ஒருவர் மூச்சுத் திணறலால் இறந்தார்- இன்னொருவர் மாரடைப்பால் இறந்தார் என தமிழகத்தின் முதலமைச்சரே அறிவித்த சாத்தான்குளம் காவல் நிலைய கொடூர சித்திரவதை மரணத்தின் உண்மைகளைத் தொடர்ந்து ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வரும் நக்கீரனின் மற்றொருExclusive ஆதாரம் இது.
தந்தை மகனான ஜெயராஜ் பென்னிக்ஸிற்கும் காவல்துறையினரால் நடந்த சித்திரவதைக்கான காயங்களை தோலுரித்துக் காட்டுகின்றன இந்த படங்கள்:
பென்னிக்ஸ், ஜெயராஜ் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது இருவரின் உடல்களும்... ஜூன் 24ந் தேதியன்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள இருவரது உடலில் எந்தெந்த இடங்களில் காயங்கள் இருந்தன? காயங்களின் அளவுகள் குறித்தும் பிரேதப் பரிசோதனைக்கு முன் கணக்கெடுக்க வழக்கறிஞர் ராஜாராம், இறந்த நபர்களின் உறவினர்களான ஜெயராஜின் இரண்டாவது மகள் பியூலாவின் கணவர் பொன்சேகர், மூன்றாவது மகள் அபிஷாவின் கணவர் வினோத், பென்னிக்ஸின் தாய்மாமன் தாவீத், பிணவறை ஊழியர்களான திருப்பதி, கணேசன், மற்றொரு கணேசன் மற்றும் சிவனம்மா ஆகியோர்களுடன் கோவில்பட்டி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தலைமையில் ஒரு டைப்பிஸ்ட், போலீஸ் வீடியோகிராபர் ஒருவர், நீதிபதியின் உதவியாளர்கள் டபேதார் உள்ளிட்டோர் ஆஜராகினார்.
மாலை 4 மணிக்கு துவங்கிய காயங்கள் குறிப்பெடுக்கும் பணி சுமார் 1 மணி நேரம் நீடித்தது. உடலில் பல இடங்களில் உள்ள ரத்த காயங்கள், சிறிய மற்றும் பெரிய அளவிலான காயங்கள். மற்றும் ஆழமான காயங்கள், கொப்புளங்கள் சூ காலால் உதைத்ததால் உடலில் உருவான வெப்பக் கொப்புளங்கள், பிறப்புறுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்கள், பின் புட்டங்களில் தோலே இல்லாத அளவுக்கு சிவப்பாக சதை தெரியும் அளவிற்கு கொடூரமாக தாக்கப்பட்டதன் அடையாளங்கள் இருந்தன.
அத்தனை சம்பவங்களும் வீடியோவில் பதிவான நிலையில் இறந்த பென்னிக்ஸிற்கு 20க்கும் அதிகமான காயங்களும், ஜெயராஜூற்கு 15ந்திற்கு அதிகமான காயங்கள் இருந்ததாக குறிப்புக்கள் பதிவாகின.
ஆடு-கோழிகளைக்கூட உயிர் பறித்தபிறகே தோலுரிக்கிறார்கள். இரண்டு மனிதர்கள் உயிருடன் தோலுரித்து, அவர்களை மரணத்தில் தள்ளியிருக்கின்றன சாத்தான்குள போலீஸ் சாத்தான்கள். நிவாரண உதவி-அரசு வேலை போன்ற கருணைகள் ஒருபுறம் கிடைத்தாலும், நீதி கிடைத்தாக வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் வலியுறுத்தலாக உள்ளது. நீதி விரைந்து கிடைப்பதற்கு ஆதாரமான இந்தப் படங்கள் நிச்சயம் உதவும்..
- நாகேந்திரன்
-----------------------------------
சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைப் படுகொலை தொடர்பாக முதன்முதலில் புலனாய்வு செய்திகளை வெளியிட் டது நக்கீரன் மட்டுமே. தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது. நமது செய்தியாளர்கள் பல தளங்களிலும் பணி யாற்றி செய்திகளை சேகரிக்கிறார்கள். ஜெயராஜ்- பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டதை உறுதிப் படுத்திய டாக்டரின் குறிப்பு முதல், அவர்கள் மீதான கொடூர சித்ரவதைகளை போஸ்ட் மார்ட்டம் படங்கள் வரை பலவற்றையும் துணிச்சலான புலனாய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்த நமது நிருபர் தம்பி நாகேந்திரன் பாராட்டுக்குரியவர்.
-(ஆர்)