(29) மாநாடு மர்மம்!
அரசியல் கட்சியில் இணை வது பற்றி மன்சூரலிகானிடம் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு சம்பவத்தையும் சொன்னேன்.
எம்.ஜி.ஆர். படங்களுக்கு கதை எழுதிய ஒரு வசனகர்த்தா, "எம்.ஜி.ஆருக்கு நான் மூணு படத்துக்கு எழுதுனதுக்கே அள்ளிக் குடுத்தாரு. நீங்க விஜயகாந்த்துக்கு நிறைய எழுதியிருக்கீங்க. 100 நாள் படம், வெள்ளி விழா படம்னு கொடுத்தீங்களே. விஜயகாந்த் உங்களுக்கு, சென்னையில வீடெல்லாம் வாங்கிக் குடுத்திருப்பாரே?''ன்னு கேட்டார் என்பதையும் மன்சூரிடம் சொன்னேன்.
"நாடறிந்த திரைப்பட வசனகர்த்தாவாக லியாகத் அலிகான் என்கிற என் புகழையே வாங்கிக் கொடுத்திருக்கிறாரே அது போதாதா?'' என அந்த வசனகர்த்தாவிடம் நான் சொன்னதையும் மன்சூரிடம் தெரியப்படுத்தினேன்.
விஜயகாந்திற்காக தி.மு.க. தலைமையுடன் நெருங்க முடி யாமல் போனதை யும், விஜயகாந்த்துட னும் இருக்கமுடியாமல் போனதையும் மன்சூரலிகானிடம் சொல்லி அ.தி.மு.க.விற்கு போகலாம் என நினைத்ததையும் சொன்னேன். மேலும் நான் அவரிடம் சொல்லும்போது...
"அதுமட்டுமில்ல மன்சூர். எம்.ஜி.ஆர். நடித்த "எங்கள் தங்கம்' படத்தில் "நான் அளவோடு ரசிப்பவன்' என்ற கவிஞர் வாலியின் பாடல் வரிக்கு அடுத்த வரி... "எதையும் அளவின்றிக் கொடுப்பவன்' என்ற வரியைச் சொன்னவரே கலைஞர்தான். கலைஞரால் புகழப்பட்ட எம்.ஜி.ஆர். தொடங்கியதுதானே அ.தி.மு.க. இப்போ ஜெயலலிதா அம்மா அதை எவ்வளவு ஸ்ட்ராங்கா வச்சிருக்காங்க. அவங்க ளோட துணிச்சல் எனக்கு ரொம்பப் புடிக்கும். ஒரு இரும்புப் பெண்மணியா இருக்காங்க. பத்திரிகைப் பேட்டியிலேயே நான் அவங்களப் பத்தி சொல்லியிருக்கேன். சங்கராச்சாரியாரை அரெஸ்ட் பண்ற துணிச்சல் யாருக்காவது வருமா மன்சூர்?'' என்றேன். நான் சொல்வதை மன்சூரலிகான் கேட்டுக்கொண்டிருந்தான்.
"அவங்க கட்சிக்காரங்களையெல்லாம் எப்படி கட்டுப்பாடா வச்சிருக்காங்க பாத்தியா? அது இல்லாம அ.தி.மு.க.வும் திராவிட இயக்கம்தானே'' என்றேன்.
"நீங்க... (நீங்க என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னான்) கலைஞர்கிட்ட போகாம அங்க போறது...? எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. என்னால நம்ப முடியல'' என்றான்.
"நான்தான் சொன்னேனே மன்சூர்... எனக்குன்னு நாலுபேரு வேணும்னு. அதுவுமில்லாம ஜெயலலிதா அம்மாவால ஈர்க்கப்பட்டுத்தான் சேரணும்னே சொன்னேன்'' என்றேன்.
"நாளைக்கு வர்றேங்க ஐயா'' என்று சொல்லிவிட்டு கிளம்பினான் மன்சூர்.
சினிமாவில் எனது பலமே அரசியல் எழுத்து தான். நீங்கள் சமீபத்தில் கூட சிம்பு நடித்த "மாநாடு' படத்தைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். அதில் என் கைவண்ணம் நிறைய உண்டு... ஆனால் அதற்கான சன்மானத்தை தராமல் என்னை ஏமாற்றப் பார்த்த கதையை இந்த இடத்தில் சொல்கிறேன்.
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் என்னை அலைபேசியில் அழைத்தார். "வெங்கட்பிரபு "மாநாடு' என்ற பெயரிலே சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார், நீங்கள் வசனம் எழுத வேண்டும் என விரும்புகிறார்' என்று சொன்னார்.
நான் "சரி' என்று சொன்னேன். அன்று மாலையே "அடையாறில் உள்ள வெங்கட்பிரபு ஆபீசில் சந்திக்கலாமா?' என்று கேட்டார்கள். நான் போய் சந்தித்தேன்.
கதையின் ஐடியாவை வெங்கட்பிரபு சொன்னார். அந்த ஐடியாவிற்கு அவர் பண்ணி வைத்திருந்த கதையைச் சொன்னார். அதை எப்படியெல்லாம் பண்ணலாம் என்று, பல அரசியல் விஷயங்களை, அரசியல் தலைவர்களைப் பற்றி நடந்த உண்மைச் சம்பவங்களைப் பற்றி, நான் எழுதிய அரசியல் படங் களைப் பற்றியெல்லாம் பேசினேன்.
மறுநாள் "ஈஞ்சம்பாக்கம் ஆராதனா, பிரார்த்தனா தியேட்டர்களுக்கு அருகில் உள்ள கெஸ்ட்ஹவுசில் ரூம் போடலாமா?' என்று கேட்டார் வெங்கட்பிரபு
நான் "போடுங்கள் வருகிறேன்' என்றேன். நல்ல வசதியான இடம். அங்கு தங்கியிருந்து டிஸ் கஷன் நடத்த வேண்டும் என்று சொன்னார். அதற்கும் சம்மதித்தேன். வெங்கட்பிரபுவுடன் அவருடைய உதவியாளர்கள் இருந்தார்கள். தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தங்கி, கதை பற்றிப் பேசினோம். ஒருநாள் சென்னை வந்துவிட்டு, மீண்டும் போய் மூன்று நாட்கள் தங்கி கதை விவாதம் நடத்தினோம். அதற்குப் பிறகு சென்னையில் அடையாறு கேட் ஹோட்டல் அருகில் உள்ள ஒரு கெஸ்ட்ஹவுசில் இரண்டு நாட்கள். அதற்குப் பிறகு ராயப்பேட்டையில் உள்ள வெங்கட்பிரபு அலுவலகத்தில் ஒருநாள் நானும், வெங்கட்பிரபு இருவர் மட்டுமே பேசினோம்.
ஆக... "மாநாடு' படத்திற்காக நான் பத்துநாட்கள் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த பத்து நாட்களும் கதையில் -திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பு மிக அதிகம். ஒவ்வொரு சீன் பேசும்போதும் வசனத்தோடுதான் பேசுவேன். அப்படி உருவானது "மாநாடு' படத்தின் கதை, திரைக்கதை, வசனம்.
கதை, திரைக்கதையை தாண்டி தனியாக வெங்கட் பிரபு அவர்களிடம் நான் பேசியவை மிகவும் முக்கியமானவை. ஓடாத படத்திற்குக் கூட பத்து இடங்களில் கை தட்டுகிற அளவுக்கு வசனம் எழுத முடியும். அதனால் நமக்கு சம்பளம் கிடைத் தால் போதும், எழுதிக் கொடுத்துவிடுவோம் என்று நான் நினைக்கமாட்டேன். படம் வெற்றி பெற்றால்தான் எழுதுகிற நமக்கும் பெருமை என்று நினைப்பவன் நான். அதனால் கதை, திரைக்கதை உருவாக்குவதில் மிகவும் அக்கறைப்படுவேன். அந்த அக்கறை "மாநாடு' படத்திற்கு அதிகமாக இருந்தது. காரணம், பல வருட இடைவெளிக்குப் பிறகு நான் எழுதப்போகிற படம்.
வெங்கட்பிரபுவிடம் சொன்னேன். "தம்பி... உங்க அப்பா கங்கைஅமரன், என்னை உடன்பிறந்த தம்பி போலவே நினைத்து பாசம் செலுத்தியவர். இசைஞானி இளையராஜா அவர்களுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டதிலிருந்து இருவருமே என்னை ஒரு சகோதரனாகத்தான் நினைத்தார்கள், அன்பு செலுத்தினார்கள். அதனால் நீங்கள் ஒருவகையில் எனக்கு அண்ணன் மகன். அதனால் உங்கள் வெற்றியில் எனக்கு அதிகமான அக்கறை இருக்கிறது. உங்கள் படங்களையும் பார்த்திருக்கிறேன். உங்க ளைப் பற்றியும் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக் கிறேன். நீங்கள் ஜாலியான டைப்... எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். அது உங் கள் படங்களிலும் தெரியும். நீங்கள் இந்தப் படத்தில் அப்படி இருக்கக் கூடாது. முன்னணி இயக்குநர் களில் ஒருவராக வேண்டும். அதனால் உங்களிடம் உரிமையுடன் சொல்கிறேன். எல்லோர் முன்பாகப் பேசுவதையும் தாண்டி, தனிப்பட்ட முறையில் உங்களிடம் நிறைய பேசுவேன்'' என்றேன். அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார் அவர்.
வசனம் எழுத ஆரம்பிப்பதற்கு முன், நான் பேசியவற்றை மறந்துவிடாமல் இருப்பதற்காக வெங்கட்பிரபுவின் அசிஸ்டெண்ட் டைரக்டர்களி டம் எழுதிக் கொடுத்துவிடுமாறு கேட்டேன். இரண்டு உதவியாளர்கள் பத்து நாட்களில் பேசி யவை அனைத்தையும் டைப் செய்து என்னிடம் கொடுத்தார்கள். நான் பேசியவை, மற்றவர்கள் சொன்னவை ஒன்றுகூட மிஸ் ஆகாமல் டைப் செய்திருந்தார்கள்.
"சம்பளம் எவ்வளவு என்று பேசி அட் வான்ஸ் வாங்கிக்கொண்டு எழுத ஆரம்பியுங்கள்'' என்றார் வெங்கட்பிரபு. டைப் பண்ணியதைப் படித்துவிட்டு, அந்த ஸ்கிரிப்ட்டில் மேலும் என்னவெல்லாம் பண்ணலாம் என்று சொன்னேன்.
மறுநாள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் ஆபீசிலிருந்து ஒருவர் வந்தார் எழுதுவதற்கு பேப்பர் பண்டல், பேனாக்கள், ரைட்டிங் பேடு கொண்டுவந்தார்.
"வெங்கட்பிரபு சம்பள விஷயம் பற்றி தயாரிப்பாளரை சந்தித்து பேசச் சொன் னார்'' என்றேன் அவ ரிடம். தயாரிப்பாள ரும் அழைக்கவில்லை, நானே போன் செய்து விசாரித்தேன். "சிம்பு, படத்திற்கு கால்ஷீட் உறுதி செய்யவில்லை. இப்போது படம் ஆரம்பமாகாது'' என்று சொன்னார்கள். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். "மாநாடு படத்தில் சிம்பு நடிக்கமாட்டார். மகா மாநாடு என்று தனியாக படம் ஆரம்பிக்கப் போகிறார்' என்று பல செய்திகள், ஊடகங்களிலும் சினிமா பத்திரிகைகளிலும் வந்தன. ஆனால் அந்தப் படத்தையும் சிம்பு ஆரம்பிக்கவில்லை. இடையிலே ஒரு வருடம் ஓடிவிட்டது. நானும் "மாநாடு' படத்தையும் அதில் ஏற்பட்ட அனுபவங்களையும் மறந்துவிட்டேன்.
2020ஆம் ஆண்டு ஜனவரியோ, பிப்ரவரியோ... சரியாக நினைவில்லை. வெங்கட்பிரபுவின் உதவி யாளர் ஒருவர் வந்தார். " "மாநாடு' படத்திற்கான டயலாக் காப்பி உங்களிடம் இருக்கிறது, படித்துப் பார்க்க வேண்டும் என்று டைரக்டர் வாங்கி வரச் சொன்னார். நானே திருப்பிக் கொண்டு வந்து கொடுத்துவிடுவேன்'' என்று சொன்னார். வெங்கட் பிரபுவின் ஆபீஸில் அவரை நான் பார்த்திருக்கி றேன். வெங்கட்பிரபுவிடம் போன் பண்ணிக்கூட நான் கேட்கவில்லை. அவர்மீது அவ்வளவு நம்பிக்கை. உதவியாளரிடம் டயலாக் புக்கை எடுத்துக் கொடுத்துவிட் டேன். "ராஜபார்ட் ரங்கதுரை' என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடும் பாடல் அப்போது எனக்கு நினைவுக்கு வரவில்லை. (அம்மம்மா... தம்பி என்று நம்பி அவர் உன்னை வளர்த்தார்...) நம்பிக் கொடுத்து விட்டேன். கொடுத்துவிட்ட புக்கில் என் வசனங்கள், எனது கற்பனை, என்னுடைய உழைப்பு அவருக்காக நான் ஒதுக்கிய நாட்கள் அத்தனையும் இருந்தன.
சில தினங்களாக எந்த தகவலும் வரவில்லை. "ஏழை ஜாதி' படத்தில் விஜயகாந்த் பேசுவது போல ஒரு வசனம் எழுதியிருப்பேன்... "ஏமாத்தற துக்கு பொறந்தவங்க அரசியல்வாதிங்க... ஏமாறுறதுக்கே பொறந்தவங்க ஏழை ஜாதிங்க'. அந்த வசனம் திரைப்படத்துறைக்கும் பொருந்தும். "ஏமாறுறதுக்கே பொறந்தவங்க எழுத்தாளர் ஜாதி'. அது எவ்வளவு பெரிய உண்மை என்பது அடுத்த சில நாட்களில் எனக்குப் புரிந்தது.
(வளரும்...)