"பக்தர்களே.... நான் அணிந்திருக்கும் அத்தனை நவரத்தினக் கற்களும், தங்க நகைகளும் போலி. எனக்கே விபூதி அடிச்சிட்டானுக இந்த படுபாவிக." என தன்னைத் தேடி வரும் பக்தர்களிடம் புலம்பி வருகின்றார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சூரசம்ஹார தலமாக அருள்பாலித்து வரும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள், வைரக்கற்கள், நிலபுலங்கள் ஆகியனவற்றை திட்டம் போட்டே கொள்ளை யடித்துள்ளனர் திருச்செந்தூர் கோவிலில் பணியாற்றிய ஊழியர்கள். இந்த அதிர்ச்சி கரமான உண்மைகள் தகவலறியும் சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ளது. அற நிலையத்துறை மூலம் நிர்வகிக்கப்படும் அத்தனை திருக் கோவில்களிலும் இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் பிரிவு 31, 33-ன் படி ஆண்டிற்கு ஒருமுறையும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஆய்வுகள் மேற்கொண்டு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமென்பது பொதுவான விதி. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள பல திருக்கோவில் களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தணிக்கை அறிக்கை வேண்டு மெனக் கேட்டிருந்தனர், காஞ்சிபுரத்தினை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர்களான டில்லிபாபுவும், தினேஷும்.
டில்லிபாபுவோ., "பல வருடப் போராட் டம் இது? திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள் எவ்வளவு, அவைகள் என்னென்ன? என்பதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் போராடி வந்தோம். இந்த நிலையில் சமீபத்தில்தான் தணிக்கை அறிக்கை கிடைத்தது. சுமார் 1000 பக்கம் கொண்ட தணிக்கை நகலில், இந்தத் திருக்கோவிலில் நடைபெற்ற இரண்டு ஊழல்கள் மட்டுமே தான் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள், பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள், ஆண்டுதோறும் கோவிலுக்கு வரக்கூடிய வருமானங்களில் நடைபெற்ற ஊழல்கள் என, பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பழைய ஆய்வறிக்கையின்படி இதனை ஒப்பீடு செய்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. இதில் இத்திருக்கோயிலின் நகைகள் மற்றும் விலையுயர்ந்த கற்களின் மதிப்பீட்டில் குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. குறிப்பாக, உற்சவருக்கு உரிய வைரக்கற்கள் பதித்த நெற்றிப்பட்டத்தில் பெரும்பாலான வைரக்கற்களுக்குப் பதிலாக, மிகமட்டமான வைரக்கற்கள் மாற்றப் பட்டும், பொன்னாலான தவளைகளில் 1977-ம் ஆண்டு மறுமதிப்பீடு அறிக்கை குறிப்புரையில் 1 தவளை காணவில்லை என்றும், அதற்கு உண்டான இழப்பீடு தற்போதுவரை வசூலிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. 38 வைரக்கற்கள் அடங்கிய அம்பாள் பிந்து சரக்கோர்வை மொத்தமும் மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலியா விக்டோரியா பொன் காசுமாலையில் ஒரு பொன்காசு குறைபாடு இருப்பதாகவும், அதற்கு உண்டான இழப்பீடும் தற்போதுவரை வசூலிக்க வில்லை எனவும், ஐந்து வடகடிகார சங்கிலி கல்லிழைத்த முகப்பு திருகாணியுடன் 31 பட்டை வைரங்களில் 12 பட்டை வைரக்கற்கள் மாற்றப் பட்டும், பொன் உமேச்சில் பட்டை வைரக்கற்கள் பதித்த அபய அஸ்தம் இனத்திலிருந்த 283 வைரக்கற்களில் 133 வைரக்கற்கள் மாற்றப் பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை குறிப்பிடு கின்றது. அதுபோல், திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் என்ற கிராமத்தில் கோவிலுக்குச் சொந்தமான 337 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த நிலங்கள் தற்பொழுது திருக்கோவிலின் கட்டுப்பாட்டில் இல்லை என்கின்றது அந்த அறிக்கை. தணிக்கை அறிக்கையின் படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மிச்சமிருக்கின்ற நகைகளும் நிலபுலன்களும் காப்பாற்றப்படும்'' என்கிறார் அவர்.
திருக்கோவிலின் ஊழியர்களுக்கு சம்பளமாக ஆண்டிற்கு ரூ.7 கோடி வரை செலவிடப் படுவதாகவும், ஒரே நாளில் தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்த வகையில் செலவு மட்டும் ரூ.9 கோடி என தணிக்கை அறிக்கையிலேயே குறிப்பிட்டு திகிலூட்டியுள்ளனர்.
மேலும், இத்திருக்கோவில் திருவாபரணம் கையாட்சி பார்த்து வந்த ஸ்தலத்தார்களான டி.எஸ்.எஸ். கிருஷ்ணய்யர், முத்துச்சாமி, செந்தில் மணி அய்யர், சுப்பைய்யர் ஆகியோர் திருக்கோவில் கருவூலத்திலிருந்து பல கோடி மதிப்பிலான 46 அயிட்ட நகைகளைத் திருடியுள்ளனர். குறிப்பாக தங்கத்தை குறைத்தும், வைர, வைடூரிய, மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினக் கற்களை மாற்றியும் கொள்ளையடித்துள்ளனர். ஆனால் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு சாதாரண பிரிவின் கீழ் வழக்கினை பதிவு செய்ய புகார் கொடுத்துள்ளது திருக்கோவில் நிர்வாகம்.
"சுவாமியை தூக்கி வருகின்ற தந்த பல்லக்கு, கைலாசபர்வத வாகனம், கமல வாகனம், குதிரை வாகனம், வெள்ளி சப்பரம், அன்ன வாகனம், மயில் வாகனம், யானை விலாஞ்சி புல் வாகனம் உள்ளிட்ட வெள்ளி வாகனங்களில் வெள்ளியை தேடிப் பிடித்துத் தான் பார்க்கவேண்டும் என்கின்ற நிலை. அதனையும் சுரண்டி எடுத்துவிட்டார்கள். இதுவும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2010 மதிப்பீடு அறிக்கையின்படி, மரத்தின் மேல் உள்ள தந்த சட்டங்களில் 80% தேய்மானம் உண்டாகியுள்ளது. "ஆணையர் பொது நிதி' என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அது யாருக்கு..? என்பது தான் கேள்விக்குறியே..! இந்த தணிக்கை அறிக்கை எடுக்கப்பட்டது பச- 1427ஆம் ஆண்டு. ஆறு ஆண்டுகளுக்கு மேல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாரைக் காப்பாற்ற?'' என கேள்வி எழுப்புகின்றார் மற்றொரு ஆர்.டி.ஐ. ஆர்வலரான தினேஷ்.
இதுகுறித்து கருத்தறிய திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி திருக்கோவிலின் இணை ஆணையர் கார்த்திக்கை தொடர்புகொண்டோம். பதிலளிக்க வில்லை. மீண்டும் ஒரு முறை தணிக்கை செய்து அதன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவெண்டு மென்பது பக்தர்களின் கோரிக்கை.
சுப்பிரமணிய சுவாமியின் புலம்பலை தடுக்குமா அறநிலையத்துறை..?