தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் ஏதாவது ஒரு குளறுபடி நடந்தபடியே உள்ளது. கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், பா.ஜ.க.வின் துணை அமைப்பான அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் அதன் உட்பிரிவுகளை மறுசீரமைப் புக்காக முற்றிலும் கலைப்பதாகவும், அந்த பிரிவில் செயல்பட்ட நிர்வாகிகள் மறு அறிவிப்பு வரும்வரை கட்சியின் மண்டல, மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுங்கள் எனவும் அறிவித்துள்ளார்.
ஒரு பிரிவின் நிர்வாகத்தை முழுவதும் கலைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, "கட்சியிலுள்ள ஒவ்வொரு அணியின் மாநில அளவிலான கூட்டம், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டுவருகிறது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, மதுரை ஊமச்சிகுளத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவின் மாநிலக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் கலந்துகொண்டார். முக்கியமான கூட்டத் திற்கு பல மாவட்டங்களிலிருந்து அந்த பிரிவின் நிர்வாகிகள் வரவில்லை. கூட்டத்துக்கு வந்திருந்த நிர்வாகிகளும், அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர்களுள் ஒருவரான திருவண்ணாமலை கதிரவன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.
அ.ம.மு.க.வின் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் மாநில இணைச் செயலாளராக இருந்த கதிரவன் மீது, வசூல் வேட்டை, கட்டப்பஞ்சாயத்து, போலீஸ் புரோக்கராக செயல்படுவது என புகார்கள் சென்ற தைத் தொடர்ந்து மார்ச் மாதம் கட்சியை விட்டு நீக்கினார் தினகரன். பா.ஜ.க.வுக்கு வந்தவருக்கு, உடனடியாக அமைப்பு சாரா தொழிலாளர் அணியில் மாநில செயலாளர் பதவியைத் தந்தனர். பணம் வாங்கிக்கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பதவிகளில் ஆட்களைப் போட்டார்கள். அந்த நிர்வாகிகள் சம்பாதிப்பதில் குறியாக இருக்கி றார்களே தவிர கட்சியை வளர்க்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்கள். இப்படி பல மாவட்ட நிர்வாகிகளிடமிருந்தும் இந்த பிரிவின் மீது புகார்கள் சொல்லப்பட்டதால், அப்பிரிவின் மாநில நிர்வாகிகளிடம் கமலாலயத்தில் விசா ரணை நடந்தது. பதில் சொல்ல முடியாமல் திணறி னார்கள். புகார்கள் உண்மையாக இருந்ததால் அந்த பிரிவு கலைக்கப்பட்டது'' என்றார்கள்.
செப்டம்பர் 11ஆம் தேதி மற்றொரு அறிவிப்பையும் அண்ணாமலை வெளியிட்டார். அதில், "தமிழக பா.ஜ.க.வின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாமல், கட்சியின் விதிமுறை களுக்கு மாறாக பா.ஜ.க. தொழிற்சங்கப் பேரவை என்கிற போலியான அமைப்பை உருவாக்கி, பிர தமர் மோடி படத்தைப் பயன்படுத்தியது நிர்வாகி கள் மத்தியில் குழப்பத்தையும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட பா.ஜ.க. உள்ளாட்சி பிரிவின் மாநில செயலாளர் ஸ்டீல். அருள், கட்சி நிர்வாகிகள் சேலம் ராஜீ, கருணாகரன் போன்றவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படு கிறார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தது. தொழிற்சங்கப் பேரவையின் மாநில தலைவராக கே.ராஜீயை நியமித்துக்கொண்டு, சேலம், ஈரோடு, நாமக்கல், கோவையில் உள்ள சிறுகுறு தொழிற்சாலை உரிமையாளர்களைச் சந்தித்து, ஒன்றிய மோடி அரசிலிருந்து மானிய தொழில் கடன் வாங்கி தருகிறோம், உங்களுக் கான தொழில் பிரச்சனைகளை தீர்க் கிறோம் எனச்சொல்லி நிதி வசூலித் தார்கள். அதனாலயே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்கள்.
இப்படி ஒவ்வொரு பிரிவிலும் சில நிர்வாகிகள், "மத்தியில் எங்கள் ஆட்சித்தான் நடக்கிறது, உங்களுக்கு மத்திய அரசில் வேலை வாங்கித் தருகிறோம், ஒப்பந்தம் வாங்கித்தருகிறோம், பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் உங்களுக்கு வீடு ஒதுக்கச் செய்கிறோம், வங்கியில் முத்ரா கடன் வாங்கித் தருகிறோம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு வாங்கித் தருகிறோம், தொழில் கடனுக்கு மானியம் வாங்கித் தருகிறோம்' என, பல பகுதிகளில் மக்களிடம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள். தமிழ்நாடு அரசின் அதிகாரிகளும் பா.ஜ.க.வினரை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்பதைச் செய்து தருகிறார்கள். இதனையெல் லாம் பா.ஜ.க.வில் பல ஆண்டுகாலம் கோலோச் சியவர்கள், மாற்றுக்கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவர்களால் தங்கள் அதிகாரம் பறிபோனதால் கடுப்பாகி, பா.ஜ.க. தலைமைக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் போட்டுக்கொடுப்பதால் இப்படி யான நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
இது குறித்து மாநிலத்தலைவர் அண்ணா மலை தரப்பினரிடம் பேசியபோது, "அமைப்பு சாராத் தொழிலாளர் அணியில் மாவட்ட நிர் வாகிகளாக 11 பேர், ஒன்றிய நிர்வாகி களாக 7 பேரை நியமிக்கவேண்டும். ஆனால் இவர்கள் கட்டுமானப் பிரிவு, ஆட்டோ ஓட்டுநர்கள் பிரிவு எனப் பல பிரிவுகளை உருவாக்கி பலருக்கும் பதவிகளை வாரி வழங்கிவிட்டார்கள். இது தேசியத் தலைமைக்குத் தெரிந்து கேள்வி எழுப்பியதோடு, அப்படிச் செய்யக்கூடாது என்று அறிவுறுத்திய தால் அப்பிரிவு கலைக்கப்பட்டது. அனைத்துப் பிரிவுகளின் நிர்வாகிகள் நியமனத் திலும் மாற்றம் கொண்டுவர முடிவாகியுள்ளது. இனி பா.ஜ.க.வில் யார் வந்து இணைந்தாலும் 6 மாதத்துக்கு பதவி கிடையாது. கட்சியில் அவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்தே பதவி தருவது என முடிவாகியுள்ளது. சேவைக்காக மக்களிடம் பணம் வாங்குகிறார்கள் என்பதெல்லாம் பொய்'' என்றார்கள்.
-கிங்