நொங்கு தின்னவன் தப்பிச்சுட்டான்!
அண்ணன் கலைஞர்... "கோபால் சொல்லுங்க... நீங்க எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டீங்க. உங்கள அரெஸ்ட் பண்ணி, கொடுமைப்படுத்துனது... கஸ்டடியில எடுத்தது எல்லாத்தையும் பார்த்தேன். நடந்த அநியாயம் எல்லாமே எனக்கும் தெரியும். அந்த நேரத்துல ஒங்கள ரொம்பவே கஷ்டப்படுத்துனது யார், யாரு?ங்கிற லிஸ்ட்ட சண்முகநாதன்ட்ட குடுங்க''ன்னு சொல்லிட்டு, அங்க வந்த சண்முகநாதன்ட்ட கை காண்பிச்சாங்க.
நான் குடுத்த லிஸ்ட்ல மொதல்ல இருந்த பேரு சி.பி.சி.ஐ.டி. எ.ஸ்.பி. ஸ்ரீதர். ரெண்டாவது, நாகராஜன். அப்புறம் இன்ஸ். செந்தில்குமார், இன்ஸ். சேது...ன்னு சேர்ந்து ஏழெட்டு பேரோட பேரும் அதுல இருந்தது. ஆனா... நமக்கு அதிக அளவுல டார்ச்சர் குடுத்தது நாகராஜன்தான்.
படத்துல பாருங்க... பொடா கோர்ட்டுல இருந்து நாட்டையே உலுக்கிய ஏதோ பெரிய தீவிரவாதத்த கண்டுபிடிச்சுட்டு திமிரா வர்ற மாதிரி வராய்ங்க பாருங்க ரெண்டு பேரு... ஒருத்தன் டி.எஸ்.பி. நாராஜன். அவன்கூட வர்றவன் இன்ஸ். செந்தில்குமார். இவனும் நம்மள நோகடிச்சவங்கள்ல ஒருத்தன், அந்த நாகராஜனோட எடுபுடி.
இப்படி இவிய்ங்க பொடா கோர்ட் முடிஞ்சு முன்னாடி கிளம்புவாய்ங்க. பின்னாடி என்ன போலீஸ் அப்படியே அலாக்கா தூக்கிட்டு வரும். அந்த நேரம் என் கையை மொரட்டுத்தனமா பிடிச்சு முறுக்குவாய்ங்க. பின்னாடி முதுகுல குத்துவாய்ங்க. நம்மள சேர்ந்தவங்க யாரையும் பாக்க, பேச விடமாட்டாய்ங்க. இதுபூராம் நாகராஜன் ஏற்பாடுதான்.
அப்படியொரு சம்பவம் ஒருநாள் நடந்தப்ப... இம்சைய பொறுக்க முடியாம அந்த போலீஸ்காரரை (அவரு பேரு மந்திரமூர்த்தி) திரும்பிப் பாத்து, எச்சரிக்கை கொடுத்தத நம்ம போட்டோகிராபர் படம் எடுத் திருந்தார்... 2-வதா இருக்குறது அந்தப் படம்தான்.
ஜெயலலிதாட்ட நல்லபேரு வாங்கணுங்கிற ஒரே ஒரு எண்ணம்தான் அந்தாளுக்கு. டிபார்ட்மெண்டல இருந்துட்டு அயோக்கியத்தனத்த மட்டுமே பண்ணுன ஒருத்தன, அவனோட ஜாதி ரீதியா காப்பாத்துனதே தி.மு.க.வுல உள்ள ஒருசில பேருதான். அவன் பண்ணுன எல்லா கோல்மால்களையும், சாதிங்கிற போர்வையில அவங்க மறைச் சிட்டாங்க. அதோட, இந்த விஷயம் எதையும் அண்ணன் கலைஞருக்கு தெரியாம ரொம்ப சாதுர்யமாவும் பார்த்துக்கிட்டாங்க.
நமக்கு கெடுதல் பண்ணுன நாகராஜன, அவன் பண்ணுன தப்புகள சுட்டிக்காட்டாம, முன்னமே சொன்ன மாதிரி தி.மு.க.வுல இருந்த அவனோட ஜாதிக்காரங்களும், சில வக்கீல்களும், சில போலீஸ் உயரதிகாரிங்களும்... சேர்ந்து கலைஞர் கையாலயே அவனுக்கு அவார்டையும் கொடுக்க வச்சுட்டாய்ங்களே...ன்னு எனக்கு அவங்க மேல ஆத்திரமா வந்துச்சு.
"தோள்ல உக்காந்து காதக் கடிச்ச கதை'ன்னு நம்ம ஊர்ல சொல்லுவாய்ங்க. அது மாதிரி கலைஞர்கூடவே உக்காந்திருந் துட்டு... அவர அவமானப்படுத்துனவன, மரியாத குடுத்து ராஜா மாதிரி அனுப்பி வச்சிட்டாய்ங்க.
"நொங்கு தின்னவன் தப்பிச்சிட்டான். நோண்டித் தின்னவன் சிக்கிக்கிட்டான்'னு ஊருல ஒரு சொலவட சொல்லுவாய்ங்க. அது மாதிரி... என்ன பாடாய்படுத்துன நாகராஜன் தப்பிச்சிட்டான். அவனுக்கு ஏவல் வேல பாத்த இன்ஸ். கொஞ்சம் பேருதான் அரெஸ்ட் ... சஸ்பெண்ட், டிரான்ஸ்பர்னு ஆனாய்ங்க.
அதையும் சும்மா எடுத்தோம், கவுத்தோம்னு பண்ணல. அவனவன் பெரிய பெரிய மொள்ளமாரித்தனம் பண்ணுனதெல்லாம் அடுத்தடுத்து தெரிஞ்சு... அதுக்குப் பிறகுதான் இதெல்லாம் நடந்துச்சு.
"ஒங்கள எப்படியும் ஒருவழி பண்ணிறணும்னுதான் அரக்கப் பரக்க நாலா பக்கமும் அன்னிக்கு விசாரிச்சோம். அதுக்காகத்தான் முன்னாடி ஒங்கள அரெஸ்ட் பண்ணுன டீம்ல இருந்த நாகராஜனப் பத்துன டீடெய்ல்ஸ கலெக்ட் பண்ண முயற்சி எடுத்தோம். உங்கள எப்படி கேப்சர் பண்ணுனாங்க. என்ன மாதிரி ப்ளான்பண்ணி தூக்குனாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு அவர தேடுனோம், அவரு கோயம்புத்தூர் பக்கத்துல செட்டிலாயிட்டதா தகவல் கெடைச்சது. அந்த பீரியடுல இருந்த யாருமே நமக்கு தகவல் சொல்றதுக்கும் இல்ல. நீங்க அரெஸ்ட்டான சமயத்துல ஒங்களத் தெரிஞ்ச ரெண்டு மூணு கான்ஸ்டபிள்களோட பேர்கள மட்டுமே கேட்டுத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. அவங்கள பார்த்துப் பேசவோ, தொடர்புகொள்ளவோ முடியாமப் போச்சு. உபயோகமா ஒரு தகவலும் கெடைக்காத தால ... அன்னிக்கு எல்லாருமே கெடைச்ச நல்ல வாய்ப்ப தவற விட்டுட்டமே... தப்பிக்க விட்டுட்டமேன்னுதான் ஆதங்கப் பட்டாங்க.''ன்னாரு.
அட நாதாரிகளா... அந்த நேரத்துல மட்டும் மாட்டி யிருந்தா....சிதைச்சி.... சின்னாபின்னமாக்கியிருப்பாங்களே...
"சரி... அப்புறம் என்னதான் முடிவெடுத்தீங்க சார்...?''ன்னு கேட்டேன்.
"நீங்க எங்கயும் தப்பிச்சிப் போயிறக்கூடாதுன்னுதான் சிட்டி ஃபுல்லாவும் எல்லா எடத்துலயும் வாகனங்கள நிறுத்தி சோதனை பண்ணி அலர்ட் பண்ணச் சொன்னாங்க. ஒரு எடம் விடாம செக் பண்ணுங்க... ஒருவேள கையில கெடைச்சிட்டா, உடனே எங்கள்ட்ட ஒப்படைச்சிரணும்... நாங்கதான் பினிஷ் பண்ணுவோம்னு பெரிய திட்டம்லாம் வேற வச்சிருந்தாங்க''ன்னாரு.
"ஓ... அது வேறயா?''ன்னேன்.
"அதாவது... இங்க விட்டது மட்டுமில்லாம... விட்டத புடிக்கிறதுக்கு சிட்டிய தாண்டி நாலா பக்கமும் போலீஸ போட்டு, டோல்கேட்டுல மாட்டுனா புடிச்சி என்கவுன்ட்டர்ல போட்டு ரணும்னு திட்டம் போட்டிருந்தாங்க''ங்கிறத ராஜாராம் சொல்லிச் சொல்லி ஆதங்கப்பட்டார். அதக் கேட்கக் கேட்க... இத்தன வருஷம் கழிச்சும் எனக்கு கண்ணு முழி பிதுங்கிடுச்சு.
ஒரு போலீஸ் அதிகாரியா அன்னிக்கு என்ன நடந்ததுங்கிற உண்மைய அவரு பேசுனாரு.
ஆக... அந்த நாள், நம்ம வாழ்க்கையில எவ்வளவு நரகமான நாளா இருந்திருக்குன்னு பாருங்க?
அன்னிக்கு மட்டும் நான் அவிய்ங்க கையில மாட்டியிருந்தா...? ஆத்தாடி... சட்னிதான்! இன்னிக்கு ஒங்களோட பேசறதுக்கும், உண்மைகளச் சொல்றதுக்கும் இந்த கோபாலுங்கிறவன் உசுரோட வோ இருந்திருக்க மாட்டான். ரொம்ப பேரு செஞ்ச புண்ணியத்தால பொழச்சிருக்கோம். கூட இருந்த தம்பிகளும் அப்படியே அத்துவிட்டுட்டுப் போகமா இருந்ததும் பெரிய விஷயம். இந்தக் கடன எதச்செஞ்சு தீர்த்துவைப்பேன்னு தெரியல...
ஆனா... இதுல ஒண்ணு, ரெண்டு துரோகங் களும் கலந்திருக்கு. அடுத்தடுத்து நெறைய பேர் கழண்ட்டுக்கிட்டாங்க. ஆனா, இப்பவும் நாங்க தெம்பாவே வெற்றிநடை போடுறோம்.
"நீங்கள் வாழ்வதைப் பார்க்கும் வாய்ப்பினை துரோகிகளுக்கும் கொடுங்கள்; பழிவாங்க அல்ல... உன் துரோகத்தால் வீழ்ந்துவிடவில்லை என்று மார்தட்ட...' -இதெப்புடி...
நடந்த இவ்வளவு பெரிய விஷயத்த ராஜாராம்ங்கிற பேருல இருக்குற ஒருத்தரு, எதையும் வன்மமா மனசுல வச்சுக்காம நம்மகிட்ட சொல்றதுக்கு இருந்தாரேங்கிறது பெரிய விஷயம்.
"மனசாட்சியே இல்லாத போலீஸ்காரங்களுக்கு மத்தியில ராஜாராம் மாதிரி நல்லவங்களும் இருக்காங்களே'ன்னு அவருக்கு நன்றி சொல்லிட்டு, "படக்'குன்னு அங்க இருந்து கிளம்புனேன்.
நான் தப்பிச்சிப் போனதும்... போலீஸ்காரங் களுக்குத் தெரிஞ்ச பத்திரிகை சோர்ஸ் மூலமா, இப்படிப்பட்ட நேரங்கள்ல அவரு எங்க இருப்பாரு?ன்னு ரகசியமா விசாரிச்சிருக்காங்க. அப்போ ஒருத்தரு சொல்லிருக்காரு, "அவரு எங்க இருக்காருன்னு யாருக்குமே தெரியாது. அவங்க ஸ்டாப்களுக்கு, சொந்தக்காரங்களுக்கு, வீட்டுக்கு, பிள்ளைங்களுக்கு, ஏன்... அவரு பொண்டாட்டிக்கே சொல்லமாட்டாராம்... அவ்வளவு கான்பிடன்ட்டா வச்சிருப்பாராம்...'
யாருக்குமே நான் இருக்கிற எடத்த பத்துன தகவல் லீக் ஆகாம இருந்ததுக்கு, அந்த பத்திரிகைக்காரர், நம்மளப் பத்தி நல்லவிதமா சொன்னதும் ஒரு முக்கியமான காரணம். என்ன நல்லவிதம்னு நான் சொன்னா... என்ன நானே பீத்திக்கிறது மாதிரி இருக்கும், சரி... அத விடுங்க.
பொதுவா ஐ.ஜி. ஆபீஸ், கமிஷனர் ஆபீஸ் களுக்கு சில பத்திரிகைக்காரங்க சோர்ஸா இருப் பாங்க. அது இயல்பான ஒண்ணுதான். இங்க நடக்குறத கேட்டு அங்க சொல்றதுக்கும், அதே மாதிரி அங்க என்ன நடந்ததுன்னு இங்க சொல்றதுக்கும்னு கொஞ்சம் பேர் இருப்பாங்க. எல்லாரையும் நாம சொல்ல முடியாது. அந்த மாதிரி உள்ளவங்ககிட்ட இவங்க என்னப் பத்தி வெரிஃபை பண்ணியிருக்காங்க. அப்பதான் அவங்க இப்படி சொல்லியிருக்காங்க.
1991-ல இருந்தே, இந்த மாதிரியான நேரங் கள்ல எப்படி என்னை பாதுகாத்துக்கணும்ங்கிறத ரகசியமா சரியாவே வச்சிருப்பேன். அந்த நேரங்கள்ல நான் இந்த எடத்துல இருக்கேன்னு யார்ட்டயும் இன்னவரை சொன்னதும் இல்ல.
முக்கியமா "செக்'ல கையெழுத்து எதாவது போடவேண்டியது இருந்துச்சின்னா, ஃபைனான்ஸ பாக்குற தம்பி பிரான்சிஸ்ட்ட எங்கேயாவது ஒரு எடத்துல நமக்கு வேண்டப்பட்டவங்கள வரவச்சி குடுத்துவிடச் சொல்லுவேன். குறிப்பா சொல் லணும்னா வாட்ச் கடை வச்சிருக்கிற அன்புன்னு இருக்காரு. நான் அவருக்கு போன் பண்ணுவேன். தம்பி சிவகுமாருக்கு அன்பு தெரிஞ்சவராவே இருப்பாரு. அன்புதான், தம்பி பிரான்சிஸ் குடுத்த செக்... அப்புறம் தம்பி சிவகுமார் குடுத்த கோர்ட் டாகுமெண்ட் எல்லாத்தையும் நான் சொல்ற ஒரு கடையில குடுப்பார். அங்க நான் தங்கியிருந்த வீட்டு ஓனர்ட்ட ஒர்க் பண்ற கம்பெனி பையன் ஒருத்தர் போய் வாங்கி, தங்கியிருக்கிற வீட்டுக்காரருட்ட குடுப்பாரு. நான் கையெழுத்துப் போட்டு கொடுத்து... இதேபோல் போகும்.
இதையெல்லாம் கேள்விப்பட்டுதான் டிபார்ட்மெண்ட்ல உள்ளவங்க சொல்லியிருக்காங்க... "ஸார் அவர எங்கயுமே கண்டுபுடிக்க முடியாது. அவரு யாருட்டயும் அந்த நேரத்துல தொடர்பே வச்சிக்க மாட்டாரு'ன்னு.
இப்படியெல்லாம் உசுர கைல புடுச்சுக்கிட்டு...
(புழுதி பறக்கும்)