பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து துரத்தி வெளியேற்றப் பட்டவர், அடுத்த 20 நிமிடத் தில் பேருந்தின் சக்கரத்தில் தலையைக் கொடுத்து மரண மடைந்திருக்கின்றார். மனப் பிறழ்வால் மரணமா? இல்லை மிரட்டப்பட்டதால் மரணமா? என மரணத்திற்கான காரணமறிய மண்டையைப் பிய்த்துவரு கின்றது தமிழக காவல்துறை.
கடந்த 12-06-2023 திங்கட்கிழமையன்று மாலை 6.08 மணியளவில் கறுப்புச்சட்டை அணிந்த நபர் ஒருவர் கோயம்புத்தூர் அவிநாசி சாலையிலுள்ள அண்ணா சிலை அருகினில் ஓடும் பேருந்தின் சக்கரத்தில் தலையைக் கொடுத்து மரணமடைந்திருக்கின்றார். யார் இந்த நபர்? என கறுப்புச் சட்டை நபர் பயணித்த ஒன்றன்பின் ஒன்றான சி.சி.டி.வி.யின் சங்கிலிக் காட்சிகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தானாகவே முன்வந்து, "கடந்த 2 வருடங்களாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றேன். நான் பணியிலிருக்கும்போது 12-06-2023 அன்று மாலை 05.47 மணியளவில் கறுப்புச்சட்டை அணிந்த நபர் ஒருவர் அலு வலக கேட்டைத் திறந்துகொண்டு அலுவலகத் தில் உள்நுழைந்து கதவை உட்புறமாக தாளிட முற்பட்டார். அவரது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரை அலு வலகத்திலிருந்து வெளியேற்ற முயற்சித்தேன். மாறாக முரண்டு பிடித்ததால் அவரை வெளியே தள்ளவேண்டியதாயிற்று. இவர் யார்? எதற்காக அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டார்?'' என்று தீர விசாரிக்கவேண்டும் என தன்னுடைய உதவியாளர் விஜய் மூலம் பந்தயச்சாலை காவல் நிலையத்தில் புகாரை கொடுக்கவைத்திருக் கின்றார் வானதி சீனிவாசன்.
ஆனால், செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்து, "நேற்று எனது அலுவலகத்தில் ஒரு நபர் நுழைய முற்பட்ட போது அவரை எனது உதவியாளர் வெளி யேற்றினார். அவர் யார், பின்னணி என்ன, நோக் கம் குறித்து காவல் ஆய்வாளரிடம் பேசியுள் ளேன். காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்ப தாகக் கூறியுள்ளது. சம்பவம் நடந்தபோது நான் அலுவலகத்தில் இல்லை என எதுவுமே தெரியாததுபோல் பொத்தாம் பொதுவாகக் கூறி வைத்தது எவ்வகையில் பொருந்தும்..? புகார் கொடுக்கப்பட்டது மர்ம நபரின் இறப்பிற்குப் பிறகுதானே..? அதாவது சரியாக இரவு 8.30 மணிக்குத்தானே..? இந்த மர்ம மரணத்தை அரசியலாக்க முயற்சிக்கின்றார் வானதி'' என்கின்றார் அதே பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.புரம் நிர்வாகி ஒருவர்.
கோவை மாநகர காவல்துறையோ, "அந்த மர்ம நபர் அரசுப் பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த சி.சி.டி.வி. காட்சியின் படி கறுப்புச்சட்டை அணிந்திருந்த அந்த மர்ம நபர் சாலையைக் கடந்து வந்து எதிர்ப்புறமாக வந்த அரசுப் பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் இவர் வந்ததைக் கண்டு பேருந்தை திருப்பிட முயற்சித்த நிலையில், பேருந்தின் பின்புற சக்கரத்தில் அடிபட்டு காய மடைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்து தூக்கியபோது நடக்கமுடியாமல் நிலைதடுமாறி கீழே விழுகின்றார். அந்த காட்சிகளும் பதிவாகி உள்ளது. அதனாலேயே அந்த மர்ம நபர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிகிறது'' என்றது.
பேருந்தில் தலையைக் கொடுத்து உயிரிழந்தவர் யார்?, என்ன பெயர்? அடையாளம் தெரியாமல் விசாரணையை முடுக்கியுள்ள காவல்துறைக்கு கிடைத்த ஒரே க்ளூ... இறந்த மனிதன் கறுப்புச்சட்டை அணிந்திருப்பது மட்டுமே. புகாரில் கொடுக்கப்பட்ட அடையாள மும் கறுப்புச்சட்டையே! அது போல் அந்த மர்ம மனிதன் குடித்திருக்கலாம் அல்லது மனப்பிறழ்வு நோய் கொண்டவர் என்றும் சான்றிதழ் வழங்குகின்றனர் பா.ஜ.க. தரப்பினர்.
பா.ஜ.க. நிர்வாகி ஒருவரோ, "தேர்தலுக்காக ஒத்திகை பார்க்க ஆரம்பித்து விட்டது பா.ஜ.க. தரப்பு. இதில் வானதியும் விதிவிலக் கல்ல. புகார் கடிதத்தின் படி அந்த மர்ம மனிதன் 5.47-க்கு வானதியின் சட்டமன்ற அலுவலகத் திற்கு வந்ததாகக் கூறப்படுகின்றது. 5.48-க்கு விரட்டித் தள்ளும் காட்சிகள் இருக்கின்றது. சட்டமன்ற அலுவலகத்திற்கு யார் வந்தாலும் அவர்களது வேண்டுதல்கள், கோரிக்கைகள் குறித்து மனுவை பெற்றுக்கொள்வதே சட்ட மன்ற அலுவலகப் பணி. அப்படியிருக்கையில் வந்த வேகத்தில் அவரை அடித்து விரட்டியதன் அவசியம் என்ன..? அப்படியெனில் அந்த மர்ம நபர் அலுவலகத்திற்கு பரிச்சயமானவராக இருந்திருக்கவேண்டும். அவரை அடித்து விரட்டியதில் ஏற்பட்ட காயங்கள் என்னென்ன..? விரக்தியின் உச்சத்திலேயே அந்த மர்ம மனிதர் பேருந்தின் சக்கரத்தில் தலையைக் கொடுத்து மரணத்திற்கு முயன் றுள்ளார். வருகின்ற தேர்தலுக்காக "கறுப்புச் சட்டையை' அடையாளப் படுத்துகிறார் வானதி. எங்களைப் பொறுத்தவரை அந்த மர்ம மனிதனின் மரணத்தில் விசாரிக்கப்பட வேண்டியவர் வானதியே'' என்கிறார்.