தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது, அரசு மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இந்த கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை சொல்லியே ஆகவேண்டும். அதற்கு நேர்மாறாக இருக்கின்றன கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகள்.
சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி. அவரும் இதை கண்டுகொள்ளவில்லையா என்று நாம் விசாரித்தபோது,“""மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டபிறகு இதுவரை, டாக்டர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ் ஒருமுறைதான் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கே வந்தார். கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனையை மட்டும் பார்வையிட்டார். அதற்குப்பிறகு, எந்த மருத்துவமனைக்கும் விசிட் அடிக்கவேயில்லை'' என்று குற்றஞ்சாட்டும் அரசு டாக்டர்கள் நம்மிடம்,
""ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங் கரை, போச்சம்பள்ளி, பர்கூர், சூளகிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அட்மிட் செய் யாமல் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவமனைக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கும் அனுப்புகிறார்கள். இதனால், போக்குவரத்து வசதி இல்லாத சூழலில் நோயாளிகள் கடுமையாக அலைக்கழிக்கப்படுகிறார்கள். கிருஷ்ணகிரிக்கு அடுத்து பெரியதாக இருக்கும் ஓசூர் ஜிஹெச்சின் சூப்பிரண்டண்ட் பூபதி ஆளுங்கட்சியின் செல்வாக்கில் இருப்பவர். அதனால், வேலை பளுவைக் கூட்டிக்கொள்ளக் கூடாது என்று கொரோனாவுக்கு சிகிச்சைபெற வரும் நோயாளிகளை அருகிலுள்ள, இ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு விரட்டிவிடுகிறார்கள்.
அங்கு, ஏற்கனவே நோய் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஒசூர் ஜி.ஹெச் சூப்பிரண்டண்ட் பூபதியின் மனைவி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில்தான் டாக்டராக இருக்கிறார். ஆனால், அவருக்கு கொரோனா பணி வழங்கப்படுவதில்லை. இதிலிருந்தே, ஒசூர் சூப்பிரண் டண்டின் அதிகார துஷ்பிர யோகத்தை புரிந்துகொள்ளலாம்'' என்கிறார்கள்.
இதுகுறித்து, ஓசூர் அரசு மருத்துவமனை சூப்பிரண்டண்ட் டாக்டர் பூபதியை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""பிரவச வார்டுகள் எல்லாம் இருந்ததால் கொரோனா நோயாளிகளை அட்மிட் செய்யவில்லை. தற்போது, அதையெல்லாம் பிரித்து கூடுதல் படுக்கைகளை உருவாக்கிவிட்டோம். ஆக்சிஜன் குழாய்களும் பதித்துவிட்டோம். அடுத்த வாரத்தில் கொரோனா நோயாளிகளை அட்மிட் செய்து சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டு தயாராகிவிடும்'' என்றார்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பரமசிவத்திடம் நாம் கேட்டபோது, ""கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் இ.எஸ்.ஐ. மருத்துவ மனையிலும் கொரோனா பெட்டுகள் நிரம்பவில்லை. ஒசூர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சீமாங் சிகிச்சைகளில் ஈடுபடுவதால் கொரோனா வார்டை உருவாக்கி அங்குள்ள டாக்டர்களையும் சிரமப்படுத்த விரும்பவில்லை'' என்று காரணம் கூறினார்.
இதற்கு, கிருஷ்ணகிரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை டாக்டர்களோ, ""கிருஷ்ணகிரி யில் 40 டாக்டர்கள் மட்டுமே கொரோனா பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பணிச்சுமை அதிகரிக்கிறது. ஜே.டி. பரமசிவமும் சூப்பிரண்டண்ட் பூபதியும் காரணம்கூறி சமாளிக்கிறார்கள். ஓசூரில் இருக்கும் அதே எண்ணிக்கை மருத்துவர்களைக் கொண்டு ஒசூரைவிட அதிகமான அளவில் கொரோனாவுக்கும் மற்ற நோய்களுக்குமான சிகிச்சைகள் கிருஷ்ணகிரியில் செய்யப்படுகிறது.
குழந்தைகள் நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர்களுக்கு மட்டுமே ஓசூர் ஜி.ஹெச் சீமாங் சென்டரில் பணி இருக்கும். மற்ற, மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்? இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இருக்கும் 28 பெட்டுகளுமே நிரம்பித்தான் உள்ளன. அதுவும், பெண்கள் வார்டில் போடப்பட்டுள்ள 20 பெட்களில் ஆக்சிஜன் வசதியே இல்லை. நோயாளிகள் அட்மிட் ஆகவில்லை என்று சொல்வதே ஏமாற்றுவேலை. குறைந்தபட்சம், கிருஷ்ணகிரி மாவட்ட தாலுக்கா மருத்துவமனைகளிலுள்ள டாக்டர்களை கிருஷ்ணகிரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு அனுப்பினாலே ஓரளவுக்கு பணிச்சுமை குறையும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், ஜே.டி. பரமசிவம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்'' என்கிறார்கள் குற்றச்சாட்டாக.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ் மற்றும் தற்போதைய சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, அதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். எப்போது என்றுதான் தெரியவில்லை.
-மனோசௌந்தர்