ழமையும் பாரம்பரியமும் மிக்க தர்மபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்துசென்ற விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகளையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானமாக இருந்துவருபவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவர் தெலுங்கானாவில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துகொள்ள 19-ஆம் தேதி ஆதீனத்திலிருந்து ஞான யாத்திரை புறப்பட்டார். அந்த பயணத்தை தொடங்கிவைப்பதற்காக தமிழக ஆளுநர் தருமபுரம் ஆதீனத்திற்கு வருவது உறுதிசெய்யப்பட்டது.

gg

Advertisment

தமிழக ஆளுநர் தருமபுரம் ஆதீனத்திற்கு வரக்கூடாது என்றும், எங்களின் எதிர்ப்பை மீறிவந்தால் கருப்புக்கொடி காட்டி போராட்டம் செய்வோம் என அரசியல் கட்சிகளும் பல்வேறு இயக்கங்களும் ஆதீனத்திற்கே சென்று மனு கொடுத்துவிட்டு வந்தனர்.

மனுவை ஆதீனத்தில் கொடுத்துவிட்டு வெளியேவந்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஜெயராமன், “"தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படுவதற்காகவே ஒன்றிய அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தீர்மானங் களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து கிடப்பில் போட்டுவருகிறார். நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை உள் ளிட்ட 18 மசோதாக்களும் தீர்மானங்களும் முடக்கப் பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். சிந்தனையைப் போற்றுகிற ஒரு ஆளுநரை தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் பற்றுகொண்ட தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. மீறி வரவழைத்தால் போராட்டம் நடத்துவோம். கடுமையான எதிர்ப்பைக் காட்டுவோம்''" என கூறியிருந்தார்.

அதேநேரம் மயிலாடு துறையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், "ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினால் அனைத்து மாநி லங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கானவர்களை திரட்டி ஆளுநரை வரவேற்போம்'' என பதிலுக்குச் சொல்லியிருந்தார்.

திட்டமிட்டபடி 19-ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வந்த ஆளுந ருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஆதீனத்திற்கு வந்தவருக்கு மன்னம்பந்தல் பகுதியில் பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து கருப்புக் கொடி காட்டி "கோ பேக் கவர்னர்', என விண்ணதிர முழக்கமிட்டனர்.

மிகுந்த பதற்றத்திற்கு இடையே ஆதீன நுழை வாயிலுக்கு வந்த ஆளுநருக்கு கருப்பு முருகானந்தம் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினர் தேசியக் கொடியை ஏந்தி வரவேற்பு கொடுத்தனர். பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.

gg

Advertisment

அங்கு பேசிய தமிழக ஆளுநர், "தருமபுரம் ஆதீனத்திற்கு உள்ளே நுழையும்போதே உடலில் ஒரு அதிர்வு ஏற்படுகிறது. இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உலகையே இந்தியா வழிநடத்தும். அதற்கு ஆன்மீகம் உறுதுணையாக இருக்கும். இப்படிப்பட்ட ஆன்மீகத்தை வளர்ப்பதில் தருமபுரம் ஆதீனத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது'' என்றார்.

கருப்புக்கொடி விவகாரம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஷ்வேஷ் சாஸ்திரி தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக காவல்துறையின் கூடுதல் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த மூன்றடுக்கு இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. ஆளுநரின் கான்வாய் கடந்துசென்ற நிலையில், ஆர்ப்பாட்டக் காரர்கள் கருப்புக் கொடிகளை வீசி எறிந்தனர் அது ஆளுநரின் வாகனம் மீது படவில்லை. இது தொடர்பாக 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என கூறியிருந்தார்.

ஆளுநர் வருகைக்கு கருப்புக்கொடி காட்டியதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்ததோடு, சட்ட சபையிலும் வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து நேரமில்லா நேரத்தில் கேட்கப்பட்ட எதிர்க்கட்சி களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், “"தர்மபுரம் ஆதீனமருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கவர்னருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத் திருந்தனர். பின்னர், அவர்களைக் கைதுசெய்து வாகனங்களில் ஏற்றினர். அப்போதுதான் பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்ட கொடிகளை வீசியெறிந்திருக்கிறார்கள்.

கவர்னரின் பாதுகாப்பு ஏ.டி.சி., டி.ஜி.பி.க்கு அனுப்பிய கடிதத்தில் கடைசியாக குறிப்பிட்டி ருப்பது கவர்னர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ அல்லது எந்த பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல்துறை யால் பாதுகாக்கப்பட்டன. ஆனால் எதிர்க்கட்சிகள், இதுதான் நமக்கு வாய்ப்பென இந்நிகழ்வைத் திரித்து அரசியலுக்குப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்''’என குறிப்பிட்டார்.

மேலும் அவர், "1995-ல் கவர்னராக இருந்த சென்னாரெட்டியின் வாகனம் மறிக்கப்பட்டது யார் ஆட்சியில்? மறைந்த தலைமைத் தேர்தல் ஆணையராக உயர்பதவியில் இருந்த டி.என். சேஷன் தாஜ் ஓட்டலில் இருந்து வெளியே வரவே முடியவில்லை. அந்த ஓட்டலையும் முற்றுகையிட்டு கல்வீசித் தாக்குதல் நடத்தியது அ.தி.மு.க. ஆட்சியில்தான். பா.ஜ.க.வில் முக்கியஸ்தராக இருக்கும் சுப்பிரமணியசாமியை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சென்று தாக்குதல் நடந்த முயன்றதும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியதும் யாருடைய ஆட்சியில்? நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனையாக இங்கே கூறி அரசியல் செய்யவேண்டாம்''’என எதிர்க்கட்சியினரின் மூக்குடைத்தார்.

இந்தச் சூழலில் அவசர அவசரமாக இரண்டு நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

ஆளுநரின் விசிட்டின்போது நடந்த அரசியல் பரபரப்பு ஒருபக்கமிருக்க, மிகவும் பிரசித்திபெற்ற கோயிலான தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருக் கடையூர் கோயில் குடமுழுக்குக்கு வர மறுத்த ஆளுநர், யாத்திரையை துவங்கி வைக்க வந்திருக்கிறாரே, ஏன் என ஆதீன வட்டாரத்தில் விசாரித்தோம், "கும்பகோணத்தை அடுத்துள்ள கோவிந்தபுரம் விட்டல் சமஸ்தான குடமுழுக்குக்கு வராமல், சமஸ்கிருத பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார் ஆளுநர். அங்கு வந்திருந்த ஆளுநரை ஓடோடிச் சந்தித்து தருமபுரம் ஆதீனத்துக்கு வாருங்கள், திருக்கடையூர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு நீங்கள் வரவேண்டுமென அழைப்பிதழ் கொடுத் தோம். ஆளுநர் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், தஞ்சாவூருக்கு வாங்க என்பதுபோல சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பிறகு தஞ்சாவூர் பயணியர் மாளிகையில் சந்தித்து பத்திரிகை கொடுக்கப்பட்டது. அதற்கும் அவர் பிடிகொடுக்கவில்லை. "குடமுழுக்கை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். நான் நிச்சயம் வருவேன், அதற்கான தனிவிழாவை நாங்களே பிறகு சொல்கிறோம்' என கூறியிருந்தனர்.

அதன்படியே கும்பமேளா விவகாரத்தை முன்வைத்து தற்போது வந்துசென்றுள்ளார். ஆதீனத்திடம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டுவிழா திட்டம் குறித்தும் பேசியிருக்கிறார்கள். அதற்கு நீங்கள் மிக ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இந்த பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க ஆதீனங்கள், மடங்கள் அனைத்துமே தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதால் இவரை வளைத்துப் போடுவதற்காக இந்த வேலையைச் செய்திருக்கின்றனர். மக்களின் வழியாக அணுகமுடியாத நிலையில் மடங்களின் வழியாக தமிழகத்தை வளைக்கத் திட்டமிடுகிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை'' என்கிறார்கள் விவரமாக.

-க.செல்வகுமார்