முன்மாதிரி கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக். இதன் பின்னணியில் யார் யார்? எப்படி இந்த மாயாஜாலம் நிகழ்ந்தது என்பதைப் பேசப் போகிறது இந்த கட்டுரை.
திருநாவுக்கரசர் அமைச்சராக இருந்தபோது 1981ம் ஆண்டு அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் கிராமப்புற மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக 40 ஏக்கர் பரப்பளவில் பாலிடெக்னிக் கல்லூரியும், 10 ஏக்கர் பரப்பளவில் விடுதியும், ஆசிரியர் குடியிருப்புகளும் உருவாக்கப்பட்டது.
1984ல் ஆளுநர் குரானா இதனைத் திறந்து வைத்தார். பல ஆயிரம் பேரை படிக்க வைத்து பல துறைகளிலும் சாதிக்க வைத்த நிறுவனம் என்ற பெயரை இது பெற்றுள்ளது.
பொதுவாக கொரோனா பரவலுக்கு பிறகு பாலிடெக்னிக்குகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில் ஏராளமான தனியார் பாலிடெக்னிக்குகள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக்குகளில் ’’முன்மாதிரி அரசு பாலிடெக்னிக்’ என்ற பெயரை இதற்கு உருவாக்கி இருக்கிறார் தற்போதைய கல்லூரி முதல்வர் குமார்.
கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து சிவில் பிரிவு ஆசிரியராக இருந்த குமார், கடந்த 2023 ஜூன் முதல் நாளில் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்த தனது பழைய மாணவர்களிடம் ""நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்வதைவிட நீங்கள் படித்த கல்லூரி வகுப்பறையை குளிரூட்டப்பட்ட வகுப்பறையாக மாற்றித்தர வேண்டும். அதுவே நீங்கள் படித்த கல்வி நிறுவனத்திற்கு செய்யும் பலனாக இருக்கும்'' என்று சொல்ல, அந்த இளைஞர்கள், உடனடியாகக் களமிறங்கி, சில வாரங்களிலேயே வகுப்பறைகளை நவீனமாக மாற்றி அமைத்தனர்.
இதற்காக ஒவ்வொரு வகுப்பறைக்கும் அவர்கள் தலா ரூ.5 லட்சம் வீதம் செலவு செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்து சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஒரு ஸ்மார்ட் போர்டு வழங்கினார். இதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பாலிடெக்னிக்கே குளுகுளு வசதியுள்ள, வசதிகள் நிரம்பிய நவீன பா-டெக்னிக்காக அவதாரம் எடுத்தது. மேலும் சாக்பீஸ் இல்லாத வெள்ளை போர்டுகள், பேன், தூய குடிநீர், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தமிழ்நாட்டிலேயே முதன்மையான அதிநவீன அரசு பாலிடெக்னிக் என்பதை இது நிரூபித்துள்ளது. தனியார் பா-டெக்னிக்குகளில் கூட இல்லாத வசதிகள் இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் புதர் மண்டிக்கிடந்த சுற்றுப்புறத்தையும் முன்னாள் மாணவர்கள் உதவியோடு சுத்தம்செய்து கொய்யா, மா, பலா, வாழை, முந்திரி, திராட்சை என 50 வகைகளுக்கும் மேற்பட்ட 1000 பழமரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதோடு மூ-கைத் தோட்டம், மலர் தோட்டம் ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை தவிர நீண்ட காலம் பலன் தரும் மரங்களும், காய்கறிச் செடிகளும் வளர்க்கப்பட்டு பசுமை வனமாக அந்த வளாகமே மாறியிருக்கிறது.
இதையெல்லாம் அறிந்த புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள், அறந்தாங்கி பா-டெக்னிக் நோக்கி படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர். மீண்டும் பழையபடி மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் நிர்வாகம், தீத் தடுப்பு மற்றும் தையல் போன்ற சான்றிதழ் வகுப்புகளையும் நடத்தி பலருக்கும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.
இந்த மாற்றங்கள் எல்லாம் எப்படி நிகழ்ந்தன என்ற நம் கேள்விக்கு முதல்வர் குமார் “""இவை இப்படி மாறக் காரணமானவர்களுள் பிரதானமானவர் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணிதான். முதல்வரய்யா ஒருநாள் எங்க பள்ளிக்கு வந்து பாருங்க என்று அந்தப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு கொடுத்த வீடியோவை நக்கீரனில் பார்த்தேன். உடனே பச்சலூர் பள்ளியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பள்ளியைப் பார்த்ததும், அங்குள்ள அதிநவீன வசதிகளைப் பார்த்து வியந்தேன். ஒரு சின்னகிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தையே இப்படி மாற்ற முடியும் என்றால் பெரிய நிர்வாகம், நம்மால் மாற்ற முடியாதா? என்று எண்ணத் தோன்றியது. அப்பவே பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணியிடம் பேசினேன். அவர் சொன்ன ஆலோசனைகள்தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம்.
ஆலோசனையோடு நிற்காமல் தனது கல்லூரி போல ஒவ்வொரு நாளும் வந்து பார்த்துப் பார்த்து பணிகளை செய்யச் சொன்னார். இவற்றிற்கு எல்லாம் அரசு நிதியோடு எங்கள் கல்லூரியில் படித்து இன்று உயர்ந்த இடங்களில் உயர் பதவிகளில், தொழில்களில் இருக்கும் எங்கள் முன்னாள் மாணவர்களின் முழுமையான பொருளாதார உதவியும் பேருதவியாக இருந்தது. எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரும் மன மகிழ்வோடு இங்கே வருகிறார்கள். ஏசி அறைகளில் அமர்கிறார்கள். வெளியே செல்லும் போது சுத்தமான குடிநீரோடு, தோட்டங்களில் பழங்கள் பறித்துச் சாப்பிடுகிறார்கள். மாணவிகளுக்காவே ரோஜா தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமல்ல, கல்லூரியின் மொத்த நிர்வாகமும் மகிழ்வோடு இருக்கிறோம்... இன்னும் மாற்றுவோம்''’என்றார் உற்சாகமாக.
தன் முயற்சியால் முதலில் மாங்குடி அரசுப் பள்ளியையும் அடுத்து பச்சலூர் அரசுப் பள்ளியையும் மாற்றிய தலைமை ஆசிரியர் ஜோதிமணி பல அரசுப்பள்ளிகள் நவீன வசதிகள் பெற காரணமாக இருந்தாலும், இவரால் தற்போது ஒரு பாலிடெக்னிக்கும் மாறி இருக்கிறது என்பது சாதனை. இது குறித்து தலைமை ஆசிரியர் ஜோதிமணியிடம் கேட்டபோது “""மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மாற்றி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் பச்சலூர் பள்ளியை மாற்ற 70 நாட்கள் போதுமானதாக இருந்தது. எங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள பலரின் உதவியோடும் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலமும்தான் சாத்தியமானது. அதைப்போலவே வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு, புதுக்கோட்டை விடுதி, அழியாநிலை ஆகிய இடங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளை பெற்றோர்களும், தன்னார்வலர்களும் மாற்றிக் காட்டியுள்ளனர். அதுபோலத்தான் பா-டெக்னிக்கும் மாறியுள்ளது. இதற்கு முதல்வரின் முயற்சியும், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பும், அரசின் பேரூதவியும் முக்கிய காரணம். இன்று அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் தமிழ்நாட்டின் முன்மாதிரி என்று சொல்வது போல இனிமேல் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது''’என்றார் நம்பிக்கையோடு.
ஆற்றல் மிகுந்த முன்மாதிரி மனிதர்களின் ஆர்வத்தால் இதுபோன்ற மாற்றங்கள் சாத்தியம் என்பது, புதிய நம்பிக்கை வெளிச்சத்தை அனைவர் மனதிலும் ஏற்றிவைக்கிறது.