(20) மோசடி செய்த டைரக்டர்! மன்னித்த விஜயகாந்த்!
பெங்களூர் என்றதும் விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர், நான் மூவரும் பெங்களூருக்கு பஸ்ஸில் போய்வந்தது நினைவுக்கு வருகிறது. இப்பொழுது நினைத்தாலும் வேதனையாக இருக்கும். இதில் வேதனைப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று நினைக்கலாம்.
நானும், இப்ராகிம் ராவுத்தரும் பஸ்ஸில் போகலாம். ஹீரோவாக நடித்து வெற்றிபெற்ற பிறகு சூழ்நிலையின் காரணமாக விஜயகாந்த் பஸ்ஸில் போவதென்றால்... வேதனையாக இருக்காதா...?
அப்படி என்ன சூழ்நிலை?
பண்ணைக்காட்டைச் சேர்ந்த ஜனகரன் என்பவர் விஜயகாந்த் தங்கியிருந்த காம்பவுண்டில் தங்கியிருந்தார். விஜயகாந்த், அவரை ஒரு சகோதரர் போலவே நினைப்பார். பண்ணை ஜனகரன் ஒரு படம் தயாரிக்க ஆசைப்பட்டார். "தீர்ப்பு என் கையில்' என்ற பெயருடன் பூஜை போட்டோம். விஜயகாந்த்துடன் ராதாரவி, சந்திரசேகர் ஆகியோரும் நடித் தார்கள். நான் அந்தப் படத்தில் உதவி இயக்குநர். நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அத்தோடு பணம் இல்லாமல் நின்றுவிட்டது. பண் ணை ஜனகரன் எவ்வ ளவு முயற்சி பண்ணியும் பணம் புரட்ட முடிய வில்லை. நல்ல கதை. அரசியல்வாதியாக இருந்து சினிமாவுக்கு வந்த நேதாஜி என்பவர் எழுதிய கதை.
நேதாஜி அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
1984 என்று நினைக்கிறேன். விஜயகாந்த்திடம் வந்து ஒரு கதை சொன்னார் நேதாஜி. கதை பிடித்துப்போய் கால்ஷீட் கொடுத்தாகிவிட்டது. இன்று பல கல்லூரிகளுக்குச் சொந்தக்காரரான மறைந்த ஜேப்பியார் அவர்களின் தயாரிப்பில் "உன்னை விடமாட்டேன்' என்று படத்துக்குப் பெயரும் வைக்கப்பட்டது. படப்பிடிப்பு தேதியையும் சொல்லிவிட்டார்கள்.
முதல்நாள் படப்பிடிப்புக்காக காலையில் சீக்கிரமே எழுந்து எக்ஸர்சைஸ் எல்லாம் முடித்து, வேக வேகமாகக் குளித்து, சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பினார் விஜயகாந்த். புதுப்படம் ஆரம்பம் என்றாலே அப்படி ஒரு உற்சாகம் வந்துவிடும் அவருக்கு.
ஏவி.எம். சென்றோம். "உன்னை விடமாட்டேன்' படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு வெளியே பல கார்கள்... நிறைய ஆட்கள்... ஒரே பரபரப்பு! படத்தின் ஹீரோ போய் இறங்கினால் ஒரு வரவேற்பு இருக்குமே... அந்த வரவேற்பு இல்லை. விஜயகாந்த் என்னைப் பார்க்க... "உள்ள போய் பார்த்துவிட்டு வருகிறேன்'' என்று நான் உள்ளே போக... அவரும் கூடவே வந்தார்.
உள்ளே போன எங்களுக்கு ஒரே அதிர்ச்சி! நேதாஜியே மேக்கப் போட்டுக்கொண்டு அவரே நடித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்த ஒருவரிடம் கேட்டோம். அவர் சொன்னார், "நேதாஜிதான் ஹீரோ' என்று.
நாங்கள் ஷாக்காகி நின்றோம். எங்களைப் பார்த்ததும் நேதாஜி வேகமாக அருகில் வந்து "ஸாரி விஜயகாந்த் சார். தயாரிப்பாளர் என்னையே ஹீரோவா நடிக்கச் சொல்லிட்டாரு''னு சொன்னார்.
எப்படி இருந்திருக்கும் விஜயகாந்த்துக்கு. "அத முன்னாலேயே சொல்லியிருக்கலாமே சார். இன்னிக்கு காலைலை கூட சொல்லியிருக்கலாமே. என் சீன் கொஞ்சம் லேட்டா ஆரம்பிக்கப் போறதாத்தான சொன்னீங்க...?'' என்று கேட்டார்.
நேதாஜியால் பதில் சொல்ல முடியவில்லை. உண்மையிலேயே அவர் ஹீரோவாக நடிக்கும் ஆசையில் இருந்தார். அதை எப்படியோ செய்து முடித்து விட்டார்.
"வாங்கண்ணே போகலாம்'' என்று என்னை அழைத்தவாறு வேகமாக வெளியேறினார் விஜயகாந்த். இருவரும் காரில் ஏறினோம். கார் ராஜாபாதர் தெருவை நோக்கி வேகமாகச் சென்றது.
செய்தியைக் கேட்டதும் ஆவேசமாகிப் போனார் இப்ராகிம் ராவுத்தர். "உன்னை இவ்வளவு அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்கான்... சும்மாவா விட்டுட்டு வந்தீங்க? செவுள்ல ரெண்டு சாத்து சாத்தியிருக்க வேணாமா? எப்படி விஜி... எப்படி அமைதியா திரும்பி வந்த?''
இப்ராகிம் ராவுத்தர் கொந்தளிக்க... அமைதியாகவே இருந்தார் விஜயகாந்த்.
"கால்ஷீட் கேக்கறப்ப எவ்வளவு குழைஞ்சு நெளிஞ்சு பேசினான். நான் கூடவே வந்திருந்தா அந்த... அடிச்சிருப்பேன், மனசு ஆறவே மாட்டேங்குது. இந்த ........ "........கிட்ட நாமளா நடிக்க சான்ஸ் குடுடா'ன்னு போய் நின்னோம்.''
"விட்றா இப்ராகிம்... அவருக்கு ஹீரோவா நடிக்கணும்னு ஆசை...'' (இவ்வளவு நடந்த பிறகும் நேதாஜியை "அவர்' என்றே மரியாதையாகப் பேசினார் விஜயகாந்த்)
"அப்படி ஆசை இருக்கிறவன் உன்னைத் தேடி ஏன் வர்றான்?''
"விட்றான்னு சொல்றேன்ல..'' என்று கூறிவிட்டு அமர்ந்தார். அவர் முகத்திலே ஒரு இறுக்கம் தெரிந்தது.
அன்று முழுவதும் மட்டுமல்ல... அடுத்து வந்த சில நாட்களும் நேதாஜியை திட்டித் திட்டி கோபத்தை கொட்டிக்கொண்டேயிருந்தார் இப்ராகிம் ராவுத்தர்.
விஜயகாந்த்தை அவமானப்படுத்திய நேதாஜி, சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு வந்தார், விஜயகாந்த்தின் கால்ஷீட் கேட்டு.
"இப்ராகிம், அவரு தோத்துட்டு வந்திருக் காரு. நம்மளால ஜெயிக்கணும்னு நெனைச்சு வந்திருக்காரு. அதனால பழசையெல்லாம் நெனைச்சு அவரைத் திட்டிறாத... அமைதியா இரு'' என்று சொல்லிவிட்டு... மீண்டும் நேதாஜிக்கு கால்ஷீட் கொடுக்கச் சொன்னார் விஜயகாந்த்.
இப்ராகிம் ராவுத்த ரின் மனம் வலித்தாலும், அதற்கு ஓ.கே. சொன்னார். நண்பனைக் காயப்படுத்தியவரை சாதாரணமாக மன்னிக்கத் தயாராக இல்லை. அந்த நண்பனே "அமைதியாக இரு' என்று சொன்னதை ஏற்றுக்கொண்டார்.
தன்னை அவமானப்படுத்தியவருக்கே பெருந்தன்மையாக கால்ஷீட் கொடுத்து அரவணைத்தவர் விஜயகாந்த். அந்தப் படம்தான் "சொல்வதெல்லாம் உண்மை.'
பல ஆண்டுகளுக்குப் பிறகு "ரமணா' படத்தில் அவர் பேசிய வசனம்... "தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை "மன்னிப்பு'. இந்த சம்பவத்தை ஏன் விவரித்துச் சொல் கிறேன் என்றால் "மறப்போம் மன்னிப்போம்' என்ற அவரது மனப்பக்குவத்தைப் பற்றி, கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்ற பொன் மொழிக்கு ஏற்றாற்போல் அவர் வாழ்ந்தது பற்றி, எதிரி களுக்கும் ஏமாற்றியவர்களுக்கும் கூட ஏணியாக இருந்து அவர்களை ஏற்றிவிட்டது பற்றி நீங்கள் தெரிந்துகொள்வதற் காகத்தான்.
"தீர்ப்பு என் கையில்' படத்தை விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் மறக்கவே இல்லை. 4 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த படத்தை, எப்படியாவது ஆரம்பிக்கவேண்டும் என்று பொதுவாக யாரும் அக்கறைப் படமாட்டார்கள். பண்ணை ஜனகரனின் நட்புக்காக மட்டு மல்ல, விஜயகாந்த்துக்கும் படம் வேண்டும். வேறு தயாரிப்பாளரிடம் போய் நிற்கவும் முடியாது. படங்கள் இல்லாததால்... தாராளமாக செலவு பண்ண கையில் பணம் இல்லை.
விஜயகாந்த் தங்கியிருந்த காம்பவுண்டில் சில தெலுங்கு தயாரிப்பாளர்களும், ஒரு தமிழ் கம்பெனியும் இருந்ததாகச் சொல்லியிருந்தேன். அவர்கள் பொழுதுபோக்கிற்காக சீட்டாடுவார்கள். காசு வைத்து ஆடுவார்கள். படப்பிடிப்பு இல்லாததால் விஜயகாந்த்தும் அவர்களுடன் சேர்ந்து கொள்வார். சீட்டாட்டத்தில் விஜயகாந்த் "கில்லாடி'. இந்த வார்த்தையை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். அவரைப்போல யாரும் விளையாட முடியாது என்பதற்காகச் சொல்கிறேன். எல்லோரும் 13 சீட்டில் விளையாடுவார்கள்... விஜயகாந்த் கையில் 17, 18 சீட்டுகள் இருக்கும். எப்படி அவ்வளவு சீட்டுகளை எடுக்கிறார், எப்படி சீட்டைப் போடுகிறார், எப்படி ஜெயிக்கிறார், ஜெயித்த பிறகு எப்படி சரியாக 13 சீட்டைக் காட்டுவார் என்பது வியப்பாக இருக்கும்.
அப்படி ஜெயித்த காசில், பைனான்ஸ் தேடி பெங்களூருக்குப் போனார் பெரிய ஹீரோவான விஜயகாந்த். அவருடன் இப்ராகிம் ராவுத்தரும் நானும், சாதாரண பஸ்ஸில் போனோம்...!
(வளரும்...)
படம் உதவி: ஞானம்