""இன்னும் நான் முழுநேர அரசியல்வாதியாகவில்லை''’என ரஜினி சொல்லிக்கொண்டிருந்தாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் அரசியல் கட்சிகளுக்கே உரிய பதவி சலசலப்பும் முணுமுணுப்பும் கிளம்பியபடியேதான் இருக்கின்றன.
இதுவரை 7,000 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்... ரஜினி மக்கள் மன்றத்தைப் பொறுத்துவரை அனைத்து மாவட்டங்களின் பொறுப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில மாவட்டங்களுக்கு செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர் பதவிகளும்; சில மாவட்டங்களுக்கு பொறுப்பாளர் பதவி, பல மாவட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி என குழப்பியடிக்கிறார்கள்.
மதுரையில் எல்லா தரப்பையும் திருப்திப்படுத்தும் விதமாக மாநகர், புறநகர் என இரண்டாகப் பிரித்து புறநகர் மா.செ.வாக ரபீக், இணைச்செயலாளராக பாண்டியன், துணைச்செயலாளராக சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரில் 1 முதல் 35 வார்டுகளுக்கு ஜாபர், 36 முதல் 65 வரை இளங்கோமணி, 67 முதல் 100 வரையிலான வார்டுகளுக்கு பாலதம்புராஜ் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து, முணுமுணுப்பு கிளம்பாமல் பார்த்துக்கொண்டது ரஜினி மக்கள்மன்றத் தலைமை.
ஆனால் கடந்த 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் பட்டியலைப் பார்த்து பழைய ரசிகர் மன்றத்தினர் பேரதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர். முப்பது ஆண்டுகளாக ரசிகர் மன்றச் செயலாளராக இருக்கும் குணசேகரனை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக அறிவித்தது தலைமை. ஆனால் பல வருடங்களாக மன்றத்துக்கு தொடர்பே இல்லாத, வழக்கு சர்ச்சை உள்ள பஞ்சாட்சரம் என்பவரை மற்றொரு ஒருங்கிணைப்பாளராக நியமித்ததைப் பார்த்து, மாவட்டத்தில் இருக்கும் பெரும்பான்மை நிர்வாகிகள் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர்.
இதேபோல் திருவண்ணாமலை மா.செ.சண்முகம் மீதும் குற்றச்சாட்டு வாசிக்கிறார்கள் பழைய மன்ற நிர்வாகிகள். நீண்ட நாள் நிர்வாகியான, திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பேசியபோது, ""நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரா இருந்த ராஜேஷ், திடீர்னு ரஜினி மக்கள் மன்றத்துக்கு வந்து மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆகிட்டாரு. புதுசா வந்த ரமேஷ், ஐ.டி. விங் செயலாளர், இதையெல்லாம்விட தி.மு.க. வர்த்தக அணி நகர து.செ.வா இருந்த பூக்கடை வெங்கடேசன், ரஜினி மக்கள் மன்றத்தின் திருவண்ணாமலை ந.செ.வாகிட்டாரு. மா.செ.சண்முத்தின் தம்பிதான் இந்த வெங்கடேசன். பணம், கார், பங்களா இருந்தாத்தான் பதவிபோல''’என ரொம்பவே சலித்துக்கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மா.செ.சண்முகத்திடம் கேட்டபோது, ""பொறுப்புகளுக்கு பெயர்களை மட்டுமே பரிந்துரை செய்கிறேன். அவர்களிடம் நேர்காணல் நடத்தி, நியமனம் செய்வது தலைமைதான். இப்போது நியமிக்கப்பட்டுள்ளவர்களின் செயல்பாடுகள் பற்றி மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்புவோம். சரியாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை நியமிப்பார்கள். மற்றபடி வசதி படைத்தவர்களுக்குத்தான் பதவி என்பதில் உண்மையில்லை''’என்றார்.
இந்த சர்ச்சைகள் ஒருபக்கம் சுழன்றடித்துக்கொண்டிருக்க... ‘""கர்நாடக காவியின் தூதர் ரஜினியின் செயல்பாடுகள் தமிழகத்தில் எடுபடாது''’என டைரக்டர் பாரதிராஜா, கடந்த வாரம் ரஜினியை கடுமையாகச் சாடி அறிக்கைவிட்டார். இதற்கு ரஜினி தரப்பு நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும் ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மா.செ. சோளிங்கர் ரவி மூலம் அறிக்கை வெளியானது.
இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி போயஸ் கார்டனில் ரஜினியைச் சந்தித்து ஒன்றரை மணி நேரம் தனிமையில் பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், ""ரஜினி பற்றி பாரதிராஜா பேசுவது சரியல்ல''’என ஊடகங்களிடம் பட்டும்படாமல் கூறிவிட்டுச் சென்றார்.
ஆனந்த்ராஜிடம் நக்கீரனுக்காகப் பேசியபோது, ""ரஜினி மீது வைத்திருக்கும் அன்பு காரணமாக அடிக்கடி அவரைச் சந்திப்பதுண்டு. ஆனால் இப்போது சந்தித்தது செய்தியாகிவிட்டது. தமிழ்நாட்டில் ரஜினியின் வாய்ஸைப் பயன்படுத்தாத அரசியல்வாதிகள் இருக்கிறார்களா? சினிமாவுக்கும் அரசியலுக்கும் சாதி, மத, மொழி பேதம் கிடையாது. ஏன் இதே பாரதிராஜா, ரஜினியை வைத்து "கொடி பறக்குது'’ சினிமா எடுத்தபோது, கன்னடராகத் தெரியலையா?, அவர் ஆரம்பித்த நடிப்புப் பயிற்சிக் கல்லூரி திறப்பு விழாவுக்கு அழைத்தபோது கன்னடர்னு தெரியலையா? தமிழனின் அடிப்படைக்குணமே நன்றி உணர்வுதான். ஆனால் பாரதிராஜாவோ தூக்கி எறியும் குணம் உள்ளவர்.
ரஜினியின் அரசியல் வருகையால் சிலருக்கு பாதிப்பு வரலாம், 5% வாக்குகள் டேமேஜாகலாம் என்ற பயத்தில், இனரீதியாக சிலருக்கு முட்டுக் கொடுப்பதற்குத்தான், ரஜினி மீது பாய்கிறார் பாரதிராஜா. அதன் பின்னணியில் உள்ள சதி விரைவில் வெளிவந்தே தீரும்''’என்றவரிடம், "ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் இணைவீர்களா?'’எனக் கேட்டதற்கு, “""ஏங்க அவரை பார்க்கப் போனது குத்தமாங்க''’என்றார்.
அரசியல் சதுரங்கத்தில் ரஜினிக்கு பாரதிராஜா செக் வைக்க, அதை சமாளித்து சாதுர்யமாக காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் ரஜினி.
-ஈ.பா.பரமேஷ்வரன், து.ராஜா