திங்கட்கிழமையன்று, "25 ஆண்டுகாலமாக பா.ஜ.க.வில் இருந்தேன். அழகப்பன் என்பவர் என்னை மிரட்டி சொத்துக்களைப் பறித்தார். இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன், கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றிய ஒருவருக்கு கட்சியில் பலர் தீவிரமாக உதவுகிறார்கள், அந்த ஏமாற்றுக்காரருக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். மனவேதனையுடன் கட்சியிலிருந்து வெளி யேறுகிறேன்'' என பா.ஜ.க.வின் தீவிர செயற்பாட்டாளர்களில் ஒருவரான நடிகை கவுதமி அறிக்கை வெளியிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதன் எதிர்வினையாக, "தான் ஒரு நடிகை என்று நினைக்காமல் கட்சியின் அடிமட்டத் தொண்ட ராக கட்சிப் பணியாற்றியவர். கவுதமி அளித்த கடிதம் மனவேத னையாக இருக்கின்றது. தன்னம் பிக்கையும், தைரியமிக்க பெண் கவுதமி. அவர் என்ன பிரச்சனை என்று முழுமையாகக் கூறியிருந் தால் அவருக்கு உதவிசெய்ய எளிதாக இருந்திருக்கும்'' என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதியும், "இப்ப வும் அவரிடம் பேசிக் கொண்டுதான் இருக்கின் றேன். அவருக்கு உதவக் கடமைப்பட்டுள்ளேன்'' என அண்ணாமலையும் போட்டி போட்டு செய்தியாளர்களிடம் பேச, "எதற்காக அவசரப்பட்டு இவர்கள், கவுதமி விஷயத்தில் கருத்துக் கூறவேண்டும்?' என்பது கட்சியில் விவாதப் பொருளாகியுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை ஆணைய ரிடம் கொடுக்கப்பட்ட புகாரில், "நான், ஆந்திர மாநிலத்தில் பிறந்து கடந்த 35 வருடங்களாக சென்னையில் வசித்துவருகிறேன். எனக்கு ஆதித்தி சுப்புலட்சுமி பாட்டியா எனும் மகள் இருக்கிறார். நான், திரைப்படத் துறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி மொழிகளில் கதாநாயகியாக சுமார் 125 படங்களில் நடித்துள்ளேன். கடந்த 2004-ஆம் ஆண்டு நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தேன். உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால், மருத்துவரின் அறிவுறுத்தலின்பேரில் நான், எனது தொழில் மற்றும் இதர செயல்களிலிருந்து ஓய்வெடுத்தேன். இந்த நிலையில் என்னுடைய ரசிகர் என்கின்ற போர்வையில் சிவகங்கை மாவட்டம் காரைக் குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்த மு.சொ.அழகப்பன் அறிமுகமானார். அவ ருடைய வயது, அக்கறை அவர் குடும்பத்தா ருடைய நெருக்கம் ஆகியவற்றாலும் என்னு டைய மகளின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிலுள்ள சுமார் 10 ஏக்கர் நிலத்தை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வெவ்வேறு பக்கங்களில் முதலீடு செய்யவும் எண்ணினேன். இதனால் என்னுடைய இடத்தை விற்க அழகப்பனுக்கு தனி பொது அதிகார ஆவணம் எழுதிக் கொடுத் தேன். (17.06.2020 ஆவண எண்:1126/2020)
அந்தப் பவரைப் பயன்படுத்தி சிறு, சிறு துண்டுகளாக ரூ..4,10,00,000-க்கு அந்த இடத்தை விற்றதாக என்னிடம் கிரையத்தொகை கொடுத்தனர். பின்னாளில், ரூ. 11,17,38,907-ற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், அதற்காக கேப்பிட்டல் கெய்ன்ஸ் டாக்ஸ் ரூ.2,61,25.637/- வருமான வரி கட்டவில்லை என்றும் நோட் டீஸ் வந்தபிறகுதான் தெரிந்தது அதில் மோசடி நடைபெற்றது. இது தெரியும் முன்னரே என் னிடம் கொடுக்கப்பட்ட கிரையத் தொகையைக் கொண்டு, நீலாங்கரை 5-வது குறுக்குதெரு பகுதியில் விற்பனைக்கு வரும் சுமார் 15,895 சதுரஅடி இடத்தை வாங்கலாம். டாக்ஸ் பிரச் சினையும் வராது என்று கூறியதால் அதற்கும் சம்மதித்து அந்த இடத்தினை ரூ.3.90 கோடிக்கு வாங்க ஒப்புக்கொண்டேன். நான் அந்த இடத்தின் உரிமையாளர் அனுப் குருவில்லா விடம் ஒரு முறையாவது தொலைபேசியில் இது சம்பந்தமாக பேசவேண்டுமென்று கேட்டும், அதை அழகப்பன் தவிர்த்துவிட்டார்.
எனினும் பணத்தை வங்கிப் பரிவர்த்தனை கள் மூலம் கொடுத்துவிட்டேன். ஆனால் அழ கப்பனோ அவருடைய மனைவி நாச்சாள் பெயரிலும் சேர்த்து சொத்தினை (25/09/2020 ஆவண எண்:5159/2020) கூட்டாகப் பதிந்துள் ளார். மேலும், நான் எந்தவொரு காலகட்டத் திலும் அழகப்பனுக்கோ அல்லது அவரது மனைவிக்கோ, என்னுடைய பணத்தில் கூட்டாக சேர்த்து சொத்துகளை வாங்க எந்த சூழ்நிலை யிலும் அதிகாரம் வழங்கவில்லை. பதிவு செய்யப்பட்ட ஆவண எண்:5159/2020 மற்றும் என்னுடைய வங்கிப் பரிவர்த்தனையை ஆராய்ந்து பார்த்தபோது விற்பனைத் தொகை யான ரூ.3.90 கோடியில் என்னிடமிருந்து ரூ.300 கோடியும், அழகப்பன் மனைவி நாச்சாள் மீதி விற்பனைத் தொகையினை கொடுத்ததுபோல் தயார்செய்து பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டு மேலும் அதிர்ந்துபோனேன். அதுபோல் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எனது 8.35 ஏக்கர் நிலத்தினை அழகப்பன், அவரது மகன் சிவா அழகப்பன் மற்றும் மருமகள் ஆர்த்தி அழகப்பன் பெயரில் மாற்றிவிட்டு அதற்கான விற்பனைத் தொகையினையும் தருவதாக கூறிவிட்டு அதற்கான தொகையினையும் எனக்குக் கொ டுக்காமல் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.
கடந்த 20.10.2015-ஆம்? தேதி ஆவண எண் 1235/2015ன்படி சென்னை மத்திய சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து அழகப்பன் அவர் களுக்கு தூத்துக்குடியிலுள்ள எனது சொத்தினை விற்பனை செய்ய பொதுஅதிகாரப் பத்திரம் பதிவுசெய்து கொடுத்தேன். ஆனால் அவர் அந்த பவர் ஆவணத்தை பயன்படுத்தி ஐங்குணம் கிராமம், கீழ்பென்னாத்தூர் தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சர்வே எண்:79/2 &, 79/28, 79/26, 79/4, 73/24, 74/1 &, 74/4 & 1, 75/22, 79/2-ல் ஆக மொத்தம் 3.99 ஏக்கர் நிலத்தை ரூ.6 லட்சத்திற்கு ஆவண எண்:403/2019-ன்படி 08.03.2019-ல் நிலம் வாங்கியுள்ளார்.
அந்த ஆவணத்தைப் பார்வையிட்டதில் அந்த இடத்தினை வாங்கியவர் இடத்தில் என்னுடைய பெயர் மட்டுமில்லாமல், அழகப்பன் மனைவி நாச்சாள் அழகப் பன் பெயரும் இருந்தது. ஆனால் அந்த இடத்திற்கு நாச்சாள் எந்த பணமும் கொடுக்க வில்லை. இதைப் பற்றி அழகப்பனிடம் கேட்டபோது, எனக்கும் என் மகளுக்கும் கொலை மிரட்டல் விட்டார். நம்பிக்கை மோசடி செய்த அழகப் பன், நாச்சாள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனை வரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். எண்232/2023-ன் கீழ் அழகப்பன், நாச்சாள், சிவா அழகப்பன், ஆர்த்தி அழகப்பன், பாஸ்கர் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக நடிகை கவுதமியை சந்திக்க முயற்சித்தோம். சந்திப்பை தவிர்த்துவிட் டார். அவர் சார்பாக அவரது தரப்பிலிருந்து பேசியவர்களோ, "அவர் பேசும் மனநிலையில் இல்லை. இதுபற்றி பேசினாலே வெடித்து அழு கிறார். தன் வாழ்நாள் சேமிப்பு அத்தனையையும் ஒருவர் திருடிவிட்டார். அவனிடமிருந்து என்னு டைய சேமிப்புகளை மீட்டுத் தாருங்கள் என மன்றாடி காவல்துறையை நாடினார். அதன் தொடர்ச்சியாக அவர்மீது திருவண்ணாமலை மற்றும் சென்னை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு களில் 15/2023 மற்றும் 232/2023 எண்களில் வழக்குப் பதிவானது. ஆனாலும், இப்பொழுது வரை அவன் கைது செய்யப்படவில்லை. பின்னாளில்தான் தெரிந்தது அவரைப் பாது காப்பது சொந்தக் கட்சியிலுள்ள தலைவர்களே! அப்புறம் எதற்காக இந்தக் கட்சியில் இருக்கவேண்டுமென்று கருதியே அவர் விலகல் அறிக்கையை வெளியிட்டார்'' என்றனர்.
நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றஞ் சாட்டப்படும் அழகப்பன் குறித்து மாத்தூர் கோவில் பங்கினைச் சேர்ந்த அதே சமூகத்தார், "துவக்கத்திலிருந்தே இந்த மாதிரி சில்லறை வேலை களை செய்துவந்தார். அவரது சொந்த ஊரிலும், கீழச்சீவல்பட்டியிலும் இது மாதிரி இட முறை கேடுகளில் ஈடுபட, விவ காரம் பெரிதானது. இத னால் சென்னை வேளச் சேரியில் செட்டி லானார். அங் கிருந்தபடியே இவரது சமூகத்தைச் சேர்ந்த மறைந்த இயக்குநர் ஒருவர் மூலமாக சினிமா கம்பெனிகளில் பணம் கொடுத்து வாங்கலானார். இதனிடையே காசியில் காசிநாட்டு கோட்டை நகரத்தாருக்குச் சொந்தமான நந்தவனத்தை மீட்டெடுத்த விஷயத்தில் ஹீரோவானார். ஆனால் உண்மையில் இவரால் ஏமாற்றப்பட்டிருக்கும் கவுதமி மூலமாகத்தான் இந்த நந்தவனம் மீட்கப்பட்டது என்பது இப்பொழுது தெரியும். அந்தம்மாவிற்கு துரோகம் செய்யலாமா?'' என்கிறார்.
"கவுதமிக்கு மனஅழுத்தம் கொடுத்து ராஜினாமா அறிக்கையை வெளியிடக் காரணம் முழுக்க, முழுக்க இருவரையே சாரும். ஒருவர் கோவை தெற்கு எம்.எல்.ஏ.வான வானதி சீனி வாசன். இன்னொருவர் அண்ணாமலை. இருவரும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் செய்தியாளர்களிடம் பேசியபொழுதே தெரிந் திருக்க வேண்டாமா..? திருவண்ணாமலையில் எப்.ஐ.ஆர். போடுவதற்கு அண்ணாமலை காரண மாக இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கடுத்த நாட்களில் அழகப்பனின் சொந்த ஊரிலுள்ள அண்ணாமலையின் நெருங்கிய நண்பர், ‘இதில் தலையிடவேண்டாமே..? தேர்தலின்போது உதவுகிறேன்'’ என்றதுமே அண்ணாமலை விலகிக் கொண்டார். கல்யாண வீடாக இருந்தாலும், இழவு வீடாக இருந்தாலும் தான்தான் முன்னிலை என்பது வானதியின் எண்ணம். கவுதமியை தேசிய அரசியலில் தள்ள முயற்சித்த நிலையில், அவரோ எனக்கு உடல்நிலை சரியில்லை நான் இங்கேயே இருந்துகொள்கிறேன் என்றிருக்கிறார். பா.ஜ.க. மாநில அரசியலில் அடுத்து யார்.? என்ற கேள்விக்கு கவுதமியே முன்னிலையில் உள்ளார். அந்தம்மாவின் சென்சிடிவ் டைப் அவருக்கு எதிரி என்பதால் அழகப்பனுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகின்றார் வானதி.
இதற்காக கைது நடவடிக்கை வேண்டாமே என வானதி சென்னை சிட்டி கமிஷனரிடம் பேசியுள்ளதாகவும் கட்சியில் தகவல் உள்ளது. வானதி எதிர்பார்த்தது போல் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டுள்ளார் கவுதமி'' என்கிறது கமலாலய சோர்ஸ்.
இதுதொடர்பாக கருத்தறிய வானதி சீனி வாசனை தொடர்புகொண்டோம். பதிலில்லை. இதுகுறித்து அவர் விளக்கம் தரும்பட்சத் தில் அதனை பதிவுசெய்யவுள்ளோம். காவல் துறையினர் பா.ஜ.க.வின் லாபிக்கு வளையா மல் நேர்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படங்கள்: விவேக்