poorkalam

(86) கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்!

போன இதழ்ல கடைசியா பழனி ஏஜெண்ட் செல்லமுத்து "அண்ணே போச்சு... போச்சு'ன்னு பதறுனாரு. நமக்கு இந்த மாதிரியெல்லாம் நெறைய கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு. பழனியில ரோட்டு ஓரமா டீ கடையில நின்னுக்கிட்டிருக்கோம்... அப்ப, "அண்ணே... பழனியிலயும் பஸ் ஸ்டாண்ட்ல உள்ள கடையிலயும் இருக்கிற நக்கீரன் புக் எல்லாத்தையும் எடுத்து எரிக்கிறாங்கண்ணே... நீங்க இங்கதான் இருக்கீங்கங்கிறதும் தெரிஞ்சு போச்சுணே...''ன்னாரு.

Advertisment

"போச்சா.... அது உண்மையிலேயே போச்சுப் போச்சுதான். மாட்டுனா சட்னிதான். நம்ம பொழப்ப பாருங்க... எங்க போனாலும் எழவு ஏழரை எப்படி விடாம ஏரோப்ளேன்ல தொரத்துதுன்னு.''

நான், சன், ஐயா கணேசன், துரை அண்ணன் எல்லாரும் சடார்னு எடுத்துட்டுப் போயிருந்த வண்டியில ஏறிட்டோம். யார் கிட்டயும் எதுவுமே சொல்லல. ஏன்னா தேவையில்லாம யார் கிட்டயாவது மாட்டி, இவிய்ங்க ஏன்டா அங்க போனாங்கன்னு கேக்க...

ஏன்னா அரசியல்வாதிங்களும், அ.தி.மு.க. ஆட்சியில இருக்கிறவய்ங்களும் அடிச்சவன குத்தமே சொல்லாது. அவங்க அடிக்க வந்தா நாம மந்திரிச்சு வுட்ட கோழி மாதிரியே நிக்கணும். கொஞ்சம் முறைச்சிப் பார்த்தாலோ, எதுத்துக் கேட்டாலோ... இல்ல கை வச்சாலோ.... முடிஞ்சது கத. அன்னிக்கு நம்மள பழனி ஜெயில்ல போட்டு நொங்க எடுத்துருப்பாய்ங்க. அத நெனைச்சுதான் வண்டிய விருட்னு அடிச்சு வெரட்டி, படு ஸ்பீடா மதுரை போற வழிதான்... எதுக்கும் போன் பேசணுமேன்னு வண்டிய திண்டுக்கல் பக்கம் திருப்பிட்டோம்.

Advertisment

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட். அங்க மாயாண்டி அண்ணாச்சி கடை. தம்பி சக்திவேல்தான் ஏஜெண்டு. அவரு நக்கீரன் நிருபராவும் இருந்தாரு. மாயாண்டியண்ணன் கடைக்குப் பின்னாடி ஒரு ஆபீஸ் இருந்துச்சு. அது எல்லாருக்கும் தெரியாது... சீக்ரெட்டாவே வச்சிருப்பாரு. நமக்கு வசதியாப் போச்சுன்னு அதுக்குள்ள போய் நாங்க உக்காந்துட்டோம்.

poorkalam

மாயாண்டியண்ணன் ஆபீஸ்ல இருந்த போன் மூலமா, அடுத்த நக்கீரன் இஷ்யூவ எப்படிக் கொண்டாறதுன்னு பிளான் போட்டு, நம்ம ராஜாமணி அண்ணன் மூலமா மதுரை பர்வீன் பஸ்ல மொத்தத்தையும் கட்டுக் கட்டா ஏத்திவிடச் சொன்னேன்.

இத ஏன் சொல்ல வர்றேன்னா... ஒரு பத்திரிகைக்கு எவ்வளவுதான் பிரச்சினை வந்தாலும், ஆள்கள வச்சு நம்மள அடிச்சாலும், புக் எல்லாத்தையும் பிடுங்கிப் பறிச்சு எரிச்சாலும், இல்ல... ஆபீஸ மூடுனாலும், ரெகுலரா அந்தந்த வாரம் புக் போய் வாசகன் கையில கெடைச்சா தான்... "ஓ... நக்கீரன்காரன் உசுரோடதான் இருக்கான்டோய்'னு நெனச்சுக்குவாங்க.

நக்கீரன் ரேப்பர் ஓட்டுறதுக்கு ரெண்டா பிரிச்சு, சிவகாசியில லவ்லி ஆப்செட்டுக்கும், சிவகாசி சபையர் ஆப்செட்டுக்கும் பிரிண்ட் செய்ய தம்பி ராமகிருஷ்ணன் குடுத்திருந்தாரு. "லவ்லி'ல, சபையர்ல பேசி, அதுக்கப்புறம்தான் குடுத்திருந்தோம். லவ்லி ஆப்செட் ஓனர் என்ன பண்ணிட்டாருன்னா...? அவருக்குத் தெரிஞ்ச போலீஸ் ஆபீசர் ஒருத்தர்ட்ட நக்கீரன் ரேப்பர் எங்க ஆப்செட்லதான் ஓடுதுன்னு சொல்லித் தொலஞ்சுட்டாரு. சொன்னதோட இல்லாம.... அத ராமகிருஷ்ணன்ட்ட மார்தட்டி பெருமையா வேற சொல்லியிருக்காரு. உடனே அந்த விஷயத்த ராமகிருஷ் ணன் என்கிட்ட சொன்னாரு. அதக் கேட்டதும் எனக்கு அடச்சேன்னு கடுப்பாயிருச்சு.

"ஹிட்லர்'னு ஜெயலலிதாவ விமர்சனம் பண்ணி நக்கீரன்ல அட்டைப் படம் போட்டதுக்கே எல்லா எடத்துலயும் பறிச்சி தீ வைக்கிறாய்ங்க. இப்ப ரெண்டாவதா அதே அட்டைய திருப்பி அடிச்சு புக்காக்கி அனுப்பப் போறோம்ங்கிறது தெரிஞ்சு போச்சுன்னா, அவ்வளவுதான் முடிஞ்சு போச்சுல்ல... கொண்டேபுடுவாய்ங்கள்ல!

"ஐயோ... தம்பி ராம்கி உடனே லவ்லிய குளோஸ் பண்ணுங்க... போங்க தம்பி ஜுட். சபையருக்கே எல்லாத்தையும் கொண்டுபோகச் சொல்லுங்க. போலீஸ் மோப்பம் புடிச்சு வந்தா எல்லாமே போச்சு...''னு பதறுறேன்.

poorkalam

சிவகாசி சபையர் கண்ணன் அண்ணன்ட்ட பாராட்டுக்குரிய ஒரு விஷயம் என்னன்னா... நாம எப்ப ஜாப் குடுக்குறோமோ, நிமிஷத்துல ரெடியாகி காலைல நம்ம கைக்கு வந்து சேர்ந்துரும். அந்தமாதிரி அவங்க ஒரு சூப்பர் செட்-அப் வச்சிருப்பாங்க.

காலையிலயே ராம்கி சாமர்த்தியத்தால நம்ம கைக்கு வருது. இங்க ஒரு 10 பைண்டிங்குக்கு போறாங்க, புக்குகள ரெடி பண்றாங்க. மறுபடியும் அப்படியே பண்டல், பண்டல்களா கட்டி மொத்தமா பர்வீன் பஸ்ல பார்சல் போட குடுக்கு றோம். பர்வீன் டிராவல்ஸ் அப்சல் அண்ணன் நம்மகிட்ட ரொம்ப நட்பா இன்னிக்கு வரைக்கும் இருக் கிறவரு. அவரு ரொம்ப அர்ப்பணிப் போட நமக்காக எல்லா பண்டல் களையும் பஸ்ல அனுப்பி வச்சாரு. நாங்க அத மொத்தத்தையும் எடுத்து குத்து மதிப்பா கட்டி, கட்டி... முக்கியமா எந்தெந்த ஊர்களுக்கு அனுப்பணும்னு ஐடியாபண்ணி, உடனே 3 வேன்கள ரெடிபண்ணி ஒரு வேனுக்கு நான் இன்சார்ஜ், இன் னொரு வேனுக்கு ராஜாமணி அண் ணன் இன்சார்ஜ், எங்க பூபதி அண் ணன் ஒரு வேனுக்கு இன்சார்ஜ்னு ரெடியாகி, கூடவே நாலஞ்சு தம்பி களையும் துணைக்கு அழைச்சிக் கிட்டு எல்லா ஊர்களுக்கும் நக்கீரன சப்ளை போட்டோம்.

அதுல குத்துமதிப்பா கணக்கு பாத்தா நமக்கு நெறையவே நட்டம் தான். ஏன்னா முதல்ல 3 லட்சம் காபி அடிச்சிருந்தோம்... எல்லாத்தை யும் எரிச்சிட்டாய்ங்க... அதுக்கு கணக்கு இல்ல. ஆனா... உடனே அடுத்த ரெண்டுநாள்ல திரும்பவும் அதே இஷ்யூ எல்லா கடைகளுக்கும் போகுது. அதுதான் நக்கீரனுக்கு கெடைச்ச பேரு. ஏன்னா ஒருபக்கம் எரிக்கிறாய்ஙக... மறுபடியும் அதே அட்டையோட புக் வருதுன்னா...?

"முதல்ல வந்த புக் எல்லாத்தை யும் எரிச்சோம், ரெண்டாவது மறுபடியும் புக் கொண்டு வர்றாங்க... அத எரிக்கச் சொல்லி மேலிடத்துல இருந்து ஆர்டர் வரல்லியே'ன்னு அ.தி.மு.க.காரனும் விட்டுட்டான். அதனாலதான் நம்மால நக்கீரன மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்க்க முடிஞ்சது.

இப்ப ஷாட்ட கட் பண்ணி மறுபடியும் நான் ராயப்பேட்டைக்கு வர்றேன்.

போலீஸ் ஆபீசுக்குள்ள வந்துருச்சு. அட்டைப்படம் எப்படிப் பண்ணணும்னு நான் போன் பண்ணிக்கிட்டிருக்கேன். இணையாசிரியர் டைட்டில தம்பி லெனின்ட்ட குடுத்துர்றாரு. குடுத்தவுடனே... தம்பி எனக்குச் சொல்றாரு. நான் உடனே பரமேஷ், கணேஷ், செந்தில் இவங்கள்ட்ட சொல்லி இந்தந்த படங்கள்லாம் வரணும், குறிப்பா ஆபீஸ அடிச்சது, ஆபீஸ பூட்டுன படங்கள்லாம் வரணும்... உடனே அதுக்குண்டான எல்லாத்தையும் ஒரு சி.டி.ல போட்டு தம்பி ஆர்ட்டிஸ்ட் மதிக்கு அனுப்புங்கன்னு சொன்னேன். என்ன மாதிரி டிசைன் வரணும்ங்கிற ஐடியாவ லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் மதிட்ட சொல்லிட்டோம்னா... அதுக்கேத்த மாதிரி நச்சுன்னு பண்ணுவாரு. அதுக்காக தம்பிய மதியம் வீட்டுலயே இருக்கச் சொல்லிட்டோம். அட்டைப் படத்துக்கான படங்கள காப்பி பண்ணி, தம்பி பார்த்திட்ட குடுத்துவிடச் சொன்னேன். நான் ஆர்டர் போடுறேன். பார்த்தி அத எடுத்துட்டு ஆபீஸ் கேட் பக்கமா போறாரு.

போனவுடனே போலீஸ பாருங்க... அவிய்ங்க உள்ள வந்ததே பெரிய தப்பு. ஓசியில வந்தாய்ங்க... உள்ள வந்தவுடனே கேட்ட பூட்டிட்டான். உள்ள இருந்து நாம யாரும் வெளியில போயிறக்கூடாதுன்னு இவன் நமக்கு ஆர்டர் போடுறான். ஏதோ நாம சீக்ரெட்ட வெளியில கொண்டு போயிருவோம்னு. இந்த தம்பி வேற சி.டி.யில எல்லாத்தையும் எடுத்துட்டுப் போனாரா, அவர வெளியில விடவே இல்ல.

oo

அட்டைப்படம் பண்றதுக்குத்தான் வெளிய போறாங்கன்னு அவனுகளுக்குத் தெரியாது.... ஆனா யாரும் வெளிய போகக்கூடாதுங்கிறான். மீறி கேட்டா மேலிடத்து உத்தரவுங்கிறான். டேய்... எவன் ஆபீஸ்ல, எவன் எடத்துல வந்து... எவன் வந்து வெளில போகக்கூடாதுன்னு சொல்றது? இந்தக் கொடுமைய எங்க கண்டோம்? வேறெங்க... ஜெயலலிதா ஆட்சியிலதான் கண்டோம்.

உடனே தம்பி பார்த்தி புத்திசாலித்தனமா என்ன பண்ணுனாருன்னா... கூட இருந்த லூவின்கிற தம்பிட்ட "லூவின் எத்தன பேருக்கு சாப்பாடு? யாருல்லாம் பிரியாணி கேட்டாங்க, எந்த கடையில வாங்கணும்னு கேட்டியா'ன்னு.... அவங்க ரெண்டு பேரும் சத்தமா அவங்களுக்கு கேக்கிற மாதிரி பேசிட்டு, "உங்களுக்கு சாப்பிடுறதுக்கு பிரியாணி எதாவது வாங்கணுமா ஸார்'னு போலீஸ்ட்ட பார்த்தி கேட்டுருக்காப்ல. ஓசி சோறுதான... அதனால 6 பிரியாணி வாங்கிட்டு வா அப்படின்னிருக்காங்க. அந்த சந்தர்ப்பத்துல வேகமா வெளிய போய் ஐஸ்ஹவுஸ்ல இருக்கிற மதி வீட்டுல கொண்டுபோய் ரேப்பர் டிசைன் பண்றதுக்கான எல்லாத்தையும் குடுத்துட்டாரு. "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்'னு சொல்வாங்கள்ல... நக்கீரன் ஆபீஸ்ல வேலை பாக்குற ஒவ்வொருத்தரும்... ஐந்தாம்படையான ஒண்ணு, ரெண்டு நாதாரிகளத் தவிர, கஷ்டமான நேரங்கள்ல நக்கீரனுக்காக எப்படி பாடுபட்டாங்க அப்படிங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்.

நம்ம ஆபீசுக்கு வந்திருந்த போலீஸ் டீம்ல செந்தில்குமார்னு ஒரு ஏ.சி., இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஒரு லேடி எஸ்.ஐ. ஒரு அம்மா வந்தி ருந்தாங்க, மஃப்டில கொஞ்சம் போலீஸ்காரய்ங்க உள்ள இருந்தானுவோ, கொஞ்சம் கான்ஸ்டபிள் களையும் சேர்ந்து இருபது பேருக்கும் மேல இருந்தாய்ங்க.

சமிக்ஞை கிடைச்ச உடனே டக்... டக்...னு ஷட்டர ஓப்பன் பண்ணி ஆபீசுக்குள்ள இறங்கிட்டாய்ங்க. ஏதோ ஒண்ண கொண்டு வந்து நம்ம ஆபீசுக்குள்ள வைக்கணும். வச்சிக்கிட்டு தேடுற சாக்குல தேடணும்ங்கிறதுதான் அவங்களோட ப்ளான். அவங்க மொத்தபேரும் 20... 22 பேருதான் இருந்திருப்பாய்ங்க. அப்ப அவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆளு வீதம்னு பின்னாடி போய் நம்மாளுங்க நின்னுட்டாங்க.

இப்ப... மொதல்ல தட... தட... தட...ன்னு மெஷின் ஓடுற இடத்துக்கு பூட்ஸ் காலோட போறாய்ங்க. பிரஸ்ல வேல பார்க்கிற தம்பிங்க, "ஸார் பூட்ஸ்லாம் போட்டுட்டு மெஷின் மேல போகக்கூடாது'ன்னு சொல்லிருக்காங்க. அதப்பத் தில்லாம் அவங்க கவலையே படல. சர்... சர்... சர்...னு மேல ஏறுறாங்க. ஒவ்வொரு பக்கத்துலயும் பாக்குறாங்க, எதையோ தேடுறாங்க... அவங்க பார்வையிலயே ஒரு திருட்டுத்தனம் தெரியுது. எதாவது ஒண்ண வச்சி எடுக்கணும்... ஏன்னா, "மாட்டுக்கறி தின்னும் மாமிக்கு அந்த செய்திய எப்படி பிரிண்ட் பண்ணுனாங்க'ன்னு சொல்லணும் அது ஒருபக்கம்... இன்னொண்ணு, "அந்த விஷயத்த தேடும்போது சட்டத்துக்குப் புறம்பான சில பொருட்கள் இங்க இருந்தது'ன்னு எதையாவது காமிக்கணும்னு, உள்ள இருக்கிற சின்ன சின்ன ரூம்களயெல்லாம் தட்டி... தட்டிப் பாத்திருக்காங்க.

(புழுதி பறக்கும்)