(326) எம்.ஜி.ஆருக்கு எதிராக டெல்லியில் ஜெ. போட்ட திட்டம்!
ஆர்.எம்.வீரப்பன் தொடர்கிறார்...
புரட்சித் தலைவர் மேலும் உடல்நலம் பெற்று வேகமாகக் குணமடைந்து தெம்புடன் நடமாடத் தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தியும் வந்தது. உடனடியாக டாக்டர் நாவலர் அவர்களுடைய தலைமையில், அன்றைய பொதுச்செயலாளர் திரு.ப.உ. சண்முகம் அவர்களைக் கொண்டு சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வைத்தேன். அந்தக் கூட்டதில் புரட்சித் தலைவரை முதல்வர் என்று தேர்ந்தெடுத் தோம். தீர்மானத்தை ஆளுநரிடத்திலே கொண்டுபோய் கொடுத்தோம். இங்கேயிருந்து நியூயார்க் சென்று புரட்சித் தலைவரிடத்திலே தகவலைத் தெரிவித்து அவருடைய அறிவுரையைப் பெற்று வருவது என்று முடிவெடுத்தோம்.
அந்தக் கூட்டத்திலேதான் அம்மையார் ஜெயலலிதா மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு எதையெல்லாமோ நடத்துவதற்குத் திட்டமிட்டு ரத, கஜ, துரக, பதாதிகளோடு உள்ளே நுழைந்து, மாபெரும் தோல்வியைத் தழுவினார்கள். அமெரிக்காவிற்குப் போய் அங்கே புரட்சித் தலைவரிடத்திலே செய்தி சொல்லவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த அம்மையார் ஆவேசத்தோடு, "யார் போவது?'' என்றார்கள். உடனே நான் எழுந்து "புரட்சித் தலைவர் யாரை வரச் சொல்கிறாரோ அவர்கள் போவார்கள்'' என்று சொல்லிவிட்டு கூட்டத்தை முடித்தோம்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், நாவலரும் போய் புரட்சித் தலைவரைப் பார்த்து எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு, அவர்களிடத்திலேயிருந்து கருத்துக்களை பெற்றுக் கொண்டு வந்தார்கள். ஆனால் இதற்குப் பிறகும் அரசு அமைப்பதில் ஒரு சிக்கல் தோன்றியது. அந்த சிக்கலுக்குக் காரணமாக விளங்கியவரும் ஜெயலலிதாதான்.
சட்டமன்ற கட்சித் தலைவராக புரட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்ததை ஆளுநர் குரானாவிடம் கொண்டுபோய் கொடுத்தோம். ஆனால் நாங்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியோடும், மனத் திருப்தியோடும் ஆளுநரைச் சந்தித்தோமோ, அதற்கு மாறாக இருந்தது ஆளுநரின் பேச்சுக்கள். “"சரி, சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந் தெடுத்துவிட்டீர்கள்.. எப்பொழுது வந்து பொறுப்பேற்றுக்கொள்ளப் போகிறார்... எப்பொழுது ஆட்சி அமைக்கப் போகிறீர்கள்... இப்பொழுதே ஏழுநாட்கள் ஆகிவிட்டதே?''” என்று ஆளுநர் பேச்சைத் தொடங்கினார்.
"ஒரு தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன், இத்தனை நாட்களுக்குள் வெற்றிபெற்ற கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அரசியல் சட்டத்திலே திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை. எனவே இருக்கிற சூழ்நிலையையொட்டி ஆளுநர் முடிவெடுக்கலாம்' என்கிற கருத்தை நாங்கள் ஆளுநரிடத்திலே தெரிவித்தோம்.
"அதற்கு எவ்வளவு நாட்கள் வேண்டும்?'' என்று அவர் எதிர்க்கேள்வி போட்டார். “"சுமார் ஒரு மாத காலம் தவணை கொடுங்கள். 1985ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புரட்சித் தலைவர் வந்துவிடுவார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்''’என்று நாங்கள் தெரிவித்தோம். ஆனால் ஆளுநர் அதை அவ்வளவு திருப்தியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவரின் மௌனமான தலை அசைவு எங்களுக்குத் தெரிவித்தது. தொடர்ந்து, "அவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது; அது சட்டப்படி சரியாக இருக்காது''’என்று கொஞ்சம் அழுத்தமாகத் தெரிவித்தார். நாங்கள் விடைபெற்று வந்துவிட் டோம்.
நாங்கள் அன்று முழு வதும் விவாதித்து, சட்டப்படி இந்தப் பிரசினையைத் தீர்க்க முடியாது. இந்திய அரசாங் கத்தின் சார்பில் அரசியல் முடிவாகத்தான் இதிலே தீர்வு காணவேண்டும். ஆகவே உட னடியாக டில்லிக்குச் செல்வது என்று முடிவெடுத்தோம். நான், டாக்டர் நாவலர், திரு. பண்ருட்டி ராமச்சந்திரன், திரு. கே.ஏ.கே. ஆகியோர் உடனே டெல்லி செல்வது என்று தீர்மானித்தோம். 1985-ஆம் ஆண்டு ஜனவரி முதல்நாள் டெல்லியிலே இருந்தோம். ஆனால் அங்கே எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத் திருந்தது.
நாங்கள் டெல்லியிலே பிரதம அமைச்சரைச் சந்திப்பதற்காகச் சென்றபோது, எங்களுக்கு முன்னாலே செல்வி ஜெயலலிதா டெல்லியில் இருந்தார். இவருக்கு அங்கே என்ன வேலை? ஒரு வேளை புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்தி ருக்கிறாரோ என்றெல்லாம் நாங்கள் எண்ணிக்கொண்டு எங்களது பணியினைத் தொடங்கினோம்.
அன்றைக்கு குடியரசு துணைத் தலைவராக இருந்த திரு. ஆர்.வெங் கட்ராமன் அவர்களின் துணையோடு, பிரதம அமைச்சராக இருந்த அமரர் ராஜீவ்காந்தி அவர்களைச் சந்தித்து, “"அரசு அமைப்பதற்கு ஒரு மாத காலம் எப்படியாவது அவகாசம் தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஆனால் இதற்கிடையில் ஆளுநரே "கால அவகாசம் கொடுக்கக்கூடாது' என்ற சட்ட வல்லுநர்களின் கருத்தை எழுத்து மூலமாக வாங்கி வைத்துக் கொண்டு அதை இந்திய அர சாங்கத்திற்கும் தெரிவித்திருந் தார். அதிலே அம்மையாரின் கைங்கரியமும் சேர்ந்திருந்தது என்றும் தெரிந்துகொண்டோம். அங்கே சட்டத் துறையிலிருந்த அதிகாரிகள் சிலரைச் சந்தித்து நாங்கள் எங்களுடைய வாதத்தை எடுத்து வைத்தோம்.
"1952 சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு அவகாசம் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு 1977ம் ஆண்டிலே முதன்முறை யாக புரட்சித் தலைவர் பொறுப் பேற்றுக்கொண்ட போதும் கால தாமதமாகத்தான் பதவியை ஏற்றுக்கொண் டார்.
ஆகவே இதற்கு முன்மாதிரிகள் இருக்கின்றன. மேலும் எவ்வளவு காலம் அனுமதிக்கலாம் என்பதை ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர சட்டத்திலே இது சம்பந்தமாக எந்த விதிகளும் குறிப் பிடப்படவில்லை. இப்போது நடை பெற்றுக்கொண்டிருக்கிற அரசும் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்ற கட்சியின் அரசே தவிர, தோல்வியடைந்த கட்சியின் அரசல்ல. ஆகவே இது ஒரு காபந்து சர்க்கார் என்று எண்ணத் தேவையில்லை. முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் இருக்கிறது என்று நாம் கொள்ளலாம் என்ற வாதத்தை வைத்தோம்.
ஒரு வழியாக டெல்லியின் ஒப்புதலைப் பெற்று, அதை ஆளுநருக்குத் தெரிவிக்க ஏற்பாடுகளும் செய்துவிட்டு நாங்கள் சென்னை வந்து சேர்ந்தோம். ஆனால் டெல்லியிலே இருந்து சிபாரிசுகள் வந்தாலும் கூட தமிழக ஆளுநர் குரானா திருப்தி அடையவில்லை. அதற்குக் காரணம் இங்கேயிருந்த சில புல்லுருவிகள்தான் என்பது எனக்குத் தெரிந்தது. புரட்சித் தலைவர் நன்றாகக் குண மடைந்துவிட்டார் என்று நாட்டு மக்கள் நம்பி வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆனால்... கூட இருந்தே குழிபறிக்கிற இந்தத் துரோகக் கூட்டத்திற்கு மாத்திரம், அதிலே நம்பிக்கை வரவில்லை. அதனாலே இங்கே ஆளுநரிடத்தில், "எம்.ஜி.ஆர். வரமாட்டார். இராம.வீரப்பனும், அவரைச் சார்ந்தவர்களும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்... அதை நம்பாதீர்கள்'' என்று சொன்னதோடு மட்டுமல்ல, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 60 பேருக்கு மேல் என்னை ஆதரிக்கிறார்கள். ஆகவே என்னை முதலமைச்சராக ஆக்குங்கள்' என்று வற்புறுத்திக்கொண்டிருக்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். டெல்லியிலும் படை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது பிறகுதான் புரிந்தது.
புரட்சித் தலைவர் மிகத்தெளிவான சிந்தனையோடு இருந்தார் என்பதை நான் ஒரு நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொண் டேன். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு, நாடாளுமன்ற துணைத் தலைவர் பதவி தருவது என்கிற மரபையொட்டி... "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு எதிர்க் கட்சியாக இருப்பதால் அதைச் சார்ந்த ஒருவர் துணைத்தலைவராக இருக்கலாம்' என்று ராஜீவ்காந்தி அவர்கள் முடிவெடுத்து, "யாருக்கு அந்தப் பொறுப்பை வழங்க லாம்?'’என்று எங்களைக் கேட்டார்.
இதற்கும் இந்த அம்மையார் குறுக்கே புகுந்து, எரிகிற வீட்டிலே பிடுங்கியது லாபம் என்பதைப் போல அவருடைய அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரியவரான சேலம் கண்ணன் அவர்களைத் துணைத்தலைவராக ஆக்க வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் நான் ஒரு காரியத்தைச் செய்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலை அமெரிக்காவிற்குச் சொல்லி அங்கிருந்த உதவியாளர் மூலம் புரட்சித் தலைவரிடத்திலே இந்தப் பட்டியலைக் காட்டி இதில் யாரை துணைத்தலைவராக நியமிக்கலாம் என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள் என்று சொன்னேன். உதவியாளரான திரு.பிச்சாண்டி அவர்களும், அன்றைக்குச் செயலாளராக இருந்த திரு.பரமசிவம் அவர்களும் இந்தப் பெயர்களையெல்லாம் எழுதி அதை புரட்சித் தலைவரிடத்திலே காண்பித்திருக்கிறார்கள். தருமபுரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர் தம்பிதுரையை அவர் குறிப்பிட்டு அடையாளமிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பெயரை அங்கேயிருந்து சொன்ன வுடன் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. தம்பிதுரை பெயரை அவ்வளவு கவனமாக ஞாபகம் வைத்திருந்து எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொன்னார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஆனால் இங்கேயிருக்கிற இந்த அம்மையாருடைய கூட்டத்தினர் ஏதோ....
(புழுதி பறக்கும்)