aa

பொதுவாக இடைத்தேர்தல் நடக்கும்போது, தேர்தல் கமிஷன் சுறுசுறுப்பாக செயல்படும். "அங்கே அம்புட்டு பணத்தைப் பிடித்தார்கள்', "இங்கே இம்புட்டுப் பணமும் பொருளும் பிடித்தார்கள்' என்று பரபரப்பாக செய்திகள் வரும். ஆனால் பல நேரங்களில் அப்பாவி மக்களும், சிறு வியாபாரிகளும் கொண்டுசெல்லும் பணத்தைத்தான் பறிமுதல் செய்கிறார்கள்.

கோடிகளையும் பிடிக்கவில்லை. தில்லுமுல்லு செய்த கேடிகளையும் பிடிக்கவில்லை. பிறகு எதற்கு இடைத்தேர்தல்?

தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கட்சிக்காரர்களும் ஒரே தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றியும் பலமுள்ளவர்கள் ஜெயிப்பதற்குப் பதிலாக பணம் உள்ளவர்கள்தானே ஜெயிக்கிறார்கள். பிறகு எதற்கு இடைத்தேர்தல்?

Advertisment

தேர்தல் வழக்குகளுக்கு விரைவாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறதா நீதிமன்றம்? தேர்தல் வழக்குகளுக்கு விரைவாக முடிவு சொல்லியிருக்கிறதா தேர்தல் ஆணை யம்? பிறகு எதற்கு இடைத்தேர்தல்?

இடைத்தேர்தலை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்கிறபோது, எதற்காக இடைத்தேர்தல். கை நீட்டாத மக்களை கை நீட்ட வைப்பதற்கா? நேர் மையாக வாக்களித்த மக்களை பணத்துக்காக வாக்களிக்க வைப்பதற்கா? உண்மையாக உழைக்கும் வேட்பாளரை விட்டுவிட்டு, பணம் கொடுத்து ஜெயித்து விட்டு வீட்டிலே படுத்துக் கொள்பவரை வெற்றிபெற வைப்பதற்கா? கோடிகளை கொட்டி ஜெயித்துவிட்டு, அந்தக் கோடிகளை திரும்பவும் எப்படி சம்பாதிப்பது என்ற நினைப்பில் ஓட்டுப்போட்ட மக்களை மறந்துவிட்டு ஊழலில் திளைப்பதற்கா?

தங்களை கறை படிந்தவர்களாக மாற்றிக்கொண்ட அரசியல்வாதிகள், மக்களையும் கறைபடிந்தவர்களாக மாற்றிவிட்டதைத் தவிர இடைத்தேர்தல்கள் வேறு எதைச் சாதித்தது?

Advertisment

நான் வசனம் எழுதிய படங்களில்… இயக்கிய படங்களில் இதைப் பற்றி யெல்லாம் நிறைய எழுதியிருக்கிறேன் இந்தத் தொடரிலும் அதை எழுதுவேன்.

இடைத்தேர்தல் என்ற விஷயத்தில் மதிப்பிற்குரிய டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களின் கருத்திலே எனக்கு முழு உடன்பாடு உண்டு.…

ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கும் உரிமையை அதே கட்சிக்கு கொடுத்துவிடுவதில் என்ன கெட்டுவிடும்?

மக்களின் மனம் கெட்டுப் போவது தடுக்கப்படும். அரசிய லில் அநாகரிகம் வளர்வது தடுக்கப்படும். எத்தனை தவறுகள் செய்தாலும் பணம் கொடுத்தால் சரி பண்ணிவிடலாம் என்று அரசியல்வாதிகள் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்படும். அரசியல் சாக்கடை என்று சொல்வார்கள். மேலும் அது சாக்கடையாவது தடுக்கப்படும். அரசியல் சாக்கடை என்று பலர் சொல்வதைத்தான் நான் சொன்னேன்.

டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களின் இடைத்தேர்தல் பற்றிய கருத்தை நான் ஆதரிப்பதாகச் சொன்னேன். அவருடைய அரசியல் பயணத்தில் அவருடைய கருத்துகள் அவருடைய பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. எதிர்ப்புகளும் வந்திருக்கிறது. ஆனால் எவ்வளவோ நல்ல கருத்துகள், நல்ல சிந்தனைகள், நல்ல திட்டங்கள், நல்ல செயல்பாடுகள் பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கின்றன.

நான் பொதுவாக எழுதிய ஜாதி பற்றிய வசனங்கள் அவரை மனதில் வைத்து எழுதியதாக சிலர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். சிலர் கோபப்பட்டிருக்கிறார்கள். விஜயகாந்த்தின் மேடையிலே நான் விமர்சனம் செய்து பேசியதும் பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு பொதுமனிதனாக நான் பேசியது புதுப் புது பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு புதிய கட்சி தொடங்குவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அதுவெல்லாம் கர்மா.…எது நடக்க வேண்டும், யார் மூலம் நடக்க வேண்டும் என்பது இறைவனால் எழுதப்பட்ட ஒன்று.

aa

டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களைப் பற்றி விமர்சனம் செய்து எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். யாருக்காக… விஜயகாந்த் வளர்ச்சிக்காக...… தனிப்பட்ட லியாகத் அலிகானுக்காக அல்ல… இப்பொழுதும்கூட டாக்டர் ஐயாவுடைய சில கொள்கைகள், சில செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியளிப்பதாகத்தான் இருக்கின்றன.

சிலவற்றில் முரண்படுகிறேன். இடைத்தேர்தல் விஷயத்தில் அவர் கருத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன்.

அண்ணன்கள் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இணைந்தபிறகு ஆர்.கே.நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இருவருடைய ஆதரவு பெற்ற வேட்பாளராக அண்ணன் மதுசூதனன். சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் டி.டி.வி.தினகரன். தி.மு.க. வேட்பாளரும் களத்தில்.

தேர்தல் நாள் நெருங்க, நெருங்க பரபரப்பு தொற்றிக்கொண்டது.

"நாம் தனியாக நின்றபோதே மதுசூதனன் அண்ணன்தான் ஜெயிக்கிற மாதிரி இருந்தது. இப்போ இணைஞ்சுட்டோம். இரட்டை இலை வேற கிடைச்சிருச்சு,…பெரிய வித்தியாசத்துல ஜெயிப்போம் நீ என்ன நினைக்கிறே''ன்னு என்னிடம் அந்த தலைவர் கேட்டார்.

இப்போது அவருடன் இன்னொரு தலைவரும் இருந்தார். நான் சொன்னேன் "டி.டி.வி. தினகரன்தான் ஜெயிப்பாரு.''

அவருக்குக் கோபம் வந்தது…. அவருடன் இருந்த தலைவருக்கு அதைவிட அதிகமாக வந்தது. என்னை வார்த்தைகளில் சுட்டெரித்துவிட்டார்கள்.

"எங்க அரசியல் அனுபவம் என்ன?… எத்தனை தேர்தல்ல போட்டி போட்டிருக்கோம். எத்தனை தேர்தல் களங்களைப் பார்த்திருக்கோம்… உனக்கென்ன தெரியும். ஓ.பி.எஸ்.ஸோட செல்வாக்கு இப்ப தமிழ்நாடு முழுவதும் எப்படி இருக்கு தெரியுமா?…ஆர்.கே.நகர்ல வீதி வீதியா போய்ப் பாரு.… ஓ.பி.எஸ். சேர்ந்ததுனாலதான் இ.பி.எஸ்.ஸே தெம்பா இருக்காரு'' என்றார்கள்.

"நீங்க ரெண்டுபேரும் நேரடி அரசியலுக்கு வந்துட்டதுனால உங்க அனுபவத்தால உங்க ஜாதி பலத்தால… அம்மா சீட்டு குடுத்து ஜெயிச்சு எம்.எல்.ஏ., எம்.பி. ஆனதுனால இரண்டாம் கட்ட தலைவர் லிஸ்ட்ல இருக்கீங்க. நான் உங்கள மாதிரி நேரடி அரசியலுக்கு வராம அரசியலை அங்குலம் அங்குலமா அலசி ஆராய்ந்து சினிமாவுக்கு வந்து வசனத்தால் வறுத்தெடுத்துக்கிட்டிருக்கேன். உங்கள மாதிரி நேரடி அரசியலுக்கு நான் முன்னமே வந்திருந்தா உங்களவிட பெரிய ஆளா வந்திருப்பேன்… அதனால் நீங்கதான் அறிவாளி என்னை முட்டாள்னு நெனைக்காதீங்க. உங்களைவிட திறமையான எத்தனையோ தொண்டர்கள நான் பார்த்திருக்கேன்.… அவங்க இன்னும் தொண்டர்களாக இருந்துக்கிட்டிருக் காங்க. உங்களைவிட அருமையா பேசக்கூடிய சாதாரண தலைமைக் கழகப் பேச்சாளர்களைப் பார்த்திருக்கேன். அவங்க இன்றும் பேச்சாளர் களாகவேதான் இருந்துக்கிட்டிருக்காங்க… உங்க நேரம் நீங்க உசரத்துல இருந்துக்கிட்டிருக்கீங்க'' என்றேன் நான். (அதாவது நேரடியாகச் சொல்லவில்லை. மேலே சொன்னவை எல்லாம் என் மைண்ட் வாய்ஸ்.)

தேர்தல் முடிந்து முடிவு வந்தது. டி.டி.வி.தினகரன் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

என்னிடம் சவால்விட்ட இரண்டு இரண் டாம் கட்டத் தலைவர்களையும் பார்த்தேன்.

"என்ன நீங்க அறிவாளியா… நான் அறிவாளியா?'… என்று கேட்டேன். (மைண்ட் வாய்ஸ்தான்)

ramdoss

"எப்படி லியாகத் அலிகான் டி.டி.வி.தான் ஜெயிப்பார்னு சரியா கணிச்சுச் சொன்னே?''… என்று கேட் டார்கள். மைண்ட் வாய்ஸ்ல இல்லை... நேரடியாகத்தான் கேட்டார்கள்.

"அண்ணே… எனக்கு நம்ம கட்சியிலயும் நண்பர்கள் இருக்காங்க. எல்லாக் கட்சிலயும் இருக்காங்க. கட்சி சாராத நண்பர்களும் இருக்காங்க. மக்களோட மனநிலை தெரிஞ்ச வங்க. ஆனா உண்மைய மறைக்காம, வெளிப்படையா, ஓபனா பேசறவங்க அவங்க. வெளிய வேற மாதிரி பேசுனாலும் அவங் களுக்கு தெரியுற களநிலவரத்தை என்கிட்ட பேசுவாங்க. அவங்க சொல்றதை வச்சு… எனக்குன்னு இருக்கிற அரசியல் அறிவை வச்சு முடிவை கணிப்பேன்.… ஆனா பெரும்பாலும் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன். எனக்கு ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ரெண்டு, மூணு பேருகிட்ட மட்டும் ஒரு டெஸ்ட் பண்ணிப் பார்க்கறதுக்காக முடிவு இப்படித்தான் இருக்கும்னு எனக்கு தோணுதுன்னு சொல்வேன். ஆர்.கே.நகர் தொகுதியில டி.டி.வி. ஜெயிப்பார்னு எனக்கு தோணுச்சு… அதை உணர்ச்சிவசப்பட்டு உங்ககிட்ட சொல்லிட்டேன். அதுக்கப்புறம் ஏண்டா சொன்னோம்னு நெனச்சேன்'' என்று நீண்ட விளக்கம் கொடுத்தேன்.

"எங்ககிட்ட எப்படி துணிச்சலா சொன்னே?… உன்னை திட்டுனதுக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா பதில் சொன்னே?'' என்றார்கள்.

"இதையெல்லாம் விட துணிச்சலா படங்கள்ல எழுதுனவன்ணே நான்.… ஓ.பி.எஸ். மேல உள்ள அன்பால, இங்க வந்து அவருக்காக தர்மயுத்தத்துல என்ன அர்ப்பணிச்சுக்கிட்டேன். உங்ககிட்ட ஏற்கெனவே பழகியிருக்கேன். தர்மயுத்தம் ரொம்ப நெருக்கமாக்கி விட்டிருச்சுண்ணே'' என்றேன்.

நான் அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு ஐந்து வருடம் எதிர்க்கட்சி. பத்து ஆண்டுகள் ஆளும்கட்சி. அந்த பத்துவருட ஆட்சியில் என் சுயநலத்துக்காகவோ, சுயலாபத்துக்காகவோ எந்த அமைச்சரிடம் போய் ரெகமண் டேஷனுக்காக நின்றதில்லை. யாரிடமும் பணம் வாங்கிக்கொண்டு வேலை போட்டுக் கொடுங்கள், காண்ட்ராக்ட் கொடுங்கள், டிரான்ஸ்பர் போட்டுக் கொடுங்கள் என்று கேட்டதில்லை.

ஒரே ஒரு அமைச்ச ரிடம் போய்க் கேட் டேன்... அவர்... என்.ஆர்.சிவபதி

(வளரும்...)