(27) அதிரவைத்தவன் அதிர்ந்துபோனான்!
"புதுமுகம்னு சொல்லி எங்கள நீ ஏமாத்திட்ட'' என மன்சூர் அலிகானை ராவுத்தர் திட்டி அனுப்ப... அவன் என்னிடம் வந்தான்.
"நாளைக்கு நீ ராஜாபாதர் தெரு ஆபீசுக்கு வா'' என சொல்லி அனுப்பினேன்.
மறுநாள் அவனுக்கு முன்பாகவே நான் அங்கு போனேன். இப்ராகிம் ராவுத்தருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
"அண்ணே! அவன் பொய் சொல்லிட் டான்னு கோபப் படறீங்க. உங்கள் கோபம் நியாயம் தான். நான் சொல்றத கோவப்படாம யோசனை பண்ணிப் பாருங்க. நாம புதுமுகத்தை வில்லனா போட ணும்னு நினைச்சோம். அதே மாதிரி உருவத்துல அவன் இருக்கான். "வேலை கிடைச்சிருச்சு' படத்துல மீசையெல்லாம் இல்லாம வேஷ்டி சட்டையோட நடிச்சிருக் கான். கேமரா கூச்சம் இல்லாம நடிக்கிறான்னு தெரியுது. நாம வில்லன் கேரக்டருக்குப் போடப்போற கெட்டப்பே வேற. அவன்தான், இவன்னு அடையாளமே தெரியாது. அந்த கெட்டப்புல மேக்கப் போட்டு, டிரஸ் போட்டு, டம்மியா வசனம் பேசச் சொல்லி டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு முடிவு செய்யலாமே''ன்னு சொன்னேன்.
யோசித்தார். நான் பேசியதெல்லாம் ஆர்.கே.செல்வமணியின் சம்மதத்தோடுதான். இப்ராகிம் ராவுத்தர் யோசித்தார். அப்பொழுது மன்சூரலிகான் உள்ளே என்ட்ரி ஆனான். அவன் நடந்து வருவதையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முன்னே, அவன் வந்து நின்ற தோரணையையும் பார்த்தார். அதுவே சிறந்த நடிப்பாக இருந்தது என்று நான் சொன்னேன். இப்ராகிம் ராவுத்தர் சிரித்துவிட்டார்.
"சரிண்ணே... அந்த கெட்டப் மேக்கப் போட, டிரஸ் போட்டு, வசனம் பேசச் சொல்லி எடுத்துக் காட்டுங்க'' என்று சொன்னார்.
அவனை நடிக்க வைத்து கேசட்டில் பதிவு செய்து கொடுத்தோம். அதை டெக்கில் போட்டு டி.வி.யில் பல தடவை திரும்பத் திரும்ப பார்த்தார். அப்பொழு தெல்லாம் டெக், கேஸட் தான். பலமுறை பார்த்த பின் மன்சூரலிகானை வில்லனாக ஓ.கே. பண்ணி னார் இப்ராகிம் ராவுத்தர்.
இந்த விஷயத்தில் ஹீரோ வாக விஜயகாந்த், இயக்குநராக ஆர்.கே.செல்வமணி, இருவ ருடைய பங்களிப்பை நான் முழுமையாகச் சொல்லவில்லை. காரணம், நிராகரிக்கப்பட்ட மன்சூரலிகான் மீண்டும் எப்படி வில்லனாக நடித்தான் என்பதைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான்.
"கேப்டன் பிரபாகரன்' மூலம் மன்சூரலிகான் புகழின் உச்சிக்கே போனான். வித்தியாசமான நடிப்பு, வித்தியாசமான வசன உச்சரிப்பு... ஒரே படத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வில்லனாகிவிட்டான். அதற்குப் பிறகு அவன் உழைப்பும் வளர்ச்சியும் அசுர வேகத்தில் இருந்தது.
பல படங்களை சொந்தமாகத் தயாரித்தான். ஹீரோவாக நடித்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அநேகமாக 2005ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். "புலன் விசாரணை பார்ட்லி2'வில் நடிக்க வந்தான்.
விஜயகாந்த் நடித்த "புலன் விசாரணை' 1990-இல் வெளிவந்தது. அதே டீமோடு, அதாவது அதே இப்ராகிம் ராவுத்தர் தயாரிக்க, ஆர்.கே. செல்வமணி கதை -திரைக்கதை -இயக்கத்தில், நான் வசனம் எழுத, ஹீரோவாக பிரசாந்த் நடிக்க "புலன் விசாரணை பார்ட்-2' ஆரம்பமானது.
சரியான நேரத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்து, சரியான நேரத்தில் படம் வெளியாகியிருந்தால் அமோக வெற்றி பெற்றிருக்கும். பெட்ரோல் விலையேற்றத்தைப் பற்றி வெளியே தெரியாத பல உண்மைகளைச் சொல்லுகின்ற படமாக பேசப் பட்டிருக்கும். துணிச்சலான படமாக கொண்டாடப் பட்டிருக்கும். இப்ராகிம் ராவுத்தர் -ஆர்.கே.செல்வ மணி லிலியாகத் அலிகான் இணைந்த இன்னொரு வெற்றிப்படமாக இருந்திருக்கும்.
படத்தில் 3 கோர்ட் சீன்கள் இருக்கும். முதல் சீனில் வக்கீலாக மன்சூரலிகான் கலக்கியிருப்பான். இரண்டாவது கோர்ட் சீனில் எதிரெதிர் வக்கீல் களா நிழல்கள் ரவியும், தலைவாசல் விஜய்யும் மோதிக்கொள்ளும் அருமையான கோர்ட் சீன். க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில் வில்லன் தரப்பு வக்கீலாக ராதாரவி அண்ணனும், அவருக்கு எதிர் தரப்பு வக்கீலாக பிரகாஷ்ராஜ் சாரும் பிரமாதப் படுத்தியிருப்பார்கள்.
மழை பெய்கிற நேரத்தில் உப்பு விற்கப் போனதுபோல, காற்றடிக்கிறபோது மாவு விற்கப் போனதுபோல, படம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து... எந்த விஷயம் நாட்டில் பர பரப்பாகப் பேசப்படுகிறது என்று நினைத்தோமோ, அதெல்லாம் அடங்கி ஒன்றுமே இல்லாமல் போன பிறகு பெரிதாக விளம்பரம் செய்யப்படாமல் "புலன் விசாரணை பார்ட்-2' படம் பத்து வருடங்கள் கழித்து, 2015ல் வெளியானது. ஆர்.கே.செல்வமணி யின் உழைப்புக்கும், எனது வசனங்களுக்கும் கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் கிடைக்காமலே போனது.
அந்தப் படத்தில் நடிப்பதற்காகத்தான் (2005ஆம் ஆண்டு ஏவி.எம். ஸ்டுடியோ என்று ஞாபகம்) மன்சூரலிகான் வந்தான். வித்தியாசமான கெட்டப் போட்டுக்கொண்டு, தலைப்பாகை, நெற்றியில் நாமத்தோடு, வக்கீல் உடையோடு என்முன்னே வந்து நின்றான்.
"ஐயா எப்படி இருக்கிறது?'' என்றான்.
நான் பதில் சொல்லாமல் இருந்தேன்.
"என்ன ஐயா... பிடிக்க வில்லையா?'' என்றான்.
"உன் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னால, நான் கேக்கறதுக்கு நீ பதில் சொல்லு... "நீயெல்லாம் மனுசனா... உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா?'' என்று கேட்டேன்.
தனது அற்புதமான நடிப்பால் திரையரங்கு களை அதிர வைத்த அற்புதக் கலைஞன், என் கேள்வியால் அதிர்ந்துபோனான். அந்த அதிர்ச்சி யிலிருந்து மீள்வதற்கு சில வினாடிகள் ஆனது மன்சூரலிகானுக்கு.
"என்னண்ணே சொல்றீங்க. மனுஷனா... மனசாட்சி இருக்கான்னுல்லாம் கேக்கறீங்க?''
"உன்னைத் தம்பியா நினைக்கிறேன். அதனால எனக்கு கேக்கறதுக்கு உரிமை இருக்கு. "கேப்டன் பிரபாகரன்' படத்துல நீ நடிக்கிறதுக்கு நான் முக்கிய காரணமா இருந் திருக்கேன். அதை எந்தப் பேட்டியிலயாவது நீ சொல்லியிருக்கியா? உனக்காக இப்ராகிம் ராவுத்தருடன் போராடினேன்... மறந்துட்டியா?''
மன்சூரலிகான் மௌனம்.
பிறகு சொன்னான். "தப்புத் தாய்யா... ஆனா என் மனசுல இருக்கு. அது மறையவே மறையாது.''
"நுங்கம்பாக்கத்துல ஒரு வாடகை வீட்ல இருந்த. அண்ணே சாப்பிட வந்துதான் ஆகணும்னு உரிமையோட கூப்பிட்டே. ரெண்டுபேரும் தரையில உக்காந்து சாப்பிட்டோம்... ஞாபகம் இருக்கா?''
"இருக்குய்யா...''
"கேப்டன் பிரபாகரன் படம் ரிலீசாகி நீ பெரிய நடிகனா மாறின. உன் பின்னால பெரிய ரசிகர் கூட்டம் உருவாச்சு. போற எடங்களெல்லாம் ரசிகர்கள் உற்சாகமா கை அசைத்ததையும் ஓடிவந்து கை குலுக்கினதையும் பக்கத்துல இருந்து பார்த்து ரசிச்சவன்டா நான்.''
"ஐயா நான் மறக்கலேய்யா...''
"நானும் ஒரு ரசிகனா மாறிப் போய்த்தாண்டா உன் நடிப்பை ரசிச்சேன்... கைதட்டுனேன்.''
"ஐயா நான் மறக்கலேய்யா...''
"எழுதுனது நானா இருந்தா லும் உன்னை எவ்வளவு பாராட்டு னேன். நீ மறந்துட்ட. இல்லேன்னா எப்பவாது, எதாவது பேட்டியிலயாவது, நீ நடிகனா ஆனதுக்கு நானும் முக்கிய காரணம்னு சொல்லியிருக்கியா...''
என் கைகளை பாசத்துடன் பிடித்துக்கொண் டான். "இத்தனை வருஷம் கழிச்சு இப்ப என்னாச்சுய்யா? அப்பவே என்னைத் திட்டியிருக்க லாமே?''
"எனக்குப் பேர் கிடைக்கணும்கிறதுக்காக நான் எந்தக் காரியமும் பண்றதில்ல மன்சூர். நிறைய பண்ணியிருக்கேன்... ஆனா நான் வெளிய சொல்லிக் கிறதில்ல. யாரையும் கேக்கறதும் இல்ல. உன்கிட்ட உரிமை இருக்குன்னு நெனைச்சேன், கேக்கறேன்...''
"உங்களுக்கு உரிமை இருக்கய்யா, கேளுங் கய்யா... என்ன வேணும்னாலும் கேளுங்க'' என்றான்.
"சரி இத்தனை வருஷமா எத்தனையோ சொந்தப் படம் தயாரிச்சிருக்க. யார், யாரையோ டைரக்டரா போட்டிருக்க. "அண்ணே... என் படத்தை டைரக்ட் பண்ணுங்க'ன்னு நீ கேட்டிருக்கியா? சரி டைரக்ஷன் வேணாம்... "எதாவது ஒரு படத்துக்காவது வசனம் எழுதுங்கண்ணே'ன்னு சொல்லியிருக்கியா?''
இந்தக் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்குள் "ஷாட் ரெடி' என்று அழைப்பு வந்தது. லியாகத் அலிகான் எழுதிய வசனத்தைப் பேசி நடிப்பதற்கு மன்சூரலிகான் செட்டுக்குள் போனான்.
அன்று படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது மீண்டும் என் கைகளைப் பிடித்துக்கொண்டு "மன்சூரலிகான் என்னிக்கும் நன்றி மறக்கிறவன் இல்லய்யா...'' என்று சொல்லிவிட்டுப் போனான்.
மறுநாள் காலை படப் பிடிப்பு இல்லை. டிபன் சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந் தேன். என் வீட்டின் முன்னால் ஒரு கார் வந்து நின்றது. மன்சூரலிகான் இறங்கி உள்ளே வந்தான். என்னிடம் சொல்லாமல் வந்தது எனக்கு வியப்பாக இருந்தது.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்
________
திருத்தம்!
மே 31-ஜூன் 02 இதழில் 1994-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞரை, நானும் விஜயகாந்த்தும் சந்தித்ததாகச் சொல்லியிருந்தேன். 1994 என்பதை 1998 என்று திருத்தி வாசிக்கவும்.