""ஹலோ தலைவரே, மழைவிட்டும் தூவானம் விடலைங்கிற மாதிரி, மோடி, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழகத்துக்கு வந்துபோன பிறகும், அவர் வருகை தொடர்பான சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லையே.''’

""அசகாய சூரர்னு சொல்லப்பட்ட மோடி, ஒளிந்து ஒளிந்து போவதுபோல, மேற்கொண்ட தமிழகப் பயணம் வடநாட்டு ஊடகங்கள் வரை பிரபலமாயிடிச்சே...''

bigboss

Advertisment

""ஆனா.. தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு வேறொரு அதிருப்திங்க தலைவரே.. தமிழகம் வந்த மோடியை பத்திரிகை மற்றும் ஊடகங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்திக்கவைக்க, பா.ஜ.க.வின் ஊடக விவாதப் பிரபலங்களான வானதி சீனிவாசனும் கே.டி.ராகவனும் முயற்சி செஞ்சாங்க. அதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சரான நிர்மலா சீதாராமனை, இவங்க ரெண்டுபேரும் அணுகினாங்க. நிர்மலா சீதாராமனோ, மோடிக்கு நேரம் இருக்குமான்னு தெரியலை. இருந்தாலும் அவங்களை வரச்சொல்லுங்க. பார்க்கலாம்ன்னு சொல்லிட்டார். இதன்படி ’இந்து’ராம் உள்ளிட்ட ஊடகத்தினரை ராகவன் தரப்பு வர வழைத்தது. ஆனால், மோடியோ, என் புரோக்ராம்ல ப்ரஸ் மீட் இல்லையேன்னு சொல்லி, அவர்களில் ஒரு சிலரிடம் மட்டும் கைகுலுக்கிவிட்டுப் புறப்பட்டுவிட்டார். பிரதமருடன் சந்திப்புன்னு சொல்லி, எங்களை வரவழைத்து ஏமாற்றி விட்டீர்களேன்னு ஊடகத் தரப்பு, தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் ஆதங்கப்பட, நாங்க அழைக்கலையே. எங்களுக்கே இந்த நிகழ்ச்சி பற்றி தெரியாது. அதிகாரப்பூர்வ அழைப்பான்னு தெரிஞ்சிக்காமல் வந்தது உங்க தப்புனு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சொல்லியிருக்காங்க.''’

""சென்னையில் மோடிக்கு காட்டப்பட்ட எதிர்ப்பை, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் எப்படிப் பார்க்குறாங்க?''’

""பிரதமர் மோடியை தமிழக எதிர்க்கட்சிகளும் தமிழுணர்வாளர்களும் அவமானப்படுத்தி விட்டதாக, தமிழிசை உள்ளிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சங்கடத்தில் இருக்காங்க. தமிழகம் வந்த மோடியைத் தடபுடலா வரவேற்க, தமிழக பா.ஜ.க. ஏற்கனவே மோடி தரப்பிடம் அனுமதி கேட்டது. ஆனால் மோடி தரப்போ, இந்த நேரத்தில் தடபுடல் வரவேற்பெல்லாம் வேண்டாம்ன்னு மறுத்துடுச்சு. அதேபோல் திருவிடந்தைக்கு ஹெலிகாப்டர்ல மோடி போகும்போது, எதிர்ப்பாளர்கள் அவர் பார்க்கும்படி, வானில் கருப்பு பலூனைப் பறக்கவிடப் போறாங்கன்னு தெரிஞ்சதும், அதை ஈடுகட்ட மோடியை வரவேற்று, அதற்குரிய வாசகங்களோடு காவி நிற பலூன்களைப் பறக்கவிடவும் இங்கிருந்து அனுமதி கேட்டாங்க. தேவையற்ற சர்ச்சையும் மோதலும் உருவாகும்னும், அது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை இன்னும் வீக் ஆக்கிடும்னும் மோடி தரப்பு நோ சொல்லிடுச்சி. டெல்லித் தலைமை அனுமதிச்சிருந்தால், பிரமாண்டமா மோடியை வரவேற்று அமர்க்களப்படுத்தி இருக்கலாமேன்னும் தமிழக பா.ஜ.க.வினர் ஆதங்கப்படறாங்க.''’

Advertisment

samy""சு.சாமியை சந்திக்கவும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மோடி தடைபோட்டதா ஒரு தகவல் வருதே?’

""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. பிரமுகரான சு.சாமி, எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் மீது, ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடரும் திட்டத்தில் இருக்காரு. ஆட்சியாளர்கள் மீது வழக்குத்தொடரணும்ன்னா அதற்கு மாநில கவர்னர் அனுமதி கொடுத்தாகணும். ஏற்கனவே கவர்னர் சென்னாரெட்டிகிட்ட இப்படி அனுமதி வாங்கித்தான், ஜெ. மீது கேஸ் போட்டார் சாமி. அதுபோல புரோகித்கிட்ட அனுமதி வாங்குவதற்காக அப்பாயின்ட்மெண்ட் கேட்டார். சு.சாமியின் இயல்பைத் தெரிஞ்சி வச்சிருக்கும் கவர்னர், இது குறித்து பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிவிக்க, பிரதமர் அலுவலகம் இப்போதைக்கு அவரை சந்திக்கவேண்டாம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிடுச்சி. சு.சாமியோ தன் சகாக்களிடம், "விரைவில் கவர்னரிடமிருந்து வழக்குக்கு அனுமதி வாங்கிடுவேன். அதன் பிறகு, தமிழக அரசு எப்படி கிடுகிடுன்னு ஆடப்போகுதுன்னு மட்டும் பாருங்க'ன்னு சொல்லிக்கிட்டிருக்கார்.''’

""முதல்வர் எடப்பாடிக்கு இது தெரியுமா?''’

seetharaman-vanathi

""தெரியாமல் இருக்குமா? உள்ளுக்குள் உதறல் இருந்தாலும், மோடியின் கருணை இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தங்களுக்குத் தொடரும்ன்னு நம்பறார். அண்மையில் கொங்குமண்டலத் தொழிலதிபர்கள் சிலர் முதல்வர் எடப்பாடியை சந்திச்சி, "நிதித்துறை, சி.எம்.டி.ஏ., வீட்டு வசதி போன்ற துறைகளை வைத்திருக்கும் governorதுணை முதல்வர் ஓ.பி.எஸ்., நம்ம சமூகத்தினருக்கு உதவறதில்லை. அவரோட முக்குலத்தோர் சமூகத்துக்குத்தான் செய்யறார்'ன்னு குறைபட்டுக்கிட்டாங்க. அதுக்கு எடப்பாடியோ, "ஓ.பி.எஸ். அப்படி செய்யமாட்டார். ஏன்னா, சசிகலாவையும் அவர் குடும்பத்தையும் அரசியல்ல இருந்தே ஓரங்கட்டணும்ன்னு தீவிரமா இருக்கும் ஓ.பி.எஸ்., தன் சமூகத்தினருக்குக் கூட, எதுவும் செய்யறதில்லை. நாம்தான் கொங்கு மண்டலத்துக்கு பல வகையிலும் நிறைய செய்யறோம். மோடி, கருணை காட்டும்வரை நம்ம ஆட்சியும், அதன் பயனும் உங்களுக்குத் தொடரும்'ன்னு அவங்களை உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்காரு எடப்பாடி.''’

""இப்படி தன்னைத் தேடி வரும் கொங்கு மண்டலத்தினரை எளிதாக சமாதானப்படுத்திய எடப்பாடி, அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தன் அமைச்சரவை சகா ஒருவரை சமாளிக்க முடியாமல் தவிக்கிறாராமே?''’

""ஆமாங்க தலைவரே, கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை கவனிச்ச வகையிலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை சமாளிச்ச வகையிலும், பொருளாதார மேனேஜ்மெண்ட்டுக்காக, அமைச்சர்கள் நிதி திரட்டித் தரணும்ன்னு சொல்லப்பட்டிருந்தது. அதன்படி எல்லோரும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தாங்க. அப்ப, வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணனும் 58 ’சி’ வரை கொடுத்தாராம். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணனிடமிருந்த வீட்டு வசதித் துறை ஓ.பி.எஸ். கைக்கு மாறுச்சு. ராதாகிருஷ்ணனுக்கு டம்மி துறையான கால்நடைப் பராமரிப்புத் துறை ஒதுக்கப்பட்டது. விரைவில் இவருக்கு வளமான துறை தரப்படும்ன்னு எடப்பாடி சொல்லியிருந்தாராம். அதனால், எனக்கு வளமான துறையைக் கொடுங்க. இல்லைன்னா, நான் வசூலித்துக் கொடுத்ததைக் கொடுங்க. நீங்க எல்லோரும் எப்படி எப்படியெல்லாம் வளமா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்ன்னு அப்ரூவர் லெவலில் ராதாகிருஷ்ணன் பேச ஆரம்பிச்சிட்டாராம்.''’

jayamravi-arya""அமைச்சரவை சகாவே இப்படி பேசினால் முதல்வருக்கு கஷ்டம்தான்... எடப்பாடிக்கு கமல் தரப்பிலிருந்தும் அதிர்ச்சி கிடைக்குதாமே?''’’

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, கமல், தன்னோட அரசியல் பயணத்துக்கு ட்ரைலராத்தான், விஜய் டி.வி. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கிட்டார். ஏன்னா, கமல்ன்னாலே அதிரடி முத்தக் காட்சிதான்னு பெரும்பாலான பெண்கள் அந்நியப்பட்டு விலகி நின்னாங்க. அதனால் பெண்கள் தரப்பையும் கவர் பண்ணணும்ங்கிற நோக்கத்தோடதான், பிக்பாஸ் நிகழ்ச்சியை, கமல் ரொம்பவும் கவனமா, குடும்பப் பெண்களையும் ஈர்க்கும் விதத்தில் நடத்தினார். அவர் நினைத்த மாதிரியே எல்லாக் குடும்பங்களிலும், பெண்களின் மனதிலும் பிக்பாஸுக்கும் கமலுக்கும் வரவேற்பு கிடைச்சுது.. அதனால் இப்ப, பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் இரண்டாவது ரவுண்டு வரப்போகிறார் கமல். புதிதாக அரசியல் கட்சியை அவர் ஆரம்பித்திருக்கும் நிலையில், அதை வளர்க்கும் கணக்கில் பிக்பாஸில் ரீ எண்ட்ரீ ஆகும் தகவல், எடப்பாடியை யோசிக்க வச்சிருக்கு. பிக்பாஸ் மூலம் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை கமல் செய்யலாம்ன்னு எடப்பாடி நினைப்பதால, பிக்பாஸுக்கும் விஜய் டி.வி.க்கும் எப்படி எல்லாம் நெருக்கடிகளைக் கொடுக்கலாம்ன்னு வியூகம் வகுத்துக்கிட்டிருக்கு எடப்பாடி தரப்பு.''’

""இந்த புரோகிராம், தமிழில் வேறு டி.வி.யில் வரலாம்ன்னும் ஒரு தகவல் வந்ததே?’

oviya""பிக்பாஸ் ஐடியா, கலர்ஸ் டி.வி.க்குச் சொந்தமானது. பல மொழிகளிலும் கலர்ஸ் அதை நடத்திக்கிட்டிருக்கு. அந்த வகையில் தமிழிலும் பிக்பாஸைக் கொடுக்க விரும்புச்சு கலர்ஸ். ஆனால் கமலோ, விஜய் டி.வி.ன்னாதான் மறு ரவுண்டு ஆட நான் ரெடின்னு சொல்லியிருக்கார். இதைத்தொடர்ந்து விஜய் டி.வி. நிர்வாகிகளில் ஒருவரான அர்ஜுன் மேனனும், நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனமான ’எண்டமோல் ஷைனும் கமலுக்கு இதற்கான அட்வான்ஸையும் கொடுத்துடுச்சு. ஏற்கனவே பிக்பாஸில் பணியாற்றிய ஸ்கிரிப்ட் டீம் ஒத்துழைக்காத நிலையில், விஜய் டி.வி., புதிய டீமை வச்சி பிக்பாஸை நடத்த ரெடியாயிடிச்சி. அதனால் ஜூனில் பிக்பாஸ்-2 கமல் வரப்போறார். இதில் ஜெயம் ரவி அல்லது ஆர்யா போன்ற பிரபல நடிகர்களை இடம்பெறச் செய்யும் முயற்சிகளும் நடக்குது. மீண்டும் ஓவியா வருவார்னு பேச்சு அடிபடுது.''

""நானும் ஒரு முக்கிய தகவலைச் சொல்றேம்பா. அண்மையில் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள், கெமிஸ்ட்ரி தேர்வும் கணிதத் தேர்வும் கடினமாக இருந்ததுன்னு மிரட்சியில் இருக்காங்க. இந்த நிலையில் ப்ளஸ் டூ வினாத்தாள் திருத்தும் பணி ஆரம்பிச்சிருக்கு. வழக்கமா ஒவ்வொரு மாணவரின் வினாத்தாளையும், ஒரு ஆசிரியர் திருத்த, ஒரு ஆசிரியர் பரிசீலிக்க, இன்னொரு ஆசிரியர் சரி பார்க்கன்னு 3 ஆசிரியர்கள் கவனிச்சி மார்க்கை உறுதி செய்வாங்க. இந்த ஆண்டு முதல், 3 ஆசிரியர்களை நான்குன்னு உயர்த்திட்டாங்க. அந்த நான்காவது ஆசிரியர், கேந்திரிய வித்யாலயா மாதிரியான மத்திய பாடத் திட்டப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரா இருப்பாராம். ஏன் இந்த மாற்றம்ங்கிற சந்தேகம் மாணவர்களுக்கும் மாநிலக் கல்வித்திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டிருக்கு. ஏற்கனவே மத்திய அரசின் நீட் தேர்வு நெருக்கடியில் இருக்கும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு, இப்படியொரு கூடுதல் சோதனையை மத்திய அரசு கொடுத்து, ஸ்டேட் போர்டில் படிக்கும் மாணவர்களின் மார்க்கை குறைத்து, அவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்க திட்டமிடுதோன்னு கல்வியாளர்கள் கவலைப்படுறாங்க.''’

-----------------------------------

இறுதிச்சுற்று!

இரங்கல்-பரபரப்பு!

ஈரோடு தெற்கு தி.மு.க. மா.செ.வான சு.முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி ஏப்.14-ஆம் தேதி சென்னையில் காலமானார். தகவல் கிடைத்ததும் தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முத்துசாமியின் சென்னை இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். முத்துசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நெடுங்குளத்திற்கு 14-ஆம் தேதி மாலை ஜெயலட்சுமியின் உடல் கொண்டு வரப்பட்டதுமே அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். முத்துசாமியின் நெருங்கிய உறவினரான முதல்வர் எடப்பாடி அஞ்சலி செலுத்த வருவதாக 15-ஆம் தேதி காலையிலிருந்தே தகவல் பரவியது. நெடுங்குளம் கிராமமே அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களால் திணறியது. முத்துசாமியால் அ.தி.மு.க.வில் தான் வளர்ச்சியடைந்ததை எண்ணியும் தான் மட்டும் தனியாகச் சென்றால் வேறு மாதிரி கணக்குப் போடுவார்கள் என்பதை மனதில் கொண்டும் 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோருடன் நெடுங்குளம் வந்த எடப்பாடி, ஜெயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, முத்துசாமியிடம் தனியாக 25 நிமிடங்கள் பேசிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். தி.மு.க. மா.செ. வீட்டு துக்க நிகழ்விற்கு அ.தி.மு.க. முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என ஆளும் கட்சிப் புள்ளிகள் வந்தது தமிழக அரசியலில் வியப்பும் பரபரப்பும் ஆகியுள்ளது.

-ஜீவா