீவிரமான தி.மு.க. பக்தர்.

நானும் கலைஞர் அவர்களால் கவரப்பட்டவன் என்பதால் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நட்பாக மலர்ந்தது என்பதைவிட எனக்கு ஒரு சகோதரர் கிடைத்தார் என்றுதான் கூறவேண்டும்.

அவர் ஒரு நல்ல சிந்தனையாளர்; கற்பனையாளர். அரசியல், சினிமா, இலக்கியம் என்று சகலத்தையும் தெரிந்தவராக இருந்தார். அவற்றின் மீது தீவிர காதலும் கொண்டிருந்தார். அவரிடமிருந்து நான் தெரிந்துகொண்டது நிறைய...! பழைய வரலாறுகளையும் சொல்வார், பார்த்த படங்களைப் பற்றியும் அலசுவார், கட்சிகளைப் பற்றிப் பேசுவார். தலைவர்களைப் பற்றி எனக்குத் தெரியாத விஷயங்களையெல்லாம் தெளிவாகப் பேசுவார். இருவருக்கும் ஒரே உணர்வு, திராவிட உணர்வு.

கவிஞர்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் பாடல்களைப் பற்றி அவர் விமர்சிப்பதே அழகாக இருக்கும். சினிமா ஆசையில் இருந்த எனக்கு அது சுவையாகவும் இருந்தது, தேவையாகவும் இருந்தது.

வேதனையைத் தீர்த்து நம்பிக்கையைத் தந்த பாட்டு...!

(வளரும்...)

படம் உதவி: ஞானம்