ஆணவ ஆட்சியின் சதித் திட்டம்!
இதென்னடா கூத்துமேல கூத்தாவுல்ல இருக்கு. ஜனங்க எல்லாம் ஒருபக்கம் வெகுண்டு எழுந்துட்டாங்கன்னா அது வேற சிக்கல்ல.
ஏன் இந்த ஆவேசம் ஜனங்கள்ட்ட...?
இ.பி.காரங்க ஒரு குரூப்பா வந்தாய்ங்க. மொதல்ல நம்ம ஆபீஸ்ல கரண்ட்ட கட் பண்ண முடியாம பத்து வீடு தள்ளி ஒரு வீட்டு வாசல்ல கட் பண்ணுனாய்ங்க. அவசரத்துல அவங்க தப்பா கட் பண்ணிட்டாய்ங்கபோல. அத மாத்தி கட் பண்ணணும்... என்ன பண்ணுறதுன்னு மண்டைய பிச்சுக்கிட்டு நிக்கிறாய்ங்க. வெளிய பக்கத்து வீடுகள்ல உள்ளவங்க, பொதுமக்கள்னு கூட்டமா சேர்ந்ததுனால கரண்ட் கட்பண்ண முடியாம தயக்கத்தோட நின்னுட்டிருந்திருக்காங்க. எப்படியிருந் தாலும் அவங்களுக்கு ஆர்டர் போட்டவங்களுக்கு பதில் சொல்லியாகணுமே...? அப்படியில்லன்னா வேல போயிரும்ணு பயம். இ.பி. ஆளுங்களும், ஆபீசர்களும், அ.தி.மு.க.காரய்ங்களும் கூடிப்பேசி ஒரு முடிவெடுக்கிறாய்ங்க. ஒருவழியா ஆபிஸ் முன்னால இருக்கிற டிரான்ஸ்பார்மர்ல போலீஸ் பாதுகாப்போட நம்ம ஆபீசுக்கான பீஸ் கேரியர மட்டும் புடுங்கச் சொல்லி ஈ.பி.காரங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்திருக்காங்க... ஆனா எதுக்கு வம்புன்னு அவங்க அந்த தெரு முழுவதுக்குமான எல்லா பீஸையும் ஒரேயடியா புடுங்கிட்டாய்ங்க. இதுனால அந்த ஏரியாவே கரண்டு இல்லாம முடங்கிப் போச்சு.
இதுக்கிடையில ஆபீஸ் பக்கத்துலயே இன்னொரு குரூப் ஒரு பெரிய மொரட்டு பள்ளமா தோண்ட ஸ்கெட்ச் போட்டு எல்லாரும் தயாராகுறாங்க. கூடவே இதுக்கும் ஒரு ஆபீஸர் வேற... அதப் பார்த்த நம்ம தம்பி உதவி ஆசிரியர் செந்தில், அவரோட நம்ம தம்பி சின்ன அன்பு, நம்ம பெருசு எல்லாம் சேர்ந்து போயி, "எதுக்குய்யா தோண்டுறீங்க?''னு சத்தம்போட... அவனுக தோண்டுறத நிறுத்தல. மக்களும் சேர்ந்து கத்த... ஒரு ஆளு வந்தாரு. அவரு வாட்டர் போர்டு ஏ.இ.யாம். அந்தாளு, மக்கள்ட்ட "சாக்கடை தண்ணி கலக்குதுன்னு எங்களுக்கு கம்ப்ளைண்ட் வந்திருக்கு, அதான்... சரிபண்ணத் தோண்டுறோம்''னாரு.
"யாரு கம்ப்ளைண்ட் குடுத்தா?''ன்னு தம்பிகள் கேள்வி மேல கேள்வி கேட்க... அந்தாளு விருட்னு வண்டிய எடுத்துட்டுப் போயிட்டான். கொஞ்ச நேரத்துல இன்னொரு ஆளு ஒரு பேப்பரோட வர்றான். விருட்னு போனவனுக்கு போன்பண்ணி... "சார் பேப்பர கொண்டுவந்துட்டேன்'னான்.
போனவன் திரும்ப வந்தான். அந்த பேப்பர வாங்கி, நம்ம தம்பி செந்தில்கிட்டயும், பெருசுகிட்டயும் காமிச்சான். அதுல சாக்கடை கலந்ததா அந்த எடத்துல மராமத்து வேலை பார்க்கிறதுக்கு ஒரு அவசர ஆணைய போட்டு அவசரமா டைப் பண்ணியிருந்துருக்கு. எவ்வளவு வேகமா வேலை பண்ணுறாங்க பாருங்க அதிகாரிங்க.
நம்ம தம்பிகளும், ஏரியா மக்களும் அதுக்கு ஒத்துக்காததால, அங்க நின்னுக்கிட்டி ருந்த போலீஸ கூப்புட்டு புகார் சொல்றான் அந்த வாட்டர் போர்டு அதிகாரி. திரும்பவும் போலீஸ் பாதுகாப்போட குழி தோண்ட ஆரம் பிச்சிட்டாய்ங்க. ஆக... ஒரு அரசாங்கமே நமக்கு பெரிய குழிய தோண்டுறதுல இவ்வளவு வேகமா இருக்கானுக. இருக்கட்டும்... இருக்கட்டும்...
அக்கம் பக்கத்துல உள்ள பொம்பளைங் கள்லாம் அந்த ஆளுங்களப் பாத்து "ஏய்யா அறிவில்ல... சம்பந்தமே இல்லாம இங்க வந்து பள்ளம் தோண்டுறீங்க?'ன்னு கோபத்தோட கேக்குறாங்க. எதப்பத்தியும் கவலப்படாம அவங்க வேலைய பாக்குறாங்க. கடைசில என்னன்னு பார்த்தா... இதுலயும் மழுங்கல். போலீஸ் தலையிட்டதால, நமக்கான மெட்ரோ வாட்டர் கனெக்ஷன கட் பண்ண நினைச்சு ஏரியால பாதி வீடுகளுக்கு கட் பண்ணிட் டாய்ங்க. இதையும் பாத்து மக்கள் பொறுமையிழந்து ஆவேசமா கத்துறாங்க.
அதே நேரம்...
நம்ம வீட்டுக்கு பக்கத்து சந்து. அந்த சந்துக்கு நேரா... கழிவுநீர் வந்து சேர்ற இடம். சீவேஜ் டேங்க் -மெயின்ல வந்து சேர்ற இடத்த சத்தமில்லாம 2 பேரு நோண்ட ஆரம்பிச்சிருக் காங்க. இது வேற குரூப், அது நம்ம கண்ணுல படாததுக்குக் காரணம்... அவிய்ங்க செய்யுற வேல தெரியாம இருக்க மறைஞ்சு நின்னு அ.தி.மு.க.காரய்ங்க இங்கிட்டு கோஷம் போட்டுக்கிட்டிருந்தாய்ங்க. படார்னு தொறந்து அந்த குழாயையும் அடைச்சிட்டாய்ங்க.
ஜெயலலிதாவ எதுத்தா... தெருவே நாறிப்போயிரணும்னு நெனைச்சிட்டாங்க போல பரதேசிங்க...
ஆக...
* கரண்ட் கட்
* வாட்டர் கட்
* சீவேஜ் கட்...
ஜெயலலிதாவுக்காக, எல்லாரும் எப்படி அடிமையா ஏவுன வேலை பார்த்திருக்காங் கன்றதுக்கு இதெல்லாம் ஒரு உதாரணம்.
நக்கீரன பழி வாங்குறோம்னு நெனைச்சிக் கிட்டு எங்கள சுத்தி குடியிருந்த 200-க்கு மேல இருக்கிற வீடுகளுக்கான கரண்ட்டயும், மெட்ரோ வாட்டரையும் கட் பண்ணி, அவங்களையும் வதைச்சிட்டாய்ங்க.
"அண்ணே உடனே ஒரு போட்டோ கிராபர மீர்சாகீப் பேட்டை மார்க்கெட் பக்கத்துல வரச்சொல்லுங்கண்ணே... நான் போன் போட்டேன், யாருமே எடுக்கல. இங்க ஒரு பெரிய கூட்டத்த ஆர்கனைஸ் பண்ணிக்கிட்டிருக்காங்க. கட்சிக்காரங்க இல்ல... மக்கள் எல்லாருமா கூட்டமா சேர்ந்து ரோட்டுல பஸ்ஸையெல்லாம் மறிக்க ஆரம்பிச்சிட்டாங்க''ன்னாரு நம்ம சேது.
இப்ப மக்கள திசை திருப்புறாங்க. அவங்க யாருக்கு எதிரா இத எடுத்துட்டுப் போறாங்கன்றத பாத்து கொஞ்சம் ஷாக்காதான் இருந்துச்சு.
"அது என்னான்னு பாருங்க சேது''ன்னேன்.
"அண்ணே... அரசாங்கத்து எதிரா சில பேரு பேசுறாங்க... போலீஸ்காரங்க பண்ணுன அராஜகத்தப் பத்தி பொம்பளைங்க பேசுறாங்க, நக்கீரனுக்கு எதிராவும் சிலபேர் பேசுறாங்க''ன்னாரு.
ஏன்னா... கரண்ட் கட்டாயி ரொம்ப நேரமாச்சு. அப்புறம் தண்ணிய கட் பண்ணிட் டாய்ங்க. சீவேஜ கட் பண்ணிட்டாய்ங்க... போலீஸ்காரங்க அவங்களோட காம்ப்ரமைஸ் பேசிக்கிட்டிருக்காய்ங்க. ஆனா... அவங்க எதையுமே ஏத்துக்குற மனநிலைல இல்ல.
"மக்கள் ரோட்டுல கும்பலா நின்னு மறியல் பண்ணுறாங்க. அந்த எடத்த பார்த்தீங்கன்னா போராட்டம் நடத்துறக்கு ஒதுக்குன எடம் மாதிரி நாலு முக்கு ரோடு. பஸ், லாரிய எல்லாம் தூரத்துலயே நின்று மறிக்கிறாங்க. அந்தப் பக்கம் பார்த்தா பீட்டர்ஸ் ரோடு பாலத்துக்கிட்ட மறிக்கிறாங்க. இந்தப் பக்கம் ஐஸ்ஹவுஸ் பக்கம் பஸ்ஸெல்லாம் வரவிடாம பண்ணிட்டாங்க. அவங்க மனிதச்சங்கிலி மாதிரி சேர்ந்து நின்னு மறியல் பண்றாங்க''ன்னு சேது எங்கிட்ட சொன்னார். (இதத்தான் போனவாட்டி படமா வெச்சோம்)
நமக்கு எதிரா ஜெயலலிதாவோட அட்டாக்... எதை நோக்கிப் போயிட்டிருக்குன்னு பாருங்க வாசகர்களே...
பொதுமக்கள் மறியல் பண்றதப் பாத்து போலீஸ்காரங்க பதறிப்போய் நம்ம ஆபீஸ்ல ஒண்ணு ரெண்டு போலீஸ்காரங்கள மட்டும் நிப்பாட்டிட்டு எல்லாரும் மனிதச் சங்கிலி நடக்குற எடத்துக்கு அவசரமா லொங்கு லொங்குனு ஓடுறாய்ங்க. அங்க போயி, மக்கள்ட்ட மறியல கைவிடச் சொல்லி சமாதானம் பேசுறாரு அந்த ஏ.சி. செந்தில்குமார்.
"மனிதச் சங்கிலிப் போராட்டத்த நிறுத்துங்க... ப்ளீஸ், நாங்க உங்களுக்கு எதிரா எதையும் பண்ணணும்னு பண்ணல. எல்லாமே... இந்த நக்கீரன்காரங்களாலதான். அவங்களுக்கு எதிராத்தான் நாங்க இதையெல்லாம் பண்ணவேண்டியதாப் போச்சு. அதனால தயவுசெய்து உங்க போராட்டத்த வாபஸ் வாங்குங்க... இன்னிக்கு இரவு ஒருநாள் மட்டும் பொறுத்துக்கங்கன்னு மக்கள்ட்ட கெஞ்சிக் கேக்குறாரு. இதுல குறிப்பா அவங்க சொல்றத நோட் பண்ணிப் பார்த்தோம்னா... "இன்னிக்கு இரவு மட்டும் பொறுத்துக்கங்க'ங்கிறதத்தான்.
கரண்ட்ட கட் பண்ணுன பிறகு மக்கள் போராடுற வரைக்கும், கரண்ட்ட குடுக்குறதுக்கு யாரும் ஸ்டெப் எடுக்கல. சீக்கிரம் சரிபண்ணச் சொல்றோம்னு இ.பி.காரங்களும் சொல்லல... போலீஸ்காரங்களும் சொல்லல. "இன்னிக்கு இரவு மட்டும் பொறுத்துக்கங்க, நாளைக்குள்ள எல்லாமே சரியாயிரும்'னு சொல்றாங்கன்னா...
எங்கேயோ இடிக்குதே...
(புழுதி பறக்கும்)