"ஹலோ தலைவரே, அரசு மசோதாக்களுக்கு கவர்னர் ரவி இப்போதும் நந்தியாவே வழிமறிச்சி நிக்கிறார்''”

’"புராணத்தில் சொல்வது போல நந்தி விலகுமா?''”

"தி.மு.க. அரசு பொறுமையா ராஜ்பவன் விவகாரத்தை டீல் பண்ணுது. நீட் மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் தராதது போலவே, கூட்டுறவு வேளாண்மை சங்கத் தலைவர்களின் பதவிக் காலத்தைக் குறைக்கும் அரசின் சட்ட மசோதா வுக்கும் கவர்னர் இன்னும் ஒப்புதல் தர மறுக்கிறார். அ.தி.மு.க. அரசு, 2018-ல் நடத்திய கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகளே பதவியில் அமர்ந்தாங்க. அவங்க இப்ப இஷ்டத்துக்கும் பதவியில் புகுந்து விளையாடவும் ஆரம்பிச்சிட்டாங்க.''”

"அவங்க பதவிக் காலத்தை 5 ஆண்டு களிலிருந்து 3 ஆண்டுகளா குறைக்க தி.மு.க. அரசு முடிவெடுத்ததே?''”

Advertisment

rra

’"கூட்டுறவு சங்கங்களின் தலை வர் மற்றும் நிர்வாகக் குழுவினரின் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளாகக் குறைக்க தி.மு.க. அரசு திட்டமிட் டது. அதனால், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த சூட்டோடு கூட்டுறவு சங்கத் தேர்தலையும் நடத்தி, அதில் கட்சிக்காரர்களை பதவியில் அமரவைக்க தி.மு.க. அரசு வியூகம் வகுத் தது. அதற்காகவே, கூட்டுறவு சங்கத் தலைவர் களின் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளாகக் குறைக் கும் சட்ட மசோதாவை தி.மு.க. அரசு நிறைவேற்றி யது. ஆனால் அரசின் இந்த சட்ட மசோதாவை கவர்னர் கிடப்பில் வைத்துவிட்டார்.''”

"தி.மு.க அரசின் அடுத்த ஸ்டெப் என்ன?''”

"அதிகாரிகளுடன் ஆலோசித்தது. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு செக் வைக்கும் விதமாய், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவில் கூட்டுறவுத் துறையின் இணை சார்-பதிவாளரை ஒரு உறுப்பினராகச் சேர்க்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், தலைவர் பதவியில் இருப் பவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாதபடி, விதிகளிலும் திருத்தம் செய்திருக் கிறது கூட்டுறவுத் துறை. இதனால் அ.தி.மு.க. கூட்டுறவு சங்க நிர்வாகி கள் இஷ்டத்துக்கும் விளையாட முடியாதபடி லாக் ஆயிட்டாங்க. இது கூட்டுறவு சங்கங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல்னு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டன அறிக்கை விட்டிருக்காரு.''”

Advertisment

rr

"மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், மீண்டும் மாரத்தான் சாதனை யை நிகழ்த்தி இருக் காரே?''”

"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாலை விபத்தில் சிக்கி, மீண்டு வந்தவர். அதன்பிறகு அவர் ஓடத் தொடங்கி, மாரத்தானில் சாதனைகள் படைத்து, சர்வதேச விருதுகளைப் பெற்று, இளைஞர்களுக்கு ரோல் மாடலா இருக்காரு. 134வது மாரத்தான் போட்டியா, பீகார் மாநிலத் தலைநகரான பாட்னாவில், 27-ந் தேதி நடந்த, போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கிட்டு 21.1 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் 30 நிமிடங்களில் ஓடி முடித்திருக்கிறார். லண்டனில் இருக்கும் மா.சு. மகனும் மாரத்தான் ஓட, மா.சு.வின் பேரன் மாரத்தானில் ப்ளேயர் ஆஃப் த வீக் பட்டம் பெற்றிருக்கிறார்.''”

"குடும்ப அரசியல் போல இது குடும்ப சாதனைன்னு சொல்லுப்பா.''”

rr

"தலைவரே, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்காக தொடர்ச்சியா ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுது. மா.சு. பொறுப்பு வகிக்கும் சென்னை தெற்கு மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி முழுக்க முழுக்க திருநங்கைகளை மட்டும் மேடையில் அமரவைத்து நடந்தது. வேலூர் மாநகராட்சி கவுன்சிலர், திருச்செங்கோடு ஒன்றியக் கவுன்சிலர், முதல் உதவி ஆய்வாளர் இப்படி சாதனை படைத்த திருநங்கைகளை மேடையேற்றிப் பேச வைத்து, சிறப்பு பேச்சாளரா திருநங்கையருக்காக நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்து சாதித்த திருச்சி சிவா எம்.பி. பேசினார். இப்படி சென்னை தெற்கு மாவட்டம் கவனம் ஈர்க்கும் நிலையில், அந்த மாவட்டத்திற்குப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் இளைஞரணியில் செல்வாக்கா இருப்பதால், மா.செ.வை கலந்தாலோ சிக்காமலேயே இளைஞரணி நிர்வாகிகளை நியமிக்கிறாராம். உதயநிதியிடம் தனக்கு செல்வாக்கு இருக்குன்னு காட்டிக்கிறாராம்.''”

"தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியிலும் சர்ச்சைகள் சுழன்றடிக்கிதே?''”

"இந்தக் கல்லூரியின் முதல்வராக இருப்பவர் மணவாளன் இவரே செங்கல்பட்டில் இயங்கிவரும், சர்வதேச இயற்கை மருத்துவ மனையின் பொறுப்பிலும் இருப்பதோடு, அரசுத்துறையிலும் செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். இவரது துறையில் 4 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள். இவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் புற்றீசல் போல் முளைத்த இயற்கை மருத்துவக் கல்லூரி கள் பலவற்றுக்கும், அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகள் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல் அனுமதி கொடுத்து, தன்னை வளமாக்கிக் கொண்டவராம். தனக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பொறுப்பில், அக்குபஞ்சர் மருத்துவரான தன் தங்கை உட்காரணும்னு திட்டமிட்டு, தகுதியான எவரையும் மணவாளன் உள்ளே விட மறுக்கிறாராம்.'' ”

"கல்வித்துறையில் சலசலப்பு கேட்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, பள்ளிக்கல்வித் துறை ஆணையராக இருக்கும் நந்தகுமார், மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் என்கிற அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் ஏகத்துக்கும் முறைகேடுகள் செய்துவருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இவரைத் துறை அமைச்சராலேயே கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார்கள். காரணம், முதல்வரின் செயலாளர்களில் ஒருவருக்கு இவர் மிக நெருக்கமாம்.''”

dd

"அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் நினைவு நாள் மார்ச் 29ங்கிறதால அதற்கான அஞ்சலி ஏற்பாடுகளில் அவர் தரப்பினர் மும்முரமா இருந்தாங்களே?''

"ஆமாங்க தலைவரே, ஜெயலலிதா ஆட்சியில் 2012ஆம் ஆண்டு, ராமஜெயம் கொடூரமான முறையில் கடத்திக் கொலை செய்யப்பட்டாரு. இன்னமும் சி.பி.ஐ.யால் குற்றவாளிகளைப் பிடிக்க முடியலை. தற்போது தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்திருக்கும் நிலையில், காவல்துறை கண்காணிப் பாளர் ஜெயக்குமார் தலைமையில் 40 காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அது ஆறு பிரிவுகளாகப் பிரிந்து தன்னுடைய விசாரணையைத் தொடங்கி இருக்கு. ராமஜெயம் கடத்தப்பட்ட அன்றைய தினத்தில் அவருடைய செல்போன் சிக்னலின்படி, முதலில் ஸ்ரீரங்கத்திலும், அதன்பிறகு மாம்பழச் சாலையிலும் அதன்பிறகு மேலசிந்தாமணி பகுதியிலும் அது புழங்கி இருக்கிறது. அதன்பின் அது நிறுத்தி வைக்கப்பட்டதும் தெரியவந்திருக்கு. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம் என்கிறார்கள் விசாரணைக் காக்கிகள் தெம்பாக.''

"காவல்துறையிலும் பரபரப்பு தெரியுதேப்பா?''”

"சென்னை திருமங்கலத்தின் ஆணையராக இருந்த உதவி ஆணையரும், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட மூவர் டீம், தன்னைக் கடத்திச் சென்று, தனது சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டதாக ராஜேஷ் என்ற தொழிலதி பர் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார். தற்போது, அவர் இதற்கெல்லாம் காரணம், அப்போது கூடுதல் ஆணையராக இருந்தவர்தான்னு புகாரில் பெயரைச் சேர்த்திருக்கிறார். இது தொடர்பாக விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு, தலைமறைவாக இருக்கும் உதவி ஆணையர் உள்ளிட்ட மூவர் டீமைக் கைது செய்ய நீதிமன்றம் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறதாம்.''”

"தி.மு.க..விடம் ராஜ்ய சபா சீட்டைக் காங்கிரஸ் எதிர்பார்க்குதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்கள் ஜூலையில் காலியாகுது. இதில் காங்கிரசின் சீனியர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் இடமும் அடக்கம். இந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடக்க இருப்பதால், சட்டப்பேரவையில் தங்களுக்கு இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் 4 இடங்களை திமுகவும், 1 இடத்தை அ.தி.மு.க.வும் எளிதாக வென்றுவிடும். ஒரு இடத்துக்கு போட்டி இருக்கும். இந்த நிலையில், தி.மு.க. ஆதரவில் 6-வது இடத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாகவே காய்களை நகர்த்தி வரும் ப.சி., இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்தும் வாய்ப்பு கேட்டி ருந்தார். ஸ்டாலினும் பார்க்கலாம் என்று சொன்னதால், காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உண்டு என்பது ஏறத்தாழ உறுதியாகி இருக்கு.''”

"காங்கிரசில் ப.சி.க்கு பச்சைக் கொடி காட்டியாச்சா?''”

”காங்கிரசுக்காக வாங்கும் சீட்டை, ப.சி.க்கு இந்த முறை கொடுக்கக்கூடாதுன்னு இப்போதே சோனியாவுக்கும் ராகுலுக்கும், காங்கிரசில் உள்ளவங்களே புகார் அனுப்ப ஆரம்பிச் சிட்டாங்க. தமிழகத்தில் காங்கிரசை வளர்க்க ணும்னா, கட்சிப் பதவிகளை அவர் குடும்பத்துக்கே திரும்பத் திரும்ப கொடுக்கக்கூடாது. புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு களைக் கொடுக்கணும்னு அவர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைக்கிறாங்க. அதேபோல் ராகுல்காந்தியும் சிதம்பரத்துக்கு வாய்ப்பு தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.''”

"தமிழக காங்கிரஸ் மீது கட்சியின் மேலிடப் பிரதிநிதிக்கு கோபமாமே?''”

"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் கட்சியில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை நடந்துவருகிறது. தமிழகத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என்பது கட்சியின் டெல்லித் தலைமையின் உத்தரவாகும். இதை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு அசாமைச் சேர்ந்த கவுரவ் கோகாயிடம் கொடுக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான கெடு மார்ச் 30-ஆம் தேதியுடன் முடிவடைவதால், கவுரவ் கோகாய் இதற்கான ஆய்வுக் கூட்டத்தை 26-ந் தேதி சத்யமூர்த்தி பவனில் நடத்தினார். அப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைக் கூடத் தாண்டாததைக் கண்ட கோகாய், அப்செட்டோடும் எரிச்சலோடும் மேலே ரிப்போர்ட் பண்றேன் என்றபடி கிளம்பிவிட்டாராம்.''”

"ம.தி.மு.க.வில் பொதுக்குழு முடிந்திருக்குதே?''”

rr

"கலைஞர் தலைமையிலான தி.மு.க மீது வாரிசு அரசியல் குறற்ச்சாட்டு வைத்து தனிக் கட்சி தொடங்கிய வைகோ, கால மாற்றங்களை உணர்ந்து தனது மகனை ம.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளராகப் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கச் செய்திருக்காரு. எதிர்காலத்தில் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரை வருவார் என்பதுதான் கட்சியினரின் எதிர்பார்ப்பு. இதற்கு சில மா.செ.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைத்து விடலாம்னும் சொன்னாங்க. கடந்த வாரம் முழுக்க இதே பஞ்சாயத்து ஓடிய நிலையில், அதை மறுத்து கருத்து தெரிவித்துள்ளார் வைகோ. ம.தி.மு.க தனித்து இயங்கணும்னு அவர் நினைக்கிறார். கட்சிக்குள் சலசலப்பு கேட்குது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். வனத்துறையில் ரேஞ்சர்கள் நியமனம் நடந்துவருகிறதாம். இதில் தலைக்கு 15 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு அவர்களை நியமித்து வருகிறதாம் துறையின் அமைச்சர் தரப்பு. துறையில் ஏகத்துக்கும் ஊழல் நடந்துவருவதாக வனத்துறை அலுவலர் சங்கம் அரசுக்கு புகார்களை பரபரப்பாக அனுப்பி வருகிறது.''”

______________

இறுதிச்சுற்று!

தொழிற்சங்கப் போராட்டம்! திணறிய இந்தியா!

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மார்ச் 28, 29-ஆம் தேதிகளில் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., எ.எல்.எஃப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பன்னிரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை மேற்கொண்டன. தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் திரளாக போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் தமிழகமெங்கும் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயங்கின. வங்கிச் சேவை உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டன. "அமைப்புசார், அமைப்புசாரா தொழிலாளர்கள் 20 கோடி பேர் இந்தப் போராட் டத்தில் பங்கேற்பர்' என போராட்ட அமைப்புகள் குறிப்பிட்டன. பேருந்துக்கு மாறாக, ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில்... சில மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. பா.ஜ.க. ஆட்சியிலில்லாத தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மும்பை, மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாகக் காணப்பட்டது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் தாக்கத்தைக் காண முடிந்தது.

-மணி