முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவிடம் அருகே கடலுக்குள் உயரமான பேனா சிலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியபோது, சீமான் உட்பட எதிர்க்கட்சி யினரும், சில அமைப்பினரும், கடல் வளம், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால் கடலுக்குள் பேனா சிலை வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சீமான் ஒருபடி மேலே போய், எதிர்ப்புகளை மீறி பேனா சிலை வைக்கக்கூடாது என்று போராடுவேன், "மீறி பேனா சிலை வைத்தால் உடைப்பேன்!' என்றார். இதன்பிறகு தி.மு.க.வினரும், ஆதரவுக் கட்சியினரும், சீமானின் வன்முறைப் பேச்சுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தி வரு கின்றனர். பொதுமக்களிடமும் பேனா பேசு பொருளாகி விட்டது. இந்த நிலையில்தான் புதுக்கோட்டை நகரில் உருவாகும் பேனா சிலை பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது!
புதுக்கோட்டையில், கலைஞர் கருணா நிதி கலை அறிவியல் அரசு மகளிர் கல்லூரி எதிரில் உள்ள 5 ஏக்கர் காலி இடத்தில், அறி வியல் பூங்கா அமைக்க கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அறிவிப்பு வெளியாகி பணிகள் மெல்ல நடக்கத் தொடங்கின. சுமார் 900.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர்கள், பெரியவர்களுக்கான பூங்கா, உடற்பயிற்சிக் கூடம், கணிதம், அறிவியல் உபகரணங்கள், காய் கறி, பழங்கள், இசை நீரூற்று, கான்கிரீட் மரங் கள், விலங்குகள், பறவைகள் என நூற்றுக்கணக் கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா தயாராகி வருகிறது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் பூங்கா திறப்புவிழா காண உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பணிகளை ஆய்வு செய்தார்.
தற்போது ஒரு வாரமாக அந்த அதிநவீன பூங்காவில், கான்கிரீட் "பேனா சிலை' அமைக் கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பேனா சிலை கட்டுமானப் பணிகள் நடப்பது பற்றி அறிந்த ஏராளமானவர்கள் தினசரி வந்து பார்த்துச் செல்கின்றனர். புதிய அறிவியல் பூங்கா அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு திட்ட மதிப்பீடு செய்து, பூங்காவில் என்ன சிலை கள், உபகரணங்கள் வைக்கப்படும் என்பதை வரையறுத்து பணிகள் ஆமை வேகத்தில் தொடங்கி நடந்தது. இந்நிலையில், பேனா பிரச்சனை கிளம்பிய பிறகு திட்ட வரைவில் இல்லாத 10 அடி உயர பேனா சிலை வைக்க புதிய வரையறை வகுக்கப்பட்டு, பூங்கா நுழைவாயில் அருகில் அனைவரும் பார்த்துச் செல்லும் வகையில் பேனா சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. பேனா சிலை அமைப்பு எப்படி உள்ளது என்பதைப் பார்வையிட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பூங்காவிற்கு வந்தார்.
தமிழ்நாட்டில் பேனா பேசுபொருளான பிறகு முதல் பேனா சிலை புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டு, முதலமைச்சர் பிறந்த நாளில் திறக்கத் திட்டமிடப்பட்டுள் ளது. அதனால் முதலமைச்சர் பிறந்த நாளுக்குள் பணிகள் முடிவடைய வேண்டும் என்பதும், முதலமைச்சர் பிறந்த நாளுக்கு புதுக்கோட்டையிலிருந்து அவரது தந்தையின் பேனா சிலையைத் திறக்கும் பரிசைக் கொடுக்க வேண்டும் என்பதுமே திட்டம். இதில் மாவட்ட அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அதிக ஆர்வம் காட்ட, மாவட்ட ஆட்சியர், நகராட்சி மூலம் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் என்கிறார்கள். ஆக, "மெரீனா கடலுக்குள் வைக்கப்படும் பேனா சிலையைத்தானே நீங்கள் எதிர்க்க முடியும்? இதோ ஊருக்குள்... பூங்காவில் சிலை வைக்கிறோம்... இதே போல் ஒவ்வொரு ஊரிலும் பேனாவுக்கு சிலை வைக்கிறோம்... இதை உங்களால் தடுக்க முடியுமா?' எனக் கேட்காமல் கேட்பது போல் இருக்கிறது! இனி மற்ற நகரங்களும் இதனைப் பின்பற்றி பேனா சிலைக்கு தனி மதிப்பும் மரியாதையும் உருவாகக்கூடும்!
இதே புதுக்கோட்டை நகரில் காந்தி பூங்கா உள்பட பல பூங்காக்கள் சரியான பராமரிப்பு இல்லாமல், தனியார் ஒப்பந்தக்காரர்கள் கையில் சிக்கி வசூல் வேட்டை நடந்துவருகிறது. அவற்றையெல்லாம் மேம்படுத்தி, வசூல் வேட்டையையும் முறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுகின்றது.